எதிரி நாட்டு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில் இரண்டு கைக்
குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.
ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.
இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் ஒரு குழந்தையையாவது அவள் காப்பற்ற முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது.
அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார்,''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே!அப்படி இருக்கும்போது, எதை வைத்து ஒரு குழந்தையைப் பழி கொடுக்கத் துணிந்தாய்?''என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார்.
அந்தப்பெண், ''என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. என்னை நம்பி விட்டு சென்ற பக்கத்துவீட்டுக் குழந்தையை இறக்கி விட எனக்கு மனம் வரவில்லை. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்'' என்று கண்ணீருடன் கூறினாள்.
அந்தப் பெரியவர் அவள் தியாகத்தை நினைத்துக் கண் கலங்கினார்.