அறிஞர் ஒருவர் இருந்தார். பல நூல்களையும் அவர் கற்றிருந்தார். பல இடங்களிலிருந்தும் மக்கள் வந்து அவரைப் பார்த்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். எனவே தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டது.
ஒரு முறை அவர் வெளியூர் ஒன்றிற்குச் சென்றிருந்தார்.
அங்கு அவரை யாருக்கும் தெரியாது. அதனால் அவரை யாரும் வந்து பார்க்கவில்லை.
நிறையப் படித்தவர்களிடம் ஒரு குறை இருக்கும். அதாவது அவர்களுக்கு, தனக்குத் தெரிந்ததை யாரிடமாவது சொல்லி தங்கள் அறிவுத்திறனை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த அறிஞரும் அதற்கு விதிவிலக்கல்ல. யாரும் வந்து பார்க்காத போது, யாரிடம் தனது அறிவை வெளிப்படுத்துவது?
அப்போது அங்கு வந்த சிறுமி ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து தீக்குச்சியால் அதை ஏற்றினாள்.
அறிஞருக்கு அந்தக் குழந்தையிடமாவது தனது திறமையைக் காட்ட ஆசை வந்தது.
அந்தக் குழந்தையை அழைத்து, ''பாப்பா, இங்கு இருட்டாக இருந்தது. நீ மெழுகுவர்த்தியை எற்றின உடனே வெளிச்சம் வந்தது. அந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது?''என்று கேட்டார்.
அந்தக் குழந்தை உடனே தனது வாயினால் ஊதி மெழுகுவர்த்தியை அணைத்தது.
பின் அவரிடம், ''சிறிது நேரத்திற்கு முன் வெளிச்சம் இருந்தது. மெழுகுவர்த்தியை அனைத்ததும் அந்து வெளிச்சம் எங்கே போனது?'' என்று கேட்டது.
அந்த அறிஞர் திணறி விட்டார்.
அப்போதுதான் தனக்கு எல்லாமே தெரியாது என்பதனை உணர்ந்தார். அவருக்கு ஞானம் ஏற்பட்டது.