ஒரு சீடன், “எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்...? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன்” என்று சொல்லியபடி குரு முன் வந்து நின்றான்.
“குருவே, எனக்குப் பழிவாங்க ஏதாவது மந்திரம் இருந்தால் சொல்லுங்க... ” என்றான் அவன்.
குரு யோசித்தார்.
“சரி… ஒன்று செய்யலாம்” என்று ஒரு கோணிப்பையைச் சீடன் கையில் கொடுத்தார் அந்தக் குரு.
“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்தக் கோணிப்பையில் போட்டுக் கொண்டே வா” என்றார்.
“ஆனால், இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்.
“ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களைச் செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாகச் செதுக்க வேண்டும்”
“சரி… அப்புறம்?”
“நீ எங்கெல்லாம் போகிறாயோ, அங்கெல்லாம் இந்தக் கோணியைத் தூக்கிக் கொண்டு போகவேண்டும்”
“ப்பூ, இவ்வளவுதானா? நான் ஏதோப் பெரிசாச் சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்” என்று சொல்லியபடி அந்தச் சீடன் எழுந்து போனான்.
அன்றிலிருந்து யார் மீதெல்லாம் கோபப்பட்டானோ, யார் யாரைப் பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வந்ததோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்துப் பெயரைச் செதுக்கிக் கோணிப்பையில் போட்டுக் கொண்டே வந்தான்.
ஆரம்பத்தில் கோணியைத் தூக்கிக் கொண்டு திரிவது அவனுக்குப் பெரிய கஷ்டமாய்த் தெரியவில்லை.
ஆனால் நாளாக... நாளாக, அது சுமையாகத் தோன்றியது. நாள் அதிகரிக்க அதிகரிக்க, அந்தக் கோணிப்பையைத் தூக்குவதே அவனுக்கு மிகவும் கஷ்டமாகப் போனது.
சில நாட்களுக்கு பின், அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீசத் தொடங்கியது.
அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.
அவனிடம் பேசவோ, அவன் சொல்வதைக் கேட்கவோ யாரும் தயாராக இல்லை.
சீடன் மறுபடியும் குருவிடம் வந்தான்.
“என்ன குருவே, இப்படிச் செய்து விட்டீர்கள்...?” என்றான்.
“என்னது?” என்றார் குரு.
“பழி வாங்கும் குரோத உணர்வைச் சேகரித்துக் கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும். துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விளக்கத்தானே இப்படிச் செய்தீர்கள்?” என்றான் சீடன்.
“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையே...” என்றார் குரு.
“புரியலையே…?”
“உன் பிரச்சனை சுமை கூடிப் போச்சு என்பதும் நாற்றமடிக்கிறது என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”
“ஆமாம்”
“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்தக் கோணியைக் காலி செய்து கொண்டே வந்தால், இந்தச் சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாயா, இல்லையா?”
“ஆமாம்”
“மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பைதான் இங்கு பிரச்சனை. கோணி இருப்பதால்தானே அதில் உருளைக்கிழங்கைச் சேர்க்க ஆரம்பித்தாய்? எனவே, உனக்குச் சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்தச் சுமை நாற்றமெடுக்காமல் இருக்க வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி. உனக்குத் துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றேத் தீருவார்கள். நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையைச் சரியாக செய்து வா...” என்றார்.
அந்தச் சீடனும் சரி என்று சொல்லிச் சென்றான்.