ஒரு அரசன் பதவி அகங்காரத்தில், ''நான் தான் உலகுக்கே அதிபதி. அனைவரும் எனக்கு வேலைக்காரர்கள்'' என்று சொன்னான்.
அப்போது அங்கு வந்த வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர், “இல்லை, உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்கள்தான். யாரும் அதிபதி கிடையாது” என்று சொன்னார்.
அரசன், ''யாரது?'' என்று கேட்க, முதியவர் முன் வந்தார்.
அரசன், ''நீ இப்போது சொன்னது என்னையும் சேர்த்தா?''என்று கேட்க, முதியவர் ஆம் என்று சொன்னார்.
அரசனுக்குக் கோபம் வ்நதுவிட்டது, ''நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?''என்று கேட்க, அந்த முதியவரும்,''எங்கள் ஊரில் குடிக்கத் தண்ணீர் இல்லை. எங்கள் ஊரில் ஒரு கிணறு தோண்ட நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இங்கு வந்தேன்''என்றார்.
அரசன், ''நீயோ பிச்சைக்காரன் மாதிரி, என்னிடம் வேண்டுகோளுடன் வந்துள்ளாய். இந்த நிலையில், என்னையும் ஒரு வேலைக்காரன் என்று சொல்ல உனக்கு எவ்வளவு ஆணவம்?''என்று கத்தினான்.
பெரியவர், ''அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னால் அதை நிரூபிக்க முடியும்'' என்றார்.
அரசன் சொன்னான், “நீ மட்டும் அதை நிரூபித்து விட்டால் உங்கள் ஊருக்கு ஒன்றென்ன, மூன்று கிணறுகள் தோண்ட ஏற்பாடு செய்து தருகிறேன்'' என்றான்.
முதியவர், ''எங்கள் ஊர் வழக்கப்படி, யாராவது ஒருவர் இன்னொருவரின் சவாலை ஏற்றுக் கொண்டால், அவரது பாதம் தொட்டு வணங்க வேண்டும். உங்கள் சவாலை நான் ஏற்றுக் கொண்டதால் இப்போது நான் உங்கள் பாதத்தைத் தொட்டு வணங்கப் போகிறேன். ஒரு நிமிடம் என் கைத்தடியைப் பிடித்துக் கொள்கிறீர்களா?''என்று சொல்ல, அரசனும் முதியவரின் கைத்தடியைத் தன் கையில் வாங்கிக் கொண்டான்.
முதியவரும் அரசனைப் பாதம் தொட்டு வணங்கிவிட்டு, ''இப்போது என் கைத்தடியைத் திரும்பத் தருகிறீர்களா?'' என்று கேட்க, அரசனும் திரும்பக் கொடுத்து விட்டான்.
பெரியவர், ''இதற்கு மேலும் நான் நிரூபிக்க வேண்டுமா?'' என்று கேட்க, அரசன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
முதியவர் சொன்னார், ''அரசே, நான் என் கைத்தடியைப் பிடியுங்கள் என்றதும் பிடித்தீர்கள்,திரும்பக் கொடுங்கள் என்றதும் கொடுத்தீர்கள்.நான் இட்ட வேலைகளை இப்போது நீங்கள்செய்யவில்லையா?அதனால்தான் சொல்கிறேன் இவ்வுலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே...''
தன் தவறை உணர்ந்த மன்னன் முதியவரின் கோரிக்கையை உடனே நிறைவேற்றினான்.