முன்பொரு காலத்தில், மதுரையை நீதிநெறி தவறாத ராஜவர்மன் என்ற பாண்டிய மன்னன்ஆண்டு வந்தான். அவன் நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதித்து வந்தான். தன் ஆட்சியில் ஒரு சிறு தவறும் நடக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகக் கவனம் செலுத்தி வந்தான். இந்நிலையில் ஒரு நாள்,
வேறு ஒரு ஊரிலிருந்து ஒரு அந்தணரும், அவனது மனைவியும் அவனுடைய நாடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் மிகவும் சோர்வாகவும், உச்சி வெயிலும் ஒரு சேர நடக்கமுடியாமல் ஒரு மரத்தின் அடியில் சற்று அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அயர்ச்சியின் காரணமாக சற்று கண் அயர்ந்து விட்டனர். அப்போது சற்றும் எதிர்பாராமல் ஒரு அம்பு வந்து அவனுடைய மனைவியின் மார்பைத் துளைத்தது. அக்கணமே அவர் உயிரிழந்துவிட்டார். அதே சமயத்தில் சற்று தூரத்தில் வேடன் ஒருவன் அமர்ந்திருந்தான். உடனே அந்தணர் அவன்தான் மனைவியைக் கொன்றான் என்று கூறி அவனை அரசவைக்கு அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினார்.
அரசன் வேடனிடம் நீ ஏன் அந்த அந்தணரின் மனைவியைக் கொன்றாய்? உனக்கும் அவருக்கும் என்ன பகை ? என்று வினவ, அவன், அரசே நான் கொல்லவில்லை, நான் குற்றமற்றவன். நான் ஏதும் அறியாதவன் நான் செய்யவில்லை என்று கூறினான்.
அது கேட்ட மன்னன் பொய் சொல்லாதே, நீ வேறு ஒரு பறவையை குறி வைத்து அடித்து அந்த அம்பு தவறி அந்த அந்தணரின் மனைவியை கொன்றதா? எது எப்படி இருந்த போதிலும் உண்மையைக் கூறு. நான் உன்னை கொலைப்பழியில் இருந்து காப்பாற்றுகிறேன் என்று கூறினார். ஆனால் எவ்வளவு கூறியும் வேடன் தான் கொல்லவில்லை, தான் குற்றமற்றவன் என்பதைச் சாதிப்பதில் உறுதியாக இருந்தான். அவ்வாறே அவன் இறுதிவரை கூறிக்கொண்டிருந்தான். அதுகேட்டு மன்னன் சற்று குழம்பிப் போனான். என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்தான். குற்றமற்றவனாக இருந்து நாம் தீர்ப்பு வழங்கிவிட்டால் அந்தப் பாவம் நம்மைச் சுடும். எதற்கும் சற்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி வேடனைக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கு ஒரு முடிவு எட்டாத காரணத்தால், கோயிலுக்குச் சென்று இறைவன் சிவபெருமானிடம், என் மேல் பழி ஒன்றும் நேராமல் தாங்கள் காத்து அருள வேண்டும். சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது, மன்னா நாளை உன் ஊரில் நடக்கும் திருமணத்திற்கு நீ செல். அங்கு உனக்கு வேண்டிய பதில் கிட்டும் என்று ஒரு அசரீரி கேட்டது. அது கேட்டு மன்னன் மிகவும் மகிழ்ந்தான்.
மறுநாள் அந்தத் திருமணத்திற்கு மன்னன் மாறுவேடத்தில் சென்றான். அப்பொழுது அவன் கண்களுக்கு மட்டும் ரெண்டு எமகிங்கரர்கள் தோன்றினார்கள். அவர்கள் பேசுவது இவனது காதுக்கு நன்றாகக் கேட்டது. அதில் ஒரு எம கிங்கரன் கூறுகிறான், நமது எமதர்மராஜா உத்தரவுப்படி இந்தத் திருமணத்தில் மணமேடையில் உள்ள மாப்பிள்ளையை இன்று நாம் கொன்று அவனது உயிரைப் பறித்துச் செல்ல வேண்டும் என்று கூறினான். அது கேட்ட மற்ற கிங்கரன் மிகவும் அழகாக வாலிப வயதில் எந்த நோய் நொடியும் இல்லாமல் நன்றாக இருக்கிறானே அவனது உயிரை எவ்வாறு எடுக்கப் போகிறாய் என்று கேட்டான்.
அதற்கு, உடனே மற்ற கிங்கரன், அன்று வனத்தில் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் இருந்த அந்தணனின் மனைவியின் உயிரை நான் எவ்வாறு எடுத்தேன் என்பதை நீ பார்த்தாய் அல்லவா? என்றோ எவரோ எறிந்த அம்பு ஒன்று அந்த மரத்தின் மேல் ஊசலாடிக்கொண்டிருந்தது. நான் கையை வேகமாக வீசி காற்றை வரவழைக்க அந்தக் காற்றின் வேகம் தாளாமல், அம்பு மரத்தில் இருந்து விடுபட்டு அவனது மனைவியின் உயிரைக் குடித்ததை நீயும் கண்டாய் அல்லவா என்று கூறினான்.
அவ்வாறு இன்று கோசாலையில் இருக்கும் ஒரு காளை மாட்டிற்கு வெறியேற்றி, காளை மாடு வேகமாக வந்து மணவரையிலுள்ள மாப்பிள்ளையை குத்துவதை நீ பார் என்று சொல்லி, சற்று நேரத்தில் அவன் கோசாலை சென்று அவன் கூறியபடியே கண வேகத்துடன் ஒரு மாடு கொம்புகளை நீட்டிக் கொண்டு நேராக வந்து மாப்பிள்ளையின் உயிரைப் பறித்தது.
அது கண்டு மன்னன் தனக்கு நீதி கிடைத்து விட்டது என்று சந்தோஷமாக அரண்மனைக்குச் சென்று, மறுநாள் அரசவையைக் கூட்டி வேடன் குற்றமற்றவன் என்று கூறி தான் இறைவனின் அருளால் நடந்ததையும் கண்டவற்றையும் அந்தச் சபையில் விளக்கமாகக் கூறி அந்தணனுக்கும் நல்லதொரு தீர்ப்பை வழங்கிப் பழி பாவத்தில் இருந்து விடுபட்டான்.