அக்பர் ஒரு நாள் அரசவையில், “எதற்கு மதிப்பு அதிகம்? உண்மையான பொருளுக்கா, போலியான பொருளுக்கா?” என்று கேட்டார்.
வழக்கம்போல எல்லோரும் உண்மையான பொருளுக்கே மதிப்பு அதிகம் என்று சொல்ல, பீர்பால் மட்டும் போலிக்குதான் மதிப்பு அதிகம் என்று வாதிட்டார்.
அரசர் அதை நிரூபிக்கச் சொல்ல, பீர்பாலும் சிறிது கால அவகாசம் வேண்டுமென்று கேட்டார்.
மறுநாள் பீர்பால் ஒரு தச்சனை அழைத்து, “உன் திறமை கொண்டு உண்மையான காய், கனி, மலர்கள் போலத் தோற்றமளிக்கும் பொருட்களை நீ செய்ய வேண்டும்” என்று சொல்ல, அவனும் ஒரு வாரத்தில் செய்து கொண்டு வந்தான்.
அவனை அப்பொருட்களுடன் அரண்மனைக்கு வந்து அரசரிடம் காட்ட வேண்டும் என்றும், அரசர் சன்மானம் என்ன வேண்டும்? என்று கேட்டால் ஆயிரம் பொன் வேண்டும் என்று கேட்க வேண்டும் என்றும் சொன்னார்.
அவனும் மறுநாள் அதே போன்று அரண்மனைக்கு வந்து அரசரிடம், தான் செய்த பொருட்களை காண்பிக்க, அரசர் அவை மிக அழகாக, உண்மையான பொருட்களிலிருந்து எந்த மாறுபாடும் கண்டுபிடிக்க முடியாததைக் கண்டு மிகவும் பாராட்டினார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனுக்கு என்ன சன்மானம் வேண்டும்? என்று கேட்க, அவனும் ஆயிரம் பொன் வேண்டும் என்று சொல்ல, அரசரும் அதைக் கொடுக்க ஆணையிட்டார்.
அவன் மகிழ்வுடன் பீர்பாலுக்கு நன்றி சொல்லிச் சென்றான்.
மறுநாள் பீர்பாலின் ஆலோசனைப்படி ஒரு வியாபாரி அப்போதுதான் தோட்டத்திலிருந்து பறித்த காய்கள், கனிகள், மலர்களைக் கொண்டு வந்தான்.
அரசர் எந்த வித சிரத்தையும் இல்லாமல் அவற்றைப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக நூறு பொன் கொடுக்க ஆணையிட்டார்.
அப்போது பீர்பால் அரசரிடம் அவர் எவ்வாறு அசலை விடப் போலிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பதைச் சுட்டிக்காட்ட அரசரும் பீர்பாலைப் பாராட்டினார்.