காலையில் அம்மா கொடுத்த இதமான காப்பி கோப்பையை சூட்டோடு பதம் பார்த்தவாறு, நஜீம் அன்றைய வார இதழை கையில் எடுத்தான்.
நஜீம் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி கணக்காளராக தங்கி வேலை செய்கிறான். ஞாயிற்றுக்கிழமை முழுநாள் விடுமுறை. சனிக்கிழமை அரை நாள் வேலை. அதனால் சனிக்கிழமை வேலை முடிந்ததும் பஸ் ஏறி ஊருக்கு வந்திடுவான்.
வீட்டிற்கு வந்தாலும் அன்றைய நாள் இரவு 10 மணி வரை வீட்டில் இருக்க மாட்டான். தன் ஊர் தோழர்களுடன் சுற்றித் திரிவான். மறு நாள் ஞாயிற்றுக்கிழமை எங்கும் போகாமல் வீட்டு வேலைகளில் அப்பா, அம்மாவுக்கு ஒத்தாசையாய் இருப்பான். திங்கட்கிழமை அதிகாலையில் மீண்டும் கொழும்பு போய்விடுவான். கடந்த மூன்று மாதங்களாய் நஜீமின் வாழ்க்கைச்சக்கரம் இந்த கால அட்டவணையில் தான் சுழன்று கொண்டிருக்கிறது.
ஒரு மொடக்கு காப்பி ஒரு பக்கம் பத்திரிகை என்று இரண்டையும் ஒரே நேரத்தில் ருசித்து, ரசித்துக் கொண்டிருந்த நஜீமின் பார்வையில் அந்த புகைப்படம் பதிந்தது. அது அவனை கொஞ்சம் நிலை தடுமாறச் செய்தது.
காப்பி கோப்பையை அப்படியே கீழே வைத்தவன், பத்திரிகையை இரண்டாக மடித்து அதிலிருந்த புகைப்படத்தை உற்று நோக்கினான். அவனால் நம்பவே முடியவில்லை. அன்று வந்த அதே நிலா. ஆம் அவளே தான். மீண்டும் புகைப்படத்திலாவது அவளைக் காணமுடியும் என்று அவன் நினைத்திருக்கவேயில்லை. வைத்த கண் வாங்காமல் கண்களை அகல விரித்து கதிரையின் நுனியில் அமர்ந்தவனாய் உலகையே மறந்து அவளின் புகைப்படத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.
*****
அன்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை. இயக்கத்தை மறவாமல் சூரியன் தன் கதிர்களை தரணியெங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. தாஹிர் நானாவும் வழமைபோல் தன் மாடுகளை மேய்ச்சலுக்காய் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
"மகேன் சும்மா தானே இருக்கீங்க... சின்ன வேலை ஒன்னு இருக்கு செய்வோமா?" என்றவாறு ஜமீலா நஜீமின் அறைக்குள் நுழைந்தார்.
“என்னம்மா..?” கட்டிலில் சோம்பரத்துடன் புரண்டு கொண்டிருந்த நஜீம் எழுந்து நின்றான்.
"அந்த ஸ்டோர் ரூம்ல உள்ள பெட்டிகள கொஞ்சம் துப்பரவாக்கினால் நலம். எல்லாம் எலி கடிச்சி நாசமாக்கி.."
"ஆ.. அதுக்கென்ன வாங்க துப்பரவாக்கலாம்."
இருவரும் அந்த அறையின் மூலையில் சிலந்தி வலைகளின் இராஜ்ஜியத்திற்குள், தூசு படிந்திருந்த பெட்டிகளை வெளியே இழுத்து அதற்குள் இருந்த சாமான்களை கொட்டினார்கள். இவர்களின் திடீர் நடவடிக்கையை எதிர்பார்க்காத எலிக்கூட்டங்கள் "அபாயம் அபயாம்" என்பதைப்போல "கீச் பீச்" என கத்தியவாறு தலை தெரிக்க ஓடி ஒழிந்தன.
பெட்டிக்குள் இருந்தவற்றில் தேவையான பொருட்களையும் புத்தகங்களையும் ஜமீலா தெரிந்து கொடுக்க, நஜீம் அலுமாரியில் அழகாய் அடுக்கிக் கொண்டிருந்தான். அங்கே குவிந்திருந்த பழைய பொருட்களுக்குள் ஒரு பக்கம் கிழிந்து இன்னொரு பக்கம் எலி கடித்திருந்த கறுப்பு நிறத்திலான புத்தகம் ஒன்றைக் கையிலெடுத்த ஜமீலா அதில் படிந்திருந்த தூசுகளை தட்டியவாறு,
"இது 1965 இல வாப்பா கண்டி கடையில வேல செய்ற நேரம் வாப்பாக்கு சிங்கப்பூர் பேனா நண்பர் ஒருத்தர் இருந்தாராம். நல்ல கூட்டாலியாம். அவர் தான் வாப்பாக்கு இந்த ஆல்பத்தையும் சந்தோசமா அனுப்பியிருந்தாராம். வாப்பா எவ்வளவு பத்திரமா பாது காத்த ஆல்பம். சின்னதுள நீங்க கிழிச்சி போட்டீங்க.. இப்போ மிச்சத்த எலி திங்குது..." என வாடிய முகத்துடன் மகன் நஜீமிடம் சொன்னார்.
அது இரண்டு கனத்த அட்டைகளாலான ஒரு புத்தகம். நீண்ட சித்திரக்கொப்பி போன்றது. உள்ளே கறுப்புத்தாள்கள். அதன் இடையே புகைப்படங்களை அழுத்தி வைக்க சின்ன பட்டன்கள். ஒவ்வொரு பக்கமும் வெள்ளை டிசுத்தாள். அன்றைய காலத்தின் பிரபலமான புகைப்பட ஆல்பம். அதுவும் சிங்கப்பூரிலிருந்து கிடைத்த அன்பளிப்பு. அந்தக் காலத்தில் எவ்வளவு பெருமதியாய் இருந்திருக்கும் என நஜீமால் ஊகிக்க முடிந்தது.
"என்னம்மா சொல்றீங்க. நான் கிழிச்சேனா..?"நஜீமுக்கு அம்மா என்ன சொல்கிறார்?ஏன் தன் மேல் பழி சொல்கிறார் என்று மட்டும் புரியவில்லை. ஏனெனில் சின்ன வயதில் அவன் கிழித்ததாக அம்மா சொல்லும் விடயங்கள் அவன் மனதில் நினைவில் நிற்க வாய்ப்பு இல்லை. மழலைப்பருவம் அல்லவா?
"நீங்க சின்ன வயசில. ஒரே இதில உள்ள பொடோ பாக்கிறது தானே வேல. பாத்திட்டு பக்கம் பக்கமா கிழிச்சு போடுவீங்க. வாப்பாக்கு ஆத்திரம் வரும் ஆனா ஒங்களுக்கு அடிச்சதில்ல. அலுமாரிக்கு மேலே வாப்பா.. அவர்ட சூட்கேஸ் உள்ள தான் ஆல்பத்த போட்டு வெப்பார். நாங்க அதை கொடுக்க இல்லென்னா... அலுமாரிக்கு கீழ இருந்து பிடிவாதமா நெலத்தில் காலை உதெச்சு உதெச்சு" சூச்சு கேஸு புச்சாம் தா என்டு அழுவீங்க..."அம்மா சொல்ல, தன் குறும்புத்தனத்தை எண்ணிச் சிரித்தான்.
மறுபுறம் தினம் தினம் அந்த ஆல்பத்தை பார்ப்பது மட்டுமல்லாது கிழித்த போதும் தன்னை அடிக்காமல் அரவணைத்த அப்பா, அம்மா இவ்வளவு தன் மேல் பாசமா என்று பூரித்துக்கொண்டான். நஜீம் அவர்களுக்கு ஒரே பிள்ளை.செல்லப்பிள்ளை.
கிழிந்த அந்த ஆல்பத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில புகைப்படங்களே எஞ்சியிருந்தது. எல்லாம் கறுப்பு வெள்ளைப்படங்கள். "இது யாரும்மா?" என்று அல்பத்தில் இருந்த ஒரு படத்தைக் காட்டிக் கேட்டான்.
"அது தான் வாப்பாட சிங்கப்பூர் கூட்டாளி அப்துல்லாஹ் பாய்"என்றார் ஜமீலா.
தாஹிர் நானா வறிய குடும்பத்தில் பிறந்தவர். மூன்று சகோதரிகள்.ஒரு சகோதரன்.இவர் தான் மூத்தவர். தந்தை சுகயீனமுற்றிருந்ததால் குடும்பப் பொறுப்பு இவர் ஏற்கவேண்டிய நிலை. படிப்பை பாதியில் நிறுத்தி கண்டி புடவைக்கடையில் சேல்ஸ்மனாக வேலையில் சேர்ந்தார். அந்தக் கடையில் பல வருடம் வேலை செய்தார். மாதத்தில் இரண்டு நாட்கள் தான் விடுமுறை. வீடு போவதென்றாலும் போய் வரும்போதெல்லாம் பாதி நாட்கள் வீதியிலே கழியும். கண்டியிலிருந்து அவ்வளவு தொலை தூரத்திலிருந்தது இவரின் சொந்த ஊர்.
வேலைக்கு சேர்ந்த காலத்தில் பத்திரிகையில் வந்த வெளிநாட்டு பேனா நட்பின் மூலம் அறிமுகமானவர் தான் சிங்கப்பூரைச்சேர்ந்த அப்துல்லாஹ் பாய்.அந்தக்காலத்தில் கடிதம் பரிமாறல் மட்டும் தான்.நேரில் சந்திக்காவிடினும் தொலைதூரத்தில் உள்ள அப்துல்லாஹ் பாயின் நட்பு ஆழமானது. தமது சுக துக்கங்களை மடல்கள் மூலம் பரிமாறி ஆறுதல் அடைந்து கொள்வார்கள்.
தாஹிர் நானாவின் மூன்று சகோதரிகளின் திருமண வைபவங்களுக்கும் தன் அன்பளிப்புக்களை மறவாமல் அனுப்பி வைத்த அன்புத்தோழன் அப்துல்லாஹ் பாய்.
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு.”
என தூய்மையான நட்பை திருக்குறளில் குறிப்பிட்டதற்கு இலக்கணமாய் அமைந்தது தாஹிர் நானா-அப்துல்லாஹ் பாய் நட்பு.
இப்படி இருந்த இணை பிரியாத நட்பு, இடை நடுவில் தடைப்பட்டது. தாஹிர் நானா தனது தந்தையின் திடீர் இழப்பால் வீடு வந்தவர் திரும்பி வேலைக்குப் போகவில்லை. தந்தையின் இழப்பால் பதறியடித்துக் கொண்டு வீடு வந்ததால் வரும் வழியில் ஒரு கைப்பையை பஸ்ஸில் தொலைத்து விட்டார். அதில் தான் அப்துல்லாஹ் பாய் அனுப்பிய கடிதங்களும் முகவரியும் இருந்தது. தாஹிர் நானாவால் தோழனுக்கு கடிதம் அனுப்பிக்கொள்ளமுடியவில்லை.
கடை முகவரி மாத்திரமே அப்துல்லாஹ் பாயிடமும் இருந்தது. எப்படியும் நண்பன் தன் கடைமுகவரிக்கு நிச்சயம் கடிதம் போட்டிருப்பான். அங்கு போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒருநாள் கண்டிக்கு போனார். ஆனால் கடை பூட்டப்படிருந்தது. இந்தியர்களே அந்தக்கடை உரிமையாளர்கள். அது இலங்கையில் இனக்கல்வரம் வெடித்துக்கொண்டிருந்த காலம்.கொழும்பில் பல கடைகள் தீக்கிரையாகும் போதே இவர்களும் கடையை நிரந்தரமாய் மூடிவிட்டு இந்தியா திரும்பிவிட்டனர். ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய தாஹிர் நானாவால் தன் நண்பனை தொடர்புகொள்ள எந்த வழியும் இருக்கவில்லை.
தந்தையின் இழப்பிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே கடைசி தங்கையின் திருமணமும் நடைபெற்றது. தங்கை மார் மூவரையும் கரைசேர்க்கும் வரை தான் கலியாணம் முடிப்பதில்லை என்ற உறுதியில் இருந்ததால் அவருக்கு 37 வயதும் தாண்டிக்கொண்டிருந்தது. காலப்போக்கில் ஜமீலாவை கலியாணம் முடித்து மனைவியின் ஊரிலே குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார்.
வேலையோடு வேலையாக அந்த ஆல்பத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகக்கதை இருப்பதை தன் அம்மாவின் மூலம் நஜீம் அறிந்து கொண்டான்.
மெதுவாய் ஒழுங்கு படுத்திய ஆல்பத்தை பத்திரமாய் வைத்த நஜீம்," அது சரி எனக்கு தெரிஞ்ச வயசில இந்த அல்பத்த காணவே இல்லையே?"என்று கேள்விக்குறியோடு அம்மாவை நோக்கினான்.
"உங்களுக்கு நாலு வயசு இருக்கும் போது நாங்க வாப்பாவோட பெரிய வீட்டுக்கு போனோம். அப்போ எதிர்பாராம பழைய புத்தகம் ஒன்னுக்குள்ள அப்துல்லாஹ் பாயோட அட்ரஸ் எழுதின காகிதம் கிடைச்சுது. சந்தோசமா வாப்பா எடுத்து வந்தார்."
"அப்போ அவருக்கு வாப்பா லெட்டர் போட்டாரா?"
"ஹம்.. காகிதம் போட்டா தானே.. ஊட்டுக்கு வந்து அவசரமா காகிதம் எழுதி, அட்ரஸ் இருந்த காகிதத்தோட இந்த அல்பத்துக்குள்ள மூடி மேசக்கு மேல வெச்சிட்டு பக்கத்து கடைக்கு எயார் மெயில் கவர் எடுக்க போனாரு. அந்த நேரம் பாத்து நல்ல மழ. கொஞ்சம் வர சுனங்கிட்டு. அதுக்குள்ள நீங்க அந்த காகிதம் ரெண்டயும் கப்பல் செஞ்சு மழ தண்ணியில விட்டீங்களே. அன்னைக்கு வாப்பக்கு வந்த ஆத்திரத்தில இந்த ஆல்பத்த கட்டி மூலையில போட்டாரு. ஆனா அந்த கூட்டாளிய நெனவு வார நேரமெல்லாம் அவருக்கு கவல தான்" சொல்லும் போதே ஜமீலாவின் குரலிலும் சோகம் தோய்ந்திருந்தது. நஜீம் தன் குற்ற உணர்வுடன் அலுமாரியை அழகாக அடுக்கினான்.
சில மாதங்களின் பின்….
“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே..”
என்ற பாடல் வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்க, தாஹிர் நானா தன்னையே மறந்து அந்தப்பாடலில் இலயித்திருந்தார். அப்போது,
“ட்ரீங்… ட்ர்ரீங்..!!” என வீட்டு தொலை பேசி அலறியது.
"ஹெலோ..."
"ஹலோ...தாஹிர் இருக்கிறாரா?”
"ஆமா ..நான் தாஹிர்..நீங்க யாரு...?”
“நான் அப்துல்லாஹ்..சிங்கப்பூர் அப்துல்லாஹ்!!”
தாஹிர் நானாவால் நம்பவே முடியவில்லை.”அப்துல்லாஹ் பாய்.!!”. சந்தோச மிகுதியால் உறக்க கத்திய கத்தலில், அடுப்படியில் இருந்த ஜமீலா "என்னங்க கனவு கினவு கண்டீங்களா?" என அரக்கப்பரக்க ஓடி வந்தார்.
கணவனின் ஆனந்தக் கண்ணீர் கண்டு ஜமீலாவின் கண்களிலிருந்தும் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.
நண்பர்கள் இருவருக்கும் தாங்க முடியாத மகிழ்ச்சி. பலதும் பத்தும் பல மணி நேரம் பேசினார்கள்.
"எப்படி என்னோட டெலிபோன் நம்பர் கிடைச்சுது?" என்ற தாஹிர் நானாவின் கேள்விக்கு “எல்லாம் பேஸ் புக்கின் ஹெல்ப்தான்...... ’என நடந்த விபரத்தை அப்துல்லாஹ் பாய் விபரமாய் சொல்ல தாஹிர் நானாவின் மனதுக்குள் பேஸ்புக் பற்றி மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.
ஆம்.இன்று எங்கும் எதிலும் வியாபித்திருப்பது இணையம். அதிலும் சமூக வலையமைப்பான "பேஸ்புக்" என்றால் சின்னக் குழந்தையும் அறியும். ஒரு நாளைக்கு சாப்பிட மறந்தாலும் தினமும் யாரும் பேஸ்புக் பார்க்க மறக்க மாட்டார்கள்.
அன்று அலுமாரியை அடுக்கிய பின்னர் தன்னால் தந்தையின் நட்பு நின்று போனதோ என்று குற்ற உணர்வு ஒரே நஜீம் மனதில் தோன்றவே. மறு நாள் கொழும்பு போகும் போது யாருக்கும் தெரியாமல் அந்த போட்டோக்களை எடுத்துப் போய் ஸ்கேன் செய்து தன் பேஸ்புக்கில் பத்திரப்படுத்திக் கொண்டான்.
பேஸ்புக்கால் தேட முடியாதது ஒன்னும் இல்லை. வீட்டிற்கு வீடு வாசல் படி என்பதைப்போல மனுசனுக்கு மனுசன் பேஸ்புக் என்றாகி விட்டது. நஜீம் தன் தந்தையின் நண்பரைப் பற்றி எப்படியாவது தெரிந்து கொள்ளலாம் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தான்.
கடையில் வேலை நேரம் தவிர பேஸ்புக்கிலும் உலகம் முழுதும் சுற்றி வட்டமிடுவதும் இவன் வாடிக்கை. சில மாதங்களின் பின் லண்டனில் இருக்கும் பேஸ்புக் நண்பன் ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தான்.”உன் பேஸ்புக்கில் இருக்கும் சிங்கப்பூர் அப்துல்லா,என் பிரண்டோட மாமா.”
உடனே லண்டன் நண்பனின் நண்பனை தொடர்பு கொண்டு, அவன் மூலம் இறுதியில் அப்துல்லாஹ் பாயின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். தன் வீட்டு தொலைபேசி இலக்கத்தை அப்துல்லாஹ் பாய்க்கு தெரிவித்து, தன் தந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தான்.
சேர முடியாத தண்டவாளம் போல
இரு நண்பர்கள்
இரு துருவங்களாய் நிற்க
சேர்த்து வைத்து
சரித்திரம் படைத்து
அனைவர் மனதிலும்
முதல் மரியாதை கொண்டது
முகப்புத்தகம்(பேஸ்புக்)
தாஹிர் நானா- அப்துல்லாஹ் பாய் இருவருக்கிடையிலான நட்பு மீண்டும் தளிர்விட்டு வளரத் துவங்கியது. அந்த அசுர வளர்ச்சியின் பிரதி பளிப்பே அப்துல்லாஹ் பாய் இலங்கை வந்து ஒருகிழமை தங்கிச் சென்றார்.
அன்று அவரை வழியனுப்ப விமான நிலையம் சென்ற போதே அவளை எதிர்பாராமல் பார்த்தான் நஜீம். எதிர்பாராமல் பார்த்தாளும் மீண்டும் மீண்டும் அவளைப் பார்க்கத் தூண்டும் வசீகர அழகி.
நஜீம் அருகில் தன் தந்தை இருப்பதையும் மறந்து அவளையே இரசித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்வில் இப்படி ஒரு ஈர்ப்பு வேறு எந்தப் பெண்ணாலும் வந்ததில்லை. யாருக்கும் தெரியாமல் தன் ஓரக்கண்ணால் இடையிடையே அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த சில நிமிடங்களில் நஜீமின் இதயம் “திக்” கென்றது. ஆம்.அவள் ஒரு வாலிபனுடன் கைகோர்த்துக் கதைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் தனக்கு சொந்தமில்லை என்ற போதிலும் நஜீமால் அவளை மறக்க முடியவில்லை. தாஹிர் நானா தன் நீண்ட நாள் நண்பரை வழியனுப்பி சோகத்தோடு திரும்ப,நஜீம் கணப்பொழுதில் கண்டு கலைந்து போனவளை நினைத்து கவலையோடு வந்தான்.
*****
“மகேன்... காப்பி ஆறுது" அம்மாவின் குரல் கேட்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டவனாய், அந்தப் புகைப்படத்தை மீண்டும் பார்த்தான். தன் இதயத்தில் பதிந்த அவளே தான். படத்தோடு கொட்டை எழுத்துக்களால் இருந்த செய்தியை வாசிக்கத் துவங்கினான்.
“இளம் பெண் தற்கொலை!”.கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் இந்த இளம்பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமான டுபாய் வாலிபருடன் ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாய் மாறியுள்ளது. பேஸ் புக்கைத் தொடர்ந்து ஸ்கைப் மூலமும் வீடியோ கெமராவிலும் தினந்தோறும் அரட்டை அடித்துள்ளனர். வாலிபன் டுபாயிலிருந்து சென்ற மாதம் 15 நாட்கள் விடுமுறையில் வந்த வேளை பலமுறை இந்த பெண்ணுடன் சுற்றித் திரிந்துள்ளான். இன்னும் ஆறுமாதத்தில் வந்து நிச்சயம் திருமணம் முடிப்பேன் என்றும் ஆசை வார்த்தைகளால் நம்ப வைத்துள்ளான்.
-அந்த வாலிபர் டுபாய் திரும்பிச் சென்ற பின்னர் தான் ஒருவர் சொல்லி அவன் ஏற்கனவே திருமணமானவன் என விபரம் அறிந்ததும் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்குவதாப்பட்டுள்ளாள். அதன் பின் இருவருக்கிடையே விரிசல் ஏற்பட அவளுடன் உல்லாசமாய் இருந்த புகைப்படங்களை, டுபாய் ஆசாமி பேஸ்புக்கில் இட அதிர்ச்சி ஆத்திரம் அவமானம் தாங்கமுடியமால் இளம்பெண் தற்கொலை செய்துள்ளாள்.பொலிஸார் கல்லா ஆசாமியை தேடி வலை விரித்துள்ளனர்.
வாசகர்களே..இது இண்டர்நெட் யுகம். இன்டர்நெட் இன்றேல் உலகம் இயங்காது என்ற நிலை.இருந்தும் நல்லவை போலவே நிறைய கெடுதிகளும் இருக்கிறது.அதிலும் பேஸ்புக்கில் நிறைய மோசடிகள் நடக்கின்றன. ஜாக்கிரதை! செய்தியை வாசித்த...நஜிமின் நெஞ்சில் எதையோ இழந்து விட்டது போல் சோகம் ஆட்கொண்டது.
வலைப்பூவால் வலைவீசி
நட்பால் அறிமுகம் கொடுத்து
அன்பால் அனுசரித்து
காதலால் அம்பு தொடுத்து
காமத்தால் வேட்டுவைத்து
கற்பால் உயிரை எடுத்து
வஞ்சகமறிய கொடியிடையாளை
வஞ்சித்து நிந்தித்தவனே
உன்னால் எல்லோருக்கும்
அவ மரியாதை முகப்புத்தகம் மீது.
"ஹம்..எதுலயும் நலவு கெடுதின்னு இரண்டு பக்கம் இருக்கத்தானே செய்யும்.நாம தான் யோசிச்சு நடக்கனும்" நஜீம் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.