சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)

முனைவர் நா. சுலோசனா
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காக்கிவாடன்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்த முனைவர் நா.சுலோசனா, பள்ளிக் கல்வியினை உள்ளூர் நடுநிலைப்பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியை ஆலங்குளம் அரசுப் பள்ளியிலும், தமிழ் வழியில் பயின்றவர். தமிழ் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் இரண்டு முறை தேர்ச்சி பெற்றவர். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்மொழி (ம) மொழியியல் புலத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், இதற்கு முன்பாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஜி.வி.என்., கல்லூரி, எஸ்.எஸ்.டி.எம்., கல்லூரி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
கற்பித்தலிலும், ஆராய்ச்சியிலும் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், வட்டார வழக்குச் சொல்லாய்வு, ஊர்ப்பெயராய்வு, கரிசல் வட்டாரச் சொலவடைகளைத் திரட்டுவது என மொழி குறித்த ஆய்வுத் தளங்களில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். இவர் நெறியாளுகையில் 9 பேர் முனைவர் பட்டங்களையும், 25 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களையும், 6 பேர் முதுகலைப் பட்டங்களையும் பெற்றிருக்கின்றனர். பல ஆய்வாளர்களை உருவாக்கிய இவர், மொழி, இனம், சமூகம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்டக் கட்டுரைகளை ஆய்விதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவர் 10 ஆய்வு நூல்களையும், பதிப்பாசிரியராக 13 நூல்களையும் பொதுப் பதிப்பாசிரியராக 26 நூல்களையும் படைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் சங்க இலக்கியச் சொற்கள் குறித்தும், வட்டார வழக்குச் சொற்கள் குறித்தும் அறிந்து கொள்ளும் விதமாக ‘மொழி அறிவோம்’ என்னும் வலையொளி வழியாக 600-க்கும் மேற்பட்ட பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் இளம் தமிழ் ஆய்வாளர் விருது, கம்பன் கழக ஆய்வுச் சுடர் விருது, ஆய்வுமாமணி, தமிழ்ப்பணிச் செம்மல், பாவாணர் பாராட்டுப் பரிசு, பாவாணர் தமிழ்ச்சுடர் விருது, மலேசியாவிலிருந்து பன்னாட்டு ஆசிரியர் விருது, தேனித் தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ்த் தேனீ விருது, திருக்குறள் ஆய்வுநெறிச் செம்மல், இலக்கியப் பொரொளி, தமிழ்மாமணி, ஆளுமைச் செம்மல் விருது, சிறந்த ஆய்வாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மற்றும் கோடம்பாக்கம், மீனாட்சி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் முதுகலைப் பாடத்திட்ட வல்லுநர் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முனைவர் நா. சுலோசனா சுய விவரக் குறிப்பு (பிடிஎப் கோப்பு)
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|