'பகவானை எப்போது காண முடியும்?' என ஒவ்வொருவரையும் அணுகிக் கேட்டுக் கொண்டிருந்தான் ஒருவன்.
அப்போது 'அந்த ஓர் ஆசிரமத்தில் இருக்கும் மகான் அதற்கான பதிலைக் கூற முடியும்' என்று சிலர் கூறினர்.
அவனும் அங்கு சென்றான். ஆசிரமத்தின் உள்ளே வெளிச்சம் அவ்வளவாக இல்லை. அவன், "குருவே” என்றான்.
"என்ன வேண்டும்?” என்று கேட்டார் மகான்.
"பகவானை அடையும் வழி பற்றிய விபரத்தைக் கேட்க வந்திருக்கிறேன்”
"அப்படியா! முதலில் அந்தக் கை விளக்கை ஏற்று”
அவன் விளக்கை ஏற்ற முயன்றான். ஆனால் முடியவில்லை.
"குருவே விளக்கில் நீர் உள்ளதால் ஏற்ற முடியவில்லை”
''நீரை எடுத்து வெளியே கொட்டு. இந்த எண்ணையை ஊற்று”
"எண்ணெய் ஊற்றினாலும் திரி ஈரமாக உள்ளது”
"திரியினைப் பிழிந்து காய வை. பிறகு ஏற்றிப் பார்”
"குருவே, இப்போது விளக்கை ஏற்றிவிட்டேன். என் சந்தேகத்திற்கு இனிமேலாவது விடையைக் கூறுவீர்களா?”
"மகனே, அதையே இப்போது விளக்கினேன். புரியவில்லையா? நமது ஜீவாத்மாதான் அந்தத் திரி நூல். அது ஆசை எனும் நீரில் நனைந்துள்ளது. ஆசையாகிய நீரை வெளியேற்றிவிட்டு, வைராக்கியம் எனும் சூரிய ஒளியில் அதைக் காய வைக்க வேண்டும். பின்பு இறைநாமம் எனும் எண்ணெயைக் கொண்டு விளக்கை நிரப்பு. பிறகுதான் விவேகம் என்னும் தீப ஒளியை ஏற்ற முடியும். இதைச் சரியாகச் செய்தால் உனக்கு எல்லாம் விளங்கிவிடும்” என்றார். உண்மைதானே