திருமாலின் மங்கல குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்பட்டனர். பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்து, பெருமாளைப் பாடித் துதித்தனர். இவர்களுள் தனிச்சிறப்பு மிக்க ஆழ்வார்களாக இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் பெண்ணாக விளங்கி, திருமாலை மணந்த ஆண்டாள்; மற்றொருவர் ஆண்டாளைp பிருந்தாவனத்தில் கண்டு வளர்த்தெடுத்த பெரியாழ்வார். பெரியாழ்வார், ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரிய திருவடியான கருடாழ்வார் அம்சமாக முகுந்தாச்சாரியார், பதுமை ஆகியோருக்கு ஆனி மாதத்துச் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார். விஷ்ணுசித்தர் என்பது இவரது பிள்ளைத் திருநாமம் ஆகும்.
பெரியாழ்வார் திருமாலுக்காக நந்தவனம் அமைத்து, கைகளால் நறுமண மலர்களை மாலையாகக் கட்டி, பூமாலை சூட்டியும் நாவால் பாமாலை பாடியும் இறைவனுக்குக் கைங்கர்யம் செய்து வாழ்ந்து வந்தார். இவை மட்டுமல்லாது வளர்ப்பு மகளான ஆண்டாளைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தார். தக்க வயதில் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க அவளின் விருப்பத்தைக் கேட்க, ‘மானிடர்க்கென்று வாழ்க்கைப்பட்டால் உயிர் வாழமாட்டேன்’ எனக்கூறி திருமாலை மணக்க விருப்பம் உள்ளதாகக் கூறினாள். இறைவனின் சித்தமும் அதுவே என்றெண்ணி ஸ்ரீரங்கப்பெருமாளுக்கு மணம் செய்து வைத்தார்.
கண்ணனாய் விளங்கிய திருமாலிடம் காதல் கொண்டு நின்ற ஆண்டாளுக்குத் திருமணம் செய்து வைக்கத் தாயும் உறவினர்களும் நினைத்திருக்கும் போது, அவளோ தலைவனாகிய இறைவனோடு உடன்போக்கில் சென்று விட்டாள். இதனையறிந்த பெரியாழ்வார், தாய் மனநிலையில் தன் மகளை எண்ணி இரங்குவதாகப் பெரியாழ்வார் திருமொழியுள் பாசுரங்கள் அமைந்துள்ளன.
“ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்,
திருமகள் போல வளர்த்தேன்;
செங்கண் மால் தான் கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து
பெரும் பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து
மணாட்டுப் புறம் செய்யுங் கொ(ல்)லோ? ”
(பெரியாழ்வார் திருமொழி, பாடல் எண்: 300)
ஒரே ஒரு பெண் பிள்ளையை உடையவளான நான் அப்பெண்ணை உலகம் முழுவதும் நிரம்பிய புகழோடு திருமகள் போல வளர்த்து வந்தேன். இவளைத் திருமால் கூட்டிச் சென்றானே! நான் என்ன செய்வேன். பெரிய குடியில் பிறந்த யசோதை என் மகள் உடன்போக்கில் வந்ததால் மனம் மகிழ்ந்து மருமகளுக்குரிய சிறப்புகளைச் செய்வாளோ? அல்லது உலக மரியாதைக்காக சிறிய அளவில் கொண்டாடுவாளோ? என்ற சிந்தனையில் பெரியாழ்வார் பாடியுள்ளார்.
இறைவனே கூட்டிச் சென்றாலும் ஒரு தாயானவள் தன் பிள்ளை மீது கொண்ட அன்பால் அவளைப் பற்றிய சிந்தனையிலே இருப்பாள். மேலும், முறைப்படி திருமணம் செல்லாமல் புகுந்த வீடு சென்றால், அவளுக்கு உரிய மரியாதை கிடைக்குமா? மருமகளை நன்கு பார்த்துக் கொள்வார்களா? அல்லது மருமகளுக்கு மாமியார் கொடுமைகள் ஏதும் நடந்து விடுமோ? என ஒரு தாய்க்குரிய பரிதவிப்பில் பெரியாழ்வாரின் மனநிலை வெளிப்பட்டுள்ளது.
“தம் மாமன் நந்தகோபாலன்
தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்
செம்மாந்திரே என்று சொல்லி,
செழுங் கயங் கண்ணும் செவ்வாயும்
கொம்மையும் முலையும் இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு,
இம் மகளைப் பெற்ற தாயர்
இனித் தரியார் என்னுங் கொ(ல்)லோ? ”
(பெரியாழ்வார் திருமொழி, பாடல் எண்: 301)
கண்ணன் மணந்து கொண்டு சென்ற தன் மகளின் மாமனாரான நந்தகோபன், தன் மருமகளான இவளை அன்போடு அணைத்துக் கொண்டு, தலை கவிழ்த்து நிற்காதே, நேராக இரு என்று சொல்லி இவளின் மீன் போன்ற கண்களையும், சிவந்த வாயையும், மூங்கில் போன்ற தோள்களையும் பார்த்து, இப்பெண்ணைப் மகளாகப் பெற்ற தாய்மார் இவளை விட்டுப் பிரிந்தால், இனிமேல் உயிரோடு இருக்க மாட்டார் என்று சொல்வாரோ? அல்லது இவளை ஒரு பொருட்டாக நினையாமல் விட்டு விடுவாரோ? என மனம் வருந்திப் பெரியாழ்வார் பாடியுள்ளார்.
ஓங்கி உலகளந்த பெருமான் உலகையே காப்பவனாக இருப்பினும் தந்தை தாயுடன் தனக்குப் பிடித்தமான பெண்ணுடன் வாழும் போது, புகுந்த வீட்டில் அப்பெண் மனமகிழ்ச்சியோடு வாழ்கிறாளா? என்ற சந்தேகம் தாயின் மனதில் எழும். தாய்ப்பாசம் தெய்வ பக்திக்கும் மேலானது என்னும் கருத்தும் மாமனார், மாமியார் தன் மகளை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டுமே என்னும் தாயின் பரிதவிப்பும் பெரியாழ்வார் பாடல்களில் இடம் பெற்றுள்ளன