மங்கலதேவி கண்ணகி கோயில்
உ. தாமரைச்செல்வி
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லைப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடி எனுமிடத்திலிருந்து வனப்பகுதியில் நடந்து சென்றால் 6 கிலோ மீட்டர் தொலைவிலும், கேரள எல்லைப்பகுதியான குமுளியிலிருந்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பழமையான ஜீப் போன்ற வாகனங்கள் செல்லும் சாலை வழியாகச் சென்றால் 16 கிலோமீட்டர் தொலைவிலும் மங்கலதேவி கண்ணகி கோட்டம் இருக்கிறது.
கண்ணகி கோயில்
மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் இருந்த சிலை காணாமல் போய்விட்டதால் சந்தனத்தில் சிலை போன்ற அமைப்பு செய்யப்பட்டு வெள்ளியிலான முகம் அதில் பொருத்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் அருகில் சிவபெருமான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலில் வழிபடுபவர்கள் அனைவருக்கும் திருநீறு, குங்குமம், மஞ்சள்தூள் போன்றவை அளிக்கப்படுகின்றன. கோயிலுக்கு வெளியில் அனைவருக்கும் தக்காளி சாதம், எலுமிச்சைச் சாதம், தயிர் சாதம் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.
தல வரலாறு
சோழநாட்டின் பெரும்வணிகரான மாசாத்துவான் மகளாகப் பிறந்த கண்ணகியும் அவளது கணவனான கோவலனும் சிறப்புற வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நாட்டியமாடி வந்த மாதவி எனும் பெண்ணிடம் கோவலனின் பார்வை திரும்பியது. இதனால் பொன், பொருள் என்று அனைத்து சொத்துக்களையும் இழந்த கோவலன் மாதவியிடமிருந்து மனவேறுபாட்டால் பிரிகிறான். அதன்பிறகு சமணப் பெண் துறவி கவுந்தியடிகள் துணையுடன் கண்ணகியை அழைத்துக் கொண்டு பாண்டியநாட்டுத் தலைநகரான மதுரை மாநகரம் வருகிறான்.
மதுரையில் கோவலன் வாணிபம் செய்வதற்காகக் கண்ணகியின் ஒரு கால் சிலம்பை விற்கச் செல்கிறான். அப்போது சிலம்பு திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனால் மரண தண்டனை அளித்துக் கொல்லப்படுகிறான். இச்செய்தி அறிந்த கண்ணகி அரண்மனைக்குச் சென்று தன்னிடமுள்ள மற்றொரு கால் சிலம்பை உடைத்துக் காண்பித்துத் தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்து அறநெறி கொன்ற பாண்டிய மன்னனையும், துணை நின்ற தீயோரையும், அவர்கள் வாழ்ந்த மதுரை மாநகரையும் தன் கற்பின் சக்தியால் எரிந்து போகச் சாபமிடுகிறாள். அவள் சாபத்தால் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்து சாம்பலானது. மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து வைகை ஆற்றின் தென்கரை வழியாக, நடந்து சென்று சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.
இங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைகிறது. அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.
இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர். இதை விசாரித்து அறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
துர்க்கையம்மன் கோயில்
மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் துர்கையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் பின்புறம் திறந்த வெளியில் விநாயகர் சிலை ஒன்று இருக்கிறது. இதற்கும் கேரளமாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இக்கோயிலில் வழிபடுபவர்களுக்கு மஞ்சள்தூள், குங்குமம், சந்தனம் போன்றவை அளிக்கப்படுகிறது. இங்கு கேரள மாநிலத்துப் பிரசாதமாக அவல் பொங்கல் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
சித்திரை முழுநிலவு விழா
கண்ணகி கோயிலில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சித்திரை மாதத்தில் ஒரு வாரம் வரை நடத்தப்பட்ட விழா கேரள மாநில வனத்துறையின் கட்டுப்பாடுகளால் மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டு தற்போது சித்திரை மாதம் முழுநிலவு (பவுர்ணமி) தினத்தன்று மட்டும் ஒரு நாள் விழாவாக காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை வழிபாடு செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இருக்கும் கம்பம், கூடலூர் கண்ணகி கோயில் வழிபாட்டுக் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வழிபடுகின்றனர். இந்த கோயில் இருப்பிடம் குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருவதால் இந்த ஒரு நாள் மட்டும் இந்தக் கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும், கேரள மாநில அரசின் சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் முன் கூட்டியே பேசி சில கட்டுப்பாடுகளுடன் இந்த வழிபாட்டிற்கு அனுமதிக்கின்றனர்.
எல்லைப் பிரச்சனை
கண்ணகி கோயிலுக்கு 1976ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு கேரள அரசு ஒரு சாலையை அமைத்துள்ளது. இந்த சாலையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோவிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்த சாலையை வைத்து, கேரள அரசு கண்ணகி கோவில் தங்கள் மாநில எல்லைக்குள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஆனால், 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896ல் நடத்திய சர்வேயும், 1913, 1915ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976ல், தமிழக, கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தொலைவு தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. இருப்பினும் கேரள மாநில அரசு பின்னால் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
சிறப்புக்கள்
1. சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு அமைக்கப்பட்ட 2000 வருடப் பழமையான கோயில் இது.
2. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தில் பெரியாறு வனவிலங்குகள் சரணாலயம், தேக்கடி ஆகியவை மிக அருகில் இருக்கின்றன.
3. தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவி எனும் சுற்றுலாப் பகுதி கம்பம் எனும் ஊரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
பிரச்சனைகள்
1. வருடத்திற்கு ஒரு முறை சித்திரை முழுநிலவு தினத்தன்று மட்டுமே இங்கு செல்ல முடியும்.
2. இந்தக் கோயில் பராமரிக்கப்படாமல் இருப்பதால் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
3. இந்தக் கோயிலில் இருந்த கண்ணகி சிலை காணாமல் போய்விட்டதால் சந்தனத்தில் உருவம் செய்து வழிபடப்படுகிறது.
4. இந்த விழாவின் போது கேரள மாநிலத்தின் குமுளி பேருந்து நிலையத்தில் இருந்து மங்கலதேவி கண்ணகி கோட்டத்திற்கு தனியார் ஜீப்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பயணம் அளவுக்கதிகமான பயணிகளால் மிகவும் கஷ்டமான ஒன்றாகவே இருக்கிறது.
5. கேரள மாநில அரசு வருடந்தோறும் இந்த விழாவின் போது ஜீப்களுக்கான கட்டணத்தைக் நிர்ணயிக்கின்றன. இருப்பினும் ஜீப்பை இயக்குபவர்கள் கோயிலுக்குச் செல்லும் போது வாங்கும் கட்டணத்தை விட திரும்பி வரும் போது பல மடங்கு கூடுதலாகக் கேட்பதால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்தக் கட்டண உயர்வும் தமிழ் பேசுபவர்களிடம்தான் கேட்கப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் கேரள மாநில காவல்துறையினர், வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை. இதனால் பயணம் செய்வதில் திரும்பி வரும் நிலையில் காலதாமதம் மற்றும் அதிகச் செலவுகள் ஏற்படுகிறது.
6. தேனி மாவட்டத்தில் இருக்கும் பளியன்குடி என்னுமிடத்திலிருந்து கண்ணகி கோயில் வரை தமிழக எல்லை வழியாக சாலை அமைக்கப்படும் திட்டம் எல்லைப் பிரச்சனையால் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
பயண வசதி
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் எல்லையான குமுளி எனும் ஊருக்குச் சென்று சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் இயக்கப்படும் ஜீப்களில் இந்தக் கோயிலுக்குச் செல்லலாம். தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய ஊர்களிலிருந்து குமுளிக்கு அதிகமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் கோட்டயம், வண்டிப்பெரியார், கட்டப்பனை, பீர்மேடு போன்ற ஊர்களில் இருந்து குமுளிக்கு பேருந்து வசதி இருக்கிறது.
கேரள மாநில அரசு குமுளி மற்றும் மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியிலிருந்து இயக்கப்படும் ஜீப்களுக்கான கட்டணத்தை அரசின் மூலமாக வசூல் செய்து பயணிகளை வரிசையாக ஏற்றி அனுப்பும் பணியையும் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் கூடுதல் கட்டணம், பயண நெரிசல் போன்றவை குறைவதுடன் பாதுகாப்பான பயணமும் உறுதி செய்யப்படும்.
கேரள மாநில அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் இச்சாலையைச் சீரமைத்து சரியான சாலை வசதியை உருவாக்கித்தர வேண்டும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.