‘குருவே, வாழ்க்கை மிகவும் துன்பமாகயிருக்கிறது. கவலை, கஷ்டம், வருத்தம் இவைதான் நிறைந்திருக்கிறது’
‘அப்படியா?’
‘ஆமாம் குருவே. வாழ்க்கை இன்பமாகவே இருக்க ஏதாவது வழியிருக்கிறதா? சொல்லுங்கள்... குருவே...’
‘காபி சாப்பிடுகிறாயா?’ என்று கேட்டார் குரு.
தலையசைத்தான் வந்தவன். உள்ளேயிருந்து ஒரு கிண்ணத்தில் காபித்தூள் கொண்டு வந்தார்.
‘இந்தா, சாப்பிடு...’ வந்தவனுக்குப் புரியவில்லை.
‘சாப்பிடு, பாலைக் கொண்டு வருகிறேன்’ என்று இன்னொரு கிண்ணத்தில் பாலைக் கொண்டு வந்தார்.
பிறகு இன்னொரு கிண்ணத்தில் தண்ணீர், சர்க்கரை எல்லாம் வந்தன.
‘குருவே, இவற்றை எப்படித் தனித்தனியே சாப்பிடுவது?’
‘காபியையே உன்னால் தனித்தனியாகச் சாப்பிட முடியவில்லை. வாழ்க்கையும் அப்படித்தான்... பிரித்துச் சாப்பிட இயலாதது’ என்றார் குரு.