ஏகாதசி நோன்பு
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
ஏகாதசி நோன்பு என்பது பதினோராந் திதி. இது வித்தியாதரப் பெண்ணொருத்தி இலட்சுமியைப் பூசித்துப் பெற்ற பூ மாலையை அடைந்த துருவாசர் இந்திரனுக்குக் கொடுக்க இந்திரன் தான் ஏறி வந்த யானை மீது வைக்க யானை எடுத்துத் தேய்த்து விட்டதால் கோபித்து இந்திரன் செல்வம் கடலில் விழச் சபித்தனர். இதனை மீண்டும் பெற ஏகாதசியில் தேவர் கடல் கடைந்து துவாதசியில் இலட்சுமியின் அனுக்கிரகம் அடைந்து விஷ்ணுவைப் பூசித்த நாள் என்கிறது அபிதான சிந்தாமணி (பக்கம் 340)
ஏகாதசி நோன்பு
தேவர்கள் பாற்கடல் கடைந்த காலத்தில் தோன்றிய ஆலகாலத்தைச் சிவபெருமான் தேவ ஸ்திரீ - பெண்களின் மங்கல நாண் நிலைபெறும் பொருட்டாக உண்டு கண்டத்தில் அடக்கினர். அத்தினம் ஏகாதசியாம். அற்றையிரவு முழுதும் தேவர்கள் சிவபெருமானைப் பூசித்து நற்பேறு பெற்றனர். இதனை “பொங்குங் கங்காதரன் காள மயின்றே யொன்றும் புகலாம லிருந்தனன்” என வருஞ் சகலாக மத்திரட்டுச் செய்யுளானறிக. இது யாவரும் அநுட்டிக்க வேண்டிய விரதமாம்.
ஏகாதசி நோன்புப்பலன்
புரூரவாது என்பவன் அநுட்டித்துத் தன் விலங்குரு வொழிந்து சக்கிரவர்த்தி ஆயினன். அயோத்தி நகரத்திருந்தரசாண்டு உருக்குமாங்கதன் அநுட்டித்து பரமபதம் அடைந்தான். அவன் ஏவல் பெண்ணொருத்தி அநுட்டித்து ஓரா மகள் கொம்மட்டிக் கொடியிற் சிக்குண்டு நின்றமையை விலக்கித் தேவலோகஞ் செல்ல விடுத்தனள். அம்பரீடன் என்பவன் அநுட்டித்து உலகை ஒரு குடையின் ஆண்டு வைகுந்தம் அடைந்தான். வீமன் அநுட்டித்து நினைத்தது பெற்றான்.
ஏகாதசி புராண வரலாறு
இஃது சொற்சுவை பொருட் சுவைகளான் நிறைந்துள்ள ஓர் காப்பியம். யாழ்ப்பாணத்துச் சன்னாகப்பதியில் எழுந்தருளி இருந்த அ - வரதராஜ பண்டிதர் அவர்களாற் செய்தருளப்பட்டது. சைவர், வைணவர் ஸ்மார்த்தர் முதலாயினோர் அநுட்டிக்க வேண்டிய ஏகாதசியின் கூறுபாடுகளையும் அநுட்டித்தார் பெற்ற பேறுகளையும் எடுத்து விளக்குவது. கடவுள் வாழ்த்து, கால நிர்ணயச்சருக்கம், உருக்கு மாங்கதச் சருக்கம், உருக்கு மாங்கதச் சருக்கம், உருக்கு மாங்கதச்சருக்கம், வீமேகாதசிச்சருக்கம் என நான்கு பாகங்களை உடைத்து. முந்நூற்றைம்பத் தெட்டுச் சருக்கம், உருக்கமாங்கதச்சருக்கம், வீமேகாதச்சருக்கம் என நான்கு பாகங்களை உடைத்து. முந்நுாற்றைம்பத்தெட்டுச் செய்யுட்களை உடையது. காருட புராணம், சூரிய சித்தாந்தம், பிரம கைவர்த்தம், ஆக்கினேயம், விஷ்ணு புராணம், பவிடிய புராணம், பதுமம், பிராம நூல்களிலிருந்து கண்ணுவர், உத்தாலகர், சனற்குமார், காத்தியாயனர், பிருகற்பதி, மார்க்கண்டர், வியாதர், சேடர், தேவலர், கபிலர், பயிட்டினசி, யாக்கியவற்கியர், இருசிய சிருங்கர் முதலாயினோர் சொல்லிய சாரங்களை எல்லாம் வித்தியா தரணிய முனிவர் திரட்டியோர் நூல் செய்தனர். அதனையுங் கொண்டு இயற்றினர்.
ஏகாதசி மாத விரதம்
பன்னிரு மாதங்களிலே வருகின்ற வளர்பிறை, தேய்பிறை ஆகிய பட்ச ஏகாதசிகளின் பெயரும் பூசைகளில் கடைபிடித்தனர்.
ஏகாதசி வகை
கூடுதல் 31 ஆகும். ஆரம்ப ஏகாதசி, மோக்க ஏகாதசி, புத்திரதா ஏகாதசி, சபல ஏகாதசி, சய ஏகாதசி, சட்டில ஏகாதசி, ஆமலக ஏகாதசி, விசய ஏகாதசி, கமதா ஏகாதசி, பாவமோசன ஏகாதசி, மோகினி ஏகாதசி, வரூதினி ஏகாதசி, பாண்டவ ஏகாதசி, அபார ஏகாதசி, பதும ஏகாதசி, யோகினி ஏகாதசி, நந்தன ஏகாதசி, கர்மிக ஏகாதசி, வாமன ஏகாதசி, அசா ஏகாதசி, பாசாங்குச ஏகாதசி, இந்திர ஏகாதசி, பிரபோதினி ஏகாதசி, இரமா ஏகாதசி, (பாம) பரம ஏகாதசி, பதுமினி ஏகாதசி, கௌசிக ஏகாதசி, கைசிக ஏகாதசி, சர்வ சீவ ஏகாதசி, தத்த ஏகாதசி என்பனவாம். சொல்லப்பட்ட ஏகாதசிகளுடன் பரம ஏகாதசி, பதுமினி யேகாதசி, கௌசிக யேகாதசி, கைசிக வேகாதசி, சர்வசீவேகாதசி, தத்த ஏகாதசிகளும் உண்டு.
ஏகாதசி விரதம்
முற்காலத்து நாடி சங்கன்மகனாமரு என்னும் அசுரனுக்குத் தோற்றோடிய இந்திரன், திருமால் சமுகத்திற் சென்று முறையிட அவரது திருமேனியினின்றும் ஓர் சத்தி பெண்ணாகத் தோன்றி அவ்வசுரனைக் கொன்று இந்திரனாதியிமையவர் துன்பத்தை அடையச் செய்தனன். அதனால் அச்சத்தியானவள் ஏகாதசி என நோற்பிக்கும் வரத்தையும் பெற்றான்.
அபர பக்கத்து வரும் ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி என்று பெயர். இதனைக் கோகுலபுரத்து வைகானசர் என்னும் இராசவிருடியன் அனுட்டித்து முத்தி அடைந்தனர்.
அபர பக்கத்து வருவதற்குச் சபல ஏகாதசி என்று பெயர் இதனைச் சம்பகாவதி பட்டினத்து அரச குமாரனாய ஏகலன் உபாசித்துத் தத்துவ ஞானஞ்சாரப் பெற்று முத்தி அடைந்தான்.
பன்னிரண்டு மாத ஏகாதசிகளின் பெயர்கள்
காமதா ஏகாதசி, மோகினி ஏகாதசி, பாண்டவ ஏகாதசி, பதும ஏகாதசி, நந்தன ஏகாதசி, வாமன ஏகாதசி, பாசாங்குச ஏகாதசி, பிரண போதினி ஏகாதசி, ஆரம்ப ஏகாதசி, புத்திரதா ஏகாதசி, சய ஏகாதசி, ஆமலக ஏகாதசி ஆகியன ஆகும்.
1. காமதா ஏகாதசி
சித்திரை மாதத்திலே பூர்வ பக்கத்தில் வரும் ஏகாதசிக்குக் காமதா ஏகாதசி என்று பெயர். அதனை நாகலோகத்திருந்த இலலிதன் என்னுங் கந்தருவன் அநுட்டித்துப் புண்டரீகன் என்னும் அரசன் சாபத்தால் அடைந்த இராக்கத ரூபம் மாறப் பெற்றான். மற்றைய அபர பக்கத்தாய பாவ மோசன ஏகாதசியை மஞ்சூடா வென்னுந் தேவகன்னிகை அநுட்டித்துப் பாவங்கள் தொலையப் பெற்றாள்.
2. மோகினி ஏகாதசி
வைகாசி மாதத்துப் பூருவ பக்கத்தில் வரும் மோகினி ஏகாதசியை துதி மான் என்னும் அரசனும், திருட்டபுத்தி என்னும் வைசியனும் நோற்றுப் பரமபதம் அடைந்தனர். அபர பக்கத்து வரூதீனி ஏகாதசியை அநேக மகா பாதகர்கள் அநுட்டித்து வைகுண்ட பதவி அடைந்தனர்.
3. பாண்டவ ஏகாதசி
ஆனி மாதத்திலே பூர்வ பக்கத்துப் பொருந்தும் பாண்டவ ஏகாதசியைப் பாண்டவர்கள் அநுட்டித்துக் கண்ண மூர்த்தியைத் துணையாகக் கொண்டனர். மற்றைய அபார ஏகாதசியில் நித்திரை கொள்ளாத அநேக மகா பாதகர்கள் திருவருள் பெற்று வைகுண்டம் அடைந்தனர்.
4. பதும ஏகாதசி
ஆடி மாதத்து வரும் பூருவ பக்கத்துப் பதும ஏகாதசியை மாந்தாதா என்னுஞ் சக்கிரவர்த்தி அநுட்டித்து மழை பெய்வித்துத் தேச வளப்பஞ் செழிக்கப் பரிபாலனஞ் செய்தான். அபர பக்கத்து வரும் யோகினி ஏகாதசியை இயக்கனாய எமமாலியும், அவன் மனைவியரான விசாலாட்சி சுரூபை என்பவர்களும் அநுட்டித்துக் குபேரனால் நேர்ந்த சாப நிவாரணம் பெற்றனர்.
5. நந்தன ஏகாதசி
ஆவணி மாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசிக்கு நந்தன ஏகாதசி என்று பெயர். அதனை மகிசித்து ராசன் என்பவன் நோற்று மகப்பேறடைந்தான். அபர பக்கத்து வரும் ஏகாதசிக்குக் கர்மிக ஏகாதசி என்று பெயர். அத்தினத்திற் பசியாயிருந்து உயிர் நீங்கிய பஞ்ச பாதகர் யாவரும் பரமபதஞ் சேர்ந்தனர்.
6. வாமன ஏகாதசி
புரட்டாசி மாதத்திலே பூருவ பக்கத்த வரும் ஏகாதசிக்கு வாமன ஏகாதசி என்று பெயர். இதனை உபாசித்த விரோசன குமாரனா மாவலிச் சக்கிரவர்த்தி அநுட்டித்து இன்புற்றான். மற்றைய அபர பக்கத்து ஏகாதசிக்கு அசா ஏகாதசி என்று பெயர். இதனை அரிச்சந்திர மகாராசன் நோற்று இராச்சியம் - அரசாங்கம் கொண்டான்.
7. பாசாங்குச ஏகாதசி
ஐப்பசி மாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசிக்குப் பாசாங்குச ஏகாதசி என்று பெயர். இதனைத் தருமராசன் மெய்யன்புடனோற்றுத் தருமத்திற்கு அதிபதியானான். மற்றைய இந்திர ஏகாதசியை இந்திரசேனன் அநுட்டித்து தன் தந்தைக்குச் சுவர்க்கங் கொடுத்தான்.
8. பிரணபோதினி ஏகாதசி
கார்த்திகை மாதத்துப் பூருவ பக்கத்து ஏகாதசியே பிரணபோதினி ஏகாதசியே சிறப்புடைத்து. இத்தினத்திற்றான் அரி மூர்த்தி யறி துயிலொருலி யெழுந்திருப்பர். இதனிற் போக முத்தியடைந்தார் தொகையைப் புகலுதல் அரிதேயாம். மற்றையது இரமா ஏகாதசியாம். இதனைச் சந்திர பாகை என்னும் இராச குமாரி அநுட்டித்துத் தன் காதலனை அடைந்து வாழ்ந்தாள்.
9. ஆரம்ப ஏகாதசி
மார்கழி மாதத்திலே பூருவ பக்கத்தில் வரும் ஏகாதசியையே முதலாகக் கொண்டு அநுட்டிக்க வேண்டும். ஆகலின் அது ஆரம்ப ஏகாதசி எனப் பெயர் பெறும்.
10. புத்திரதா ஏகாதசி
தை மாதத்திலே பூர்வ பக்கத்தில் வரும் ஏகாதசிக்கு புத்திரதா ஏகாதசி என்று பெயராம். இதனைப் பத்திரவதிபுரக்கணிருந்த சுகேது என்னும் அரசனும், அவன் தேவியாய சைப்பியா என்னும் அரசியும் அநுட்டித்துப் புத்திரப்பேற்றை அடைந்தனர்.
11. சய ஏகாதசி
மாசி மாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசியை சய ஏகாதசி என்று கூறுவர். இதனைக் கந்தருவ குலத்து மாலியவானும், அவன் மனைவியான புட்பவதியும் அநுட்டித்து இந்திரன் சாபத்தானேர்ந்த பிசாச வடிவு நீங்கப் பெற்றனர். அபர பக்கத்து வரும் ஏகாதசியை ஓர் பிராமண நங்கை நோற்று இட்ட சித்தி எய்தப் பெற்றாள்.
12. ஆமலக ஏகாதசி
பங்குனி மாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசிக்கு ஆமலக ஏகாதசி என்று பெயர். இதனை வைதிசநகர்ச் சசபிந்து மன்னனும், சலந்தி புரத்து விதுர வேந்தனும் நோற்று வேண்டிய வென்றனர். மற்றைய அபர பக்கத்து வருகின்ற விசய ஏகாதசியை இராமச்சந்திரர் உபாசித்து இராவணவதஞ் செய்து, சீதாபிராட்டியையுஞ் சிறை மீட்டு அரசாட்சி பெற்றனர்.
ஏகாதசி விரதம் இருப்பவர் மிகுந்த பலனை அடைவர். ஏகாதசி விரதம் இருந்தவரை ஏற்றடா இரதத்திலே என்பர். ஏற்றம் பெற விரும்புபவர்கள் ஏகாதசி விரதமிருக்கலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.