ஒரு குரங்கு இயற்கை அழகை வரைய விரும்பியது.
மலை சார்ந்த இடத்திற்கு சென்று மலை, ஆறு, பறவை என்று அழகாக அனைத்து இயற்கை காட்சியையும் படம் போல் வரைந்தது.
முதல் முறையாக வரைந்தப் படம் என்பதால் தனது நண்பர், உறவினரிடம் அந்தப் படத்தைக் காட்டி, "நான் முதல் முறையாக வரைந்த படம். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். இப்படம் தவறாக அல்லது நன்றாக இல்லாததை சுட்டிக் காட்டினால், நன்றாக இருக்கும்" என்றது.
ஒவ்வொரு குரங்கும் தங்கள் கண்ணில் பட்ட குறைகளை எடுத்துக் கூறியது. ஒரு கட்டத்தில் அந்த குரங்குக்கு அந்த ஓவியத்தின் மேல் நம்பிக்கையற்று போனது. இனி நம்மால் எந்த ஓவியமும் வரைய முடியாது என்று நம்பிக்கை இழந்தது. பின்னர், அது தனியாக அழுது கொண்டு இருந்தது.
அப்போது, அங்கு அந்தக் குரங்குக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுத்த குரங்கு வந்தது.
"தாங்கள் கற்றுக் கொடுத்த ஓவியம் பயனில்லாமல் போயிவிட்டது. அனைவருக்கும் பிடித்தது போன்ற ஓவியத்தை என்னால் வரைய முடியவில்லை" என்று அந்தக் குரங்கிடம் சொல்லி வருந்தியது.
ஓவியம் வரையச் சொல்லிக் கொடுத்த குரங்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ஓவியம் வரைந்த குரங்குக்கு மனம் ஆறுதல் அடையவில்லை.
உடனே அந்தக் குரங்கு, ஓவியம் வரைந்த குரங்கை ஓவியத்துடன் அழைத்துக் கொண்டு சென்றது.
அந்த ஓவியத்தைக் குறை சொன்ன குரங்கின் நண்பர்கள், உறவினர்களிடம் கொண்டு போய்க் காண்பித்து, "என் சீடன் வரைந்த ஓவியத்திற்கு தாங்கள் கூறிய கருத்து உதவியாக இருந்தது. ஆனால், எப்படி இருக்க வேண்டும்? என்று தாங்கள் வரைந்து காட்டினால், என் சீடன் இந்த ஓவியத்தை மாற்றிச் சரி செய்து கொள்ள உதவியாக இருக்கும்" என்றது.
அந்தக் குரங்கின் நண்பர்கள், உறவினர்கள் ஒருவரும் அந்த ஓவியத்திற்குத் தாங்கள் சொன்ன குறைகளைச் சரி செய்ய முன் வரவில்லை.
குறைகளைச் சொல்பவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால், அவர்களால், தாங்கள் சொன்ன குறையைச் சரி செய்வது என்பது சிறிது கூட இயலாது.