அர்ச்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும்படி கேட்டார்.
அர்ச்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுகளைக் கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்துச் சென்றார் வணிகர்.
இதைத் தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடிச்சென்று விட்டான்.
சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ்வழியே வந்த அர்சுணன் இதைக் கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லைக் கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையைச் சுகமாக அனுபவியுங்கள் என்றான்.
இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்குக் கொண்டு சென்றவன், தன் மனைவி பிள்ளைகளிடம் கூடச் சொல்லாமல், பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து, அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாகப் பாதுகாத்து வந்தான்.
இதையறியாத அவன் மனைவி, ஒருமுறை பரணிலிருந்த அந்தப் பானையை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள்.
அப்போது, பானையைக் கழுவும் போது, அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.
அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம், வெளியே சென்ற வயோதிகர் அந்தக் குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியைக் கேட்டான்.
ஏதுமறியாத மனைவி நடந்ததைக் கூற, உடனே ஆற்றிற்குச் சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்குச் சோகத்துடன் திரும்பினான்.
சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும், அர்ச்சுணனும் அவனைப் பார்க்கும்போது, அவன் நடந்ததைக் கூற அர்ச்சுணன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூற, அதை ஆமோதித்த கண்ணனும் இந்தமுறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார்.
ஆச்சர்யப்பட்டான் அர்ச்சுணன், ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை….! வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…?
எனக்கும் தெரியவில்லை..? என்னதான் நடக்கிறது, பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம், எனக் கூறி செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்கிறாயா எனக் கேட்டான்…?
உடனே தனக்குள் யோசித்த அவன், அந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூடப் போக்காது என எண்ணி, அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும் முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு, சிக்கியிருந்ததை எடுத்தான்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான். ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது…! உடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான்.
அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, அவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும், அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.
அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு அவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான். அதையனைத்தையும் வயோதிகருக்குக் கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப்பட்ட அர்ச்சுணன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்க…?
கண்ணனும் சிரித்துக்கொண்டே, இதே வயோதிகர், நீ முன்பு கொடுத்ததைத் தனக்கும், தன் குடும்பத்துக்கும் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லைத் தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே, அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை. ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும், தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்… அவனை விட்டுச் சென்ற செல்வம் அவனுக்கேக் கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார்.