இந்தக் கடிதத்தை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை. எதை எதையோ எழுதிய என்னால் ஏனோ உனக்கு ஒரு கடிதம் எழுத முடியவில்லை. எப்படி இந்தக் கடிதத்தைத் தொடங்குவது…? என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது… இருந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு கடிதத்தை எழுதத் தொடங்கினேன்.
புவனாவிற்கு, நீ எப்படியிருக்கிறாய்…? நலமாக இருக்கிறாயா…? என்பது போன்ற வழமையான வார்த்தைகளைக் கொண்டு இக்கடிதத்தைத் தொடங்க முடியவில்லை. என் புவனாவிற்கென எழுதும் இக்கடிதம் உன்னை வந்தடையும் என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியாது எனினும் மிகுந்த பேராசையுடனும் என்னுள் இருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இக்கடிதத்தை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் ஏனோ என்னால் எழுத முடியவில்லை… ம்… ம்… இல்லை… இல்லை… எழுதத் தெரியவில்லை… என்றே கூறவேண்டும்…
ஆனால், ஏதேனும் உனக்கு எழுத வேண்டும் என்ற ஆவல் மட்டும் என்னை உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. என் எழுத்துக்களில் அத்தனை சுமைகளையும் இறக்கி வைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. கவிதை, கட்டுரை, கதை என்று எத்தனையோ எழுதுகிறேன். ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. முடியவில்லை என்பதனை விடவும் இயலவில்லை என்ற சொல்லே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் அந்தக் கொடுமையான நிகழ்வு நடந்தேறியது. என்றும் பிரியாதிருந்த நாம் விதியால் பிரிந்தோம்… பிரிந்தோம் என்பதை விடப் பிரிக்கப்பட்டோம் என்பதுதான் சரியானதாகும்… அதை
நினைக்கின்ற போது என் மனம் கனக்கின்றது. சம்மட்டி கொண்டு என் இதயத்தில் யாரோ ஓங்கி அடிப்பதைப் போன்றதொரு உணர்வு…
புவனா… இப்பொழுது நீ எங்கே, எப்படியிருக்கிறாயென எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்பொழுதுமே நீ என் இதயத்தின் மையப்புள்ளியில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவாறு என்னை இன்று வரை ஆண்டு கொண்டே இருக்கிறாய்…
பூக்கள் என்றால் உனக்குக் கொள்ளைப் பிரியம்… எனக்கு விவரம் தெரிந்த காலம்தொட்டு எப்பொழுதும் பூக்களை விரும்புபவளாகவே நீயிருந்திருக்கிறாய்… நீ எங்கே போனாலும் கை நிறையப் பூக்களை அள்ளி வருவாய்... பூக்களின் வாசனை உலகில் நீயொரு வண்ணத்துப்பூச்சியாக இருந்தாய். முடிந்தவரை பறந்து பறந்து விதவிதமான பூக்களைத் தேடியபடியிருந்தாய். மல்லிகைப்பூ, பிச்சிப் பூ, ரோசாப்பூ, சாமந்தி, செம்பருத்தி, முல்லைப் பூ எனத் தொடர்ந்த உன் தேடுதலில் அனைத்துப் பூக்களும் இருந்தன… அவை எந்தவிதமான பூக்களாக இருந்தாலும் அவையனைத்தும் உன்னால் விட்டு வைக்கப்படவில்லை.
அந்தப் பூக்களெல்லாம் உன்னைப் போலவே இன்றெங்கே போயின? நாம் பிரிந்த காலந்தொட்டு பூக்களையும் பூக்களுடனிருந்த உன்னையும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்… புவனா… என்னை நினைவிருக்கிறதா உனக்கு ? நாம் பிரிந்த அன்று சிவப்பிலும் பச்சையிலும் கோடு போட்ட மேற்சட்டையும் ஊதா நிறத்தில் காற்சட்டையும் அணிந்திருந்தேன். கவலை படர்ந்த முகங்களுக்கும் எண்ணக் குவியல்களுக்கும் நடுவில் அன்றெனக்கு அழத்தெரியவில்லை. ஆனால் நீ அழுதாய்… விம்மி அழுதாய்… நீதிமன்ற வளாகத்தில் அன்று பூக்கள் சொறியும் பெரிய பெரிய மரங்கள் இருந்தன. நிலம் முழுதும் அழகிய மஞ்சள் நிறப்பூக்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. அவற்றில் எல்லாம் உனக்குக் கவனம் செல்லவில்லை… என்னையே பார்த்துப் பார்த்துத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாய்… உன் கையைப் பிடித்திருந்த அம்மாவின் கையினை உதறிவிட்டு என்னருகே கதறி அழுது கொண்டு ஓடிவந்தாய். இதனை அறியாத அம்மா உன்னைத் திகைப்புடன் வெறித்துப் பார்த்தாள்... இதனை நீ பார்த்திருக்க வாய்ப்பில்லை… உன்னால் உணரவும் முடியாது... ஏனெனில் நீ என்னைப் பார்த்து ஓடிவந்து கொண்டிருந்தாய்…
ஓடிவந்த நீ, அனைவரும் நம்மைப் பார்த்திருக்க என்னை இறுக அணைத்து எனது கன்னத்திலும் நெற்றியிலுமாக மாறி மாறி அழுத்தமாக முத்தமிட்டாய்… ஒரு பெண் ஒரு ஆணை இவ்வாறு அழுகையோடு கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தமிட்டதைப் பார்த்தவர்களுக்கு அந்நிகழ்ச்சி அன்று விநோதமானதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த முத்தங்கள்தான் எனக்கு உன் அன்பைச் சொல்லிச் சென்ற இறுதி முத்தங்கள். அந்தத் தாய்மையும் ஈரமும் இன்னும் என்னுள் உலரவில்லை. அவை என்னுள் உன்னை விதைத்து விட்டுச் சென்ற விதைகள்… அன்பு என்றால் என்னவென்று புரிய வைத்த பொக்கிஷங்கள்… அதனை எப்படிச் சொல்வது…? விசும்போலோடும் கண்ணீரோடும் நீ என்னைப் பார்த்து, 'போயிட்டு வர்ரேன்டா செல்லம்' என்று சொல்லி விட்டுப்போன உனது இறுதி வார்த்தைகள் காற்றில் கரைந்த பின்னரும் எந்தவிதமான விபரீதத்தையும் அவை எனக்கு உணர்த்தவில்லை… என்னவென்றே என்னால் அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை… நீ மாலையிலேயே மீண்டும் திரும்பி என்னிடம் வந்துவிடுவாய் என நினைத்துக் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால்… நேரங்கள் கடந்தன… நாட்களும் கரைந்தன… மாதங்கள் கடந்து… ஆண்டுகளாகின… எல்லோரும் வந்து வந்து சென்றார்கள்… ஆனால்… நீ மட்டும் வரவேயில்லை…
நீதிமன்றத்தில் பார்த்த அன்றுதான் நானுன்னைக் கடைசியாகப் பார்த்த நாள். ஒரு புகைப்படமேனும் எடுத்துப் பகிர்ந்து கொள்ளாமல் பிரிந்துபோன நாள். அன்று நீ தலையில் வைத்திருந்த மல்லிகைப் பூக்கள் ஒவ்வொன்றாக வாடியுதிர்ந்ததைப் போல நானுமுன் நினைவுகளிலிருந்து உதிர்ந்து போயிருப்பேனா… இத்தனை ஆண்டுகளில்...தெரியவில்லை…?
இந்த வாழ்க்கை வேடிக்கையானது விசித்திரமானதும்கூட…! உன் விரல்கள் தொட்டு விளையாடியிருக்கிறேன். நீ எனக்கு உணவை ஊட்ட நான் அதனை ஆசையோடு வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். எனக்குத் தலையில் எண்ணெய் தடவி அழகாகத் தலைசீவி விட்டிருக்கிறாய். என்னை நாள்தோறும் குளிக்க வைத்துப் புதிது புதிதாக ஆடை அணிவித்துக் கன்னத்திலும் , நெற்றியிலும் முத்தமிடுவாயே… உன்னிடத்தில் எப்பொழுதும் சந்தனப்பவுடரின் வாசனை வீசிக் கொண்டேயிருக்கும். நீ முத்தமிட்ட பின்னர் என்னிடத்திலும் அந்த வாசனை படிந்திருக்கும்… அந்த வாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்…
எனக்கு உடல் நலமில்லை என்றால் நீ பதறித் துடிப்பாயே…! சாமி படத்தின் முன்னர் நின்று கண்களில் கண்ணீர் வழிய எனக்குக் குணமாக வேண்டுமென்று அழுது வேண்டிக் கொள்வாயே…புவனா… அந்தப் பரிவும் நேசமும் எங்கே போயிற்று? நான் தொட்டு விளையாடிய உன் விரல்களின் நகங்கள் வளர்ந்து வளர்ந்து நீ அவற்றை வெட்டிவிடுவதைப் போல உன்னுள் இருக்கும் என்னைப் பற்றிய நினைவுகள் எல்லாமே வெட்டிவிடப்பட்டனவா? நீ என் தலையில் வைத்த எண்ணெய் காய்ந்து பின்னர் என்னால் அது கழுவிவிடப்பட்டதைப் போன்று கழுவிவிடப்பட்டனவா? நீ என் கன்னத்தில் மீது இட்ட முத்தத்தின் எச்சில், சந்தனப்பவுடரின் வாசனையோடு உலர்ந்து விட்டதைப் போல உலர்ந்து விட்டனவா?
நிலவற்ற நாட்களில் நம்வீட்டு மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு பறம்பு மலையில் பாரிமகளிர் நின்று கொண்டு பகைமன்னரின் தேர்களையும் குதிரைகளையும், யானைகளையும் எண்ணியதைப் போன்று நாம் நட்சத்திரங்களை எண்ணினோம்… நட்சத்திரங்களை எண்ணி எண்ணி என் கை சோரும் வேளையில் எனது கைகளை உன் கைகளுக்குள் அடக்கி நீ ஏதாவது கதை சொல்லத் தொடங்குவாய். பெரும்பாலும் உன் கதைகளில் தேவதைகள் வருவர். அந்தத் தேவதைகளுக்குச் சிறகுகள் இருந்தனவா என்பது பற்றி நீ கூறியதாக நினைவில்லை. தேவதைகளுக்குச் சிறகுகள் இருந்திருக்க வேண்டாம். சிறகுகள் இருந்தால் உன்னைப் போல எங்கோ தொலைதூரங்களுக்கு அவர்கள் பறந்து சென்று மறைந்திருப்பர்.
உன் கதைகளில் வரும் அந்தத் தேவதைகள் அன்பைச் சுமந்த வண்ணம் அலைந்து கொண்டே இருப்பர். கருணை, அன்பு, உதவி தேவைப்படுபவர் தலையைத் தொட்டுத் தடவி தங்களின் அன்பை அவர்கள் மீது இறக்கி வைத்துப் பூக்களைச் சொரிவர். தேவைப்பட்டவர்கள் துயரமெல்லாம் தேவதை கை பட்டு மாயமாகிப் போன கதைகளைக் கூறி, முடிவில் 'அன்பினால் ஆகாதது எதுவுமேயில்லை' என்பாய். உன் மேலான அன்பு இன்றும் என்னில் அப்படியே உறைந்து போய் இருக்கிறது. அந்தத் தூய்மையான அன்பு உன்னிடத்தில் என்னைச் சேர்த்துவிடுமா என்ன ?
நீதிமன்றத்தில் பரிதவித்த அன்றைய நாளில் இக்காலத் திரைப்படக் காட்சிகளில் வருவதைப் போன்று நீயும் நானும் மட்டும் இயங்கி மற்றவர்கள் காலத்தோடு உறைந்து போகும் சாத்தியங்கள் மட்டும் இருந்திருப்பின் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? நானும் நீயும் நமது நேசத்தை மறுத்த பெற்றோரை விட்டுவிட்டு எங்காவது கண்காணாத தேசத்திற்குத் தப்பிச் சென்றிருக்கலாம்.
ஒரு பெரும்புயலடித்து ஓய்ந்ததைப் போன்றிருக்கின்றது நம்மிருவருடைய இறந்த காலங்களும். அதில் நாம் எல்லைகளேதுமற்று சுற்றித் திரிந்தோம். சிறு பிள்ளைகளின் மண் சோறும், பொம்மை விளையாட்டும் பாதியில் பறித்தெடுக்கப்பட்டது போன்று கழிவிரக்கத்தோடும், சுயபச்சாதாபத்தோடும் இன்றந்த நாட்களை நினைவுகூறுகிறேன்…
நாம் இருவரும் பிரிந்த போது நான் நின்றிருந்த வயதினை ஒத்தவர்களை நீ பார்க்கும் பொழுதுகளிலாவது எனது நினைவுகள் உன்னுள் எழுகிறதா? அன்பே உருவானவளே, எனக்கு வருகிறது. பாவாடை தாவணி, அணிந்து கொண்டு மல்லிகைப்பூவைத் தலையில் வைத்துக் கொண்டுவரும் பெண்களெல்லோரும் உன் நினைவுகளை என்னுள் கொண்டுவந்து நிறைக்கின்றனர்.
இப்பொழுதெல்லாம் உன்னை நினைத்து நினைத்தே என் நினைவுகள் சோர்ந்து விட்டன. எனது குடும்பம் தவிர்த்து எழுத்துக்களே என்னைத் தாங்கி நிற்கின்றன. அந்த நினைவுகளை எல்லாம் நான் எழுதி எழுதித் தீர்த்துக் கொள்கிறேன்… நீ இக்கணத்தில் எந்த ஊரில், எந்த மாநிலத்தில், எந்த நாட்டில், எப்படி இருக்கிறாயோ? திருமணம் முடித்திருப்பாய் என்று நினைக்கின்றேன். உனக்கு அன்பான கணவன் வாய்த்திருக்க இறைவனை வேண்டுகிறேன். உன் குழந்தைக்கு நான் வைத்திருப்பதைப் போல நீ என் பெயர் வைத்திருக்கிறாயா? எனக்கும் பிரதிபாவுக்கும் பிறந்த குழந்தைக்கு உன் பெயரையே வைத்திருக்கிறேன். அவளுக்கும் அழகிய விழிகள் உன்னைப் போலவே. இப்பொழுதுதான் பேச ஆரம்பித்திருக்கிறாள். உன் பெயரையே முதலில் சொல்லப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நீ எனக்குக் கூறிச் சென்ற தீயவர்களேதுமில்லாத தேவதைக் கதைகளையெல்லாம் ஒவ்வொரு இரவிலும் என் மார்பில் படுக்க வைத்து குட்டி புவனாவிற்குக் கூறிக் கொண்டேயிருக்கிறேன்.
பிரதிபாவின் மனதிற்குள் எனது இறந்த காலம் குறித்தும், குழந்தைக்கு வற்புறுத்தி வைக்கப்பட்ட உனது பெயர் குறித்தும் பல வினாக்கள் முடிச்சிட்டுக் கொண்டுள்ளன. எனது வாழும் காலத்திற்குள் இது தொடர்பான எந்த முடிச்சுக்களையும் நான் அவிழ்ப்பதாக இல்லை. நம்மைப் பற்றிய நேசம் என் நெஞ்சம் மறப்பதில்லை… நீ, நான், கள்ளங்கபடமற்ற நம் நேசம் என எல்லாமும் எந்தத் தேடல்களும், எந்தத் தடயங்களும் என்னுடனேயே அழிந்து போகட்டும்… அவற்றையெல்லாம் சொல்லி என்னையே நம்பி வந்த என்னவளை நான் துன்பத்துள் ஆழ்த்த விரும்பவில்லை… சோகமோ… துக்கமோ… அது என்னுடனேயே போகட்டும்… பிறரை வருத்துவதற்கும் வருத்தத்தில் ஆழ்த்துவதற்கும் நமக்கு உரிமை இல்லை… முடிந்தால் நாம் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும்… இல்லையெனில்… விலகிவிட வேண்டும்… இவையெல்லாம் நீ எனக்குக் கற்றுக் கொடுத்தவை…
உன்னைப் பற்றியும் அம்மாவைப் பற்றியுமாகிய நினைவுகள் என்றும் என் உள்ளத்தில் வலம் வந்துகொண்டே இருக்கின்றன. அப்போதெல்லாம் என் இதயம் வலிக்கும்… அந்நேரத்தில் எனக்கு,
“வலியாக உணரமுடியவில்லை
வலிக்கும் இடமும்
தெரியவில்லை…!
ஆனாலும் வலிக்கிறது
அவர்களைப் பற்றிய நினைவுகள்…
நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய்…”
என்று கவிதையால் எழுதி வைக்கத்தான் முடிகிறது.
உனக்கு என் பிரதிபாவை அறிமுகப்படுத்த வேண்டும். அவள் மிகவும் நல்லவள். கணவனுக்குப் பணி செய்வதே தன்னுடைய பிறவிக்கடன் என்பதனைப் போன்று நடந்து கொள்கிறாள். எந்த ஆண்மகனும் தனது வாழ்க்கைத் துணைவியைப் பற்றி எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களையும் அன்போடு கொண்டவளாக இருக்கிறாள். உனக்கு நம்புவதற்குச் சற்று கடினமாகத் தானிருக்கும். திருமணம் முடித்த இந்த ஏழாண்டு காலங்களிலும் எந்த ஒரு விஷயத்திலும் எங்களுக்குள் சண்டை சச்சரவே வந்ததில்லை.
கோபத்தில் அப்பா அம்மாவை அடிப்பதையும், அதனால் அம்மாவிற்கு உதடு கிழிந்து இரத்தம் வழிவதையும் அதனையும் பொறுத்துக் கொண்டு அம்மா நமக்கு உணவு பரிமாறுவதையும் பற்றி அவளிடம் சொன்னால் ஆச்சரியப்பட்டுப் புருவம் உயர்த்துபவளாகவே இருப்பாள். அதனை நினைத்து மனதிற்குள்ளேயே புழுங்குவாள்… எனவேதான் நான் பழையவை குறித்து அவளிடம் எதுவும் சொல்லவில்லை. என் குட்டி புவனா அதிர்ஷ்டக்காரி. பெற்றோரின் சண்டையைப் பார்த்து வளராதவளாக இருக்கிறாள். இதுவரைக்கும் உன்னைப் பற்றியும் பிரதிபாவிடம் எதுவும் நான் சொல்லவில்லை. எனக்குச் சொல்லவேண்டும் என்று தோன்றவுமில்லை புவனா.
உன்னை விட்டுப் பிரிந்த அன்றையப் பொழுதிலிருந்து என் வாழ்வில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் உன்னைத் தவிர மற்ற எல்லாமே சிறிது சிறிதாக என் நினைவுகளிலிருந்து கசிந்து வெளியேறி உலர்ந்து கொண்டே வருகின்றன… ஏன் உலர்ந்துவிட்டன என்றே சொல்லலாம். அன்று நாம் ஒன்றாய்ச் சுவாசித்த காற்றைப் போல கண்ணுக்குத் தெரியாமல் அவை மறைந்து விட்டன. அன்றியும் உன்னுடன் இருந்த காலங்கள் தவிர்த்து இதுவரையில் எனது வாழ்நாட்கள் அனைத்தும் எந்த சிறப்புகளுமற்றதாகவே விடிகின்றன.
அதே முரட்டுத்தனமான அப்பா. அன்பான அம்மாவை அதிகாரத்துடன் அடக்கியாண்டு உடல், உளம் வருத்திய அதே அப்பாவின் பிடியில் உன்னைப் பிரிந்ததிலிருந்து வளர்ந்தேன். எனது சுவாசங்களைக் கூட அதிகாரமிக்க கரங்கள் பொத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. நான் செய்த சிறு சிறு தவறுகளுக்குக் கூட வலி மிகுந்த தண்டனைகள் வழங்கப்படும் போதெல்லாம் இரவுப் பொழுதுகளில் நான் உன்னை நினைத்துக் கொண்டு அழுவேன். எனது கண்ணீரின் அளவை எனது தலயைணைதான் நன்கு உணரும்.
முன்பெல்லாம் நான் வருந்தி அழும்போது அரவணைத்துக் கொள்ளும் தோள்களோடு கண்ணீர் மிகுந்த அந்த இரவுகளில் நீ “அழாதோட செல்லம்…என் புஜ்ஜிக் குட்டி…” என்று கூறிக் கொண்டே வருவாய். ஆனால்…..போகப் … போக ….எனக்கான உன் வருகை குறைந்தது… நான் மேற்படிப்புக்காக விடுதியில் தங்கிப்படிக்க நேர்ந்தது என் வாழ்க்கையில் எழுதப்பட்டிருந்த நல்லூழின் காரணமென்றே கருதுகிறேன்… எப்போதும் இரக்கமற்று அடித்துத் துன்புறுத்தும் அப்பாவிடம் இருந்து சிறிது காலம் எனக்கு விடுதலை கிடைத்தது…
எனது விடுதி நாட்களில் கூட என்னுள்ளத்தில் உன் நினைவுகளே கிளர்ந்தெழும். ஆனால் என் நெருங்கிய நண்பர்களிடம் கூட நம்மைப் பற்றிய செய்திகளை நான் மனம்விட்டுப் பகிர்ந்து கொண்டதில்லை. படிப்பு முடித்து நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் கொடுமைக்கார அப்பா மாரடைப்பில் இறந்து போனார். இது உனக்குத் தெரியுமா புவனா? எப்படி உனக்குத் தெரியும்…? உன்னிடம் மட்டும் என்ன அன்பாகவா அப்பா நடந்து கொண்டார்… அடி… உதை… வசவு… இதுதான் வாழ்க்கையில் கண்டது… பிறகு எப்படி அவர் மீது அன்பு இருக்கும்…?
கொடுமைக்காரராக இருந்தாலும் எனக்கென்று இருந்த ஒரே ஆதரவு அவர்தான். அவரில்லாததால் நான் யாருமற்ற அனாதையானேன்… எனக்கென்று யாருமில்லையே என்று ஏங்கினேன்... அதன் பின்னர்தான் நான் என் அலுவலக நண்பரின் தங்கை பிரதிபாவைத் திருமணம் செய்து கொண்டேன். இப்பொழுது நான் நீ எனக்குக் காட்டிய அன்பையெல்லாம் சேர்த்து மொத்தமாக அவளுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறேன். உன்னைப் போன்றே அவளும் என்மீது அன்பைச் சொரிந்து கொண்டிருக்கின்றாள். இதோ, உனக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவு வேளையிலும் எனக்கு எந்தவிதமான இடையூறுகளுமின்றி அன்பு நிறைந்த ஒரு புன்னகையோடு சுடுநீர் நிறைந்த பாத்திரத்தையும் டம்ளரையும் என் முன்னால் வைத்துவிட்டுச் செல்கிறாள். அவள் வைத்துச் சென்ற நீரைச் சிறிது எடுத்துக் குடிக்கின்றேன்…அவளது அன்பைப் போன்றே அந்நீர் என்னுள் இதமான வருடலைச் செய்கிறது…
நான் என்னைப் பற்றியே கூறிக் கொண்டிருக்கின்றேன்… ஆமாம்… புவனா… அம்மா எப்படியிருக்கிறாள்? அன்றைய காலத்தில் காதலித்து, தாய்வீட்டை விட்டுவிட்டு ஓடிவந்து, திருமணம் செய்து, பின்னாட்களில் அப்பாவின் நடவடிக்கைகளால் தனது காதலையும் திருமணத்தையும் வாழ்க்கையையும் வெறுத்து, நம்மையும் பிரித்த நம் அம்மா எப்படியிருக்கிறாள் புவனா? என்னைப் பிரிந்ததன் பின்னர் உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? நீங்கள் நலமாக இருக்க வேண்டுமென நாள்தோறும் இறைவனை வேண்டிக் கொண்டே இருக்கிறேன்…. இது உங்களிருவருக்கும் தெரியுமோ தெரியாதோ…? தெரியவில்லை….என் வேண்டுதலால் நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்…உங்களிருவரையும் நலமாக வைத்திருக்கும் இறைவனுக்கு நான் நன்றியைத் தினமும் சொல்லுகிறேன்…. ஆம்….! புவனா…நேசம் மறப்பதில்லை நெஞ்சம்… உங்களிருவரையும் என் மனம் எப்போதும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றது…
வலிகள் பிறருக்கு வரும் போது அதன் வலியை நம்மால் உணரமுடியாது... நமக்கு வரும்போதுதான் அதனை உணரமுடியும்… அதுபோன்றே மணமுறிவானவர்களின் மன வலிகளை எல்லோரும் உணர்வதுமில்லை; அது எல்லோராலும் உணரப்படுவதிமில்லை. அவ்வுணர்வுகளை யாரலும் உணர்ந்து கொள்ளவும் முடியாது. அவர்கள் புன்னகையை ஏதோ ஒர் அணிகலன் போலக் கட்டாயத்தின் பேரில் அணிந்து கொண்டு வலம் வர வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்க்கையில் விதியால் விதிக்கப்பட்டிருக்கிறது என்றே கூற வேண்டும். தங்களின் வாழ்க்கைத் துணையைப் பிரிந்த பின்னர் ஆண்களில் பலர் மதுவை நாடுகின்றனர். பெண்களோ நள்ளிரவுகளில் தனிமையில் தலையணையோடு விசித்து விசித்தழுவதில் விருப்புக் கொள்கின்றனர்.
மதுமயக்கம் ஒரு மந்திரக் கோலைப் போலக் கவலைகளை அப்போதைக்கு மறக்கச் செய்கிறது. அம் மந்திரக்கோலைத் தடவி விடும் போதெல்லாம் அதில் சிதறும் தீப்பொறிகளைப் போலக் கவலைகளும் சிதறுவதாக அதில் விழுந்தவர்கள் எண்ணிக் கொள்கின்றனர். இன்னல்கள் தாங்கிச் சோர்வுறும் வேளைகளில் கண்ணீர் ஒரு வடிகால். இதயத்தின் துயர்களையெல்லாம் கழுவியெடுத்து விழி ஓட்டை வழியாக வெளிக்கொணர்ந்து சிந்துகின்றதாகக் கொள்ளலாம். இதை உனக்கு எழுதும்போது நான் முன்னர் எப்போதோ எழுதிய,
“கண்ணீர் சிந்திடும்
கண்களை விட
அதை மறைத்துப்
புன்னகை செய்யும்
இதழ்களுக்கே வலி அதிகம்”
என்ற எனது கவிதைதான் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது.
நம் அப்பா முன்பை விடவும் அதிகமாகக் குடிக்கத் தொடங்கினார். குடித்துக் குடித்து அவரது வயிற்றுத் தொப்பையும் கண் ரப்பையும் மேலும் பருத்தன. அவ்வாறு பெருக்க முடியாத போதுதான் அவர் மாரடைப்பினால் இறந்திருக்கிறார். நம் அம்மா இன்னும் அழுகிறாளா புவனா? நம் அப்பாவும் அம்மாவும் விவாகரத்துப் பெற்றுவிட, நான் அப்பாவிடமும் நீ அம்மாவிடமும் அடைக்கலம் புகுந்து நாம் நிரந்தரமாகப் பிரிந்த நாளில் உனக்குப் பதினைந்து வயதும் எனக்கு ஏழு வயதும் இருக்குமென்று நினைக்கின்றேன்… என்ன புவனா நான் சொல்வது சரியானதா…?
அன்றிலிருந்து என் மனம் ஊமையாய் அழுது கொண்டே இருக்கின்றது. எல்லாம் இருந்தும் ஏதுமில்லாது நிர்க்கதியாய் நிற்பது போன்று நான் உணர்கிறேன்… எப்போது உன்னையும் அம்மாவையும் சந்திப்போம் என்று… உங்களது அருகாமையை இதயம் நாடுகிறது…
அம்மா என்மீது அன்புடன் இருப்பாளா…? அல்லது அப்பா என்ற கயவனோடு என்னைவிட்டுச் சென்றுவிட்டானே பாவி என்று உள்ளத்திற்குள் என்னைக் கருவிக் கொண்டு இருக்கின்றாளா...? இருந்தாலும் அம்மாவையும் மற்றொரு அன்னையாய்க் கருதும் உன்னையும் பாராது இருக்க என்னால் முடியவில்லை… இந்தக் கடிதமாவது நம் அனைவரையும் ஒன்று சேர்க்கும் என்று நம்புகிறேன்…
“உண்மையான அன்பைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது; அந்த அன்புக்கு உரியவர்களால் மட்டுமே உணர முடியும்..” ஆம் புவனா எனது அன்பை உங்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.. அந்த நாள் வருமா...? எதிர்பார்ப்போம்...