அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை தியாகராய நகர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கடுமையான வெயிலைக்கூடச் சிறிதும் பொருட்படுத்தாமல் நகரம் நகர்ந்து கொண்டு இருக்கத் தனது பயணத்திற்குத் தேவைப்படும் சில முக்கியமான பொருட்களைக்
கடைகளில் பார்த்து வாங்கிக் கொண்டிருந்தான் கண்ணப்பன். கண்ணப்பனின் தந்தை சிறந்த சிவபக்தர். அதிலும் பெரியபுராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் மீது மிகுந்த பக்தி கொண்டவர். கண்ணப்ப நாயனார் மீது கொண்ட அதீதமான பற்றால் இவனுக்குக் கண்ணப்பன் என்று பெயர் வைத்தார்.
கண்ணப்பன் சென்னையில் புகழ்பெற்ற கணிணி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறான். அவன் பணியாற்றும் நிறுவனம் கணிணித் துறையில் பல புதுமைகளைப் புகுத்துவதற்கு முனைந்திருந்தது. அதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் இருக்கும் கணிணி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கும், அவற்றைப் பார்வையிட்டு அவற்றின் செயல்திறன்களை அறியும் பொருட்டும் திறமை வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிக் கொண்டிருந்தது. அந்த வகையில்தான் கண்ணப்பனும் வடமாநிலங்களில் உள்ள கணிணி நிறுவனங்களைப் பார்வையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான்.
அதன் காரணமாக ஆறு மாத வட மாநிலச் சுற்றுப் பயணத்திற்குத் தயாராகி விட்டான். தனது நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தான். பணியில் சேர்ந்த பின்னர் கிடைத்த முதல் வெளிமாநிலப் பயணம் என்பதால் அப்பா அம்மா தங்கை என குடும்பமே ரயில் நிலையம் வரை வந்து டெல்லி செல்லும் விரைவு ரயிலில் ஏற்றிவிட்டுக் கை அசைத்து வழி அனுப்பியது.
கண்ணப்பனின் அம்மா தன் முந்தானையால் கலங்கிய கண்களை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். கண்ணப்பனுக்குத் தங்கையின் பிரிவு இதுவரை இல்லாத பாசத்தை அடிமனதில் ஆழ்த்தி எடுத்தது. காரணமின்றி அவன் மனது தவித்து கொண்டிருந்தது.
ரயில் விரைந்து கொண்டிருப்பதைப் போன்றே இவனது மனமும் நினைவுச் சுழல்களில் விரைந்து கொண்டிருந்தது. நள்ளிரவில் பயணம் தொடங்கியது. உறங்க நினைத்தான் கண்ணப்பன். உறக்கம் பிடிக்கவில்லை இரவு நீண்டு கொண்டே இருந்தது. அவனுள் ஏதேதோ எண்ண ஓட்டங்கள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தன.
எங்கோ கிராமத்தில் பிறந்து, படித்துப் பட்டம் பெற்று புகழ் பெற்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்து கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்து நகரத்திற்கு வந்து தங்கி இன்று தலைநகர் நோக்கி ரயிலில் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்ற தன்நிலையை நினைத்துப் பார்த்துப் பெருமூச்சுவிட்டான் கண்ணப்பன். பயணம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. எதையாவது அடைய வேண்டும் என்று நினைத்து மனிதன் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்றான்.
“பயணம் என்பது வாழ்கையில் நடக்கும் ஒரு அற்புதம். ஒவ்வொரு பயணத்திற்கும் பின்னால் ஒரு அர்த்தம் உண்டு. ஒரே இடத்திற்குச் செல்லும் போது ஒரு மனநிலையும், திரும்பும்போது வேறு மனநிலையையும் பயணம் நமக்கு உணர்த்தும். சில நேரங்களில் அது இனிமையானவையாக, எதிர்பார்ப்பு கொண்டவையாக, இன்னும் சில நேரங்களில் ஏமாற்றமும் வலியும் கொண்டவையாக அமைந்து விடுவதுண்டு” என்று நினைத்துக் கொண்டே உறங்கிவிட்டான்.
ரயில் பல இடங்களில் நின்று நின்று சென்று கொண்டே இருந்தது. இரண்டு நாள்கள் கடந்த பின்னர் மூன்றாம் நாள் காலையில் டெல்லி நிலையத்தை அடைந்தது. சில்லென்று காலை காற்று வீச நாட்டின் தலைநகரத்தில் கால்த்தடம் பதித்தான் கண்ணப்பன். அவனை வரவேற்க முன்னிரவே மழை, மண்ணை குளிர்ச்சி ஆக்கி வைத்திருந்தது. புதிய மண்ணின் காற்றை சுவாசித்தபடி புது உலகைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான். புதிய மக்கள், காற்று, மொழி என அனைத்தும் புதியதாய் அவனுக்குத் தெரிந்தது.
டெல்லி அலுவலகத்தின் உதவியுடன் தனக்கு என்று ஒதுக்கி இருந்த விருந்தினர் மாளிகையைக் கண்ணப்பன் அடைந்தான். பயணக் களைப்பு மிகுதியால் நெடுநேரம் உறங்கி விட்டான். மாலையில் கண்விழித்து, மேசையில் இருந்த காபி மேக்கரில் காபி போட்டுத் தனது மடிக்கணிணியைத் திறந்து முகநூலைப் பார்க்கத் தொடங்கினான். தனது நண்பர்களிடம் இருந்து வந்த வாழ்த்துத் தகவல்களை பார்த்தபடி அன்றையப் பொழுதைக் கடத்தினான். மறுநாள் முதல் தனக்கென ஒதுக்கப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்று தனது பணியைத் தொடங்கினான்.
நாட்கள் நகர்ந்தன.
ஒரு வார விடுமுறை நாளில் தாஜ்மகாலைப் பார்க்கச் சென்றிருந்தான். தாஜ்மகாலைப் பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தான் கண்ணப்பன். அப்போது பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகளில் ஒன்று அவனை நோக்கித் தரையில் நடந்து வருவதுபோல நெற்றியில் சின்னதாய் திருநீறணிந்து, கன்னத்தில் அழகாய் மை வைத்துக் கொண்டு, “என்னப் பிடிக்க முடியாதே….” எனத் தன் மழலை கொஞ்சும் குரலில் கத்தியபடி புன்னகைத்துக் கொண்டே ஒரு அழகிய பெண் குழந்தை அவனை நோக்கி ஓடி வருவதைத் தன் காமிராவின் கண்களால் பார்த்தான் .
ஓடிவரும் அந்தக் குழந்தையைப் பார்த்த மறுகணமே கண்ணப்பனுக்குத் தெரிந்துவிட்டது. அது யாரோ தமிழ்க் குடும்பத்தின் குழந்தை என்று. அவன் குனிந்து தன்னை நோக்கி ஓடிவந்த குழந்தையை…. “யாருடா செல்லம் நீங்க….” என்று கேட்டவாறு தூக்கினான்.
அப்போது அங்கு, “பாரதி….! எங்கடி ஓடுற…., நில்லுடி….” எனச் சொல்லிக் கொண்டே குழந்தையின் தாய் தேன்மொழி பின்னால் ஓடிவந்தாள். குழந்தையைக் கண்ணப்பன் கையில் பார்த்த அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டாள் தேன்மொழி. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு அவளுக்குச் சில வினாடிகள் தேவைப்பட்டது.
பின்னர் சுதாரித்துக் கொண்டு, “கண்ணப்பா….. நீ….. எப்படி… இங்க…” என வார்த்தைகள் தடுமாற, உதடுகள் நடுங்கக் கேட்டாள் தேன்மொழி. வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று கண்ணப்பன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தான் விரும்பிய பெண்ணின் குழந்தை தன் கையில் இருக்கத் தன்னவளை மீண்டும் சந்திப்போம் என்று நினைத்திராத கண்ணப்பன்……தான் காண்பது கனவா…? அல்லது நனவா…?என்று திகைத்துப் போய் நின்றிருந்தான். பின்னர் ஓரளவிற்குத் தன்னைச் சமாளித்துச் கொண்டு தேன்மொழி….. நீ…. எப்படி.., இந்த…. குழந்தை …..”எனத் தயங்கித் தயங்கிக் கேட்டான்.
இருவரும் அருகில் உள்ள ஒரு சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று அமர்ந்தார்கள். குழந்தை கண்ணப்பனிடம் ஒட்டிக் கொண்டது. அவனிடம் ஏதோ மழலைப் பேச்சை பேசியபடி அவன் கன்னங்களைக் கிள்ளிச் சிரித்து கொண்டிருந்தது. இருவருக்கும் இடையில் என்ன பேசுவதெனத் தோன்றாமல் மெளனம் திரையிட்டது. ஒருவழியாக மெதுவாக மௌனத்தை உடைத்துப் பேசத் தொடங்கினாள் தேன்மொழி.
“திருமணத்திற்குப் பிறகு தன் கணவருக்கு டெல்லியில் உள்ள பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் உயரதிகாரியாக வேலை கிடைத்துவிட்டது. அதன் பிறகு அவரது சொந்த ஊரான சென்னையிலிருந்து இங்கு வந்து தங்கிவிட்டோம். இதோ இவதான் எங்க உலகம்….. வாழ்க்கை எப்படியோ போகுது…” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்ட கண்ணப்பன் ஏதும் பேசவில்லை.
சிறிது நேரத்தில் காபி மேசைக்கு வந்தது. காபியைக் கலக்கியபடி பேசத் தொடங்கினான் கண்ணப்பன். “நான் சென்னைல தான் இருக்கேன் தேன்மொழி…. இப்போ ஆறு மாசம் ஒரு ப்ரொஜெட் விஷயமா இங்க வந்திருக்கேன்…” என்றான்.
அதனைக் கேட்ட தேன்மொழி, “அவரு ஆபீஸ்ல இன்னக்கி முக்கியமான மீட்டிங்… சரி இப்படியே போயி தாஜ்மாகலைப் பார்த்துட்டு வருவோம்னு வந்தேன்….இதே டெல்லியிலதான் நான் இருக்கேன்…சரி…சரி… இவங்க அப்பா இப்ப மீட்டிங் முடிஞ்சி வர்ற நேரம்…நான் போகணும்… அவர் வர்றபோது நாங்க வீட்ல இல்லனா வருத்தப்படுவாரு… அதனால….. நான் கெளம்பணும் கண்ணப்பா. இந்தா இதுதான் என்னோட முகவரி. முடிஞ்சா மீண்டும் பாக்கலாம்…” என்று கூறி விடைபெற்றாள்.
அவள் சென்ற பிறகும் அவளைச் சந்தித்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தான் கண்ணப்பன்.
சிற்றுண்டிச்சாலையில் இருந்து வீட்டுக்குக் காரில் புறப்பட்டான் கண்ணப்பன். அந்தக் காரின் சக்கரத்தை விட அவன் மனம் பின்னோக்கி வேகமாய் ஓடிக்கொண்டு இருந்தது. தான் தங்கி இருந்த வீட்டை அடைந்த உடனேயே அவன் தனது நாட்குறிப்பை எடுத்துப் புரட்டினான் கண்ணப்பன். அவன் நாட்குறிப்பு எழுதுவதை விட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை அவன் நாட்குறிப்பில் அனைத்துப் பக்கங்களிலும் தேன்மொழியின் பெயர்தான். மெதுவாக அந்த எழுத்துகளின் மேல் தன் விரல்களை வைத்துக் கண்ணப்பன் தடவிப் பார்த்தான். அவனது கண்கள் கலங்கியது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவன் தேன்மொழியை முதல் முதலில் பார்த்தது ஒரு பறவைகள் சரணாலயத்தில் தான். காலச் சுழற்சியில் இருவருக்கும் நட்பு மலர்ந்தது, பின்பு கனிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் ஒருதலையாய்க் காதலித்துக் கொண்டிருந்தார்கள், மற்றொருவருக்குத் தெரியாமல். வெளியில் இருந்து பார்ப்பவருக்கு இருவருக்கும் உள்ளது நட்பு மட்டுமே. ஆனால் இருவருக்கும் தனித்தனியாய் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத பாசமும் அக்கறையும் வைத்திருந்தனர். ஒரு நாள் கூட அவர்கள் பேசாமல் இருந்ததில்லை. அவர்களால் பேசாமல் இருக்கவும் இயலவில்லை.
ஒரு முறை கண்ணப்பன் தன்னுடைய பணியின் காரணமாக வெளியூர் சென்றிருந்தான். அங்கிருந்து தேன்மொழிக்கு, “தனது பணிகளை முடித்து விட்டதாகவும். அவன் தங்கி இருக்கும் இடத்தில இருந்து இரவு இரயிலில் புறப்படும் மறுநாள் விடியற்காலை இரயில் நிலையத்தில் நான்கு மணிக்குச் சென்னை செல்லும் இரயிலைப் பிடிக்கணும் ஆனா எப்படி எந்திரிக்கப் போறேனோ தெரியல, தூங்கிடுவேன் அவ்வளவுதான்…” என்றான்.
அதற்கு அவள், “அலாரம் வைச்சிக்கிட்டுத் தூங்கு” என்றாள்.
“அலாரம் வச்சிரலாம் ஆனா, அலாரச் சத்தம் என்னக்கி என் காதுல விழுந்துருக்கு…” என்று அவளிடம் சொல்லிச் சிரித்தான் கண்ணப்பன்.
மறுநாள் சரியாக 3.00 மணிக்குத் தேன்மொழியிடம் இருந்து அழைப்பு வந்தது. அலாரச் சத்தம் கேட்காத கண்ணப்பபனுக்கு, அத்தனை இரைச்சலுக்கு நடுவிலும் தேன்மொழியின் ரிங்டோன் மட்டும் புல்லாங்குழல் இசை போலக் கேட்டது. உடனே தூக்கத்தில் இருந்து விழித்து,
“ என்ன இந்த நேரத்துல கூப்பிடுற, ஏதேனும் பிரச்சனையா…?” என்றான்.
அதற்கு தேன்மொழி, “லூசு நீ தான சொன்ன, மூணு மணிக்கு எந்திரிக்கணும்னு அதான் போன் பண்ணேன்….” என்றாள்.
அவனுக்காக அவள் விழித்திருந்தது அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுக்காக அவள் விழித்திருந்ததை அவள் ரசித்திருந்தாள். இப்படிப் பலமுறை ஒருவர் மேல் ஒருவர் அன்பு காட்டித் தங்களின் அக்கறையையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
ஒரு சமயம் கண்ணப்பன் பலமுறை அழைத்தும் தேன்மொழியிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. கண்ணப்பனுக்குக் கோபங் கோபமாய் வந்தது. இனி அவள் கூப்பிடும் வரை அவளுடன் பேசப்போவதில்லை என்று தனக்கு தானே கூறிக் கொண்டான். மாலையில் தேன்மொழியிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. பேசக்கூடாது என்ற வீம்பு அவள் பெயரைப் பார்த்த மறுநொடியில் தகர்ந்துவிட்டது.
தேய்ந்துபோன குரலில் தேன்மொழி பேசினாள். காலையில் இருந்து உடல் நிலை சரியில்லை என்றும், தனக்குத் தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டதைப் பற்றியும் அழுது கொண்டே சொன்னாள்.
கண்ணப்பனுக்குப் புரியவில்லை. ஒரு பெண் தன் உடல் உபாதைகளை இந்த அளவிற்கு ஏன் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்? என்று. அவன் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம் என்று அவனுக்கு மெதுவாய்த்தான் விளங்கியது. அன்று முதல் அவன் இன்னும் அவளை அதிகமாய் நேசிக்கத் தொடங்கினான்.
இப்படிப் பல சந்தர்ப்பங்களில் தனக்கும் தேன்மொழிக்கும் ஏற்பட்ட பல நிகழ்வுகளை அந்த நாட்குறிப்பின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்க, டைரியில் அவன் கடைசியாய் எழுதின பக்கங்கள் வந்தன. தேன்மொழியும் கண்ணப்பனும் கடைசியாய்ப் பேசிக்கொண்ட தருணங்களின் மிஞ்சி இருக்கும் சாட்சி அந்த நாட்குறிப்பில் உள்ள எழுத்துகள் மட்டுமே.
“எனக்கு… வீட்ல…. மாப்பிள்ளை பாக்கத் தொடங்கிட்டாங்க….” என அடிக்கடி கண்ணப்பனிடம் தேன்மொழி சொல்லத் தொடங்கினாள். கண்ணப்பனுக்கு அதன் பொருள் அப்போது புரியவில்லை. ஒரு வேளை, நாம் வெறும் நண்பர்கள் தான் எனத் தேன்மொழி நினைவு படுத்துகிறாளோ? எனத் தன்னையே கண்ணப்பன் பலமுறை கேட்டுக் கொண்டான்.
இந்நிலையில் ஒரு நாள் திடீர் என்று “நான் மாப்பிள்ளை பாக்கச் சம்மதம்னு சொல்லிட்டேன்…” என்றாள் தேன்மொழி.
கண்ணப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
இத்தனை நாள் இது காதல் என்று எண்ணிக் கொண்டு இருந்தவனுக்கு, இது வெறும் நட்பு மட்டும்தான் என அவள் சொன்னதுபோல் இருந்தது. தேன்மொழிக்குத் தன்னைப் போல் எந்த எண்ணமும் இல்லையோ என யோசிக்கத் தொடங்கினான் கண்ணப்பன்.
தேன்மொழியோ, கண்ணப்பனிடம் இருந்து என்ன பதில் வரும் எனக் காத்துக் கிடந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் காயபடுத்திவிடக் கூடாது என்று எண்ணித் தங்கள் ஆசைகளையும், கனவுகளையும் இறுதிவரை பகிர்ந்து கொள்ளவே இல்லை.
தேன்மொழி தன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள், ஜாதகம் வந்தது என்று சொல்லும் போதெல்லாம் அவன் அணுஅணுவாய்த் துடித்துக் கொண்டு இருந்தான். இறுதியாய் ஒருநாள் தன் திருமணம் முடிவாகிவிட்டது எனச் சொன்னாள் தேன்மொழி.
இருவருக்கிடையிலான தொலைபேசித் தொடர்பு சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. இறுதியாக அந்த நாளும் வந்தது. தேன்மொழியின் திருமணத்துக்கு வண்ணத்துப் பூச்சிகள் நான்கு சட்டத்துக்குள் அடைபட்டுக் கிடப்பது போல ஒரு பரிசைக் கொடுத்துவிட்டு, கடைசியாய் அவளைப் பார்த்தவாறு வெளியே வந்தான். அதன் பிறகு அவன் அவளைப் பார்க்கவும் இல்லை, அந்த நாட்குறிப்பைத் தொடவும் இல்லை.
அன்று முதல் கண்ணப்பன் தேன்மொழியின் வாழ்கையில் இருந்து காணாமல் போனான். கண்ணப்பன் என்ற பெயர் வைத்த பெயர் ராசியோ என்னமோ, இவன் ஆசையும் நிறைவேறாமலே போனது. இந்தப் பயணத்தை துவங்கும்போது ஏதோ இந்த நாட்குறிப்பைத் தன்னுடன் எடுத்துக் கொண்டுபோக வேண்டும் என்று உள் மனதில் எண்ணம் வந்தது. அதன் அர்த்தம் இப்போது அவனுக்கு விளங்கியது.
நாட்கள் ஓடின. ஒருநாள் கண்ணப்பனின் கைபேசிக்கு அழைப்பு வந்தது. புதிதாக அழைப்பு வந்ததைப் பார்த்து அதனை எடுத்தான். அது தேன்மொழியின் அழைப்பாக இருந்ததை நினைத்து மகிழ்ந்தான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பேசத் தொடங்கினர். நான்கு ஆண்டுகளில் இருவரிடமும் பல மாற்றங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து இருந்தனர். இருவரின் வார்த்தைகளிலும் முதிர்ச்சி தெரிந்தது. பல விஷயங்களைப் பேசிக் கொண்டனர். நான்கு ஆண்டு இடைவெளி குறைந்தது.
ஒருநாள் தன் மகள் பாரதியின் பிறந்த நாள் விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். முதல் முறையாகத் தேன்மொழியின் வீட்டிற்குச் சென்றான் கண்ணப்பன். அங்கு தேன்மொழியின் கணவரின் அறிமுகம் கிடைத்தது. தேன்மொழியின் கணவருக்கும் கண்ணப்பனைப் பிடித்துவிட்டது. இருவரிடையேயும் நட்பு முகிழ்த்தது.
அவனது நிறுவனத் தொடர்பான திட்டங்களுக்குத் தேன்மொழியின் கணவர் நன்கு உதவினார். அவரது கள்ளமில்லா அன்பு அவனை மிகவும் ஈர்த்தது. இப்படிப்பட்ட நல்லவர் தேன்மொழிக்குக் கணவராகக் கிடைத்ததற்காக அவன் இறைவனுக்கு மனதார நன்றிகளைக் கூறிக்கொண்டான். அதன் பிறகு அவ்வப்போது கண்ணப்பன் தேன்மொழியின் வீட்டிற்குப் போகத் தொடங்கினான். அவர்கள் குடும்பத்தில் நெருக்கம் ஆனான். குறிப்பாகத் தேன்மொழியின் குழந்தை பாரதியுடன் அவனுக்குப் பிணைப்பு அதிகம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் தேன்மொழியின் குழந்தைக் கண்ணப்பனை விட்டுப் பிரியாத அளவுக்கு அதிகம் இணக்கமாகிவிட்டது. எங்கு சென்றாலும் கண்ணப்பனின் கையைப் பிடித்து நடக்க ஆசைப்பட்டது. தேன்மொழியைப் போலவே அவள் குழந்தையும் அவனைக் “கண்ணப்பா….கண்ணப்பா” என மழலைக் குரலில் அழைப்பதை அவன் விரும்பினான். அவள் அழைப்பதை ரசித்தான். இப்படியே நாட்கள் ஓடின. கண்ணப்பனின் பயணமும் முடிவு பெறும் தருணமும் வந்தது.
மறுநாள் காலை அவன் சென்னைக்குப் புறப்படத் தயாராக இருந்தான். அன்று இரவு அவனுக்கு இந்திராவின் வீட்டில் அவள் கைகளால் சமைத்த விருந்து. கண்ணப்பன் சாப்பாடு முடித்துவிட்டு நள்ளிரவில் தன் வீட்டை அடைந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நாட்குறிப்பை எடுத்து எழுதத் தொடங்கினான்.
மறுநாள் விடியற்காலை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். பிரியாவிடை கொடுக்கத் தேன்மொழி தன் குடும்பத்தோடு டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். தேன்மொழியின் கணவன் மீண்டும் வந்தால் வேறெங்கும் தங்கக் கூடாது என்றும் தங்கள் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றும் கூறினார். தாங்கள் சென்னை வரும்போது கண்ணப்பனின் வீட்டிற்கு வருவதாகக் கூறினார்.
அதோடு மட்டுமல்லாது கண்ணப்பனுக்குப் பழங்கள் வாங்குவதற்காக அருகிலிருந்த பழக்கடைக்குச் சென்றார். தேன்மொழியின் கைகளில் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தையை வாங்கித் தான் தோள்களில் போட்டுக் குழந்தையின் கூந்தலை வருடிக் கொடுத்தது அவன் விரல்கள்.
கண்ணப்பனைப் பார்த்துத் தேன்மொழி மனச்சுமையுடன் பேசத் தொடங்கினாள். “கண்ணப்பா…. இன்னும் எத்தன நாள் இப்படியே இருப்ப…எனக்கு ஒன்னப் புரிஞ்சிக்க முடியல…நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு புது வாழ்க்கையை வாழத் தொடங்கிரு…உன் திருமண அழைப்பிற்காக நான் காத்திருப்பேன்…நாம ஒருத்தர ஒருத்தர் விரும்பியிருந்தாலும் நம்ம தலையெழுத்து… வெவ்வேற பாதையில பயணிக்க ஆரம்பிச்சிட்டோம்… என்ன செய்யறது… எல்லாம் விதி… ... ஒனக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையணும்னு நான் கடவுளுக்கிட்ட வேண்டிக்கிறேன்… பழையதை நெனச்சிக்கிட்டே இருக்காத… ஒனக்குன்னு நல்ல வாழ்க்கை இருக்கு… நமக்காக இல்லன்னாலும் நம்பள நம்பி இருக்கற மத்தவங்களுக்காக நாம வாழ்ந்துதான் ஆகணும்… நான் சந்தோஷமா இருக்கணும்னா கூடிய சீக்கிரம் ஒன்னக் குடும்பத்தோடு பார்க்கணும்… என்ன புரிஞ்சதா… ஓங்கிட்ட இருந்து அந்த நல்ல செய்திக்காக நாங்க காத்திருப்போம்…” என்றாள்.
கண்ணப்பன் தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான், எனக்கு அன்று புரிந்திருந்தால், இன்று இப்படி நின்று கொண்டிருக்க மாட்டேன் என்று. கண்ணப்பன் எதுவும் கூறாது மௌனமாய்த் தேன்மொழி கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் முகம் இறுகிப் போய்க் கிடந்தது… தன்னுள் ஏற்பட்ட மனச்சுமையை அவன் வெளிக்காட்டவில்லை…தன்னுள்ளேயே அதனை விழுங்கி வைத்தான்…
அதற்குள் தேன்மொழியின் கணவர் வந்து அவனிடம் பழங்கள் அடங்கிய பையைக் கொடுத்து ரயிலில் இதனை உண்ணுமாறு கூறினார். அவரது அன்பைப் பார்த்த கண்ணப்பனின் கண்கள் கலங்கின. அவன் தேன்மொழியின் கணவரைப் பார்த்து, “சார்….ஒங்களோட இந்த அன்பை என்னால என்றைக்கும் மறக்க முடியாது…நீங்க சென்னை வந்தா கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வந்து தங்கணும்… இந்த ஜென்மத்துல ஒங்கள என்னால மறக்க முடியாது… சார்… இறைவனோட அருள் இருந்தா மீண்டும் நாம சந்திப்போம் சார்… போன் பேசுங்க சார்….” என்று கூறிவிட்டு குழந்தை பாரதியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவளைத் தேன்மொழியிடம் கொடுத்துவிட்டுப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த ரயிலில் ஏறி அமர்ந்தான்.
ரயில் நகரத் தொடங்கியது… தேன்மொழி தனது குடும்பத்தோடு கண்ணப்பனுக்குப் பிரியாவிடை கொடுத்தாள். தேன்மொழியின் குழந்தை நிகழ்வது ஏதும் உணராமல் தேன்மொழியின் தோளின் மீது தூங்கிக் கொண்டு இருந்தாள்.
தனிமையில் இருக்க வாய்ப்புக் கிடைக்கும்போதுதான் எல்லாருக்கும் தன்னைப் பற்றி சுய மதிப்பீடு செய்யவும், தான் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கவும் நேரம் கிடைக்கின்றது. தன் கண்களை மூடி நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே கண்ணப்பன் அமர்ந்திருந்தான்.
கண்ணப்பனை வரவேற்கச் சென்னையில் அவன் குடும்பம் தயாரகிக் கொண்டு இருந்தது. ஆறுமாதம் கழித்து வரும் பிள்ளைக்கு எதையெதைச் சமைக்கலாம் என்று யோசித்து யோசித்து அவனுக்குப் பிடிக்கின்ற உணவு வகைகளைச் சமைப்பதற்காகப் பொருள்களைச் சேரிக்கத் தொடங்கினாள் கண்ணப்பனின் அம்மா.
தேன்மொழியின் மனம் எங்கோ பறந்து கொண்டிருந்தது… அவள் சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்க, அவளின் குழந்தை ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் விரல்கள் டிவி ரிமோட் பொத்தானை ஒவ்வொன்றாக அழுத்தி விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் விரல்கள் ரிமோட்டின் வால்யூம் பொத்தானை தொடர்ந்து அழுத்தியதால் டிவியின் சத்தம் சமையலறை வரை கேட்கவே, “ஏய் பாரதி என்னடி பண்ற…” என்று தேன்மொழி கேட்டுக்கொண்டே ஹாலை நோக்கி வந்தாள்.
டிவி ரிமோட்டை எடுத்து வால்யூம்மை குறைக்க முயன்றாள். ஆங்கிலச் செய்திச் சேனலில் டெல்லியில் இருந்து சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தீவிரவாதிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது, ரயில் பெட்டிகள் அனைத்தும் வெடித்துச் சிதறித் தீப்பற்றி எரிந்தன. அதில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளும் இறந்துவிட்டனர் என்ற செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. ரயிலின் தீப்பிடித்த பாகங்கள் கருகிய மனித உடல்கள்…என்று தொலைக்காட்சியில் படங்கள் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ரயிலில் பயணம் செய்தவர்களின் புகைப்படங்களும், அவர்களைப் பற்றிய விபரங்களும் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அதில் கண்ணப்பனின் பெயரையும் படத்தையும் பார்த்தவுடன் தேன்மொழியின் உடலும் விரல்களும் நடுங்கின. அந்நடுக்கத்தில் ரிமோட் நழுவித் தரையில் விழுந்து சிதறியது. தேன்மொழியின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. தேன்மொழி மனதிற்குள் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தாள்.
தேன்மொழியின் கண்ணீரைப் பார்த்த குழந்தை காரணம் புரியாமல் வாய்விட்டுக் கதறி அழத் தொடங்கியது. தேன்மொழியின் வாழ்க்கையில் இருந்து மீண்டும் ஒருமுறை கண்ணப்பன் காணாமல் போனான்.