‘ட்டிரிங்……ட்டிரிங்….. ங்ங்ங்………’என்று தொலைபேசி மணி ஒலித்தது.
காலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே கலையரசிக்கு ஒருவித படபடப்பு வந்துவிடும். கடவுளே நல்ல செய்தியா இருக்கணும் என்று கூறிக்கொண்டே தொலைபேசியின் ரீசிவரை எடுத்து, ‘ஹலோ. யாரு பேசறது…’ என்றாள்.
தொலைபேசியின் மறுமுனையில் இருந்து பழக்கமான குரல் வரவும், கலையரசியின் முகம் தாமரையாய் மலர்ந்தது.
'அப்பாவா? என்னப்பா, சௌக்கியமா? எப்படி இருக்கீங்க? இந்தியா வரப் போறீங்களா? டிக்கெட் புக் பண்ணியாச்சா? வெரி நைஸ்... ரெண்டு வருஷமாச்சு உங்களையும் அம்மாவையும் பார்த்து...' என்று பல விசயங்களைப் பற்றிப் பேசிவிட்டு ரிசீவரை வைத்தாள்.
அவளது மனத்திரையில் அமெரிக்காவில் தனது தங்கை வீடட்டில் இருக்கும் தாய் தந்தையர் வந்தனர். அவளது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்தியாவில் இருப்பது என்பது பிடிக்காத ஒன்று. இவளது வீட்டிற்கு வந்தாலும் அவர்களது நினைப்பெல்லாம் அமெரிக்காவைச் சுற்றியே வந்து கொண்டிருக்கும். வாய்க்கு வாய் ஓயாது அமெரிக்க புராணம் ஓடிக்கொண்டிருக்கும். இதனைக் கேட்கும் கலையரசியின் கணவனுக்கு எரிச்சலாக இருக்கும். இருப்பினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது பல்லைக் கடித்துக் கொண்டிருப்பான். இவளிடம்தான் அவர்கள் அமெரிக்காவிற்குச் சென்ற பின்னர் புலம்பித் தீர்ப்பான். இவ்வாறு கலையரசி நினைத்துக் கொண்டிருந்தபோதே அடுப்பில் இருந்து தீய்ந்த வாசனை வந்து அவளது நினைவைக் கலைத்தது.
ஐயையோ! காஸ் அடுப்பில பீன்ஸ் பொரியல் தீய்ந்து போயிட்டுதே. அடுப்பை அணைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள்.
மனதுக்குள் அப்பா அம்மா வரப்போகிற மகிழ்ச்சி. கூடவே 'கடவுளே இந்தத் தடவை அப்பா வந்தால் இவருடைய மனத்தைக் காயப்படுத்தாமல் இருக்கணுமே' என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.
பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை என்றாலும்... ஸ்கூட்டர் சப்தம், கலையரசியின் கணவன் கண்ணன வந்துவிட்டதை அறிவித்தது.
காபி டம்ளருடன் அவனை கலையரசி நெருங்கினாள். “ஏங்க எங்க அம்மா, அப்பா யு.எஸ். லேர்ந்து வர்றதா இப்பதான் போன் வந்தது’’ என்று மெதுவாகக் கூறினாள்.
'ஓ அப்படியா. வரட்டுமே. இனிமே ஒன்னக் கையில பிடிக்க முடியாது. ஒனக்கு ஒரே கொண்டாட்டம்தான்' என்று கூறினான்.
பின்னர் சிறிது யோசித்து விட்டு, 'என்ன ஒரு விஷயம்... நம்ப கஜானா காலி. ·பாரின் பார்ட்டியாச்சே' சிறிது குத்தலாகக் கூறினான் கண்ணன்.
எச்சிலைக் கூட்டி விழுங்கிய கலையரசிக்குக் கண்களில் நீர் நிரம்பியது. 'சே! இப்படியா சொல்வது' என உள்மனது கூறினாலும் கண்ணன் கூறுவதிலும் நியாயம் இருக்கிறதே. சென்ற தடவை அப்பா அம்மா வந்தபோது... அப்பப்பா...
கலையரசியின் பெற்றோருக்கு அவள்தான் மூத்த மகள். அடுத்து ராகவன் ஒரு பிள்ளை. அவனுக்கு அடுத்து ஹேமா. கலையரசியை எஞ்சினியர் கண்ணனுக்குக் கட்டிக் கொடுத்தனர். காலணா வரதட்சணை சீர், எதுவும் வேண்டாம் என்று கண்ணன் வீட்டார் கூறிவிடவே இனிதாகக் கல்யாணம் நடந்தது. அவளும் மும்பை வந்துவிட்டாள்.
தம்பி ராகவன் ஐஐடி கான்பூரில் கம்ப்யூட்டர் முடித்து நல்ல இடத்தில் திருமணமாகி அமெரக்கா போய்விட்டான். கரையரசியின் தங்கை ஹேமாவுக் கும் ராகவனின் நண்பனுடனே திருமணம் முடிந்து யு.எஸ். போயிருந்தாள். அப்பா அம்மாவையும் அவர்கள் அடிக்கடி அமெரிக்காவிற்கு வரவழைத்துக் கொண்டிருந்தனர். இப்போது இரண்டு வருடங்களாக பெண், பிள்ளை இருவரிடமும் மாறிமாறி இருந்து விட்டு இந்தியா வருகின்றனர்.
சென்ற தடவை அமெரிக்காவிலிருந்து அப்பா அம்மா வந்தபோது நடந்தவைகளை நினைத்துதான் கலையரசி உள்ளுரப் பயந்தாள்...
அப்பாவின் வாயும் சும்மா இருக்காது. ஏர்போர்ட்டில் இறங்கினவுடனேயே அமெரிக்கா பெருமைதான். சின்னப் பெண் ஹேமா, மகன் ராகவன் இருவரின் மகத்துவத்தைப் பற்றி வாய் ஓயாமல் பேசித் தீர்த்து விடுவார். ஒரே அறுவைதான்.
'ஐய! என்ன ஊர் இது மாப்பிள்ளை. அழுக்கும், குப்பையும். என்ன சொன்னாலும் அமெரிக்காவுக்கு ஈடே கிடையாது. இந்த டாக்சியில் மனுஷன் உட்காரவே முடியலை. கஷ்டம். கார்னா சும்மா ஜம்முனு அமெரிக்கா கார்தான். ரோடுலே வழுக்கிட்டு போற அழகே அழகுதான்’’ என்பார்.
பாவம் கண்ணனும் நல்ல டாக்சிதான் எடுத்துப் போயிருந்தான். கஷ்டப்பட்டு நல்ல காய்கறிகள், பழங்கள் எல்லாம் வாங்கி வருவான்.
'ஹும்…. எதுக்கு இதெல்லாம்? வேண்டியது நிறைய அங்கே சாப்பிட்டாச்சு. இதுகளைப் பார்த்தாலே சிரிப்புதான் வருது. எவ்வளவு தினுசு ஆப்பிள், ஆரஞ்சு, ·பிரஷ் ஆரஞ்சு ஜூஸ்கள், ஐஸ்கிரீம்... அடேயப்பா!' என்று அலட்சியமாகக் கூறுவார். கண்ணனின் முகம் தொங்கிப் போகும். கலையரசிக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வரும்.
வந்து ஒரு வாரத்திலேயே அப்பாவின் அட்டகாசப் பேச்சும், அலட்சியமும் தாங்க முடியாமல் கலையரசி உள்ளுர நொந்து போனாள்.
'சே.. ஏசி இல்லாம எவ்வளவு கஷ்ட மாயிருக்கு. ஒருநாள்கூட நம்மளால இருக்க முடியலைம்மா.'
'என்னப்பா இத்தனை வருஷமா இந்தியா வில இல்லையா? என்னமோ பேசறீங்க' என்றாள் கலையரசி.
இதற்கிடையில் அம்மாவின் பிறந்தநாள் வரவும் கண்ணன் நல்லியில் விலையுயர்ந்த பட்டுப்புடவை வாங்கி வந்தான். கலையரசியும் ஸ்வீட், பாதாம்கீர் என்று தடபுடலாகச் சமைத்தாள்.
'இது என்ன பர்த்டே கலையரசி. போன தடவை பிறந்தநாளுக்கு எங்களுக்குத் தெரியாமலே ஹோட்டல்ல சர்ப்ரைஸ் பார்ட்டி உன் தங்கையும் தம்பியும் ஏற்பாடு செய்துட்டு, எங்களை சும்மா பிரண்ட் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போறதாகக் காரில் அழைச்சிட்டுப் போனாங்க. அங்கே போனால் ஏகப்பட்ட அலங்காரம், பலூன் எல்லாம் கட்டி. ஒரே அமர்க்களம் போ. கேக் எல்லாம் வெட்டி ஒரே கி·ப்ட் மயம்தான். ஆச்சரியமா இருந்தது' பெருமை கொப்பளிக்கக் கூறினார்.
கண்ணனுக்குச் சீ என்று ஆகிவிட்டது. 'இதோ பார் கலையரசி. ஏதோ நம்மளால ஆனது செய்யறோம். ஒங்க அப்பா அம்மா எப்பப் பார்த்தாலும் சும்மா சும்மா யு.எஸ். பெருமை பேசறது கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கலை. என்ன பீத்தல். இனிமே நான் அவங்களுக்கு ஒண்ணுமே செய்ய மாட்டேன்' என்று கோபத்துடன் வெடித்துக் கூறினான்.
கலையரசி எதுவும் சொல்ல முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போன்று தவியாய்த் தவித்துப் போனாள். 'ப்ளீஸ், அவங்க எதிரில் இயல்பா இருந்துக்கங்க. ஏதோ பாவம் வயசானவங்க, என்னைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க. இவ்வளவு செலவு செஞ்சிட்டு வந்திருக்கிற அவங்களை நோகச் செய்யாதீங்க' என்று அழமாட்டாத குறையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.
அவளது பெற்றோர் வந்து சேர்ந்தனர். விமான நிலையத்துக்கு கலையரசி, கண்ணன் இருவரும் சென்றனர்.
'அப்பாடி! இந்தியா வந்து சேருவமான்னு ஆயிடிச்சு. சீச்சீ, என்ன அமெரிக்காவோ போ. ஏதோ சௌகரியம் இருக்கே தவிர, குளிரும், ஸ்நோவும் வாட்டி எடுக்கறது. வெளியில காலாற நடக்க முடியுதா. வின்டர்ல திண்டாட்டம்பா. சம்மர்னா ஒரே எக்ஸ்ட்ரீம். கொளுத்தி எடுக்குது. ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி வாழ்க்கை’’ சரமாரியாகக் குறை கூறிக்கொண்டே வந்தார் கலையரசியின் அப்பா.
'என்ன மாமா, நீங்களா இப்படிச் சொல்றீங்க. உங்களுக்கே யு.எஸ். வாழ்க்கை போராடிச்சுடுச்சா! அங்கதான் சாமானெல்லாம் கொள்ளை மலிவுன்னு சொல்லுவீங்க. இப்ப இப்படிச் சொல்லீங்க… கண்ணன் ஆச்சரியம் மேலிடத் மாமனாரிடம் கேட்டான்.
'அப்பாவா இப்படிப் பேசுறது?’’ கலையரசி ஒன்றும் புரியாது விழித்தாள். 'கண்ணன், டூதௌசன் டென்னுக்குப் பிறகு எல்லாமே வீழ்ச்சிதான். விலைவாசிகூட ஏறித்தான் போச்சு. எத்தனை கம்பெனி மூடிட்டாங்க தெரியுமா? பாதிப்பேர் வேலையில்லாம ரொம்ப கஷ்டப்படறாங்க. அதிலும் இராக் வார் வந்தப்புறம் கேட்கவே வேண்டாம். படுமோசம். நம்ம இந்தியா தேவலாம். கொலை, கொள்ளை ஒரு அக்கிரமம் பாக்கியில்லைம்மா. தலையெழுத்து, எங்கேயோ தஞ்சாவூர்ல பொறந்துட்டு எங்கேயோ போய் இருந்து கஷ்டப்படணும்னு இருக்கு. இங்கே நேத்திக்குப் படிச்சுட்டு வந்தவன்லாம் மாசம் 35,000 ரூபாய் சம்பளம் வாங்கறாங்களாம். இந்தியா இப்போ பிரமாதமா முன்னேறிக்கிட்டு இருக்கு. கலை, உன் தம்பியோட எக்ஸ்பீரியன்சுக்கு இங்கே வந்தா லட்ச ரூபாய் கூட வருமாமே. 'நீங்க என்னப்பா, எதையாவது சொல்லிகிட்டு' கலையரசி கண்ணனை ஏதோ சந்தேகமாய் ஏறிட்டுப் பார்த்தாள். 'வெரிகுட் கலை. காயும் பொரியலும் அபார ருசி... இந்த டேஸ்ட் அங்கே இல்லையே. என்னமோ எப்பவோ பறித்து பிரிட்ஜ்ல வச்சு விக்கற காய்கறி, பழங்கள். எல்லாமே கிடைச்சாலும் நம்ப ஊர் டேஸ்ட் இல்லைம்மா. உம்... இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்து' என்று நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டார்.
தேங்க் காட், இப்படியே நல்லபடியா குறையொன்றும் கூறாமல் நாள் ஓடிட்டா தேவலை. கலையரசிக்கு மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டாள்.
ஆனாலும் அப்பாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஏன் இப்படி திடீரென்று ஒரு மாற்றம்? கலையரசி புரியாமல் குழம்பினாள்.
இரவு படுக்கைக்குப் போகுமுன் அம்மாவுடன் தனியே பேசச் சந்தர்ப்பம் கிடைக்கவே கலையரசி மெல்ல என்னவென்று விசாரித்தாள்.
'அதையேன் கேக்கறே போ. எல்லாம் காலக்கொடுவினை…. ஒன்னோட தங்கை புருஷனுக்கு நாலு மாசமாய் வேலையில்லை. கம்பெனியை மூடிட்டாங்க. அவ கிளம்பி சென்னையில் மாம்பலம் போய் மாமியாருடன் இருக்கறதாக ஏற்பாடு. ராகவன் கம்பெனியிலேயும் எல்லாரையும் போகச் சொல்றாங்களாம். பிள்ளைக்கு பெங்களுர் ஸ்கூல்ல அவனோட மச்சான் மூலமா அட்மிஷன் வாங்கிட்டான். வீடெல்லாம் பாத்தாச்சு. அமெரிக்கா வீட்டைக் காலி பண்ணிட்டு வந்துடப் போறான். என்னமோ உப்புச் சப்பில்லாத வாழ்க்கை. வெளியில சொல்லிக்கலே. மனசுக்குக் கஷ்டம்' கூறி விட்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள் அம்மா.
உடன் பிறந்தவர்களின் நிலைமை பற்றிக் கேட்க கேட்க கலையரசியின் மனம் வருத்தத்தால் நெக்குருகிப் போயிற்று. 'அம்மா கவலைப்படாதேம்மா…. என்ன இங்கே இருக்கிறவங்க எல்லாம் நல்லா இல்லையா? என்னவோ வெளிநாட்டு மோகம் எல்லாரையும் பேய் மாதிரிப் புடுச்சு ஆட்டுது. பாவம் அப்பா. அதான் ஒரேடியா மாறிப் போயிருக்கார். கவலைப்படாதேம்மா….. …. எல்லாம் நல்லபடியா நடக்கும்' என்று அம்மாவைத் தேற்றினாள்.
கலையரசியின் கவலை ஒருவாறு நீங்கியது. இருந்தாலும் கண்ணனிடம் எதனைச் சொல்லிச் சமாளிப்பது என்ற புதிய கவலை அவளுக்கு வந்துவிட்டது. எல்லா ஆட்டமும் கொஞ்ச காலத்துக்குத்தான். எத்தனைதான் இருந்தாலும் நம்ம சொந்த மண்ணுமாதிரி ஆகுமா? நம்ம நாடு நம்ம நாடுதான்… என்று அவளது எண்ணங்கள் பலவாறாக ஓடியது… இரவில் எங்கோ ஒரு வீட்டிலிருந்து … “சொர்க்கமே என்றாலும்….அது நம் நாட்டப் போல வருமா… “என்ற இளையராஜாவின் குரல் காற்றில் மிதந்து வந்தது.