தொலைக்காட்சிப் பெட்டிக்கான சுவிட்ச்சைப் போட்டவுடன் டுக் டுக் டுக் டுக்….என்ற ட்ரம்செட் பிண்ணனி இசை மற்றும் நான்கு திசைகளிலிருந்து வரும் ஃபோகஸ் லைட் எஃபெக்ட்டுன் ஃபேசன் டிவியில் அலங்கார ஆடை உடுத்திய அழகிகள் ஒய்யாரமாய் ரம்மியமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.
“ச்சீக்கருமம்... திருந்தாத ஜென்மம்… ராத்திரி எதப்பார்த்துட்டு படுத்துருக்கு பாரு... இப்டியிதுன்னா நல்லா இழிச்சுக்குட்டு பாக்குறது...” என்று கணவனைக் கடிந்து கொண்டு இன்றைய ராசிபலன் சொல்லப் போகின்ற சேனலுக்கான நம்பரை அழுத்தினாள் சுந்தரவள்ளி.
காலை எட்டு மணிக்கெல்லாம் அலுவலக வேலைக்காக மதுரைக்கு புறப்படவேண்டும் என்று இரவே அவளுடைய கணவன் சேர சோழ பாண்டியன் சொல்லியிருந்ததால் எப்போதும்போல் இல்லாமல் இன்று நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு சமையலுக்கான பணிகளைத் தொடங்கியிருந்தாள். மதியச் சாப்பாட்டை எங்கு மேய்ந்தாலும் காலையிலும் இரவிலும் வீட்டில்தான் சாப்பிடவேண்டும் என்று அவளே கணவனுக்கு கட்டளை இட்டிருப்பதால், அவன் எத்தனை சீக்கிரமாகக் கிளம்பினாலும் அதற்குள் காலைச் சமையலை முடிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது சுந்தரவள்ளிக்கு.
“என்னங்க எழுந்திரிங்க... மணி ஏழாகப்போகுது...” ஆறு மணி ஆகிவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு சத்தத்தைக் கொடுத்தாள் தூங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து. ஒன்பது மணிக்குத்தான் ஸ்கூல் வேன் வரும் என்பதால் கணவனை அனுப்பிவிட்டு, மகன் பிரசாந்த்தை எட்டு மணிக்கு மேல் எழுப்பினால் போதுமானது.
“யுவர் ஆனர், மூலமே அனைத்து வியாதிகளுக்கும் ஆதிமூலம். மூலம் எனக்கு வந்ததன் மூலம் என் வாழ்க்கையே நிர்மூலம் ஆகிவிட்டது. மூலத்திற்கு உரிய சிகிச்சை எடுப்பதன் மூலமே மூலத்தை விரட்ட முடியும் என்பதை உணர்ந்ததன் மூலம், அதற்கான ஆலோசனையை நண்பர்கள் மூலமாக அறியலாம்” என்று விசாரிக்கத் தொடங்கினேன். ஒருவர் நல்ல உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் மூலத்தை குணப்படுத்தலாம் என்றார். இன்னொருவர் அலோபதி அறுவை சிகிக்சையின் மூலம்தான் மூலத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றார். இன்னொருவர் அக்குபஞ்சர் வைத்தியத்தின் மூலம் எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் மூலத்தைக் குணப்படுத்தலாம் என்றார்.
மூலத்தின் மூலம் கடுமையாக பாதிக்கப்பட்ட இன்னொரு நண்பர் சொன்னார், “எல்லாத்தையும் பாத்தாச்சுங்க... ஒன்னும் சரிப்பட்டு வரல... வைத்தியத்த சொல்லிட்டு, அதச் சாப்பிடாத, இதச் சாப்பிடாதன்னு பத்தியஞ் சொன்னா அதென்ன வைத்தியம்...? தண்ணி அடிக்கக் கூடாது, கோழி சாப்பிடக் கூடாது, அதுஇதுன்னு சொல்லி... ஹீம்... ஏங் கேக்குறீங்க... கட்டுப்பாடாத்தேஞ் சாப்புடுனும்னா கெரகம் அந்த மூலம் இருந்துட்டு போகுது, அதனால என்ன ஆயிரப்போகுது...?” என்று தன்னுடைய அனுபவத்தின் மூலம் அவநம்பிக்கையாகச் சொன்னார்.
இதற்கு நீங்கள் ஒரு வழியைக் காட்டுவதன் மூலமே என் வாழ்க்கை பிரகாசமாகும் யுவர் ஆனர்... முக்கியமான இந்தப் பிரச்சனைக்கு தாங்கள் நதிமூலம் ரிசிமூலம் பார்க்காமல் உடனடியாக தீர்ப்பு வழங்கவேண்டும்” என்று சொல்லவும் தீர்ப்பை ஏழுமணிக்கு ஒத்தி வைப்பதாக குற்றவியல் நடுவர் அவர்கள் சொல்லிவிட்டு பாய் விரித்துப் படுத்துக் கொண்டார். குற்றவியல் நடுவர் அவர்கள் ஏழுமணி என்று சொன்ன அதே நேரத்தில் சுந்தரவள்ளியும் ஏழாகப்போகுது என்று சொல்லவும் கனவு கலைந்து முழிப்பும் தலைவலியும் ஒன்றாக வந்தது சேரசோழபாண்டியனுக்கு.
“தண்ணி வச்சியாடீ...?” என்று கேட்டான் கொட்டாவி விட்டுக்கொண்டே.
“வச்சாச்சு வச்சாச்சு... ராத்திரி எத்தன மணிக்கு தூங்குன...? கண்ட கண்ட கருமாந்தரத்தையெல்லாம் டிவியில பார்த்துக்குட்டு... அதுவும் புள்ளைய பக்கத்துல படுக்க வச்சுக்குட்டு... எத்தனவாட்டி சொன்னாலும் மண்டையில ஏற மாட்டேங்கிது, இதுல குடி வேற, என்னிக்குத்தேன்... திருந்தப்போறியோ தெரியல... ந்தா எந்திரின்னா... மறுபடி போத்திக்கிறதப்பாரு...” போர்த்திய போர்வையை உருவி விட்டாள் சுந்தரவள்ளி.
“மூவீசுலதாண்டி படம் பார்த்துட்டுப் படுத்தேன், விடியறதுக்குள்ள அதே சேனல்ல என்னத்த மாத்துனாங்கன்னு தெரியல...” என்று பொய் சொல்லிவிட்டு மறந்துபோன கனவு குறித்து யோசித்துக் கொண்டே பாத்ரூமிற்குள் நுழைந்து கழிவறையில் அமர்ந்து பின் குளித்துவிட்டு தான் கண்ட கனவின் மூலத்தை அறிந்து கொண்டு வெளியில் வந்தாலும் கனவில் கோர்வையாக நாம் வசனம் பேசிவிட்டோம் என்ற பெருமை பட்டுக் கொண்டான் சேரசோழபாண்டியன்.
“விடிஞ்செந்திருச்சா தலவலி தாங்க முடியல, கைகாலெல்லாங் கொடையுது, வெளிய போகும் போது உசுருஞ் சேர்ந்து போகுது...” என்றான் சேரசோழபாண்டியன் குளித்த தலையை துவட்டிக் கொண்டே...
“ஏஞ்சொல்லமாட்ட, நானும் கல்யாணமான அன்னிக்கிருந்து இன்னிக்கு வரைக்குமே எட்டு வருசமா கத்திப்பாத்துட்டேன்ல, குடிக்காத... குடிக்காத... குடிக்காதன்னு... நீ என்னிக்காச்சுங் கேக்குறையா...? காசுக்கு காசும்போயி, ஒடம்புக்கு ஒடம்புங் கெட்டு... அப்டி என்னதான் இருக்குதோ அந்த கருமாந்தரத்துல...” புலம்பிக் கொண்டே சாப்பாட்டுத் தட்டை வைத்தாள் சுந்தரவள்ளி.
“ந்தா நீ ஆரம்பிக்காத, மனுசங்க ஒடம்புல ஏதாவது கஷ்டம்னு சொன்னா, ஒரு ஆறுதலா... அப்டியா, அது வலிக்குதா...? இது வலிக்குதான்னு, புடுச்சுவிடறத விட்டுப்புட்டு... இப்டியா பொலம்பறது...?” என்று சொன்னவாறு சாப்பாட்டிற்கு அமர்ந்தான்.
“ஒனக்கு புடுச்சுவிடுறதுக்குத்தான எங்கப்பனாத்தா என்னை ஒனக்குக் கட்டி வச்சாங்க...?”
“அப்றமென்ன, எனக்குத் தெரியாதா….குடிக்கக் கூடாதுன்னு, நானும் இன்னிக்கு விட்றலாம் நாளைக்கு விட்றலாம்னு நெனைக்கிறது, ஆனா ஆறு மணிக்கெல்லாம் எப்பேர்ப்பட்ட சபதமும் மறந்துபோயிருது, நான் என்ன செய்யட்டும்... சாம்பார்ல ஏண்டி இவ்ளோ காரம்...? நீ வேற பழி வாங்குறயா...?” என்றான் சாப்பிட்டு முடித்துக் கையைக் கழுவிக் கொண்டே.
“பேச்ச மாத்தாத... ஓங்கூட குடிக்கிற ஆளுக லிஸ்ட்டப் பூராத்தையும் எடுத்து ஒருநாளைக்குப் பஞ்சாயத்தக் கூட்டலன்னா பாரு... என்ன ஒரு அளவு வேணாம்...?” ஆஸ்பத்திரில போய் ஒடம்பக் காட்டுன்னு சொன்னனே, போய் காட்னயா... காட்னயா... நீய்...?” என்றவாறு சாம்பார் கரண்டியை முகத்திற்கு அருகே கொண்டு வந்தாள் சுந்தரவள்ளி.
“காட்டுவோம்டி, பொறு...”
“போனவாரம் எங்கிட்ட என்ன சொன்ன...? அடுத்த வாரத்துலருந்து குடிக்க மாட்டேன்னு சொன்னல்ல...? இன்னிக்கிருந்து குடிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணு, சத்தியம் பண்ணு...?” என்று கோபத்துடன் கையைக் காட்டினாள் சுந்தரவள்ளி.
“ஒலகத்துலேயே ரெண்டே ஜாதிதான், ஒன்னு ஆண் ஜாதி, இன்னொன்னு பெண்ஜாதி, இப்ப நீ எம்பொஞ்ஜாதி... எம்பொஞ்ஜாதி...” என்று கவுண்டமணி ஸ்டைலில் சுந்தரவள்ளியைக் கட்டிப் பிடித்துப் பாடிக் கொண்டே, “பேசாம இரு, இன்னிக்கு... ம்... இன்னிக்கு மதுர போறதால முடியாது, நாளைக்குக் கண்டிப்பா ஆஸ்பத்தரிக்கு போறோம், ஒடம்பக் காட்றோம், சரியா...?” என்றவாறு சுந்தரவள்ளியின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளினான்.
“சொர்க்கத்தை அடைந்து விட்ட புளகாங்கிதத்தோடு அவளும் அவனுடைய கன்னத்தைக் கிள்ளியபடி, “டாக்டருகிட்டப் போப்போற இந்த மொகரக்கட்டைய நாளைக்குப் பாக்கலாம்...” என்று சொல்லவும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் சேரசோழபாண்டியன்.
முதலில் தானும் சேர்ந்து கட்டிப்பிடித்தாலும், “மதுரைக்குப் போகனும்னீங்க...” என்றாள் லேசாகத் தன்னை விடுவித்துக் கொண்டு.
“மதுரையாவது குதுரையாவது...” என்று சொல்லிக் கொண்டே ஆலிங்கனத்தின் இறுக்கத்தை மேலும் கூட்டினான்.
“புள்ள முழிக்கப் போகுதுங்க... குளிச்சு கௌம்புனபின்னால எதுக்குங்க இதெல்லாம்...?” என்றாவாறு மீண்டும், ஆனால் மனமில்லாமல் விடுவிக்க முயன்றாள். அதற்குள் பிரசாந்த் புரண்டு படுக்க இருவரும் திடுக்கிட்டு விலகிக் கொண்டனர்.
“ராத்திரிக்கெல்லாம் தண்ணியப் போட்டுட்டு வாயப் பொளந்து கொரட்ட விட்டுக்குட்டு தூங்குறது, காலையில எந்திருச்சு வீரத்தக் காட்டுறது... இதே பொழப்பாப்போச்சு ஒனக்கு... பேண்ட் சட்டைய மாட்டிட்டுக் கௌம்புற வழியப்பாரு, எல்லாம் ராத்திரிக்கு பாத்துக்கலாம்...” என்று சொல்லிவிட்டு மறுபடியும் குடிக்கக் கூடாது என்பதற்கான அறிவுரைகளை வாரி வழங்கினாள் சுந்தரவள்ளி.
“கட்டிப்புடுச்சா வாங்க போங்கங்குறது, இல்லாட்டி வாயா போயாங்குறது” என்று சிரித்துக்கொண்டே சொன்னவாறு பையை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானான் சேரசோழபாண்டியன்.
“ம்... அது அப்டித்தான், நீ மொதல்ல கௌம்பு...” என்று சினுங்கிக் கொண்டே வழி அனுப்பி வைத்தாள். கணவனின் குடிப்பழக்கத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதில் பெரிய அளவிலான சிரத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது சுந்தரவள்ளிக்கு. பல நேரத்தில் நம்பிக்கை இழந்து விடுவாள். கணவனின் குடிப்பழக்கம் குறித்து தன்னுடைய தந்தை மற்றும் தம்பியிடம் புகார் தெரிவித்திருந்தாள். ஆனால் ஒருநாள் இந்த இருவருடனும் சேர்ந்து குடித்துவிட்டு மூவரும் மதியச் சாப்பாட்டிற்கு இவளிடமே வந்து விட்டார்கள். சுந்தரவள்ளி தம்பியை முறைக்க “ஒன்னுமில்லக்கா...விடுக்கா...” என்ற வார்த்தையை மட்டும் வாயை இளித்துக் கொண்டு திரும்பத்திரும்ப சொன்னானே தவிர வேறு எதுவும் பேசவில்லை அவன். சேரசோழபாண்டியன் கூட பிறந்தவர்களோ சொல்லவே வேண்டாம். கூட்டணி அமைத்தார்கள் என்றால் அவ்வளவுதான், நேரங்காலம் கிடையாது, மட்டையானால்தான் முடிப்பார்கள். தன்னுடைய அம்மா சொல்லிக் கொடுத்தபடி கணவனிடம் “அந்த” நேரங்களில் ஒத்துழையாமை இயக்கத்தைக் கடைபிடித்தால் “போய்க்க... எனக்கென்ன” என்று அவன் அசால்ட்டாக திரும்பப் படுத்துக் கொள்வதால் ஏமாற்றமும் குழப்பமும் சந்தேகமும்தான் மிஞ்சுகிறது. எனவே அது சரிப்பட்டு வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமலேயே வாழ்க்கையை ஓட்டுகிறாள் சுந்தரவள்ளி.
தனியார் பேருந்தை எப்போதும் விரும்ப மாட்டான் சேரசோழபாண்டியன். பேரிரைச்சலோடும் செயற்கையான ஒரு பரபரப்புத் தன்மையோடும் உள்ளார்ந்த மக்கள் சேவையில்லாமல் அவை இயங்கிக் கொண்டிருப்பவை என்று நம்பினான். எனவே முன்பாக கிளம்ப வேண்டிய இரண்டு தனியார் பேருந்துகளையும் போகவிட்டு அடுத்ததாகக் கிளம்பிய அரசு போக்குவரத்துக்கழக பேருந்திலேயே ஏறி முன்னாலிருக்கும் கண்டக்டர் சீட்டின் பின்னால் இருக்கும் சீட்டில் ஏறி அமர்ந்துகொண்டான். இந்த சீட்டில்தான் முப்பரிமாண பார்வை கிடைக்கும். பேருந்து கிளம்பியவுடன் லேசாக கண்ணை மூடினான். மனைவி சுந்தரவள்ளியின் “குடிக்காதே... குடிக்காதே... குடிக்காதே...” என்ற அவலக்குரல் கேட்டது. அவளின் அழகு மிகுந்த முகம் பல பாவங்களைக் காட்டியது, சோகமான முகபாவம் வந்தபோது இவனுக்கு மிகுந்த சங்கடமாகிவிட்டது. கூடவே மகனின் முகமும் வந்து போக, “ச்சீ, இவர்களுக்காகக் கேவலம் இந்தக் குடியை ஏன் விடக்கூடாது...” என்று நினைத்தான். “இப்படித்தான் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நினைக்கிறாய்” என்று எக்காளமிட்டது மனசாட்சி. இன்றிலிருந்து தினமும் குடிப்பதை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்றும் அதன் பின் வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை என்று படிப்படியாகக் குடியை நிறுத்துவது என்று முடிவு செய்துகொண்டே அப்படியே தூங்கிப்போய்விட்டான்.
மதுரை ஆரப்பாளையம் வந்தபின்தான் முழித்தான் சேரசோழபாண்டியன்.
ஆரப்பாளையத்திலிருந்து சொக்கிகுளம் வந்து தன்னுடைய அலுவல் வேலைகளை சிரத்தை எடுத்து எந்தவித தொய்வுமில்லாமல் முடிக்க இரவு மணி ஏழாகிவிட்டது. அதன்பின் அதிகாரிகளிடம் பேசிவிட்டு, சொல்லிவிட்டுக் கிளம்பி மீண்டும் ஆரப்பாளையம் வருவதற்கு எட்டு மணியை நெருங்கிவிட்டது. பழையபடி தேனி செல்வதற்கான அரசுப் பேருந்தைப் பிடித்து கண்டக்டர் சீட்டிற்கு பின்னால் இருக்கும் சீட்டில் அமர்ந்து காலை நீட்டி ஒரு நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் சேரசோழபாண்டியன். பேருந்து கிளம்பி காளவாசல் வந்து மொடக்குச் சாலையில் திரும்பிய போது செல்போனை தன்னிச்சையாக எடுத்து நேரத்தைப் பார்த்தான் சேரசோழபாண்டியன், மணி எட்டே கால். விசுக்கென்று பரபரப்பு தொற்றிக் கொண்டது அவனுக்கு. பேருந்து நேரத்திற்கு போய்ச் சேரவேண்டுமே என்கின்ற இவன் எண்ணத்திற்கேற்ப பேருந்தை அச்சம்பத்து விராட்டிப்பத்து என்று ஓட்டுனர் விரட்டிப் பத்திக் கொண்டிருந்தார். இருந்தாலும் இருப்பு கொள்ள முடியவில்லை இவனுக்கு, தன் மனத்தின் போக்கை அறிந்து டிரைவர் பேருந்தை இயக்கினாலும் குறித்த நேரத்திற்கு சென்றுவிட முடியுமா என்ற சந்தேகம் இவனை பாடாய்ப் படுத்தியது. ஆண்டிபட்டி வந்து சேர மணி ஒன்பதரை ஆகிவிட்டது. ஆண்டிபட்டியில் இறங்கி வேலையை முடித்துவிட்டு அடுத்த பேருந்தில் போகலாம் என்றால் காசு பத்தாது, நூல் பிடித்தாற்போல் சரியாக இருக்கிறது. அப்படியே முன்சீட்டில் முகத்தைச் சாத்திக் கொண்டு கையை பிசைந்தபடி இருந்தான். திடீரென்று வந்த யோசனையில் செல்போனை எடுத்து தன்னுடைய நண்பன் வெங்கடபூபதி நம்பரை அழுத்தினான்.
“டேங் எங்கடா இருக்க….?”
“பெரியகுளத்துல…”
பெரியகொளத்துல என்ன புடுங்குறியா என்று கேட்க நினைத்தாலும் முடியாமல் “சரிப்பா” என்று சொல்லி கட்செய்துவிட்டு அக்கா மகனுக்கு டயல் செய்தான்.
“மாப்ள... எங்கடா இருக்க...”
“தேனில மாமா...” என்று பதில் வரவும் நிம்மதியோடு விசயத்தைச் சொன்னான் சேரசோழபாண்டியன்.
“ஏங்கிட்ட சுத்தமா காசில்ல மாமா...”
“ஒங்கக்காகிட்ட நாஞ்சொன்னேன்னு போய் வாங்கிக்கடா...”
“மாமோவ்... எங்கக்காகிட்ட செருப்படி வாங்கச் சொல்றயா என்னைய...” என்று சொல்லவும் கடும் கோவத்துடன் போனைக் கட் செய்த சேரசோழபாண்டியன், யோசித்தபடியே கண்களை இறுக்க மூடிக் கொண்டான். இருப்பினும் டிரைவரின் வேகம் இவனுக்கு நம்பிக்கை அளித்தவண்ணமே இருந்தது. வண்டி தீயாகப் பறந்து பத்தே நிமிடத்தில் கானாவிலக்கிற்கு வந்து சேர்ந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கானாவிலக்கு ஸ்டாப்பில் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று எட்டிப் பார்த்தான், ஒருவரும் அகப்படவில்லை. போகிறபோக்கில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஸ்டாப்பிலாவது யாராவது தென்படுகிறார்களா என்று இந்த இருட்டு வெளிச்சத்தில் பார்த்தும் ஒரு பயனுமில்லை. “ச்சீ, தேவைப்படும் போது ஒரு நாயும் கண்ணுல மாட்ட மாட்டேங்குது” என்று நொந்து கொண்டான்.
மருத்துவமனை ஸ்டாப் தாண்டி பிராதுகாரன்பட்டி, பிஸ்மிநகர், திருமலாபுரம் விலக்கு, கருவேல்நாயக்கன்பட்டி, கலெக்டர் ஆபீஸ், பங்களாமேடு என பல இடங்கள் தாண்டி தேனி பேருந்து நிலையத்திற்குள் நுழையாமல் முன்புறமுள்ள கார் ஸ்டாண்டில் பேருந்து நிறுத்தப்பட்டபோது மணி ஒன்பது ஐம்பத்து ஆறு ஆகிவிட்டிருந்தது. “சேரசோழபாண்டியா... கடைசி வாய்ப்பு, இன்னும் இரண்டு நிமிடங்கள் உனக்கு கிடைத்திருக்கிறது... வெற்றியா தோல்வியா... இரண்டுமே உள் கையில்...ம்... புறப்படு...” என்று இவனுக்கு ஆணையிட்டது எதுவோ ஒன்று. பேருந்தின் பைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்த தன்னுடைய பேக்குகளை எடுத்துக் கொண்டு எட்டுக்கால் பாய்ச்சலில் பறந்தான் சேரசோழபாண்டியன். அதோ கடை கண்ணுக்குத் தெரிந்து விட்டது, வெளிச்சம் இன்னும் இருந்தது. ஒருவன் கடையின் சட்டரை இழுப்பதற்கான ஆயத்த வேலையில் இருந்தான். அடுத்த விநாடி கடையின் கல்லாவில் அமர்ந்திருந்த ஊழியரிடம் சொல்ல இயலாத உணர மட்டுமே முடிந்த மகிழ்ச்சியுடன் நூறு ரூபாயை நீட்டினான் சேரசோழபாண்டின்.
களிப்புடன் நெப்போலியன் பிர்ஹேன்ஸ் குவார்ட்டரை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரும்பிப் பார்த்தான். அவனுக்கு முன்னால் எவ்வளவு வேகமாக வந்தார்கள் என்று தெரியாது, தான் வந்த பேருந்தின் நடத்துனரும் ஓட்டுனரும் ஆளுக்கொரு குவார்ட்டரை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள் மீதச் சில்லறையை எண்ணியவாறு...