>எமதர்மனை எமலோகத்தில் நாரதர் சந்தித்தார்.
அப்போது, எமதர்மன் நாரதரிடம், “பூலோகத்தில் பெரும்பாலானவர்கள் ஏகாதசி விரதம் இருக்கின்றனர். குறிப்பாக, ருக்மாங்கதன் என்பவனின் நாட்டில் எட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளான் மன்னன். அங்கிருந்து யாருமே இங்கு வருவதிவில்லை. இறப்பவர்கள் அனைவரும் நேராக வைகுண்டத்திற்குச் சென்று விடுகின்றனர். அதனால் அந்த நாட்டைப் பொறுத்து எனக்கு அறவே வேலை இல்லை” என வருத்தத்தோடு சொன்னார்.
நாரதர் அவரைப் பிரம்மாவிடம் அழைத்து சென்றார்.
“தந்தையே! இது மிகப்பெரிய அநியாயமாக இருக்கிறது. அநியாயம் செய்பவர்களும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். அவர்களும் பரமபதத்தை அடைந்துவிட்டால் எமலோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. எனவே அந்நாட்டில் விரதம் இருப்பதை தடுக்க வேண்டும்” என்று கூறினார்.
பிரம்மன் பயந்துபோனார்.
“நீ சொல்வதை என்னால் ஏற்க முடியாது. பகவான் நாராயணன் தனது பக்தர்களுக்கு தீங்கு செய்வதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். இந்த வேலையெல்லாம் வேண்டாம்” என்றார்.
நாரதர் விடுவதாக இல்லை.
“எப்படியேனும் அந்நாட்டில் விரதம் இருப்பவர்களை தடுத்தாக வேண்டும்” என்றார்.
வேறு வழியில்லாத பிரம்மன் இதற்குச் சம்மதித்தார்.
மோகினி என்ற பெண்ணை படைத்தார்.
“ஏகாதசி அன்று உணவருந்தவும் கூடாது. சிருங்காரத்தில் ஈடுபடவும் கூடாது. ருக்மாங்கதனை ஏகாதசி விரதத்திலிருந்து பிறழச் செய்ய வேண்டுமானால் இந்த கன்னிகை அவனை மயக்க வேண்டும். அவனை சாப்பிடச் செய்து, சிருங்காரத்தில் ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அந்நாட்டில் ஏகாதசி விரதம் தடுமாறும். இறப்பவர்களும் எமலோகத்திற்கு வருவார்கள்” என்றார்.
பேரழகு வாய்ந்த மோகினி ருக்மாங்கதனின் நாட்டிற்கு வந்தாள்.
அங்குள்ள மந்திரமலைக்கு அரசன் வேட்டைக்கு வருவான். மோகினி ஒரு மறைவிடத்தில் அமர்ந்து வீணை வாசித்துக்கொண்டிருந்தாள். வேட்டைக்கு வந்த அரசன் வீணாகானம் கேட்டு அங்கே வந்தார்.
மோகினியைக் கண்டார்.
அவளது அழகில் மயங்கி, தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினார்.
“நான் பிரம்ம புத்திரி. தங்கள் பெருமையை அறிந்து தங்களைக் காணவே பூலோகம் வந்தேன். தங்கள் விருப்பப்படியேத் திருமணமும் செய்து கொள்கிறேன். ஆனால், அரண்மனையில்தான் தங்குவேன்” என்றாள்.
இருவருக்கும் கந்தர்வ முறைப்படி திருமணம் நடந்தது.
அரசனின் மனைவி சந்தியாவளியும், மகன் தர்மாங்கதனும் அவளை ஏற்றுக் கொண்டனர்.
மோகினி அரசனைத் தனது வலைக்குள் சிக்கச் செய்தாள். தன்னைவிட்டு எங்கும் செல்லவிடாமல் பார்த்துக் கொண்டாள்.
இந்நிலையில் ஏகாதசி திதி வந்தது.
அன்று மன்னன் மது, மாமிசம் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்தான்.
மோகினி அவரிடம், “அரசே! விரதம், உபவாசம் எல்லாம் மன்னர்களுக்கு விதிக்கப்படவில்லை. மன்னரின் கடமை நாட்டையும், மக்களையும் காப்பதுதானே. உங்களுக்குப் பதிலாக மூத்த மனைவியை விரதம் இருக்கச் சொல்லுங்கள். அதுவே போதும்” என்றாள்.
“என் உத்தரவுப்படி இந்த நாட்டு மக்கள் அனைவருமே ஏகாதசி விரதம் இருக்கின்றனர். நீயும் அதை பின்பற்றி ஆகவேண்டும். எனவே இந்த ஏகாதசி முதல் நீயும் விரதத்தை அனுஷ்டிப்பாயாக” என்றார்.
மோகினி அதிர்ந்து போனாள்.
“நான் ஏகாதசி விரதம் இருக்க வேண்டுமானால், எனக்கொரு வரம் தரவேண்டும்” என்றாள்.
அரசனும் “சரி” என்றார்.
“இந்த ஏகாதசியன்று நீங்கள் என்னோடு உணவருந்த வேண்டும். அடுத்த ஏகாதசியிலிருந்து இவ்விரதத்தை இருவரும் சேர்ந்து கடைபிடிப்போம்” என்றாள்.
இதில் ஏதோ சதி இருப்பதை அரசன் புரிந்து கொண்டான். இருப்பினும் வாக்கிலிருந்து அவனால் தவறவும் முடியவில்லை.
அப்போது சந்தியாவளியும், தர்மாங்கதனும் அங்கு வந்தனர். நடந்ததை அறிந்தனர்.
அவளிடம் சந்தியாவளி, “நீ எனது கணவரை விரதத்திலிருந்து பிறழச் செய்யாதே. அவர் கொடுத்த வரத்திற்குப் பதிலாக என் உயிரை வேண்டுமானாலும் கேள். தருகிறேன்” என்றாள்.
மோகினி சிரித்தாள்.
“உன் உயிர் எனக்கு வேண்டாம். அந்த வரத்திற்கு ஈடாக உன் மகனின் உயிரைக்கொடு” என்றாள்.
ருக்மாங்கதன் இந்த நிபந்தனைக்கு மறுத்தார்.
“பிள்ளையைக் கொன்று பிரம்மஹத்தி தோஷத்தை அடைய விரும்பவில்லை” என்றார்.
சந்திராவளி, “என் பிள்ளையை கொல்வதற்கு நான் சம்மதிக்கிறேன்” என்றார்.
“நமது மகனைக் கொன்று, அவனது தலையை மோகினியின் கையில் கொடுத்து விடுங்கள்” என்றாள்.
தர்மாங்கதனும் வேறு வழி தெரியாமல் சம்மதித்தார்.
“அப்பா! உங்கள் வாக்கைக் காப்பாற்ற என்னை நான் அர்ப்பணிக்கிறேன்” என்றான் மகன்.
தர்மாங்கதன் தனது தாயின் மடியில் படுத்தான்.
ருக்மாங்கதன் வாளை உருவி ஓங்கினான்.
அப்போது பூமி அதிர்ந்தது. வானம் இருண்டது.
மகாவிஷ்ணு ருக்மாங்கதன் முன்பு தோன்றி அவனைத் தடுத்தார்.
“ருக்மாங்கதா! உனது மன உறுதியைக் கண்டு மகிழ்ந்தேன். நீ இன்னும் சில காலம் வாழ்ந்து உன் மனைவியுடன் என்னிடமே வந்து சேர்” என ஆசிர்வதித்து மறைந்தார்.
மோகினி தன் பொறுப்பை நிறைவேற்ற முடியாவிட்டாலும், நாராயணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் மறைந்தாள்.
இந்த நிகழ்வைக் கேள்விபட்ட எமதர்மன், ஏகாதசியின் மகிமையை அறிந்தார்.