நமசிவாய என்பதற்கு சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந்து வருவதால் நம்முள் இருந்தே நமக்குப் பயன் தருவதாக இருக்கும். மந்திரங்கள் பல இருந்தாலும், அவற்றில் தலையாயது பஞ்சாக்கர மந்திரம் என்பர். வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது பஞ்சாக்கர மந்திரமே. ரிக், யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர் வேதத்திலுள்ள ஏழு காண்டங்களில், நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவது சம்ஹிதையில் நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம். அதன் நடுநாயகமாக இருப்பது ருத்திர ஜெபம். ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம் ‘நம சோமாயச நமசிவாய’ என்பது. இம்மந்திரத்தைத் தனி வாக்கியமாக ஒரு முறை ஓதும் போது ‘நமசிவாய’ என்றும், பலமுறை உச்சரிக்கும் போது ‘சிவாய நம’ என்றும் ஒலிக்கும்.
மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-ஆவது திருமுறைகள் அப்பர் அருளியவை அவற்றில் நடுவில் அமைந்துள்ளது. ஐந்தாவது திருமுறை, அதன் நடுவில் இடம் பெற்றிருக்கும் திருப்பாலைத்துறைத் திருப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன. அவற்றுள் நடுவான ஆறாவது பாடலில் சிவாய நம என்ற பஞ்சாக்கர மந்திரம் நடுநாயகமாக வைத்துப் போற்றப்படுகிறது. ஓம் எனும் பிரணவத்தின் விரிவே சிவாய நம ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் ஆகும். அவ்வொலியிலிருந்தே அண்ட சராசரங்கள் தோன்றின. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது பஞ்சாக்கர மந்திரமே. உயிர்கள் என்று துன்புற்றனவோ, அன்றே இறைவன் உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக திருவைந்தெழுத்தை அருளினார்.
இம்மந்திரத்தின் வகைகளை ஐந்தாகக் கூறுவர்.
தூல பஞ்சாக்கரம் - நமசிவாய
சூக்கும பஞ்சாக்கரம் - சிவாயநம
காரண பஞ்சாக்கரம் - சிவயசிவ
மகாகாரண பஞ்சாக்கரம் - சிவ
மகாமனு பஞ்சாக்கரம் - சி
தூல பஞ்சாக்கரம் - நமசிவாய
நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து சிவபெருமானின் முதல் திருமேனியாகும். மந்திர வடிவான இறைவனின் திருமேனியில்;
திருவடி - ந
திருஉந்தி - ம
திருத்தோள்கள் - சி
திருமுகம் - வா
திருமுடி - ய
இத்தூல மந்திரம் உலக இன்பங்களைத் தந்து இம்மை நலம் அருளக்கூடியது. இதுவே ஞானமார்க்கத்தின் முதல் படி. ஆகவேதான் ஞானிகளும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரும் இம்மந்திரத்தைப் போற்றிப் பாடினர்.
சூக்கும பஞ்சாக்கரம் - சிவாயநம
சிவாயநம என்னும் அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் என சிவவாக்கியர் குறிப்பிட்டுள்ளார். இம்மந்திரம் இம்மை - மறுமைப் பயன்களை அளிக்க வல்லது. மாணிக்கவாசகப் பெருமாள் இம்மந்திரத்தைத் தவமிருந்து பெற்றார் என்பர். உலக இன்பங்களைத் தருவதோடு விரும்பும் காலத்தில் திருவடிப் பேற்றையும் அளிக்க வல்லது.
நடராஜமூர்த்தியின் ஞான நடனத் திருக்கூத்தே சூக்கும பஞ்சாக்கரத் திருமேனியாகும்.
சி - உடுக்கை ஏந்திய வலக்கரம்
வா - தூக்கிய திருவடியைச் சுட்டும் இடதுகரம்
ய - அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்
ந - அனலேந்திய இடக்கரம்
ம - முயலகனின்மேல் ஊன்றிய திருவடி
உலகப்பற்றை அறவே ஒழித்துத் திருவடிப் பேற்றை விரும்பும் ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப் பெறும் ஞானத் திருநடனம் இது. ஞான மார்க்கத்தின் இரண்டாவது படி இது.
காரண பஞ்சாக்கரம் - சிவயசிவ
ய என்பது உயிரைக் குறிப்பது உயிராகிய ய வுக்கு இருபுறமும் சிவசக்தி காப்பாக இருப்பதால், இம்மந்திரத்தை இதய மாணிக்க மந்திரம் என்கின்றனர்.
உலகப்பற்றை அறவே ஒழித்துத் திருவடிப் பேற்றிலே மூழ்கியிருக்கும் தவசீலர்கள், இம்மந்திரத்தைச் சொல்வதன் மூலம் இவ்வுடம்போடு கூடிய நிலையில் இவ்வுலகிலேயே பேரின்பத்தைப் பெறுவர்.
மகா காரண பஞ்சாக்கரம் - சிவசிவ
சிவசக்திக்குள்ளே ய கரமாகிய உயிர் ஒடுங்கியுள்ளது.
“சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினைமாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதிதானே”
என்று இம்மந்திரத்தின் மகிமையைத் திருமூலர் சிறப்பித்துக் கூறுகிறார்.
சிவ சிவ மந்திரத்தைத் தினமும் ஜெபிப்பவர் சிவனும் தானும் பிரிவில்லாத, நிலையான, மேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில் உன்னத முக்தி நிலை பெறுவர்.
மகாமனு பஞ்சாக்கரம் - சி
சி என்பது மகாமனு பஞ்சாக்கர மந்திரம். சி என்ற ஓரெழுத்தில் வ என்னும் அருள் சக்தியும் ய என்னும் உயிரும் ந என்னும் மறைப்பாற்றலும் ம என்னும் மலங்களும் ஒடுங்கியுள்ளன. இது ஓரெழுத்து மந்திரமானாலும். இதில் திருவைந்தெழுத்துகளும் அடக்கம்.
ருத்திராட்ச மாலையைக் கொண்டு ஜெபிக்கும் போதும் மனதை ஒருமுகப்படுத்தி ஜெபமாலையின்றி ஜெபிக்கும் போதும் மூன்று வகையான மந்திர ஜெபமுறைகள் கூறப்பட்டுள்ளன. மனதிற்குள் மந்திரத்தை ஜெபிப்பது மானஸம். தனக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்ல உச்சரிப்பது மந்தம். பிறர் அறிய உச்சரிப்பது வாசகம் மனதிற்குள் உச்சரிப்பது உத்தமம். மெல்ல உச்சரிப்பது மத்திமம் பிறர் அறிய உச்சரிப்பது அதமம்.
எந்த மந்திரத்தை ஓதினால் என்ன பலன்? என்பதைச் சைவ சித்தாந்த சாத்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. உலக இன்பத்தை மட்டும் துய்க்க வேண்டுமென விரும்புகிறவர்கள் நமசிவாய மந்திரத்தை ஓதலாம்.
உலக இன்பத்தோடு இறையருளும் கிட்ட வேண்டுமென எண்ணுபவர்கள் சிவாய நம என்னும் மந்திரத்தை ஓதலாம்.
மும்மலங்களை அறுத்து இறைவனின் திருவருளிலேயே மூழ்கித் திளைக்க விரும்புபவர்கள் சிவயசிவ என்னும் ஐந்தெழுத்தை ஓதலாம்.
மும்மலங்களை அறுத்த பின்பும் தொடரும் வாசனா மலத்தையும் போக்கவேண்டுமென எண்ணுபவர்கள் சிவசிவ மந்திரத்தை ஓதலாம்.
பெற்ற திருவடிப்பேறு எக்காலமும் நிலைத்திருக்க சி கார மந்திரத்தை ஜெபித்து உய்வுபெறலாம்.
அம்மையப்பரே! உங்களை நான் வணங்குகிறேன். என்னைப் பற்றிநிற்கின்ற ஆணவத்தையும் மறைத்தலையும் நீக்கி, உமது அருளால் ஆட்கொண்டு அருளல் வேண்டும் என்பதே பஞ்சாக்கரத்தின் பொருள்.
ந ஆகிய திரோதன சக்தி, ம என்ற மலத்தை ஒழித்து, அதுவே வ ஆகிய அருள் சக்தியாக மாறி, சி ஆகிய சிவத்தை ஆன்மா அடையுமாறு செய்யும்.
பரமேசுவரனை தன் வடிவமாகக் கொண்ட பஞ்சாக்கரத்தை விட மேலான தாரக மந்திரம் வேறெதுவும் இல்லையென பஸ்மஜாபாலோப நிஷதம் கூறுகின்றது.