தை மாதத்தின் முதல் நாள். எல்லோரும் பொங்கல் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
நாட்டின் மன்னன் அபிடேக பாண்டியன், அமைச்சர்கள், படைவீரர்கள் புடைசூழ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தான். அன்னை மீனாட்சியையும், சொக்கநாதரையும் தரிசிக்க பிரதான பிரகாரம் வழியாக நடந்து சென்றான்.
கோவிலில் தரிசனத்துக்காக வந்திருந்த பக்தர்கள் மன்னர் வருகையை அறிந்து அவருக்கு வழிவிட்டனர். ஓரிடத்தில் அமர்ந்திருந்த சித்தர் கோலத்தில் இருந்தவர், மன்னரைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டார். மன்னனும் அதைக் கவனித்து விட்டான்.
உடனே, தனது தலைமை அமைச்சர் பக்கம் பார்வையைத் திருப்பினான்.
“இவர்தான் அந்த சித்தரா?”
“ஆமாம் மன்னரே!“ என்றார் அந்த அமைச்சர்.
‘ஏற்கனவே நேரில் வந்து சந்திக்குமாறு அழைத்தும் இவர் வரவில்லை. இப்போது என்னைப் பார்த்ததுமே திருப்பிக் கொண்டார். இவர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? அற்புதங்கள் செய்யும் சித்தர் என்பதற்காக இப்படியா நடந்து கொள்ள வேண்டும்?’ என்று ஆதங்கப்பட்டான் மன்னன்.
இருந்தாலும், ‘அவர் ஒரு மகான் ஆயிற்றே...?’ என்று எண்ணிக்கொண்டவன், நேராக அந்த சித்தரை நோக்கி வந்தான்.
மன்னர் அருகில் வந்து நின்றாலும், அந்த சித்தர் எழும்பவில்லை. சித்தரின் குணம் இப்படித்தான் என்பது மன்னனுக்கு நன்றாகவேத் தெரியும் என்பதால், மன்னனும் அதை எதிர்பார்க்கவில்லை.
“தாங்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று நான் தெரிந்து கொள்ள முடியுமா?”
“இந்த உலகமே எனது வீடுதான். இருந்தாலும், காசியில் வாழ்ந்து வருகிறேன்...”
“தாங்கள் இங்கு வந்த நோக்கம் என்ன?”
“இங்குள்ள சிவன் கோவில்களை வழிபட வந்திருக்கிறேன்...”
“தாங்கள் அற்புதங்கள் நிகழ்த்துவதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். முதியவரை இளைஞராகவும், இளைஞரை முதியவராகவும், பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் மாற்றுகிறீராம். ஊமையை பேச வைக்கிறீராம். குருடரை பார்க்க வைக்கிறீராம். அப்படியா?”
“அவை எல்லாம் உண்மையே! எனக்கு எல்லாக் கலைகளும் தெரியும்” என்றார் அந்த சித்தர்.
இருந்தாலும், மன்னனுக்கு அந்த சித்தரின் அற்புதங்கள் மீது நம்பிக்கை வரவில்லை. அவரை சோதிக்க நினைத்தான்.
“சரி சித்தரே! உங்கள் அற்புதத்தை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். உங்களால் இப்போது அதை செய்து காண்பிக்க முடியுமா?” என்றான்.
அதைக் கேட்ட மாத்திரத்தில், அதுவரை அமர்ந்திருந்த சித்தர் எழுந்து விட்டார்.
“என்ன... என்னையே சோதிக்கிறாயா?”
“ஆமாம்... நான் உங்கள் அற்புதத்தை நேரில் பார்த்தால்தானே உண்மையை உணர முடியும்...”
“அதற்கு என்ன செய்யச் சொல்கிறாய்?”
“இந்தக் கல்லால் ஆன யானைச் சிலை, கரும்பை உண்ணும்படி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் கேட்டதை எல்லாம் தருகிறேன்...” என்று, அருகில் இருந்த யானை சிலையை காண்பித்தான்.
உடனே, அந்த யானை சிலையை கூர்ந்துப் பார்த்தார் சித்தர்.
அடுத்த நொடியே அந்த கல் யானை உயிர்பெற்று முன்னோக்கி நடந்து வர ஆரம்பித்தது.
அதைப் பார்த்த எல்லோரும் திகைத்துப் போய் நின்றனர். சித்தரின் அற்புதங்களை மதுரை மக்கள் ஏற்கனவே பார்த்திருந்ததால், அந்த அற்புதக் காட்சியை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
அரசன் அருகில் வந்த அந்த யானை, அவன் கையில் இருந்த கரும்பை வாங்கித் தின்றது.
தொடர்ந்து, இன்னொரு முறை அந்த யானையை பார்த்தார் சித்தர்.
உடனே அது, அரசன் கழுத்தில் கிடந்த கண்டமாலையை தனது துதிக்கையால் சட்டென்று பறித்தது. அரசன் திடுக்கிட்டுப் போனான். அவனது படைவீரர்கள் சிலர் கோபத்தில் சித்தர் மீது பாய வர... அவர்களை நோக்கி கை காண்பித்தார் அவர். அடுத்த நொடியே அவர்கள் அனைவரும் சிலைகள் ஆனார்கள்.
அதன்பிறகுதான், அந்த சித்தர் மாபெரும் மகான் என்று உணர்ந்து கொண்டான் மன்னன். தன்னை மன்னிக்குமாறு அவரது காலில் விழுந்து வேண்டினான்.
அவனை மன்னித்த சித்தர், “உனக்கு என்ன வேண்டுமோ கேள்... தருகிறேன்” என்றார்.
அவனும், தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைக் கூறி, அந்த மழலைச் செல்வத்தைக் கேட்டான். சித்தரும், “அப்படியே ஆகட்டும்!” என்று அருள் பாலித்தார்.
அடுத்த கணமே சித்தர் மாயமானார். உயிர்ப்பெற்று வந்த கல் யானையும் மீண்டும் கற்சிலையாக மாறியது. சிலையாக மாறிய வீரர்களும் உயிர் பெற்றனர்.
அதன் பின்னர்தான், அன்னை மீனாட்சியுடன் மதுரையை ஆளும் சொக்கநாதரே சித்தர் உருவில் வந்திருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து பரவசம் ஆனான் மன்னன்.
அடுத்த ஒரு வருடத்தில் சொக்கநாதர் அருளியபடியே அபிடேக பாண்டியனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன்தான் விக்கிரம பாண்டியன்.
மேலும், சிவபெருமான் சித்தராக வந்த சம்பவத்தை விளக்கும் சிற்பக் காட்சியை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு இடப்புறத்தில் இன்றும் நாம் காணலாம்.