பேய்மழை விடாமல் தொடர்ந்து சோ..வென்று பெய்து கொண்டிருந்தது. பளிச்சிடும் மின்னல்கள் காது செவிடாகும் வண்ணம் இடி முழக்கம். முறிந்து விழுகின்ற மரக்கிளைகள். இவை எதுவுமே சாந்தியின் காதுகளில் விழவில்லை. அவள் திண்ணையிலே உட்கார்ந்து கொண்டு தனது முழங்கால்கள் இரண்டையும் தன்னிரு கைககளினால் இறுகக் கட்டிப் பிடித்தபடி முகத்தை அக்கைகளுக்குள் புதைத்தவளாக பெய்து கொண்டிருந்த மழையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது வீட்டுக் கூரையிலிருந்து நீர் சடசடவென்று வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. அதில் சிறுசிறு நீர்க்குமிழிகள்…தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது. அவை எத்தனை அழகாக இருக்கின்றன. அவை தோன்றி சில நிமிடங்கள் இருப்பதும் பின் மறைவதும் அவளது சிந்தனைகளைப் பின்னோக்கி இழுத்தன. வீட்டுக் கூரையிலிருந்து வடிந்து கொண்டிருந்த நீர் ஏற்படுத்திய அந்த நீர்க்குமிழிகள் அவள் இதயத்தைத் தொட்டு அப்படியே மாவைப் பிசைவது போன்றிருந்தது. அந்நீர்க்குமிழிகள் அவளுக்கு ஏதேதோ சொல்லத் துடிப்பது போலிருந்தது…
கண் கொட்டாமல் அவற்றை உற்றுப் பார்த்தபடியே தன் கால்களை மீண்டும் ஒருமுறை இறுகக் கட்டிப் பிடித்தாள் சாந்தி.
ஓ… இந்நீர்க்குமிழிகள் கண்ணாடி இழைகள் போன்று எவ்வளவு அழகாக இருக்கின்றன. இவ்வாறு அவள் நினைத்து மகிழும் முன்னரே அவை உடைந்து இருந்த இடமே தெரியாமல் போய் விடுகின்றனவே. அவை மீண்டும் மீண்டும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டேயிருந்தன. இதை உற்று நோக்கிய அவளின் உள்ளம் கனக்கத் தொடங்கியது. கண்களில் இருந்து மடைதிறந்த வெள்ளம் போல் கண்ணீர் வடியத் தெடங்கியது. அவளது சிந்தனைகள் சிறகடித்துப் பறந்தன… சாந்தி சிந்தனை வானில் அகல விரித்துப் பறந்து கொண்டிருந்தாள்.
சாந்தி சாதாரண குடும்பத்திலே பிறந்தவள். பெயருக்கேற்றாற் போன்று சாந்தமானவள். பார்ப்பதற்குத் துடைத்தெடுத்த வெங்கல விளக்குப் போன்று அழகானவள். முழங்கால் வரை நீண்ட அழகிய நெளிந்த கருங்கூந்தல் மாலைச் செவ்வானத்தின் பொன்மஞ்சள் மேனி அமைதியான சுபாவம் யார்மேலும் இரக்கங் கொள்ளும் தன்மை இவையெல்லாம் அவளுடன் கூடப் பிறந்தவை.
சாந்தி படிப்பிலும் கெட்டிக்காரியாகத் திகழ்ந்தாள். எப்போதும் அவள் முதல் மதிப்பெண் பெற்றாள். அவளுடன் போட்டி போட ஆளே இல்லை. அவளுக்குத் தோழியென்று சொல்லிக் கொள்ளக்கூட யாருமில்லை. அம்மா.. அப்பா.. படிப்பு.. இவை தான் அவள் உலகம்.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின. சாந்தி தான் பள்ளியிலேயே அதிக மதிப்பெண் எடுத்திருந்தாள். பள்ளியே அவளைப் பாராட்டியது. அதன்பின் சாந்தி அருகிலிருந்த மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தனது படிப்பைத் தொடர்ந்தாள். எப்போதும் போலவே ஆசிரியரின் மேசைக்கு முன்னால் இடம் கிடைத்த திருப்தியில் இருந்தாள். எல்லோரும் வெவ்வேறு பள்ளிகளில் இருந்து வந்ததினால் ஒருவர்கூட அவளுக்குத் தெரிந்த முகமாக இருக்கவில்லை. ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் மறுபுறமுமாக இருந்தனர். ஆசிரியர்கள் வருவார்கள் பாடங்களின் தலைப்புகள் எல்லாம் சொல்வார்கள். ஏதேதோ அவசரஅவசரமாக விளக்கிச் சொல்வார்கள். அவளுக்கு விளங்குவது போலிருக்கும் ஆனால் விளங்காது.
தேர்வு என்றாலே குறைவான மதிப்பெண்களையே அவளால் பெற முடிந்தது. இது அவளுக்குப் பெரிய கவலையாகவே இருந்தது. ஆனால் அவளுடன் படித்த வேலப்பனோ அதிகளவு மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்டேயிருந்தான். முதன் முறையாக நடந்த தேர்வின் போது ஆசிரியர் முதல் மதிப்பெண் பெற்ற வேலப்பனின் பெயரைச் சொன்ன போது அனைவருமே அவனை ஒரு முறை திரும்பிப் பார்க்கத் தவறவில்லை. சாந்தியின் மனத்தில் கூட ஓர் உயர்வான இடத்தை அவன் பிடித்துவிட்டான். பின் அவர்களது வகுப்பறை மாற்றப்பட்டது. கடைசி வரிசையில் அதுவும் வேலப்பனுக்கு அருகிலேயே சாந்திக்கு உட்காருவதற்கு இடம் கிடைத்தது.
வேலப்பன் நல்ல உயரம். கம்பீரமான தோற்றம். யாரையும் கவரும் மெளனமான புன்னகை. அவன் தானும் தன்வேலையுண்டு என்றிருந்தான். ஆசிரியர் பாடம் நடத்தும் போது சாந்தி அவசர அவசரமாக அவரின் வாயிலிருந்து வரும் யாவற்றையும் எழுதித் தள்ளுவாள். ஆனால் வேலப்பனோ ஏதாவது நோட்டில் வரைந்தபடியே இருப்பான். ஒரே ஒரு நோட்டை மட்டும் சுருட்டி எடுத்துக் கொண்டுதான் பள்ளிக்கு வருவான்.
அதில்தான் எல்லாப் பாடங்களுமே இருக்கும் பாடங்களை விட படங்கள் என்றே சொல்லலாம். சாந்திக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு கெட்டிக்காரன் ஆசிரியர் நடத்துவதை மட்டும்தான் அவன் கவனிக்கின்றான். எந்தக் கேள்வி கேட்டாலும் அவன் தான் சரியான விடையைச் சொல்வான். ஆசிரியர் கேட்கும் வினாக்களுக்கு அவன் விடையளிக்கும் போது வகுப்பே அவனை ஆச்சரியத்துடன் பார்க்கும்.
வேலப்பன் மீது வைத்திருந்த அன்பு நாளுக்கு நாள் சாந்தியினுள் அருகம்புல் போன்று வேர்விட்டு வளரத் தொடங்கியது. பள்ளியில் சில ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள். இருப்பினும் நாளடைவில் வகுப்பிலே அனைவரும் இயல்பாகப் பழகத் தொடங்கி விட்டனர். இதில் பலர் காதலர்களாகக் கூட மாறிவிட்டனர்.
நீண்ட நாட்களாகவே மீனா வேலப்பனிடம் கேட்க வேண்டும் என சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்தாள். அன்று அதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. சிறிது தயங்கியவள் பின் கேட்டே விட்டாள். உங்களால் எப்படி இப்படிப் படிக்க முடிகின்றது? அதற்கு ஒரு மெல்லிய சிரிப்பே பதிலாகக் கிடைத்தது. கெட்டிக்காரன் மட்டுமா? எவ்வளவு அழகானவனும் கூட. அவன் கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தான்.
அவள் தன்னையே மறந்த நிலையில், அவனைப் பர்த்தபடியே நின்றிருந்தாள். “என்ன நான் ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க ஏதோ பலமான யோசனையில இருக்குறீங்க போலிருக்கு” என்று சொல்ல “ஓ அது ஒன்றுமில்லை” என்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டவள் ”எனக்கும் அந்த ரகசியத்தைச் சொல்லுங்களேன்.” என்றாள்.
தான் படிக்கும் டியுஷன் ஆசிரியர் பெயர் முதலிய விவரங்கள் அனைத்தையுமே கூறினான். பின் அவர்கள் டியுஷனிலும் ஒன்றாகவே படிக்க ஆரம்பித்தனர். தன்னாலும் வேலப்பனுக்கு ஈடாகப் படிக்க இயலும் என நிரூபிக்க முயன்றாள் சாந்தி. ஆனால் வேலப்பனை முந்த முடியவில்லை. அவனை விடப் பின்தங்கியே இருந்தாள். ஆனால் வேலப்பனுக்கு முதலிடம் கிடைப்பதில் அவளுக்கு ஒருவித திருப்தி இருக்கத்தான் செய்தது. அது ஏன் என்று விளங்காத புதிராகவே இருந்தது. வேலப்பனும் அவள் முன்னேற்றத்தைக் கண்டு வியந்தான்.
சாந்தியின் நோட்டுகளை வாங்கிப் படிப்பான். பார்த்துவிட்டு “உங்களைப் போலவே அழகான எழுத்துக்கள்” என்று பாராட்டுவான்.
ஒரு நாள் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வேலப்பன் வழக்கம்போல படம் வரைந்தபடி இருந்தான். அவனுடைய படங்களை ரசிப்பதில் அலாதிப் பிரியம் சாந்திக்கு. வழக்கம்போல ஆசிரியர் போனதும் முதல் வேலையாக அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தாள். அது ஒரு பெண்ணின் படம். அப் பெண்ணின் நீண்ட கூந்தல் நெற்றியிலே உள்ள சுருள் யாவும் தன்னை ஒத்திருப்பதை உணர்ந்தாள் சாந்தி.
அவனை மெல்லப் பார்த்தாள், ”என்ன பாக்குறீங்க? இது யார் தெரியுமா? ” என்றான்.
அவளுடைய இதயம் பலமாக அடிக்கத் தொடங்கி விட்டது. நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. தொண்டைக்குழிக்குள் ஏதோ வந்து இறுக்குவது போலிருந்தது. அவள் “தெரியாது” என்று மெல்லத் தலையசைத்தாள். “இவள்தான் என் நெஞ்சிலே குடியிருப்பவள். உமக்கு இவளைத் தெரியாது.” யார் அந்தப் பாக்கியசாலி என்று கேட்க அவள் மனம் துடித்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டாள். அதன் பின் அவனைப் பார்க்கவே ஏதோ போலிருந்தது அவளுக்கு. ”ஒருநாளைக்கு உங்களுக்குக் காட்டுகிறேனே” என்று புதிராக பதில் சொன்னான்.
அவள் ஒன்றுமே கதைக்காமல் கொப்பியைக் கொடுத்து விட்டாள் கைகள் குளிர்ந்துபோயின. அவன் முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. யார் அவள் என்று கேட்கவேண்டும் போலிருந்தது.அவளாள் அவனுடன் முன்புபோல் கலகலப்பாக பழக முடியவில்லை. தேர்வும் நெருங்கியதால் இருவரையும் தேர்வு ஜுரம் தொற்றிக் கொண்டது.
தேர்வு முடிவுகளும் வெளியாகின. இருவரும் ஒரேவிதமாகவே தேர்ச்சியடைந்திருந்தனர். நீண்ட நாட்களின் பின் இருவரும் சந்தித்துக் கொணடனர். சாந்தியால் அவனிடம் பேச முடியாமலிருந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரிடையேயும் பெரிய மெளனம் நிலவியது. வேலப்பன்தான் முதலில் பேசினான். ‘இனி என்ன கல்லூரியில அடிக்கடி பாத்துக்கலாம்’ எங்கே உங்களை இனிச் சந்திக்காமலேயே போய் விடுவேனோ என நெனச்சேன். நல்லகாலம் வந்துட்டீங்க என்று பேசிக்கொண்டே போனான்.
அவனுடைய வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்தது. அப்படியே தன்னை மறந்து கேட்டுக் கொண்டேயிருந்தாள். அவனுக்கு இன்னொரு காதலி இருக்கும்போது, நாம் வீணாக கற்பனை பண்ணக் கூடாது என்று பலவாறு குழம்பித் தத்தளித்தாள். ஒரு ஆண் பெண்ணுடன் பழகினால் இப்படித் தப்புக்கணக்கு போடலாமா? என்று தனக்குள் பல கேள்விகளைக் கேட்டு விடைகாணத் தவித்துக்கொண்டிருந்த சாந்தியை ‘என்னங்க நான் ஏதும் தப்பாப் பேசிவிட்டேனா’ என்று மெதுவாகச் சன்னமான குரலிலே கேட்டான்.
அந்தக் குரல் அவளுக்குள் ஊடுருவி அவளுயிரைத் தொடுவது போலிருந்தது. ‘உங்கள் காதலி எப்படியிருக்கிறாள்?” என்று கேட்கவேண்டும் போல நா துடித்தது. ஆனால் ஒருவாறு அடக்கிக் கொண்டாள். ஏன் நான் அவள் மீது கோபப்படுகின்றேன்? அவள் யாரோ நான் யாரோ? என்று எண்ணியபடியே வலிந்து ஒரு புன்னகையை வரவழைத்தபடி சரி நேரமாகுது நான் வர்றேன் என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கும் காத்திராமல் வந்துவிட்டாள். வேலப்பனின் நினைவுகள் அவளைச் சுற்றி சுற்றி வந்தன.
கல்லூரியிலும் ஒன்றாகவே படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. வேலப்பனின் அம்மா இறந்ததினால் மிகுந்த கவலையுடன் காணப்பட்ட அவனைப் பார்க்கவே மிகுந்த சங்கடமாக இருந்தது. சாந்தியே அவனுக்கும் சாப்பாடு கொண்டு போவாள். இப்படியே அவர்கள் நட்பு நாளாக ஆக வளர்ந்து கொண்டே போயிற்று.
ஒரு நாள் சாந்தியின் அம்மா “ஏப்பா சாந்தி சத்த இங்க வா ஓங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். சாந்திக்கு தூக்கிவாரிப் போட்டது.
அம்மா வேலப்பன் பற்றி ஏதாவது கேள்விப்பட்டு விட்டாளோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பயந்தபடியே மெதுவாகப் போனாள். அவளது அம்மா சுளகிலேயிருந்த அரிசியில் கல்லைப் பொறுக்கியபடியே சாந்திம்மா… இன்னைக்கு புரோக்கர் சந்தானம் வந்தாரு...” அம்மா புரோக்கர் என்றதுமே அவளுக்கு விளங்கி விட்டது. ஆனால் எப்படி அம்மாவிடம் இது பற்றி எப்படிப் பேசுவது என்று நிலைதடுமாறிப் போனாள். அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனாள். அந்தப் பையன் கல்லூரியில் தான் படிக்குதாம் நல்ல குணமாம் ஒரே பிள்ளையாம் ஒன்னை மாதிரித்தான். அப்பா உன் முடிவு தெரியாமல் முடிவு சொல்லப் போவதில்லை எனறு சொன்னார். அந்தப் பையனோட அம்மா இப்ப சமீபத்துலதான் இறந்து போனாங்களாம்” என்று அடுக்கிக் கொண்டே போனாள்.
அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவளுடைய காதுகளில் அம்மா சொல்வது எதுவுமே விழவில்லை. ‘இந்தாப்பா ஒனக்கு கல்லூரிப் படிப்பும் முடியப் போகுது. புரோக்கர் சந்தானம் ஜாதகக் குறிப்பு தந்துட்டுத் தான் போயிருக்காரு. அப்பாவிற்கும் பையனைப் பிடிச்சுப்போச்சு. அம்மாவிடம் சொன்னால் அம்மா வேலப்பன் வீட்டாரிடம் சொல்லுவா. இருந்தாலும் இதை எப்படி நான் சொல்வது? என்று மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அவளுக்குச் சாப்பிடவும் மனம் வரவில்லை. எப்படியும் நாளை இதுபற்றி வேலப்பனிடம் சொல்ல வேண்டும் என்று துடித்தாள்.
மறுநாள் அவள் தன் திருமணம் பற்றி சொன்ன போது ‘என்ன பதில் சொன்னீங்க?” என்று மிக ஆவலாகக் கேட்டான். யார் புரோக்கர் என்பதையும் கேட்கத் தவறவில்லை. அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. அவள் அழுவதைப் பார்த்த வேலப்பனின் முகம் மாறிவிட்டது.
‘சரி ஏன் இப்ப அழறீங்க? நீங்க யாரையாவது விரும்புறீங்களா?’ என்று பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.
‘நான் நினைச்சது தவறா இருந்தால் என்னை மன்னிச்சிடுங்க... நான் என்னக்கி ஒங்களைப் பார்த்தேனோ அன்னக்கே ஒங்கள என்னேட மனசுல விரும்பத் தொடங்கிட்டேன். அதனால் தான் என்னோட அப்பா மூலமாக முறையாக பெண் கேட்டு புரோக்கரை அனுப்பினேன். நான் செய்தது தப்பா?” என்று மிகுந்த வருத்தத்துடன் கேட்டான் வேலப்பன்.
சாந்தியால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ”எனக்கு இது போதுங்க.” இத ஏன் எங்கிட்ட முன்னாடியே சொல்லவில்லை? நான் வேறு யாரோன்னு நெனச்சுட்டேன்” என்று சொன்னவுடன் வேலப்பனின் முகத்திலே ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சாந்தியின் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன.
இருவருக்கும் திருமணம் அவர்களது எண்ணம் போல் நிறைவேறியது. வேலை தேடுவதும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.
இல்லறமெனும் நல்லறத்தில் வாழ்ந்ததன் பயனாக பெயர் சொல்ல ஒரு பிள்ளையும் பிறந்தான்.
“என் பிள்ளைக்கு நிறைய சகோதரர்கள் வேண்டும் இல்லையென்றால் அவனும் எங்களைப் போலத் தனித்துவிடுவான்.” என்று அடிக்கடி சொல்லும் அவனுடைய ஆசைக் கனவுகளை அவள் நிறைவேற்றத் தயாராகவேயிருந்தாள்.
சாந்தி வேலை முடிந்தவுடன் நேரத்தோடு வீட்டிற்கு வந்துவிடுவாள். மிகுந்த மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. வேலப்பனின் அன்பிலே அவள் தன்னையே மறந்து விடுவாள். வேலப்பனும் சாந்தியைத் தன் தாயாகக் கண்டான். ஆனால் அவர்கள் வாழ்க்கையிலே அந்த மகிழ்ச்சி நீடிக்க முடியாத நிலை ஏற்படடுவிட்டது. இது தான் விதி என்பதா?...
அன்றும் இதேபோலவே மழை விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது. சாந்தி வழக்கம்போலவே நேரத்திற்கே வீட்டிற்கு வந்துவிட்டாள்.ஆனால் நீண்ட நேரமாகியும் வேலப்பன் மட்டும் வீடு திரும்பவில்லை. வாசலிலே அவனுடைய வரவிற்காகக் காத்திருந்த அவளை அந்தக் காரின் சத்தம் சிறிது பரபரப்படையச் செய்தது.
காரிலிருந்து ஒருவர் மிகுந்த பரபரப்புடன் ஓடி வந்தார். வந்தவர் வேலப்பனுடன் வேலை செய்பவர்தான். சாந்தி அவரை உள்ளே வரும்படி அழைத்தாள். ஆனால் அவரின் முகத்திலே பெரிய கலவரம் இருப்பதை உணர்ந்தாள். அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் பொலபொல என்று கொட்டியது. சாந்தியின் உடல் பதற ஆரம்பித்தது. மயக்கம் வருவது போல இருந்தது. மெதுவாகக் கதவு நிலையைப் பிடித்துக் கொண்டாள். ஆய்வுக்கூடத்திலே ஏதோ வெடித்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக அவர் கூறி முடிக்கு முன்பே அவள் அவருடன் தன் வேலப்பனைப் பார்க்கவென்று கிளம்பி விட்டாள்.
அவள் வரவிற்காகவே காத்திருந்தவன் போலக் காத்திருந்து விட்டு அவள் கைகளைப் பற்றிப் பிடித்தபடியே தன் இறுதி மூச்சையும் விட்டான் வேலப்பன். அவள் தலை சுழன்றது அப்படியே மயங்கி விட்டாள். மயக்கத்திலே அவள் தன் வேலப்பனுடன் பேசுவது போலிருந்தது. சந்தோசமாக இருந்தது. அவள் முகத்திலே தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினார்கள். இப்படி எத்தனைதரம் மயங்கியிருப்பாள். எல்லாமே முடிந்துவிட்டன.
இப்போ அவளுக்கென்று இருப்பதெல்லாம் வேலப்பனின் மறு உருவம் போலுள்ள அவருடைய வாரிசுதான். அந்தக் குழந்தையும் இல்லையென்றால் அவள் நிலை என்னவாயிருக்கும்.
அவருடன் நான் வாழ்ந்த நாட்களிலே எத்தனை தியாகங்களை எனக்காகச் செய்திருப்பார். நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஒரு நாள் கூட என் மனம் நோகக் கதைத்ததில்லையே. இப்படியான நல்லவரை ஏன் என்னிடமிருந்து பறித்தாய் ஆண்டவனே. என்னைப் பார்க்கின்ற எல்லோரும் என்னிடம் நீ கொடுத்து வைத்தவ. என்று சொல்வார்களே. இன்று என்னைப் பார்த்தால் என்ன சொல்லப் போகிறோம். கடவுளே எனக்கு என்னோட வேலப்பன் வேணும். என்னால் அவரின் பிரிவைத் தாங்க முடியவில்லையே. நான் என்ன செய்வேன்…
குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்த அவளைத் தொட்டிலிலே படுத்திருந்த குழந்தையின் அழுகுரல் இவ்வுலகிற்கு அழைத்ததினால் தன் நினைவுக்கு மீண்ட அவள் தான் அவ்விடத்திலே வெகுநேரமாக இருந்து விட்டதை உணர்ந்தாள். மழை விட்டிருந்தது. மழை வெள்ளம் வடிந்து போயிருந்தது. மணலிலே பாதை போட்டதுபோல இருந்தது. இலைச் சருகுகள் மழை வெளளத்திற்கு அடித்து வரப்பட்டிருந்தன. எங்கும் ஒருவித அமைதி காணப்பட்டது. மரங்கள் யாவும் பளபளத்துக் கொண்டிருந்தன. அவள் தன் கன்னங்களிலே வடிந்து கொண்டிருந்த கண்ணீரைத் தன் கைகளினாலே துடைத்தபடியே ஒருவிதமான தவிப்புடன் குழந்தையிடம் ஓடினாள். ‘ஏஞ்செல்லம்…. ஏங்கண்ணு… ஒனக்குப் பசிக்குதாய்யா? இந்தா அம்மா வந்துட்டேன்” என்று கேட்டபடியே குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.
இனி அக்குழந்தைதான் அவள் உலகம்.
நீர்க்குமிழிகள் போல அடுத்தடுத்து தன்னை விட்டுப் பிரிந்த தன் கணவன் அப்பா இவர்கள் அனைவரையும் ஓர் உருவமாக தன் குழந்தையிலே காண்கின்றாள். வாழ்க்கை நீர்க்குமிழி மாதிரிங்கறது எத்தனை பொருத்தம். நீர்க்குமிழிகளப் பார்க்கும்போது அழகுதான்…ஆனால் அவையும் ஒருகணம்தான். அவை ஒருசில நிமிடங்களில் உடைந்துவிடுவது போன்று வாழ்வும் அமைந்து விடுகின்றது…. அதற்குள் எத்தனை எத்தனை மாற்றங்கள்.. பரிமாணங்கள்.. போட்டிகள்.. பொறாமைகள்.. எனப் பலவாறு எண்ணினாள் சாந்தி. ஆம்…..இனி அவளும் ஒரு குழந்தையோடு குழந்தைதான்.