ஒரு அழகிய கிராமம்.அந்தக் கிராமத்திற்கு வெளியே பெரிய ஏரி ஒன்று இருந்தது.ஏரியின் கரைகளில் பழ மரங்கள்.அவற்றுள் குரங்குகள்..கிளைக்குக் கிளை தாவி பழங்களைப் பறித்துத் தின்று தங்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தன.
அக்குரங்குகளில் குட்டிக் குரங்கு ஒன்றும் இருந்தது.போவோர் வருவோர் ..என அனைத்து பேருடன் அதனுடைய சேட்டை அதிகமாக இருந்தது.
ஒருநாள் மீனவன் ஒருவன், அந்த ஏரிக்கு வந்து மீன் பிடிக்க வலையை வீசினான். நிறைய மீன்கள் வலையில் சிக்கின. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு, வலை ஈரமாய் இருந்ததால்... கரையில் அதைக் காயப் போட்டுவிட்டுச் சென்றான்.
அந்தக் குட்டிக் குரங்கு அவன் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் சென்றதும், அவன் உலர்த்திச் சென்ற அவ்வலையின் மையத்தில் அமர்ந்துக் கொண்டு... வலையை எடுத்து ஏரியில் வீசப் பார்த்தது.
ஆனால், வலை இறுகி... அதன் மையத்தில் அமர்ந்து கொண்டிருந்த குரங்குக் குட்டி வலையில் வசமாக சிக்கிக் கொண்டது.
பயத்தால் அலற ஆரம்பித்தது. மற்ற குரங்குகள் வந்து அதைக் காப்பாற்றப் பார்த்தன.
ஆனால் அது நைலான் வலையானதால் அவற்றால் அதைக் கடிப்பது கூட சிரமமாய் இருந்தது.
அப்போது வலையை எடுத்துப் போக மீனவன் வந்தான்.
குரங்கு மாட்டிக் கொண்டு அவதிப்படுவதைக் கண்டு வருந்தி, அதை விடுவித்தான்.
பின் குட்டியிடமும், மற்ற குரங்குகளிடமும், “தெரியாத காரியங்களில் ஈடுபட்டால் இப்படித்தான் அவதிப்பட நேரிடும். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும்..அதைப் பற்றி தெரிந்துக் கொண்டு ஈடுபட வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்” என்று அறிவுரை சொன்னான்.