ஓர் ஊரில் ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா வழிபாட்டை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்.
‘கருணையும் அன்பும் மிக்க ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான அல்லாவின் திருப்பெயரால்...’
இந்தச் சமயத்தில் குருநானக் அங்கே வந்தார். அவர் முகத்தில் புன்முறுவல். உடனே முல்லா கோபத்துடன், ‘‘ஏன் சிரிக்கிறாய்?’’ என்று கேட்டார்.
‘‘நண்பா! நீ செய்வது தொழுகை அல்ல... அதனால் சிரிக்கிறேன்.’’
‘‘என்ன, தொழுகை இல்லையா?’’
‘‘ஆம், உன்னுள் பிரார்த்தனையே இல்லை.’’
முல்லாவின் கோபம் அதிகமாயிற்று. நேராக ஒரு நீதிபதியின் முன்னால் போய்க் கூறினார்.
‘‘நீதிபதி அவர்களே! இவர் நாங்கள் தொழும் வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். வழிபடுகிற எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். இவருக்கு நீங்கள் மரண தண்டனை வழங்க வேண்டும்’’
நீதிபதி குருநானக் பக்கம் திரும்பினார்.
‘‘நீங்கள் சிரித்தது உண்மையா?’’
‘‘உண்மைதான்’’
‘‘ஏன் சிரித்தீர்கள்?’’
‘‘அவர் செய்தது பிரார்த்தனை அல்ல... அதனால் சிரித்தேன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம். அவரை நான் சில கேள்விகள் கேட்கத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்.’’ அனுமதித்தார்.
முல்லா வந்து முன்னால் நின்றார்.
‘‘அவர் கையில் புனித குரானைக் கொடுங்கள்’’ என்றார் குருநானக். கொடுத்தார்கள்.
‘‘இப்போது சொல்லுங்கள். உங்கள் உதடுகள் அல்லாவை உச்சரித்த போது உங்கள் மனம் வீட்டிலே விட்டு வந்த கோழிகளை நினைத்ததா... இல்லையா?
முல்லா குரான் மீது சத்தியம் செய்து உண்மையை ஒப்புக்கொண்டார்.
குருநானக் விடப்பட்டார்.
நீதிபதி சொன்னார்: ‘‘முல்லா அவர்களே! பள்ளிவாசலுக்குப் போய் ஏமாற்றுவதை விட அங்கே போகாமல் இருந்துவிடுவது மேல். அங்கு ஒரு வேடதாரியாக இருக்காதீர்கள். கருணைமிக்க கடவுளின் திருநாமத்தைக் கூறும் போது கோழியை நினைக்காதீர்கள்!’’
உள்ளே இருக்கிற ஒன்றைத் தேடிச் செல்கிற போது வெளியே இருக்கிற ஒன்று நினைவுக்கு வரலாமா?