ஞானி ஒருவரை சந்தித்த செல்வந்தர் அவர்து ஆசி வேண்டி நின்றார்.
ஞானி, “வாழ்க வையகம்” என்று வாழ்த்தினார்.
வீடு திரும்பிய அவனுக்கு திருப்தி இல்லாததால் மீண்டும் துறவியிடம் வந்து ஆசி கேட்டான்.
மறுபடியும் ஞானி, “வாழ்க வையகம்” என்றே ஆசி கூறினார்.
தனக்கும் தன் குடும்பத்துக்கும் எப்படியாவது நேரடி ஆசி பெற்றேத் தீருவது என்ற முடிவுடன் மூன்றாம் முறையாக சென்று துறவியாரே, என்னையும் என் குடும்பத்தையும் வாழ்த்துங்கள் என்றான் செல்வந்தன்.
அவனது மன உணர்வைப் புரிந்து கொண்ட ஞானி, அங்கிருந்த ஒரு செடியைக் காட்டி, “அதன் இலைகள் வாடி உள்ளது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வா” என்றார்.
செல்வந்தனும் அவர் சொன்னபடி அந்தச் செடிக்கு நீர் ஊற்றிவிட்டு வந்தான்.
அவனிடம் “செடிக்குத் தண்ணீரை எங்கே ஊற்றினாய்?” எனக் கேட்டார் அந்த ஞானி.
“அந்தச் செடியின் வேரில் ஊற்றினேன்” என்றான் அவன்.
“நான் இலைக்குத்தானே நீர் விடச் சொன்னேன், நீ ஏன் வேரில் விட்டாய்?” என்று குரு கேட்க, அவன், “செடியின் வேருக்கு ஊற்றினால் அந்த நீர், தானாக இலைகளுக்கும் போய்ச் சேர்ந்து விடுமே. இது தங்களுக்குத் தெரியாதா?” என்றான்.
புன்னகை பூத்த ஞானி, “அதைத்தான் நானும் செய்தேன். இந்த வையகத்தை வாழ்த்தினால், அதில் ஒவ்வொரு உயிருக்கும் வாழ்த்துப் போய்ச் சேருமே...” என்றார்.
உண்மை உணர்ந்த செல்வந்தன் அங்கிருந்து சென்றான்.