மன நல மருத்துவ மனையில் ஒரு இளைஞனைச் சந்தித்தேன்.
அவன் அங்கு வந்த காரணத்தைக் கேட்க அவன் சொன்னான், ''இப்படிக் கேட்பது நாகரீகம் அல்ல. இருந்தாலும் சொல்கிறேன். என் அப்பா, என்னைத் தனது பிம்பமாகவே வளர்க்க எண்ணினார். என் மாமாவும் அப்படித்தான். என் அம்மாவோ இன்னும் மோசம். அவர் நான் என் அப்பா, தாத்தா போல வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். என் சகோதரிக்குத் தனது கணவரை நினைத்து எப்போதும் பெருமை. ''அவரை மாதிரி நீ எப்போது வாழப் போகிறாய்?''என்று கேட்டாள். என் தம்பி நல்ல விளையாட்டு வீரன். அவன்,''என்னைப் போல எ ப்போது அண்ணா, நன்றாக விளையாடி வாழ்வில் முன்னுக்கு வரப் போகிறாய்?''என்று கேட்டான். என் ஆசிரியர்களும் சரியில்லை. தத்துவம், இசை, கணக்கு என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அனைவருமே அவர்களுடைய துறையில், அவர்களை அப்படியேப் பின்பற்றும் சீடனாக நான் இருக்க வேண்டும் என்று முயன்றார்கள். இவர்கள் எல்லோரும் என்னைத் துரத்தியதில் நான் இங்கு வந்து சேர்ந்தேன். வெளி உலகத்தை விட, இந்த இடம் அமைதியாகவும், தெளிவாகவும் தெரிகிறது எனக்கு. ஒரு வழியாக, இப்போது யாரைப் போலவும் இல்லாது நான் நானாகவே இருக்கிறேன்''
பின்னர் அவன் என்னிடம், ''நீ இங்கே எப்படி வந்தாய்? என்னைப் போல்தானா?'' என்று கேட்க அவசரமாக அதை மறுத்த நான் வெறும் பார்வையாளனாகத்தான் வந்திருப்பதாகக் கூறினேன்.
அவன் ஒரு சிறிய புன்னகையுடன் என்னிடம் கேட்டான்:
''ஓஹோ, அப்படியானால் நீ இந்த சுவருக்கு வெளியில் இருக்கும் பைத்தியக்கார உலகைச் சேர்ந்தவனா?''