பக்தி என்றால் மாணிக்கவாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்கவாசகப் பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசகப் பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள்.
”வேண்டதக்கது அறியோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே!
“எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும். எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால், அதுவும் உன் விருப்பமே” என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்.
ஆனாலும், சிவபெருமான் மாணிக்கவாசகப் பெருமானை விடுவதாக இல்லை. மீண்டும் கேட்கிறார், “உனக்கு என்ன வேண்டும் கேள்” என்று.
மீண்டும் மாணிக்கவாசகர் பாடுகிறார்.
“உற்றாரை யான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா
உன் குரை கழற்கே
கற்றாவின் மனம் போல
கசிந்து, உருக வேண்டுவனே!”
அதாவது, சொந்தங்கள் எனக்கு வேண்டாம், ஊர் வேண்டாம், நல்ல பெயர் வேண்டாம், நல்ல படிப்பு, அறிவு வேண்டாம். உன் அருள் இருந்தால் அது தானாகக் கிடைக்கும். குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்தக் கூத்தனே, நான் உன் திருவடிகளைத் தேடி, தாயைக் கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும். பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்.