ஒரு பெண், மழை வந்தாலும் அழுவாள், வெயில் அடித்தாலும் அழுவாள்.
அவளிடம் ஒரு துறவி,ஏம்மா! மழை பெஞ்சா ஊருக்கு நல்லது. விவசாயத்துக்கு, குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கும். வெயில் அடிச்சாதான் தாவரங்கள் வளரும். வேலைகள் தடங்கலின்றி நடக்கும். நீ தேவையில்லாம இதுக்குபோயி அழறியே! என்றார் சுவாமி!
எனக்கு இரண்டு மகன்கள்... ஒருத்தன் குடை விற்கிறான். அவனுக்கு மழை பெஞ்சா வியாபாரம் நல்லா நடக்கும். இன்னொருத்தன் உப்பு வியாபாரி. வெயில் அடிச்சாத்தான் அவனுக்கு வியாபாரம் கூடும். மழைக் காலத்திலே ஒருவனுக்கும், வெயில் அடிக்கையிலே ஒருவனுக்கும் பாதிப்பு ஏற்படுது! அதனாலே வெயில் காலத்திலே குடை விக்கிறவனை நினைச்சும், மழைக் காலத்திலே உப்பு விக்கிறவனை நினைச்சும் அவங்க பட்டினியாக் கிடப்பாங்களேன்னு நினைச்சு அழறேன், என்றாள்.
சாமியார் அவளிடம், அம்மா! இதற்குப் போய் யாராச்சும் அழுவார்களா! மழை காலத்திலே இவனாச்சும் சந்தோஷமா இருக்கிறானே என குடை விற்கும் மகனைப் பற்றியும், வெயில் காலத்தில் இவனாவது வயிற்றுக்குச் சாப்பிடுகிறானே என உப்பு விற்கும் மகனைப் பற்றியும் சந்தோஷப்படுங்க. ஒருத்தன் நல்லாயிருக்கும் போது, இன்னொருவனுக்கு உதவச் சொல்லுங்க. ஒருத்தருக்கு ஒருத்தர், ஒவ்வொரு காலத்திலே உதவணுங்கிறதுக்காகத்தான், கடவுள் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார் என்றார்.
வாழ்க்கை என்றால் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். எல்லாமே நல்லதாக நடக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். விளைவு எப்படியிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும்.