அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டுபிடித்துக் கொடுத்தால் தக்க பரிசு வழங்கப்படும் என்றும், அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரிய வந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் மன்னனால் அறிவிக்கப்பட்டது.
ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
வழியில் ஒரு நகை கிடை ப்பதைப் பார்த்து எடுத்தார்.
அது பற்றி விசாரித்த போது, அது அரசியின் நகை என்பதும், அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார்.
மன்னன் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது. ஆனால், அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல் அந்த நாள் கடந்ததும் மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.
மன்னன் முழு விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டு,''நீங்கள் கிடைத்த உடனே கொடுத்திருந்தால், பரிசு கிடைத்திருக்கும். இப்போது உங்களுக்கு மரண தண்டனை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை'' என்றான்.
தாமதத்திற்குக் காரணமும் கேட்டான்.
ஞானி, ''நகை கிடைத்ததும் நான் வந்து கொடுத்திருந்தால் நான் பரிசுக்கு ஆசைப்பட்டவன் என்று பொருள். உண்மையில், எனக்கு எந்தப் பரிசின் மீதும் நாட்டமில்லை. மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி நான் கொடுக்காமலே வைத்திருந்தால், நான் சாவுக்கு அஞ்சுவதாகப் பொருள். எனக்கு மரணம் பற்றிய அச்சம் இல்லை. நகையை அப்படியே வைத்துக் கொண்டால், அடுத்தவர் உடைமைக்கு நான் ஆசைப்பட்டவன் என்று பொருள். எனக்கு எந்தப் பொருளின் மீதும் ஆசை இல்லை. அதனால் இப்போது கொண்டு வந்து கொடுத்தேன்'' என்றார்.
மன்னன், ''இப்போது உங்களுக்கு மரண தண்டனை கிடைக்குமே?''என்று கேட்டான்.
அதற்கு ஞானி, ''தர்ம வழியில் நடக்கும் ஒருவனைத் தண்டிக்க அரசன் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை'' என்று சொல்லியபடி கம்பீரமாக அங்கிருந்து நடந்தார்.
மன்னன் வணங்கி விடை கொடுத்தான்.