முருகப்பெருமானை வணங்கும் பொழுது, முருகனுக்கு அரோகரா என்கின்றோம். அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுருக்கம்.
இதற்கான பொருள்:
'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'என்பதாகும்.
முன்பு, சைவர்கள் (சைவ சமயத்தினர்) இதனைச் சொல்வது வழக்கமாயிருந்தது.
திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும் போது, அவரைச் சுமந்து கொண்டு வந்தவர்கள் 'ஏலே லோ ஏலே லோ' என்று களைப்பைக் குறைப்பதற்காகப் பாடிக் கொண்டு வந்தனர்.
அதனைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதை விட, பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, 'அர ஹரோ ஹரா' என்பதைக் கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு, 'அர ஹரோ ஹரா' என்றுச் சொல்வது வழக்கமாயிற்று.
இன்னும் சொல்லப்போனால், அரோகரா என்பதை, அர+ஓ+ஹரா என பிரிக்கலாம். அதாவது, அரண், ஹரண் இரண்டுமே சிவனின் பெயரைக் குறிப்பதாகும். இருந்தாலும், அவர் புதல்வர் மீது கொண்டுள்ள பற்றற்ற ஆசையினால் முருகனடியார்கள், முருகனை வணக்கும் போது அரோகரா என்றனர்.
காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், கௌமாரர்கள் (முருகனடியார்கள்) 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்று சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன.
பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்றுச் சொல்வது 'வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக' என்று உரிமையோடு முறையிடுவதாகும்.