"தீட்டு" என்று சொல்கிறார்களே...? அப்படியென்றால் என்ன?
தீட்டு என்றவுடன், ஆண்-பெண் உறவு தீட்டு, குழந்தைப் பிறப்புத் தீட்டு, பெண்கள் மாதவிடாய் தீட்டு, மனிதன் இறப்புத் தீட்டு என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதுவல்ல தீட்டு.
இவையனைத்தும் நாம் நல்ல உடல் நலத்துடன் இருக்க சுத்தமாக இருக்க வேண்டுமென்பதற்காகச் சொல்லப்பட்டவை. அப்புறம் எவை தீட்டு?
காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்களையேத் தீட்டு என்கிறார்கள்.
காமத் தீட்டு
காமம் என்பது ஆசை. ஒருவர் எந்தப் பொருள் மீதாவது ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுவர். அவரது உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே நினைவாக இருக்கும். அதற்காக, முயற்சி செய்வதும், அலைவதுமாக இருப்பர். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இல்லையென்றால், மனத்தில் வேதனையே ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றியச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.
குரோதத் தீட்டு
குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் முன் பின் பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்று கூட சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள் முழுவதும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப் போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் அதிகம். கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.
லோபத் தீட்டு
லோபம் என்பது சுயநலம். பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருட்களைச் சேர்த்து வைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பது ஆகிய எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள். இதனையே
லோபத் தீட்டு என்கின்றனர்.
மதத் தீட்டு
மதம் என்பது கர்வம் (ஆணவம்). ஒருவரையும் மதிக்காது மமதையோடு இருப்பது. எதையும் தானேச் சாதிக்க முடியும் என்ற கர்வம் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவது இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப்படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவது இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். இதனையேக் கர்வமெனும் மதத் தீட்டு என்கின்றனர்.
மாற்சரியத் தீட்டு
மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியக இல்லையே என்று தன்னையே நொந்து கொள்வது இது. எல்லோரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பது இது. தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும், நீண்டகாலம் வாழவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதனையே மாற்சரியத் தீட்டு என்கின்றனர்.
இந்த ஐந்து மாபெரும் தீட்டுகளையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் இருத்தல் ஆகாது என்கின்றனர்.