வீட்டின் மேற்பகுதியில் கம்பி கட்டியிருந்த இடத்தில் கான்கிரீட் போடுவதற்காக கீழிருந்து மேல் வந்த கான்கிரீட் கலவையை அங்கே கொட்டிக் கொண்டிருந்தேன். வீட்டின் சொந்தக்காரர், “கலவை எல்லா இடத்திற்கும் போற மாதிரி கம்பியைக் கொண்டு குத்திவிடுங்க... “ என்று அவ்வப்போது அறிவுறுத்திக் கொண்டிருந்தார். பெரிய கட்டிடங்கள் என்றால் வைப்ரேட்டர் போடுவார்கள். இது சிறிய கட்டிடமாக இருந்ததால் கான்கிரீட் கலவையைக் கம்பியால் கிளறி, அது பரவலாக இருக்கும்படி பார்த்துக் கொண்டிருந்தேன்.
கான்கிரீட் கலவையைப் போடும் போது மின்சாரப் பணிக்காக வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைப் உடைந்து விடாமலிருக்க அந்த இடத்தில் மெதுவாகப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தத் தவறு நடந்தது. என் காலில் மாட்டியிருந்த செருப்பு அந்தக் கம்பியில் மாட்டிக் கொள்ள, அதை எடுக்கும் வேகத்தில் நான் வேகமாக இழுக்க தடுமாறிக் கீழே விழுந்தேன். முகத்தில் ஏதோ இழுத்தது போல் இருந்தது. அவ்வளவுதான் முகப்பகுதியிலிருந்து இரத்தம் வழிய, மயக்கமாகி விட்டேன்.
அதன் பிறகு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்பு குணமாகி, இன்றுதான் வீட்டுக்கு வந்தேன்.
வீட்டின் முகப்பிலிருந்த கண்ணாடியில் பார்த்தேன். முகத்தில் குறுக்குக் கோடு போல் ஒரு தழும்பு. ஏதோ சூடு போட்டது போல் இருந்தது. ஆசுபத்திரியில் காயத்திற்காக முகத்தில் போடப்பட்ட தையல், பூரானைப் பிடித்துத் தலைகீழாகப் போட்டால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு தழும்பு.
தழும்பைப் பார்த்ததும், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு ஞாபகத்திற்கு வர அப்படியே, அங்கிருந்த கட்டிலில் சாய்ந்தேன்...
கல்யாணமுன்னு பேச்சு எடுத்ததுமே எனக்கு மனசுக்குள்ளே ஏதோ ஒரு சந்தோசம். கல்யாண பேச்சு ஆரம்பிச்ச ஒரு வாரத்துலயே எனக்கு ஒடம்பு ஒரு சுத்து பெருத்துப் போனது போலத்தான் தெரியுது. ஏன்னா எனக்கு முப்பது வயசாகியும் கல்யாணம் ஆகல்ல... அதுக்குக் காரணம் இருந்துச்சு.
எங்க வீட்டுல ஆறுபேரு நான் ஒருத்தன் மட்டும் ஆம்பள... மீதி அஞ்சும் பொம்பள. இரண்டு அக்கா, மூணு தங்கச்சிங்க. நான் நாலாம் வகுப்புக்கு மேல படிக்க முடியல.
''நான் ஒருத்தன் கட்டடத்து வேலைக்குப்போய் சம்பாதிச்சு அஞ்சு பொம்பளைப் பிள்ளைகளையும் கட்டிக் கொடுக்கவும், இவன படிக்க வக்கவும் என்னால முடியாது... அதுனால இவனயும் இப்பவே என்கூட கட்டிடத்து வேலைக்கு வந்து என் கூட தொழிலு பழகச் சொல்லு'' என்று அம்மாவிடம் அப்பா கராறா சொல்லிட்டாரு.
"அம்மா நான் படிக்கிறேம்மா... நல்லாப் படிச்சு நான் வாத்தியார் ஆயிடுவேன். அப்ப நான் வேலைக்குப் போய், அக்கா தங்கச்சிய கல்யாணம் பண்ணிக் குடுக்கிறேன். ஒங்கலயும் ஒக்கார வச்சு சோறு போடுறேன்''. நான் அம்மாவிடம் கெஞ்சினேன்.
"ஆமாமா... வக்கத்த வாத்தியாரு வேலையில வாற சம்பளத்த வச்சு கெழங்கு துண்டுகூட வாங்க முடியாது... மாசம் முடிஞ்சா கெடச்ச சம்பளத்த முழுக்க ஒவ்வொண்ணா எண்ணியெண்ணி செலவழிக்க நம்மால முடியாது". என்று அப்பா ஒரேயடியாகச் சொல்லி விட்டார்"
‘போக்கத்தவன் போலீசு வேலைக்கும், வக்கத்தவன் வாத்தியாரு வேலைக்கும் போவான்னு’ எங்க ஊருல பழமொழி சொல்லுவாங்க. அத வச்சுதான் எங்க அப்பனும் என்னோட படிப்ப நிறுத்திட்டு, அவரு கூட கட்டிடத் தொழிலுக்கு என்னக் கொண்டு போயிட்டாரு.
தொடக்கத்துல சாந்து, சிமிண்டு வெயிலு இதெல்லாம் எனக்கு ஒத்துக்காம இருந்தாலும் போகப்போக அது சரியாகி விட்டது. இப்ப எங்க ஊருல நாந்தான் பெரிய கொத்தனார்.
"அவன் ஒரு பெரிய ஆளுதான்யா. இந்த இளம் பிராயத்திலயே இப்படித் தொழிலச் சுத்தமாப் பாக்குற ஒருத்தன நான் இதுவரைக்கும் பாக்கலய்யா..." என்று எங்க ஊருல நெறயபேரு என்னப்பத்தி இப்பிடிதான் பேசிக்குவாங்க.
நான் ஒரு கட்டிடத்த எடுத்துப் பார்த்தன்னா ராத்திரிப் பகலுன்னு பார்க்க மாட்டேன். ஆளுகளை வச்சு எல்லா வேலையையும் சுத்தமாப் பார்த்துடுவேன். எனக்கு வீடு கட்டினா எப்படி வேலை செய்வேனோ அதுமாதிரி மாங்குமாங்குன்னு வேலை செய்வேன். அதனாலயே எங்க ஊருல நெறயபேரு என்மேல காஞ்சு கெடப்பாங்க. ‘‘என்னமோ இவன் வீட்டு வேலைகணக்கால்ல வேலை செய்யறான். பாக்குற வேலைய ஒரு பயகூட குத்தஞ் சொல்ல முடியாதுய்யா.’’ என்று சொல்வதுடன் "அவனா அவன் ஒரு பேப்பய"- என்று பட்டப்பேரும் வச்சு கூப்பிடட ஆரம்பிச்சிட்டாங்க.
இப்பிடி சம்பாதிச்சு ரெண்டு அக்காவையும் கல்யாணம் கட்டி குடுத்திட்டு... எனக்குப் பொறவு மூணு தங்கச்சிகளையும் கல்யாணம் கட்டி குடுத்திட்டு... அதுக்குப் பெறவுதான் எனக்கு கல்யாணப் பேச்சையே எடுத்தாங்க... என்னோட அக்கா பொண்ணு இப்ப கல்யாண வயசுல இருக்கா.
கல்யாணப் பேச்சு எடுத்ததுமே... என்னோட அக்கா, தங்கச்சி, அவுங்க வீட்டுக்காரருங்க, பிள்ளைங்க,சொந்தபந்தம் எல்லாருமே எங்க வீட்டுல வந்து தங்கிட்டாங்க. தெனமும் விருந்துதான். எப்பவும் அடுப்பு எரிஞ்சிட்டுதான் இருக்கும். எங்கம்மா கடகப் பெட்டியில இருக்கற அரிசிய சொளவுல போட்டு பொடச்சி, பானையில தட்டிப் போட்டுச் சோறுவடிக்கிற அழக பாத்திட்டே இருக்கலாம். அப்படி வாஞ்சாலையா எல்லாருக்கும் சோறுவடிச்சு மனங்கோணாமப் போடுவாங்க. ஏற்கனவே எங்க குடும்பத்தில உள்ளவங்க பொண்ணப் பாத்துப் பேசி முடிச்சிட்டாங்க. இனி முறைப்படி நிச்சயதார்த்தம் செஞ்சு கலியாண நாளை குறிக்கிறதுதான் பாக்கி. அதுக்குத்தான் இப்ப எல்லாரும் வீட்டுக்கு வந்திருக்காங்க.
நெருங்குன சொந்தக்காரங்களையெல்லாம் அப்பபோய் கூப்பிடுவாங்க... அதுல ஒரு ஆளு வராட்டாலும் இரண்டு தடவ மூணு தடவ போய் கூப்பிடுவாங்க. எல்லாரும் வந்து எங்க வீட்டுல இருந்து, எங்க பொண்ணுப் பாக்கப் போறது. யாராரு என்ன செய்யிறதுன்னு எல்லாம் விலாவாரியாப் பேசுவாங்க. வீட்டுல நெறையத் தின்பண்டங்க இருக்கும். வீட்டுக்கு வர்ரவுங்க எல்லாரும் சாப்பிடுவாங்க அதோடு மட்டுமல்லாமல் எல்லாரோட வீட்டுக்கும் அதக் கொடுப்பாங்க. அத அப்பிடியே எல்லா வீட்டுக்காரங்களும் பங்குபோட்டு தின்னுவாங்க.
ரெண்டு நாளு கழிச்சு நாங்க எல்லாரும் சேர்ந்து ஏற்கனவே எங்கப்பா அம்மா பார்த்த பொண்ண நிச்சயம் பண்ணப் போனோம். நான் அதுவரையிலும் பொண்ணப் பாக்கலை. இன்னக்கித்தான் பொண்ணப் பாத்தேன். பொண்ணு நல்லாத்தான் இருந்தாள். இத்தினி நாளு கழிச்சு நான் கலியாணம் பண்ணப் போகும் பொண்ணு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தா. எல்லாரும் பேசி முடித்தனர்.
பெண்ணிடம் என்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டனர். அவளும் என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது என்றாள். பழம்தேங்காய் மாற்றி திருமண ஓலையும் எழுதினார்கள். திருமணம் எங்கள் வீட்டில் வைத்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. நிச்சயதார்த்தம் முடிந்துஅனைவரும் வீட்டிற்குக் கிளம்பினோம்.
திருமணத்திற்குப் பத்து நாள்கள் இருந்தன. வேலைகள் துரிதமாக நடந்தன. எனக்கும் மனதிற்குள் இனம் புரியாத மகிழ்ச்சி. திருமண நாளிற்கு மொதநாளு நாங்க போய் பொண்ணக் கூட்டிகிட்டு வரணும். அதுக்கு எங்க அக்கா, தங்கை மற்றும் சில உறவினர்கள் அனைவரும் பொண்ணு வீட்டிற்கு ரெண்டு வேனில் புறப்பட்டுச் சென்றனர்.
பொண்ணை அழைத்து எங்க ஊருக்குள் வந்தவுடன் பெண்வீட்டாரை நாங்கள் அனைவரும் சென்று வரவேற்க வேண்டும். எங்கள் வீட்டில் நடைபெறும் கடைசித் திருமணம் என்பதால் பெண்ணை மேளதாளம் முழங்க வரவேற்க வேண்டும் என்று என் அப்பா சிறப்பாக பேண்ட் வாத்தியம் எல்லாம் வைத்து ஏகதடபுடல் பண்ணியிருந்தார். பொண்ணை அழைப்பதற்கு மாப்பிள்ளையாகிய நானும் சென்றேன்.
பெண்ணிற்கு மாலை அணிவித்து மேளதாளம் பேண்டு வாத்தியங்கள் முழங்க வெகு விமரிசையாக பெண்ணை திருமணம் நடக்க இருக்கும் எங்களது வீட்டிற்கு அழைத்து வந்தோம். பெண்ணை ஒவ்வொருவரும் வந்து வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.
‘‘.ம்..ம்.ம். நல்ல பொண்ணாத்தான் பேப்பயலுக்குப் பாத்துருக்காங்க…’’ என்று அனைவரும் பேசிச் சென்றனர்.
விடிந்தால் திருமணம். வீடு களைகட்டியது. பெண்கள் அனைவரும் குசுகுசுவென்று கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கொன்றும் விளங்கவில்லை. நான் பட்டுவேட்டி சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதற்குத் தயாராக மாப்பிள்ளைக் கோலத்துடன் நின்று கொண்டிருந்தேன்.
அப்போது என் அம்மாவும் என் அக்காவும் என் அருகே வந்து ‘‘தெரியாத் தனமாக இந்தப் பொண்ணப் பார்த்து நிச்சயித்து விட்டோம்… ச்சே ... இப்படி... ஆகிப்போச்சே... இப்படிப்பட்ட பொண்ணு நமக்குத் தேவையா? இருந்து இருந்து இவனுக்குக் கலியாணம் பண்ணிப் பாக்கலாமுண்ணு நினைச்சா இப்படிப்பட்ட பொண்ண நம்மகிட்ட தள்ளிவிட்டுட்டு நம்மல ஏமாத்தப் பாத்துருக்காகளே… என் மகன் என்ன இளிச்சவாயனா… இந்தக் கலியாணம் நடக்கக் கூடாது. டேய்... தம்பி ஒடனே பொண்ண அவங்க ஊர்ல கூட்டிக் கொண்டுபோயி விட்டுட்டு வரணும்… அவங்க செலவழிச்ச தொகையையும் அவங்க கொடுத்துள்ள சாமான்களையும் அவங்க மூஞ்சியில விட்டெறியணும்…’’ என்று படுபயங்கரமாகக் கத்தினாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடந்தது? யார் ஏமாற்றினா? நான் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றேன்.
யாரவாது ஏதாவது சொன்னால்தானே புரியும். கல்யாண வீட்டில் நடந்த இந்தக் குழப்பம் பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும்போல் எனக்குத் தெரிந்தது. நான் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் அம்மாவிடம் சென்று ‘‘என்னம்மா என்ன நடந்தது. ஏன் சத்தம் போடுகிறீர்கள்?’’ என்று நெஞ்சு படபடக்கக் கேட்டேன்.
அதற்கு என் அம்மா, ‘‘டேய் நோய்புடிச்ச பொண்ண ஓந்தலையில கட்டப் பாக்குறாங்கடா… என்று கூறி ஓவென்று அரற்றி அழுதாள். நான் என் தங்கையை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டேன்.
அதற்கு என் தங்கை, ‘‘ஆமாண்ணே… பொண்ணுக்கு மொகத்திலே கண்ணு ஓரத்திலே தழும்பு ஒன்னு இருந்து ஆப்ரேஷன் செஞ்சிருக்காங்க. அது புத்து நோயி சம்பந்தப்பட்டதாம். வளந்துகிட்டே இருக்குமாம். அந்தத் தழும்ப இப்ப ஆப்பரேஷன் செய்து எடுத்துட்டாங்களாம். அத மறச்சி யாருக்கிட்டேயும் சொல்லாம ஓந்தலையில கட்டப் பாக்குறாங்க. நேத்து நலுங்கு வைக்கயில நானு அம்மா அக்காவெல்லாம் பாத்துக் கேட்டதுக்கு அந்தப் பொண்ணுதான் சொன்னது. அதுக்கப்பறம் தான் எங்களுக்கே தெரிஞ்சிச்சி. அந்த ஆப்பரேஷன் செஞ்சி ஆறுமாசந்தான் ஆகுதாம். செத்தாலும் இந்தப் பொண்ணு வேண்டாண்ணே…’’ என்று ஆவேசமாகக் கூறினாள்.
எனக்கு உண்மை என்னவென்று புலப்பட்டுவிட்டது. சிறு தழும்பு ஒன்றுக்காக இப்படியா ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் குலைப்பார்கள். எனது உள்ளம் நடுநடுங்கியது. ஊரில் உள்ள எனது சொந்தங்களும் என் அம்மாவுடன் சேர்ந்து கொண்டனர்.
அப்போது பெண்ணின் தாய் தந்தையர் இருவரும் ஓடிவந்து என் அம்மா, அப்பா இருவரது கைகளையும் பற்றிக் கொண்டு, ‘‘சம்பந்தி அது ஒண்ணுமில்லே... நீங்களும் அப்பக் கேக்கல. நாங்களும் சொல்லல. இது ஒரு பெரிய விஷயமில்லை என்று விட்டுவிட்டோம். டாக்டருங்க ஒன்றுமில்லைன்னு சொல்லிட்டாங்க. அது அழகு மச்சமாம். மீண்டும் வராது. நாங்கதான் அது வடுமாதிரி இருக்கேன்னு நெனச்சு ஆப்ரேசஷன் செஞ்சோம்… சொல்லாதது எங்க தப்புத்தான். இது ஒரு பெரிய விசயமாக எங்களுக்குப் படலே… தயவு செஞ்சு நாங்க சொல்றத நம்புங்க. சம்பந்தி…கால்ல வேண்ணாலும் விழறோம். எங்க பிள்ளைய வேணாண்ணு சொல்லிடாதீங்க….’’ என்று மன்றாடினர்.
என் அப்பா எதுவும் சொல்லல. அம்மாதான் தையத்தக்கா என்று அங்குமிங்கும் குதித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் கெஞ்சல் என் அம்மாவிடம் எடுபடவில்லை. யாராரோ என் அம்மாவிடம் வந்து சமாதானம் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றுக்கும் அவள் அசைந்து கொடுக்கவில்லை.
என் மனம் கேட்கவில்லை. நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் அம்மாவிடம் சென்று அவளிடம், ‘‘அம்மா அவங்கதான் சொல்றாங்கள்ள… பாவம்மா அவங்களும் அந்தப் பொண்ணும்… அது சாதாரணத் தழும்புதாம்மா… ’’என்றேன்.
அதற்கு என் அம்மா, ‘‘ஆமாடா… ஒனக்கு என்னடா தெரியும். பெரிசாப் பேச வந்திட்ட.. அதப் பத்தி ஒனக்கு என்னடா தெரியும்… நம்ம ஊர்ச்சனமே சொல்லுது… கண்ணுல முழிச்சாலும் அந்தப் பொண்ணு நமக்கு வேணாண்டா…’’ என்றாள்.
நான் விடாது, ‘‘ஏம்மா எனக்கு ஒரு தழும்பு இந்த மாதிரி இருந்து அவங்க செஞ்சதைப் போல நாமளும் செஞ்சிருந்து, அதப் பொண்ணு வீட்டுக்காரங்க பாத்துட்டு அப்பச் சொன்னா நீ சும்மா இருப்பியா? இல்ல நம்ம தங்கச்சி ஒருத்திக்கு இந்த மாதிரி ஏற்பட்டா ஒம்மனசு என்ன பாடுபடும். கொஞ்சம் யோசிச்சுப் பாரம்மா. இதுல அவளோட தப்பு ஏதும் இல்லம்மா.. பொண் பாவம் பொல்லாததும்மா…’’ என்று கெஞ்சிப் பார்த்தேன்.
‘‘டேய் சும்மா இருடா… அது புத்து நோவாம்.. தொடர்ந்து வளர்ந்துக் கிட்டே இருக்குமாம். இதுவரைக்கும் நீ கஷ்டப்பட்டது போதும். இனிமேலும் வேணாம். நீ பேசாம இரு. வாயமூடு. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். ஒனக்கு ஒரு மண்ணும் தெரியாதுடா…’’ என்று என்னை அடக்கி மௌனியாக்கிவிட்டுத் தனது காரியத்தில் இறங்கினாள். கலியாணத்திற்கு வந்திருந்தோரெல்லாம் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.
பெண்வீட்டார் ஏதுமறியாது திகைத்து நின்று விட்டனர்.
நான் வெளியில் நின்று வீட்டிற்குள் நோக்கினேன். ஜன்னல் ஓரத்தில் மணக்கோலத்தில் அமர்ந்திருந்த பெண் அழுது கொண்டிருந்தாள்.
அவளது கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள், என் கழுத்தில் போடப்பட்டுக் கழற்றப்பட்ட ரோஜாப்பூ மாலையிலிருந்து ரோஜாப்பூக்கள் ஒவ்வொன்றாக உதிர்வதைப் போன்று விழுந்து கொண்டிருந்தது. எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது.
சாதாரணத் தழும்பால் இத்தகைய விளைவு ஏற்படும் என்று நான் கனவில் கூடநினைத்துப் பார்க்கவில்லை. பெண்ணையும் அவர்கள் கொடுத்த சாமான்கள் எல்லாவற்றையும் ஒரு பெரிய வேனில் ஏற்றினார்கள். பெண்வீட்டார் அனைவரும் பெருத்த சோகத்துடன் கிளம்பினர். வேனில் இருந்த பெண் அழுதுகொண்டே என்னைப் பார்த்தாள். நான் ஏதும் செய்ய இயலாதவனாக மனம் நொந்து கொண்டே வீட்டினுள் திரும்ப நடந்தேன்…
கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்தேன்.
இப்போது என் முகத்தில் தழும்பு... மிகவும் கோரமாய்... அன்று என் வீட்டிலிருப்பவர்களை எதிர்க்க முடியாத எனக்கு விபத்து அளித்த பரிசு... இல்லையில்லை... தண்டனை...?