மன்னன் ஒருவன் முனிவரிடம், “கீதையிலே,'கடமையை செய்,பலனை எதிர்பாராதே,'என்று கூறப்பட்டுள்ளது. நல்ல முறையில் ஆட்சி செய்ய வேண்டியது என் கடமை. அதனை மக்கள் பாராட்ட வேண்டும் என்று நினைப்பது தவறா?” என்று கேட்டான்.
முனிவர் அதற்கு, “உன் கேள்விக்கு பதில் சொல்ல நீ ஒரு வாரம் என் ஆசிரமத்தில் சாப்பிட வேண்டும்” என்றார்.
மன்னனும் அவ்வாறே அங்கு சாப்பிட்டு வந்தான். சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது. அதை ரசித்து அவன் சாப்பிட்டான்.
ஒரு வாரம் முடிந்தவுடன் முனிவர் கேட்டார், “இங்கு சாப்பாடு எப்படி இருந்தது?”
மன்னன், “நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது. இதைச் சமைத்த சமையல்காரரை என் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, தலைமைச் சமையல்காரராக நியமிக்கப் போகிறேன்'' என்றான்.
முனிவர் சொன்னார், “சுவையாக சமைக்க வேண்டியது. ஒரு சமையல்காரரின் கடமை. இந்தச் சமையல்காரன் தன் கடமையை செய்தான். இப்போது அவனுக்கு அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது. கடமையைச் சரியாக செய்தவனுக்கு அதற்கான பலன் கண்டிப்பாக தேடி வரும்”
ஆசையின் அடுத்த நிலைதான் எதிர்பார்ப்பு. ஆசைக்கு அளவில்லை. பலனை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டால், நம்மால் அந்தச் செயலில் நிச்சயம் வெற்றி பெற இயலாது. சரியாகச் செய்தால் அதற்கான பலன் நமக்குக் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது.