தீபாவளி என்றாலே மகிழ்ச்சிதான். புத்தாடை, பலகாரம், வெடிகள் என்று ஆண்டுதோறும் தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டே இருக்கிறோம். இந்தத் தீபாவளியைப் பற்றிய சில செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். வாங்க...
பெயர்க்காரணம்
‘தீபம்‘ என்றால் ஒளி, விளக்கு. ’ஆவளி‘ என்றால் வரிசை.
வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது . அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும்.
காசி என்ற சொல்லுக்கு பிரகாசம் என்று பொருள். ஆத்ம பிரகாசத்தின் புறத்தோற்றமாகவேக் காசி தலத்தை மகான்கள் கருதுகின்றனர். தீபாவளி சமயத்தில் மூன்று நாட்களுக்குக் காசி தலத்தில் தங்கி, அன்னபூரணியாக தரிசனம் அளிக்கிறாள் அம்பிகை. கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்த தினமே தீபாவளி என்று புராண வரலாறும் ஒரு நுட்பமான கருத்தைக் கூறுகிறது. நர-மனிதன், க-கீழான நிலை. மனிதனின் கீழ்த்தரமான தாழ்ந்த நிலையை பரமாத்மா அழிக்கிறார். மனிதனிடமுள்ள கீழ்த்தரமான மனநிலையை, அசுர குணங்களை பரமாத்மா அறவே அழித்து, அங்கு ஞான தீபம் ஏற்றுகிறார் என்பதே நரகாசுரன் வதம் என்பதின் தத்துவமாகும்.
தீபாவளித் திருநாள்
தீபாவளியைக் காம சூத்திரத்தில் கூராத்திரி என்றும், பாகவத புராணமான பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளிகா எனவும், கால விவேகம், ராஜமார்த்தாண்டம் நூல்களில் சுக்ராத்திரி என்றும் அழைத்ததாகத் தெரிகிறது. வடமொழி நூல்களில் வாசக்திரிய கவுமுதி, த்ருத்யத்வம் என்றும், நாகநந்தம் எனும் நூலில் தீப ப்ரதிபனுஸ்தவம் எனவும், நீலமேக புராணம் என்ற நூலில் தீபோத்ஸவம் என்றும் தீபாவளிக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கி.மு.4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதில் தீபாவளித்திருநாள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஐப்பசி மாத அமாவாசையன்று, கோயில்கள் மற்றும் நதிக்கரைகளில் வரிசையாக விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்ட தகவலையும் இந்த நூல் விவரிக்கிறது. வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரம் நூலில் தீபாவளி தினத்தை, யட்சகர்களின் இரவு என்று குறிப்பிடுகிறார். மேலும் இந்த நூல், கி.மு. 527-ல், பாட்னாவின் பாவாபுரி என்ற இடத்தில் மகா நிர்வாணம் அடைந்த 72-வயது மகாவீரரின் முக்தியின் நினைவாக ஜைனர்கள் தீப உற்சவம் கொண்டாடுகின்றனர் என்றும் குறிப்பிடுகிறது. அந்த உற்சவ தினம் ஐப்பசி மாத அமாவாசையன்றுதான் கொண்டாடப்படுகிறது.
தீபாவளித் தோற்றம்
தீபாவளி கொண்டாட்டத்திற்கு இந்து சமயத்தின் புராணங்கள் சொல்லும் கதைகள் வேறாக இருக்கின்றன.
விஷ்ணு வராக அவதாரம் தாங்கி, பூமியை மீட்டபோது பூமாதேவிக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த புத்திரன் நரகாசுரன். கோபம், காமம் முதலிய குரூர எண்ணங்களுடன் பிறந்திருந்த அவன், தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தன்னைப் பெற்றவளைத் தவிர யாராலும் கொல்லப்படக்கூடாது என்ற வரத்தையும் பெற்றிருந்தான். எனவே பூமாதேவியை சத்தியபாமாவாக அவதரிக்கச் செய்த விஷ்ணு, கிருஷ்ணவதார காலத்தில் அவளை மணந்து கொண்டார். சத்தியபாமாவைத் தன் தேரோட்டியாக்கிக் கொண்டு நரகாசுரனை அழிக்க கிளம்பினார். பூமிதேவியான சத்தியபாமா எதிரே நிற்பது மகனென அறியாமல், ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாளில் நரகாசுரனைக் கொன்று அருள்செய்தாள். பின்னர் நடந்ததை அறிந்து, தன் மகன் இறந்தநாளை, தீபத்திருநாளாகக் கொண்டாட வரம் பெற்றாள். அந்நாளே தீபாவளித் திருநாள் என்று சொல்கின்றனர்.
இராவணசம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜெயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. பதினான்கு ஆண்டுகளாக ஸ்ரீராமரைக் காணாத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரைக் கண்டதுடன் வரவேற்று மகிழ்ந்தனர். ஸ்ரீராமபிரான், சீதாப்பிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌசல்யாதேவி விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா ! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்துவிட்டது. நீ தீபஒளி ஏற்று... அந்தகாரம் விலகி அருள் பரவட்டும் என்றாள். உடனே, தீபங்களை ஏற்றிவைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று சிலர் சொல்வதுண்டு.
தீபாவளி ரகசியம்
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) என்பவர் தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று ஒரு பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு துலா மாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாகத் தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல் எவன் இருக்கிறானோ அவனே நீதிமான். அதனாலேயே நீதிக்கு அடையாளமாக தராசினை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச் சொல்கிறது. தாங்கள் பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனைத் திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் நமக்கு உணர்த்தும் பெரும் ரகசியமாகும்.
தியாகத்திருநாள்
தீபாவளித் திருநாளைத் தியாகத்திருநாள் என்றால் மிகையாகாது. நரகாசுரனை அவளது தாயால் தான் அழிக்க முடியும் என்ற நிலை இருந்தது. பூமாதேவியே அவனது தாய். அவள் திருமாலின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணரின் மனைவியாக சத்யபாமா என்ற பெயரில் பூலோகத்தில் வாழ்ந்தாள். நரகாசுரன் தன் பிள்ளை என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது. தெரியாமலேயே கிருஷ்ணனின் லீலையால் அவனைக் கொன்று விட்டாள். பின்னர், உண்மையறிந்து கிருஷ்ணனிடம், தன் மகனின் இறப்பை உலகமே கோலாகலமாகக் கொண்டாடுவதால், அந்நாளில் அதிகாலை வேளையில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளிக்க வரம் பெற்றாள். பிள்ளையை பறிகொடுத்த வேளையிலும், மக்கள் நலம் பேணிய தியாகவதி அவள். தன் பிள்ளையைப் போல், இன்னொரு பிள்ளை யாருக்கும் பிறக்கக் கூடாது என்றும் அவள் இறைவனிடம் பிரார்த்தித்தாள். மேலும், வட மாநிலங்களில் தீபாவளியை லட்சுமி பூஜையாகக் கொண்டாடுகின்றனர். தனக்கு சம்பந்தப்பட்ட இந்த விழாவை தன் சகோதரியான ஸ்ரீதேவிக்கும் (லட்சுமி), பரமசிவனின் மனைவியான கங்காதேவிக்கும் விட்டுக் கொடுத்தாள். உலக நன்மைக்காக மகனையும் பறிகொடுத்தாள். இந்தக் காரணங்களால் பொறுமையின் திலகமானாள் பூமாதேவி. எனவே, தீபாவளி தியாகத்திருநாள் ஆகிறது.
மகாலட்சுமி வழிபாடு
தீபாவளி நாளில் மகாலட்சுமி வழிபாடு முக்கியமானது. இது தொன்றுதொட்டு நடந்து வந்துள்ளதை, தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மகாலட்சுமியின் திருவுருவம் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பொறிக்கப்பட்டிருந்ததாக நெடுநல்வாடையும், வீட்டு மதில் சுவரில் பொறிக்கப்பட்டிருந்ததாக மதுரைக்காஞ்சியும் கூறுகிறது. நம்மூர் கிராமங்களில் பெண் காவல் தெய்வமாக காளி, துர்க்கை, மாரியம்மன், பேச்சியம்மன், இசக்கியம்மன் என்றே வணங்குவது வழக்கம். ஆனால், பட்டினப்பாலை என்னும் இலக்கிய நூலில் மகாலட்சுமி ஊரின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாலட்சுமிக்கு, மலர் மகள் என்று சிறப்புப் பெயர் உண்டு. பாலைக் கடைந்தால் மிருதுவான தன்மையுடைய வெண்ணெய் கிடைக்கும். அதேபோல, பாற்கடலைக் கடைந்த போது, மென்மையானவளான மகாலட்சுமி தோன்றினாள். இவள் மலரை விட மென்மையான தன்மை கொண்டதால், மலர்மகள் எனப் பெயர் பெற்றாள். தாமரையாள், பத்மவாசினி, நாண்மலராள், பூபுத்திரி (பூமியின் மகள்), மாமகள், மாதுளங்கி, பதுமை, அக்னி கர்ப்பை, ரத்தினாவதி, ஜானகி என்பன மகாலட்சுமியின் வேறு சில பெயர்கள் ஆகும். பக்தர்களுக்கு அருள் செய்ய மகாவிஷ்ணு, மகாலட்சுமியை பூலோகத்தில் பிறக்கும்படி செய்வார். ஒருமுறை பூமிக்கு வந்த மகாலட்சுமி, மன நிம்மதி வேண்டி சிவபூஜை செய்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்தார். மேலும், அவளது பெயரிலேயே மகாலட்சுமீஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். திருவாகிய மகாலட்சுமி பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநின்றியூர் என்ற பெயர் ஏற்பட்டது. செல்வ வளம் வேண்டி மகாலட்சுமிக்காக இங்கு ஹோமம் நடத்தப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் உள்ளது.
நம்மை யாராவது சிறிதாக சீண்டினால்கூட, உடன் கோபித்து விடுவோம். ஆனால், மகாலட்சுமி அப்படிப்பட்டவள் அல்ல. தாங்கவே முடியாத துன்பங்களைத் தந்த போதிலும், பொறுமையின் சிகரமாக இருந்தவள் அவள். சீதையாகப் பிறந்தபோது, ராவணன் அவளை இலங்கைக்குக் கடத்திய போதும், அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டு, அசுரகுலப்பெண்கள் துன்புறுத்திய போதும் அவள் கோபப்படவில்லை. அவளைத் துன்புறுத்திய அசுரப்பெண்களைத் தண்டிக்க ஆஞ்சநேயர் விரும்பிய போதும், அவர்களை மன்னித்துவிடும்படி சொல்லிவிட்டாள். இவ்வாறு மகாலட்சுமி, எல்லையில்லாத பொறுமையின் சின்னமாகத் திகழ்கிறாள். அவரவர் வீடுகளுக்கு அவரவர் முன்வினைப் பயனுக்கேற்பவே அவள் வருவாள். அதிலும் கூட பொறுமைதான் காட்டுவாள். தீபாவளித் திருநாளில் மகாலட்சுமியிடம் பொறுமையுடன் இருக்க வேண்டுவோம்.
கங்கா ஸ்நானம்
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்து நீராடல் என்பது மிகவும் புனிதமானதாகும். இந்நீராடல் இல்லறத்தார் மட்டுமல்ல துறவிகளுக்கும் உரியது. பொதுவாக எண்ணெயை அபசகுனமாக கருதுவார்கள். ஆனால், தீபாவளியன்று தைலமாகிய நல்லெண்ணெயில் ஸ்ரீதேவியாகிய திருமகளே வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை. அதேபோல், அன்று எந்த நீரில் குளித்தாலும் அது புனிதநதி கங்கையில் நீராடியதற்குச் சமமாகும். அதனால் தான் தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று கேட்கும் பழக்கம் உருவானது. நம் ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிநாளில் கங்காநதியே வாசம் செய்கிறாள். தைலத்தில் விளங்கும் லட்சுமிதேவிக்கும், நீரில் வாசம் செய்யும் கங்காதேவிக்கும் மானசீகமாக நன்றிதெரிவித்து தீபாவளிநாளில் எண்ணெய் தேய்த்து நீராடினால் நம் பாவங்கள் அகன்றுவிடும்.
தீபாவளியன்று சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்தம், அதாவது ஒன்றரை மணி நேரம் முன்னதாக நீராட வேண்டும் என்பது விதி. சூரிய உதயத்துக்கு முன்னதாக எண்ணெய்க்குளியல் செய்யக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால், தீபாவளியன்று மட்டும் வித்தியாசமாக இப்படிச் செய்தால் தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளை அதிக செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என பூமாதேவி நினைத்தாள். அதற்கென்றே இப்படி ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றாள்.
கங்கா ஸ்நானம் ஏன்?
தீபாவளி கதாநாயகனான நரகாசுரன் சத்யபாமாவின் உதவியுடன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான். ஆனால், கங்கையோ சிவனின் தலையில் இருந்து வந்த நதி. எனவே தீபாவளியன்று அநியாயத்தை அழித்த கிருஷ்ணனையும், பாமாவையும் வழிபடுவது சரி. ஆனால், சிவனுடன் சம்பந்தப்படுத்தி, கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகளந்தார். அவர் தன் பாதத்தை மேல் லோகத்துக்கு தூக்கியவுடன், பிரம்மா அந்த பாதங்களுக்கு தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அது ஆகாயகங்கையாகக் கொட்டியது. அது அப்படியே பூமியில் விழுந்தால் உலகம் தாங்காது என்பதால், சிவன் அதைத் தன் தலையில் தாங்கினார். பின்னர், பகீரதனின் கோரிக்கைக்கு இணங்க பூமி தாங்கும் வேகத்தில் இங்கு அனுப்பி வைத்தார். புனிதநீர் எதுவாயினும் அது கங்கையே ஆகும். நம் வீட்டுக்குடத்தில் புனிதநீரிட்டு நூல் சுற்றி மந்திரங்களை ஓதும்போது கங்கை அதற்குள் ஆவாஹனம் ஆகிவிடுகிறது. எனவே, விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் கங்கை தீர்த்தம் தொடர்புடையதாகிறது. ஆக, பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற முப்பெரும் தெய்வங்களுக்கும் சம்பந்தப்பட்ட கங்கை நதியை நம் வீட்டு தண்ணீரில் ஆவாஹனம் செய்து தீபாவளியன்று நாம் கங்கா ஸ்நானம் செய்கிறோம்.
தீபாவளி குளியலில் கங்கையின் புண்ணியம்
தீபாவளி தினத்தில் வெந்நீரில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகி, புண்ணியம் உண்டாகும். அன்றைய தினத்தில் எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால், எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கிக் குளித்தப் புனிதப்பயன் கிட்டும். தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின் புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும்.
இனிப்பு பரிமாற்றம்
தீபாவளி கொண்டாட முக்கியக் காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால், அதேசமயம் அந்தத் தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதான் தீபாவளி. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக, தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது என்று சொல்லப்படுகிறது.
குபேரன் பூஜை
செல்வத்தின் அதிபதியாகிய திருமகளின் அருள்தரும் குபேர பூஜையினைத் தீபாவளி நாளிலோ, அதற்கு மறுநாளோ செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சத்தை அருளும் குபேரனுக்கு ராஜாதிராஜன் என்ற பெயரும் உண்டு. யட்சர்களின் தலைவனான குபேரன் மிகவும் சாந்த குணம் கொண்டவர். இவர் எப்போதும் பஞ்சதசீ என்னும் மந்திரத்தை ஜபித்தவாறு இருப்பார். மகாலட்சுமியின் அஷ்டநிதிகளில் சங்கநிதி, பதுமநிதி இருவரும் இவருடைய இருபக்கங்களில் வீற்றிருப்பார்கள். சிவபெருமானை பூஜித்ததன் பயனாக வடதிசையின் அதிபதியாகும் பாக்கியத்தை அடைந்தவர் இவர். ராஜயோகத்தை அருளும் குபேரனைப் பூஜிப்பவர்கள் தனலட்சுமி மற்றும் தைரியலட்சுமியின் அருளைப் பெறுவர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை குபேரனை வழிபாடு செய்ய ஏற்ற நாளாகும். குபேரனைப் பூஜிக்கும் போது நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் செல்வம் சேரும் என்கின்றனர்.
முன்னோர்கள் வழிபாடு
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று முன்னோர்கள் வருவதாக நம்பிக்கை.
தீபாவளி சிறப்பு
* தீபாவளி தினத்தன்றுதான் விஷ்ணு, லட்சுமியைத் திருமணம் செய்து கொண்ட நாள்.
* சாவித்திரி, யமனோடு வாதம் செய்து சத்தியவானின் உயிரை மீட்ட நாள்.
* ஆதிசங்கரர், ஞான பீடம் நிறுவிய தினம்.
* நசிகேதஸ், யம லோகம் சென்று வரம்பெற்று திரும்பிய தினம்.
* கோவர்த்தன பூஜை செய்யும் நாள்.
* மகாபலி சக்ரவர்த்தி முடிசூடிய நாள்.
* புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற தினம்.
* தீபாவளி தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்து, பட்டாசு வெடித்துக் கொண்டாட வகை செய்தது மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர்.
அதிர்ஷ்டம் தரும் உப்பு
தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாகச் சாஸ்திரம் கூறுகிறது.
எண்ணெய் - லட்சுமி
சிகைக்காய் - சரஸ்வதி
சந்தனம் - பூமாதேவி
குங்குமம் - கௌரி
தண்ணீர் - கங்கை
இனிப்புப் பலகாரம் - அமிர்தம்
நெருப்புப் பொறி - ஜீவாத்மா
புத்தாடை - மகாவிஷ்ணு
லேகியம் - தன்வந்தரி
தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது தொன்ம நம்பிக்கை.
வட மாநிலத் தீபாவளி
வட மாநிலங்களில், முதல் நாள் லட்சுமி பூஜை, இரண்டாம் நாள் நரகசதுர்த்தி, மூன்றாம் நாள் முழுக்கு, ஐந்தாம் நாள் எமதர்ம வழிபாடு என தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். அவளுக்கு எமன் தீபாவளியன்று பரிசுகளை வழங்கி மகிழ்வான். அன்று தங்கை அண்ணனுக்கு விருந்து கொடுப்பாள். இதைக் கொண்டாடும் வகையில் வட மாநிலங்களில் தங்கைகளுக்கு அண்ணன்மார் பரிசு வழங்கும் நாளாகத் தீபாவளி விளங்குகிறது. மூன்றாம் நாள் திருவிழாவில் இளம்பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்தத் தீபங்கள் அமிழ்ந்து விடாமலும், அணைந்து விடாமலும் பார்த்துக் கொள்வார்கள். அப்போதுதான் இந்தாண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
விதவிதமான தீபாவளி வழிபாடு
ராஜபுத்திரர்கள் தீபாவளியன்று ராமரை வழிபடுவார்கள். அன்றைய தினம் ராஜஸ்தான் பெண்கள் உடல் முழுவதும் எனாமல் நகைகளை அணிந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து நடனம் ஆடி மகிழ்வர். மத்தியபிரதேசத்தில் குபேர பூஜை நடைபெறும். குபேரனை வழிபட்டால், பணத்தட்டுப்பாடு வராது என்பது அந்த மாநில மக்களின் நம்பிக்கை. வங்காளத்தில் காளிபூஜை நடைபெறும். தீபாவளியை இந்த மாநிலத்தில் மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காளியின் உக்கிரத்தை சங்கரன் தணித்த நாளாகத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் பசுக்களை அலங்கரித்து வழிபடுவர். ஜைனர்கள் தீபாவளி நன்னாளை மகாவீரர் வீடு பேறு அடைந்த நாளாகத் கொண்டாடுகின்றனர். சீக்கியர்கள் சீக்கிய மதகுரு, குருநானக் பூத உடல் நீத்து புகழுடம்பு எய்திய நாளாக கொண்டாடுகின்றனர். சீனாவில் ஹீம்-ஹூபா மியான்மரில் தாங்கிஜீ, தாய்லாந்தில் லாய்கிரதோஸ் ஸ்வீடனில் லூசியா ஆகிய விழாக்கள் நமது நாட்டு தீபாவளியை போலவே விளக்குகளை வரிசையாக வைத்துக் கொண்டாடுகின்றனர்.
ஆசியாவின் மிகப்பெரும் பண்டிகை
ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகையாகத் திகழ்கிறது. தீபாவளியை இந்து மதத்தினர் மட்டுமின்றி, பவுத்த, ஜைன மதத்தினரும் கொண்டாடுகின்றனர். ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவையாகும். வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.