அமைதியான வீடு அன்று ரணகளமாகிக் கொண்டிருந்தது. கண்களிரண்டும் சிவக்கக் கடுமையான கோபத்துடன் சிவநேசன் தன் மகனைப் பார்த்துச் சத்தம்போட்டுக் கொண்டிருந்தான். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே பயப்படுவாள் அவனின் மனைவி அகிலா. அடுப்படியில் அவளுக்கு வேலை இன்னும் முடியவில்லை. பாவம் கண்ணன்… பத்து வயதுச் சிறுவன்; அவன் முன் அழுதபடி நின்று கொண்டிருந்தான்.
இவ்வளவு களேபரத்திற்கு இடையிலும் இதற்கும், தனக்கும் தொடர்பே இல்லை என்பது போல், பூஜை அறையில் உட்கார்ந்து கந்தசஷ்டிக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தாள் அகிலாவின் மாமியார் தேனம்மை.
“இங்க பாருட கண்ணா … உன்னோட நடவடிக்கை வரவர சரியில்லை. ஓங்கிட்ட கொஞ்சமும் மனசுல பயமில்லாமப் போச்சு. எப்பப் பார்த்தாலும் கூட படிக்கிற பயலுகளோடு தகராறு, சண்டை. டீச்சர் சொல்றதை கேட்கறது கிடையாது. இதெல்லாம் நல்ல பழக்கம் இல்லை தெரிஞ்சுக்கோ… டீச்சர் சொல்றதை கேட்டு நடந்துக்கணும். என்னடா நான் சொல்றது விளங்குதா” என்று கூறிக் கொண்டே கையில் இருந்த ஸ்கேலால், கண்ணனின் முழங்காலுக்கு கீழ் கால்களில் படீர்படீரென அடித்தான்.
அடி பொறுக்க முடியாத கண்ணன், “அப்பா ப்ளீஸ்பா…. அடிக்காதீங்கப்பா… வலிக்குது. இனிமே ஒழுங்கா நடந்துக்கறேன்… யாருக்கிட்டேயும் இனி சண்டை போட மாட்டேன்…டீச்சர் சொல்லறபடி நடந்துக்கறேன்பா…” என்று வலியால் துடித்தான்.
அதனைக் கேட்ட சிவநேசன், “வலிக்குதா…நல்லா வலிக்கட்டும்… அப்பத்தான்டா ஞாபகம் இருக்கும். இனி இந்த மாதிரி நடந்துக்க மாட்டே. நேத்து வாசலில் பஞ்சுமிட்டாய் வாங்க அம்மாகிட்டே காசு கேட்டு, அம்மா கொடுக்கலைன்ன ஒடனே அம்மாகிட்ட சண்டபோட்டு அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சியாமே… அப்பறம் அப்பத்தா கிட்டேபோய்க் கேட்டியாமே… உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அம்மாகிட்ட எதுத்துச் சண்ட போடக் கூடாது, அப்பத்தா கிட்டே காசு கேட்க கூடாதுன்னு…” என்று கேட்டான்.
“இல்லேப்பா… அம்மா தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குப் பஞ்சுமிட்டாய் திங்கனும்போல இருந்துச்சு… அதனால அம்மாகிட்ட சண்டபோட்டுக் காசுகேட்டேன்… அவங்க கொடுக்கலன்ன ஒடனே அப்பத்தா கிட்டே கேட்டேன். சாரிப்பா… இனிமே அப்படி செய்ய மாட்டேன் மன்னிச்சிடுங்கப்பா”
என்று கெஞ்சுதலுடனும், அழுத கண்களுடனும் கண்ணன் மன்னிப்புக் கேட்க, சிவநேசன் சற்று கோபம் தணிந்தவனாக “சரிடா இனிமே ஒழுங்கா நடந்துக்கோ என்ன புரியுதா… சரி… சரி… உள்ளே போய் முகங் கழுவிக்கிட்டு, ஸ்கூலுக்குக் கெளம்பற வழியப்பாரு…”
அடித்த கணவனை விட, உள்ளே அமைதியாக உட்கார்ந்திருக்கும் மாமியார் மீதுதான் அகிலாவுக்குக் கோபங் கோபமாக வந்தது. குழந்தையைத் திட்டி, அடிக்கிறாரே… போய் தடுப்போம்னு இல்லாம, தனக்கும், இதுக்கும் சம்பந்தமில்லைங்கறது மாதிரி, குத்துக் கல்லுப் போல அமர்ந்திருக்கும் தனது மாமியாரை நினைக்க நினைக்க அவளுக்கு எரிச்சல் வந்தது.
தாயாரின் மீது மிகவும் மரியாதை வைத்திருப்பவன் சிவநேசன். அவன் அம்மா சொல்லைத் தட்ட மாட்டான். எந்த விஷயத்தில் சிவநேசன் கோபப்பட்டு கத்தினாலும், உடனே தலையிட்டு, அவனை சாந்தப்படுத்துவாள். அப்படிபட்டவள், குழந்தையை சிவநேசன் அடிக்கும்போது, தடுக்க வராமல் அமைதியாக இருப்பது… மாமியாரின் மேல் அவளைக் கோபம் கொள்ள செய்தது.
முகம் சோர்ந்து கண்ணன், மவுனமாக ஸ்கூலுக்குக் கிளம்ப, “அகிலா… கண்ணனுக்குத் தட்டில் டிபன் வைத்து கொடு; நான் ஊட்டி விட்டு அனுப்பறேன்.” என்றாள் தேனம்மை.
இதனைக் கேட்ட அகிலாவிற்கு எரிச்சல் வந்தது. “ஆமா….இதில, ஒண்ணும் குறைச்சலில்லை. பேரன் மேல் அக்கறை இருப்பது போல் காட்டி கொள்கிறாள்” என, மனதில் முணுமுணுத்தபடி, டிபன் தட்டை மாமியாரிடம் கொடுத்தாள்.
சிவநேசன் ஆபிசுக்குச் செல்ல, கண்ணன் ஸ்கூலுக்குச் சென்றுவிட, பாத்திரங்களை ஒழித்துத் தேய்ப்பதற்குப் போட்ட அகிலா, வேலைக்காரி செல்லம் உள்ளே நுழைவதைப் பார்த்தாள்.
தேனம்மை குளித்துக் கொண்டிருக்க, “செல்லம், முதலில் வீட்டை கூட்டிட்டுத் துடைச்சுடு; அப்புறம் பாத்திரம் தேய்க்கலாம்.”என்று அகிலா கூறினாள்.
“சரிம்மா. பெரியம்மா எங்கே… குளிக்கிறாங்களா?” என்று கேட்டபடி, விளக்குமாற்றை எடுத்து, வீட்டைக் கூட்டத் தொடங்கினாள்.
குளித்துவிட்டு வந்த தேனம்மை, அகிலாவைப் பார்த்து, ”ஏம்மா அகிலா… நீ சாப்பிடும்மா... நான் சாமி கும்பிட்டுட்டு, அப்பறமா சாப்பிடறேன். டேபிள் மேலே நாலு இட்லி மட்டும் எடுத்து வச்சுட்டு, ஒன்னோட வேலையை பாரு.”என்றாள்.
இதனைக் கேட்ட அகிலா, “நேரத்துக்கு சாப்பிட்டு ப்ரஷர் மாத்திரை போட்டுக்கணும்… முதலில் சாப்பிடுங்க…’’ என்று இயல்பாக இருந்திருந்தால் சொல்லியிருப்பாள். ஆனால் இன்று மாமியார் மீது கோபமாக இருப்பதால், ஒன்றும் பதில் சொல்லாமல், அடுப்படிக்குள் நுழைந்தாள்.
“என்னம்மா முகம் வாடியிருக்கு… குளிச்சுட்டு வந்திருக்கீங்க… சாப்பிட வேண்டியது தானே. மணியாகலையா?” என்று வீட்டைக் கூட்டியபடியே வேலைக்காரி செல்லம் கேட்க, “மனசு சரியில்லைத்தா. கண்ணனையே நெனச்சிக்கிட்டு இருக்கேன்.”
கண்ணனின் பெயர், அவர்களிருவரின் பேச்சில் அடிபடவே, என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதைக் கூர்ந்து கவனித்துக் கேட்கத் தொடங்கினாள் அகிலா.
“ஏம்மா… கண்ணனுக்கு என்ன ஆச்சு… ஒடம்புக்கு ஏதும் சரியில்லையா… நல்லாத் தானே ஸ்கூலுக்கு போயிருக்கு… அப்பறம் என்ன” என்று கேட்டாள் செல்லம்.
“அதில்லை செல்லம்… காலையில எம்மவன் சிவநேசன், கண்ணனைச் சப்தம் போட்டு நல்லா அடிச்சுட்டான். அவன் முகம் சோர்ந்து, ஸ்கூலுக்கு போனதை நினைச்சுக்கிட்டேன்; என்னால சாப்பிடக்கூடப் பிடிக்கலை.”
“என்னம்மா இது, சிவநேசன் ஐயா ஒங்க பிள்ளை. நீங்க எது சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் கேட்கற தங்கமான புள்ளை. நீங்க போயி, “அடிக்காதே’ன்னு சொல்லி தடுத்து இருக்கலாமே… அதை விட்டுட்டு… இப்ப போயி அடிவாங்கிட்டுப் போன பேரனை நினைச்சு… வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கீங்க…”
அகிலா மனதில் எழுந்த கேள்வியை, செல்லம் கேட்க, மாமியார் அதற்கு என்ன பதில் சொல்ல போகிறாள் என்பதைக் கேட்கத் தயாரானாள்…
“இங்க பாருத்தா… புள்ளங்க தப்பு செய்யறபேது பெத்தவங்க கண்டிக்கத்தான் செய்வாங்க… அப்படி செய்யக் கூடாதுன்னு பெத்தவங்க கண்டிக்கும் போது, நான் தலையிட்டால் அது நல்லால்ல… அந்தப் பிள்ளைய நானே கெடுக்கிற மாதிரி ஆயிடும். தனக்கு ஆதரவாக அப்பத்தா இருக்காங்க… நாளைக்கு எந்தத் தப்பு செஞ்சாலும் அப்பத்தா தனக்கு ஆதரவாக இருந்து காப்பாத்திடுவாங்கங்கற எண்ணம், அந்தப் பிஞ்சு மனதில் வந்துரும். அது, அவன் போக்கையே மாத்திப்புடும்… அது தப்புள்ள செல்லம்…
“வயசான நாங்க, பேர பிள்ளைங்க மேல காட்டற பரிவும், பாசமும் அவங்க நல்லா வாழ்றதுக்குத்தானம்மா… நாங்க காட்டற பாசம் அந்தப் பிள்ளைங்களோட வாழ்க்கைக்கே பாதகமா அமைஞ்சுடக் கூடாதில்லியா..?. நேத்து, வாசலில் பஞ்சுமிட்டாய் வாங்கிச் சாப்பிடக் கூடாதுன்னு அகிலா, காசு கொடுக்க மாட்டேனுட்டா. அப்பத்தாகிட்டே வாங்கிடலாம்ன்னு ஏங்கிட்டே ஓடி வந்தான்.
“நான் காசு கொடுத்தா… அது, அவனைக் கெடுக்கற மாதிரி தானே. நல்லதைப் பெத்தவங்க எடுத்துச் சொல்லும் போது, நாம் குறுக்கிடாம, அமைதியாக இருக்கிறது தான் நல்லது. உண்மையான அக்கறையோடு கண்டிக்கிற உரிமை, பெத்தவங்களுக்கு மட்டும் தான் இருக்கு.
“அதிலே மூணாவது மனுஷங்க, தலையீடு இருக்கக் கூடாது. அன்பையும், பாசத்தையும் காட்ட வேண்டிய நேரத்தில தான் காட்டணும். என் பேரனை நல்வழிபடுத்தணும்ன்னு தானே எம்மவன் கண்டிக்கிறான்னு, என்னோட மனசைக் கல்லாக்கிக்கிட்டு அப்படியே ஒக்காந்திருந்தேன்… என்னத்தச் செய்யச் சொல்ற….நிச்சயம் இனிமே அந்த மாதிரி தப்ப எம் பேரன் செய்ய மாட்டான். அவன் நல்லவனா, வல்லவனா வளரணும் செல்லம். அதுதான் இந்தக் கெளவியோட ஆசை….” என்று கண்கலங்கினாள் தேனம்மை.
“என்னவோ போங்கம்மா… நீங்க சொல்றது எனக்கு வெளங்கலை. ஆனா நீங்க ஒங்க பேரன் மேலே அளவு கடந்த பாசம் வச்சிருக்கிறது மட்டுந்தான் எனக்குப் புரியுது…சரிம்மா நான் வாரேன்.” என்று கூறிவிட்டுச் சென்றாள் செல்லம்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அகிலாவிற்கு கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.. ச்சே அத்தையப் போயி நாம தப்பா நெனச்சுட்டமே… எவ்வளவு நல்லதச் செஞ்சுருக்காங்க… கொஞ்ச நேரக் கொளப்பத்துல எப்படியெல்லாமோ அத்தையப் பத்தி தப்பா நெனச்சிட்டேனே… என்று மனதில் பலவாறான எண்ணங்களோடு, செல்லம் வீட்டைவிட்டு வெளியேறியவுடன், தெளிந்த மனதுடன் வந்த அகிலா…..”அத்தை… எழுந்திருங்க. வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம்… மணியாச்சு. சாயந்திரம் ஒங்க பேரன் வந்ததும் கூட்டிட்டு, கோவிலுக்குப் போய்ட்டு வாங்க, ஒங்க மனசு சரியாயிடும்.” என்று உண்மையான பாசத்துடன் மாமியாரை அழைத்தாள்.
பக்கத்து வீட்டிலிருந்து, “இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது சேரிக்கும் இன்பம் திரும்புமடி….” என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் காற்றில் மிதந்து வந்தது.