“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்”
என்ற திருப்பாவைப் பாடல் எம்.எல்.வசந்தகுமாரி குரலில் கோவிலில் இருந்து தேனாக ஒலிக்கத் தொடங்கியிருந்தது. மார்கழி மாதக் கடும் பனி. உடம்பெல்லாம் வெடவெட என நடுக்கம் எடுத்தது. படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனம் வரவில்லை. இருந்தாலும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, ஆடைகளை அணிந்து கொண்டான் முத்துராமன். மனைவியைப் படுக்கையில் காணவில்லை. அடுக்களைக்குள் சத்தம் கேட்கின்றது.
மற்றொரு படுக்கையில் அவனுடைய மகள் ஆழ்ந்த உறக்கத்தில். ‘அப்பா! அகதிகள் என்றால் யார்? அவர்கள் எப்படி இருப்பார்கள்?’ என்று நேற்றிரவு மகள் அவனைக் கேட்டிருந்தாள். ஐந்தாம் வகுப்புப் படிக்கின்றாள். படிப்பிலே படு சுட்டி. திடீரென்று கேட்ட வினாவால் திக்குமுக்காடிப் போன முத்துராமன் யோசித்துப் பதில் சொல்வதாகச் சொல்லியிருந்தான். ஆனால் மறந்து போய் விட்டான்.
மனைவி ஆவி பறக்கத் தேநீரை நீட்டுகின்றாள். தேநீரை நின்றபடியே ஒரே மூச்சில் குடித்துவிட்டுக் கிளம்பினான். “சரிம்மா நான் போய்ட்டு வாறேன்.”
கதவைப் பூட்டி விட்டு, மெதுவாகத் திருடனைப் போல, படிகளிலிருந்து இறங்கி சைக்கிளைத் தள்ளிக் கொண்டே இருளில் நடக்கின்றான். வேகவேகமாகச் சென்றால் தெருவில் கிடக்கும் நாய்கள் குரலெடுத்துத் தொல்லைப் படுத்திவிடும். அடுத்த தெருவைத் தாண்டிப்போய் சைக்கிளில் ஏறிச் செல்வது முத்துராமனின் வழக்கமாக இருந்தது.
எதிரே வீடுகளில் தினசரி நாளிதழ்களைப் போட்டுவிட்டு வரும் பழனி, அநேகமான நாட்களில் முத்துராமன் வேலைக்குப் புறப்படும் போது வேலையை முடித்து வீடு வருவான். மாலையில் இவன் வேலை முடிந்து வரும் போது, அவன் மீண்டும் மாலையில் அருகில் உள்ள நகரத் திரையரங்கில் வேலை செய்வதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருப்பான். பழனி முத்துராமனைப் பார்த்து, “முத்துராமன்! ஒரு விஷயம். அடுத்த வாரம் நான் குடும்பத்தோடு கேரளாவுக்குப் போகப்போறேன்” என்றான்.
இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்ட முத்துராமன், “சரி போய்ட்டு வா. ஆமா அங்க எத்தனை நாளு தங்கி இருக்கப் போறீங்க?” என்று பதிலுக்குக் கேட்டான். அதனைக் கேட்ட பழனியோ, “இங்க பாருய்யா. நான் டூரெல்லாம் போகல. அங்கேயே குடியிருக்கப் போறோம். இனி இங்க சுத்தப்படாது...” என்று வெடிகுண்டைத் தூக்கிப் போட்டான்.
திடீரென்று கேட்ட செய்தியால் முத்துராமன் திகைப்படைந்தான். எதுவும் பேசாமலேயே முத்துராமன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அதில் ஏறிச் சென்றான். அவன் மனதில் பற்பல நினைவுகள் பின்னலிட்டன.
எத்தனையோ ஆண்டுகள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இந்த ஊரை விட்டுட்டு எப்படிப் போறது? மழை இல்ல... நிலமெல்லாம் தரிசாகி ரியல் எஸ்டேட் காரங்க கையில போயிடுச்சு. பக்கத்துல இருக்கற டவுனுக்குப் போயித்தான் பொழப்ப நடத்தணும். எப்படித்தான் இருந்தாலும் சொந்த மண்ண விட்டுட்டு எப்படி வேற ஊருக்குப் பொழப்பத் தேடிப் போக முடியும்? பொறந்ததில இருந்து எல்லா உரிமைகளையும் வாழறதுக்கு வசதிகளையும் கொடுத்த ஊர விட்டுட்டு எப்படி வெளிமாநிலத்துக்குக் குடிபெயர முடியும்? மழை இல்ல...விவசாயம் இல்ல... பஞ்சத்தால இருந்த நெலமும் கையவிட்டுப் போயிடுச்சு... மத்தவங்க வேலையத் தேடி மத்த மத்த இடங்களுக்குப் போயிட்டாங்க... இப்படி சொந்த ஊர விட்டுட்டு போக எப்படி அவங்களுக்கு மனசு வந்துச்சு...? என்று பலவாறு எண்ணமிட்டவாறு சைக்கிளை வேகவேமாக மிதித்துக் கொண்டு பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்கிரீன் பிரிண்டிங் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றான்.
முத்துராமன் ஏழு மணிக்குள் கம்பெனிக்கு வேலைக்குப் போய் விடவேண்டும். நாளொன்றுக்கு அவனுக்கு 200 ரூபாய் வருமானமாகக் கிடைத்தது. வேலைக்குச் சென்றால் மட்டுமே கூலி. இல்லையென்றால் இல்லை. இதில் கம்பெனியே சில நாள்கள் வேலை இல்லையென்று கூறி விடுவார்கள். மாதம் சராசரியாக அவனுக்கு 4000 ரூபாய் கிடைத்தது. இந்த நாலாயிரத்துக்குள் அவன் தனது குடும்பத்தை நடத்த வேண்டும். இக்கம்பெனியில் இவன் வேலைக்குச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன.
பல இடங்களில் இவன் வேலை தேடியும் கிடைக்காததால் கிடைத்த இந்த வேலையில் சேர்ந்து வேலை பார்த்தான். வறுமையின் காரணமாக இவனது கல்லூரிப் படிப்புப் பாதியில் நின்றுவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவனுக்கு அப்படி என்ன பெரிதாக வேலை கிடைக்கப் போகிறது. அதனால் வேலை தேடி அலுத்துப் போன அவன் கிடைத்த இந்த வேலையிலேயே ஒட்டிக் கொண்டான்.
சைக்கிளை மிதித்து நேரத்திற்கு வேலை செய்யுமிடத்திற்கு வந்துவிட்டான். வாசலில் கம்பெனி மேலாளர் சுப்பிரமணியனும் மார்க்கெட்டிங் மேலாளர் ஆண்டியப்பனும் சிகரட் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். சிலர் கம்பெனிக்கு வேகவேகமாக வந்து கொண்டிருந்தனர். இக்கம்பெனியில் ஷிப்ட்டு முறையில் பலர் வேலை பார்த்தனர். இரவு பெய்த கடும்பனியானது சூரிய ஒளி பட்டுக் கரைந்து கட்டடத்தின் கூரை மீதிருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. சிகரெட்டைக் கீழே போட்டு காலால் நசுக்கிவிட்டு, சைக்கிளை விட்டு இறங்கிக் கொண்டிருந்த முத்துராமனை நோக்கி விரைந்து வந்தான் சுப்பிரமணியன். செய்ய வேண்டிய வேலைகளை அவனிடம் ஒப்படைத்து விட்டுத் தனது பைக்கில் ஏறிப் போனான். இனி அவனது குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு வரப் பத்து மணியாகும். சுப்பிரமணியன் மிகவும் நல்லவன். அவனது நெடிய தோற்றமும் மென்மையான புன்னகையும் எவரையும் எளிதில் கவர்ந்து விடும்.
இந்த ஸ்கிரீன் பிரிண்டிங் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த பின்னர் பலரும் பலவிதமாக நலம் விசாரித்தனர். வேலை கிடைக்காது திரிந்தபோதும் சாப்பாட்டிற்கு வழியற்றிருந்த போதும் ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் அவனை விசாரித்தனர். இருப்பினும் அவனுக்கு இருந்த கஷ்டம் அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர்களது ஊரின் நிலையே வேறு. அவ்வளவு செழிப்பு. ஒவ்வொரு தெருவும் மக்கள் நிறைந்து காணப்பட்டது. தோட்டமும் தோப்புகள் என எங்கும் வளமையின் ஆட்சி. ஆனால் இன்றோ நிலைமை வேறு. எங்கிருந்தோ கல்குவாரி பெரு முதலாளிகள் வந்து கிராமத்தையே முற்றுகையிட்டனர். எங்கள் ஊரில்தான் நல்ல கிரானைட் கல் கிடைப்பதாக அறிந்து ஒவ்வொரு சிறு விவசாயிடமும் தனித்தனியாக விலை பேசி அவர்கள் கேட்டதற்கும் அதிகமாகவே பணத்தை அள்ளியெறிந்து நன்றாக விளைந்த வயல்களைத் தோண்டியெடுத்து கிரஷர்களை அமைத்துத் தங்களது பணப்பெட்டியை நிரப்பினர்.
வயலைக் கொடுக்காத சிறுவிவசாயிகளை ஆட்களை வைத்து மிரட்டியும் அடித்தும் விற்க வைத்தனர். நிலங்களை விற்றவர்கள் அவர்களிடமே கூலியாட்களாக மாறினார்கள். இருந்த மிச்ச சொச்ச காடு கரைகள் அனைத்தும் ரியல் எஸ்டேட்காரர்களால் கூறு போடப்பட்டன. இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சம் வயல்கள்; காடுகள். அவையும் மழையின்றி வறட்சியால் தரிசாகக் கிடக்கவே மக்கள் வெளியூர்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் வயிற்றுப் பாட்டுக்காக இடம் பெயர்ந்தனர்.
இடம் பெயர்ந்தவர் போக இருக்கின்ற சிலர் போகவும் மனதின்றிச் சோகத்தில் உளம் வெதும்பிக் கிடந்தனர். கிரானைட் முதலாளிகளின் சொந்தமும் பந்தமும் ஊரில் வளைய வந்தனர். ஊரை விட்டுப் போக எத்தனித்தவர்கள் தனித்தனியாகக் கிளம்பத் தொடங்கினர். மொத்தத்தில் ஊரே கொஞ்சங் கொஞ்சமாகக் காலியாகிக் கொண்டிருந்தது.
வாழ வழியற்றவர்களுக்கு உதவும் அரசு எத்தகைய திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை கிரஷர் கூட்டமைப்பினர் மக்களுக்குக் கிட்டாது செய்தனர். என்ன செய்வது. பணம் படைத்தவன் கையில் அனைத்தும் இருந்தன. உயிர் வாழ வேண்டுமெனில் எந்த வேலையாவது செய்தே ஆகவேண்டும்.
பலவிதமாக நினைத்துக் கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையில் ஈடுபட்டான் முத்துராமன். சமீப காலமாக கம்பெனியில் ஏதோ மர்மமான முறையில் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. முப்பது வருடங்களாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கம்பெனியில் ஆறு ஆண்டுகள் முத்துராமன் வேலை செய்து விட்டான். கடந்த மாதம் தொழிற்சாலையில் நீண்ட காலமாக வேலை செய்து வந்த மூன்று பேர் தமது சுய விருப்பத்தின் பேரில் விலகியிருந்தார்கள். அவர்களில் குமாரும் ஒருவன், அவன் முத்துராமனோடு அன்பாகப் பழகுவான். சுறுசுறுப்பானவன். நகைச்சுவைப் பேர்வழி. அவனிடம் ஏன் விலகுகின்றாய் என்று முத்துராமன் மெதுவாகக் கேட்டான். அதற்கு அவன் சம்பளம் போதாது என்றும், சென்னைக்குச் சென்று தள்ளுவண்டியில் காய்கறி வாங்கி விற்கப் போவதாகவும் கூறினான். அவனது பதில் முத்துராமனுக்குத் திருப்தியாக இல்லை. அவனது உள்ளத்தில் சந்தேகத்தைக் கிளப்பியது.
குமாரை என்றுமே மறப்பதற்கில்லை. அவன்தான் முத்துராமனுக்குத் தொழிலைக் கற்றுத் கொடுத்தவன். ‘லேபில்களைத் தரம் பிரிப்பது, மெஷினில் அட்டைகள் வெட்டுவது, உள்ளிட்ட பல வேலைகளை முத்துராமனுக்கு அவன் கற்றுக் கொடுத்தான். வேலைக்குச் சேர்ந்த முதல்நாள், அட்டையில் தாளைப் பசையால் ஒட்டும்போது வந்த எஞ்சிய பசையைத் திரட்டி உருண்டையாக்கி முத்துராமனின் உள்ளங் கைகளில் வைத்தான். ‘என்ன?’ என்றான் முத்துராமன். குமார் சிரித்துக் கொண்டே தனது மூக்கைக் காட்டிவிட்டுப் போனான்.
மூன்று பேருக்கும் கம்பெனி நிர்வாகம் (பிரிவுஉபச்சார விழா) விடை தருவிழா வைத்தது. அவ்விழாவிற்குக் குமார் மட்டுமே வந்திருந்தான். ஏனையோர் ஏனோ வரவில்லை. மேலாளர், “குமார் திறமை வாய்ந்த ஒரு தொழிலாளி; கடமை தவறாதவர்” என்று அவனைப் புகழ்ந்து வாழ்த்தினார். குமார் தனது கையைக் கட்டியபடியே தலை குனிந்து நின்றான். அவனது உதடுகளும் கைகளும் நடுங்கின. முடிவில் அவனது இருபது ஆண்டுப் பணியைப் பாராட்டி, மரத்தாலான அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். இருபது ஆண்டுகளுக்கு ஒரு மரத்தாலான சிற்பம். குமார் அழுதான். அவனது நகைச்சுவை உணர்வும் சுறுசுறுப்பும் மரச் சிற்பத்திற்குள் அடங்கிப் போயிற்று.
அவர்கள் மூவரும் விலகிப் போன அடுத்த வாரமே கம்பெனிக்கு ஒரு பெரிய இயந்திரம் வந்து சேர்ந்தது. அந்த இயந்திரம் சற்றே பழசாகிப் போனது போல இருந்தது. தடித்த ‘கார்ட் போட்’ போன்ற அட்டைகளை விரும்பிய டிசைன்களில் வெட்டுவதற்குரிய இயந்திரம் அது. கூடவே ஆறு பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்கள் பணிக்கு வந்திருந்தனர். இவர்களைப் பார்த்தால் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகத் தெரிந்தனர்.
அவர்களும் முத்துராமனைப் போன்றே அதிகாலையிலேயே கம்பெனிக்கு வந்திருந்தார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேர் தூக்கம் கலையாது படுக்கையை விட்டெழுந்ததும் வீட்டிலிருந்து நேரே இங்கு வந்துவிடுவார்கள். காலைக் கடன்கள் தொடங்கி கேண்டீனில் தேநீர் குடிப்பது வரை எல்லாமே இங்குதான். கழிப்பறையின் உள்ளே இருப்பவர்கள் அவர்கள்தான்.
முத்துராமன் ஒரு கடின உழைப்பாளி. “இரவு ஏழு மணி வரைக்கும்ட ‘ஓவர் டைம்’ செய்ய முடியுமா?” - “மாதக் கடைசி. நிறைய வேலைகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கு. காலையில் விடிந்தவுடன் நாலு மணிக்கு வர முடியுமா?” - “சனிக்கிழமை? ஞாயிற்றுக்கிழமை?” - எல்லா நாள்களிலும் வரமுடியுமா என்று கேட்டால் அவற்றிற்கெல்லாம். “சரி சார் வந்துவிடுகிறேன்” என்றே பதில் கூறுவான். எந்த வேலையைக் கொடுத்தாலும் சலிப்படையாது செய்து முடித்துவிடுவான் முத்துராமன்.
அக்கம்பெனியில் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் முத்துராமனைப் “பணப் பேய்” என்று பட்டப் பெயரிட்டு அழைப்பர். மற்றவர்களுக்கு அவனது நிலைமை எங்கு புரியப்போகிறது.
முத்துராமன் ‘போர்க் லிவரின் உதவியுடன் பேப்பர் உருளைகளை நகர்த்திவிட்டு, நாற்பது கிலோ இருக்கக் கூடிய பேப்பர் உருளையைத் தூக்கி மெஷினில் பொருத்தினான். தொழில் ரீதியாக இருபத்தைந்து கிலோவிற்கு மேல் தூக்கக் கூடாது என்று சட்டத்தை எல்லாம் இங்கே யார் பார்க்கின்றார்கள். எதையும் இங்கு பேசிவிட முடியாது. பேசினால் ஆளை வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள். பேசாமல் அவர்கள் கூறுவதை அப்படியே செய்ய வேண்டும். எதையும் தெரிந்தாற் போன்று காட்டிக் கொள்ளக் கூடாது. அவர்களுக்கு முன்னால் தான் ‘முட்டாள்’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பேப்பர் உருளையை முக்கித் தக்கித் தூக்கி வைத்ததில் முத்துராமனுக்கு மூச்சு வாங்கியது. அவன் உடலை ஆசுவாசப்படுத்தி நிமிர்கையில் ‘விற்பனை மேலாளர்’ ஒரு துண்டுக் காகிதத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். பேப்பரில் ஒரு புது வேலை முளைத்திருந்தது. அதை முதலில் செய்யும்படி கூறினார். அவரும் நல்ல மனிதர்தான். எல்லாரும் தருகின்ற வேலையை மகிழ்ச்சியுடன் ‘ஆம்’ என்று கூறி, மறு பேச்சுப் பேசாமல் கச்சிதமாகச் செய்வதால் முத்துராமனும் அங்கு ‘நல்லவன்’ என்று பேர் எடுக்கின்றான். சிம்மாசனத்தில் ஏறிய பேப்பர் உருளை இறங்கி, இன்னொரு உருளை ஏறியது. முத்துராமனின் மூச்சும்தான்.
இந்தப் பேப்பர் உருளைகளுடன் தினமும் மள்ளுக்கட்டியதில் முத்துராமனுக்கு வயிற்றின் இடது புறத்தில் வலி ஏற்பட்டது. அவனும் டாக்டரிடம் காண்பித்தான். டாக்டரோ நீ ஓய்வெடுத்துக்கொள் என்றார். ஓய்வா…? அவன் ஓய்வெடுத்தால் அவனது குடும்பம் பிச்சையெடுக்க வேண்டியதுதான். அதனால் அவ்வலியைப் பற்றிக் கண்டுகொள்ளாது இருந்தான். நாளடைவில் அவனது பொறுமையைக் கண்ட அவ்வலி தானாகவே ஓடிவிட்டது போலும்.
அவன் விற்பனை மேலாளர் கூறிய வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது, கம்பெனியின் மேலாளர் சுப்பிரமணியன் பதறிக் கொண்டு ஓடி வந்தார்.
“ஏப்பா முத்து இந்த வேலையை ஒன்கிட்ட யாரு கொடுத்தது?” என்று கேட்டார். அதற்கு முத்துராமன், “சார்…சேல்ஸ் மனேஜர் தான் சார்!” என்றான்.
“நான் தந்த வேலை மதியம் பன்னிரண்டு மணிக்குள் குடுத்தாக வேண்டும்” காலை எட்டி வைத்துக் கோபத்துடன் அலுவலக அறைக்குள் சென்றார். அங்கு இரு மேலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுப்பிரமணியன் போன வேகத்தில் திரும்பி வந்தார்.
“முத்து பரவாயில்லை... பரவாயில்லப்பா. சேல்ஸ் மனேஜருடைய வேலையை முதலில் முடிங்க. அவருக்கு இன்றைக்குத்தான் கடைசி நாள்...ம்...ம்... இனிமே அவரு இங்க வேலைக்கு வரமாட்டாரு” என்று சொல்லிவிட்டு மீண்டும் அலுவலக அறையை நோக்கிச் சென்றார். ‘அவருக்கு இன்றைக்குத்தான் இறுதி வேலைநாள்!’ முத்துராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தக் கம்பெனியில் என்னதான் நடக்கின்றது? முத்துராமனுக்கு நடுக்கம் ஏற்பட்டது. அவன் மேலாளர் சுப்பிரமணியன் பின்னாலேயே ஓடினான்.
“சார்...சார்...! என்று அழைத்துக் கொண்டே சென்றவனை, மேலாளர் நின்று என்ன என்பதைப் போல் நிமிர்ந்து பார்த்தார். அவரின் பார்வையிலேயே அதனை உணர்ந்து கொண்ட முத்துராமன், “ஒங்க கிட்ட ஒரு விஷயத்தைப் பத்திப் பேசணும் சார்...” என்று மென்று முழுங்கியவாறு கேட்டான்.
அதற்கு மேலாளர் சுப்பிரமணியன், “என்ன முத்து ஒன்னோட உடம்பெல்லாம் நடுங்குறது மாதிரி தெரியுது... எதை நெனச்சும் பயப்படாதப்பா... இப்பப் போயிட்டு வா. சாப்பாட்டுக்குப் பெறகு பேசுவோம்...என்ன சரிதானே” என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.
மேலாளர் குறிப்பிட்ட நேரம் வரை மனதில் பதட்டத்துடன் காத்திருந்தான் முத்துராமன். சாப்பிட்டவுடன் மேலாளர் முத்துராமனைத் தனது அறைக்கு வருமாறு அழைத்தார். முத்துராமன் வந்தவுடன் தனக்கு முன்னால் கிடந்த நாற்காலியில் அமரும்படி கூறினார். அவன் அமர்ந்தவுடன் அவனுக்கு முன்பாக மேசையின் மீது ஒரு பேப்பரை விரித்து வைத்தார்.
அதில் இன்னும் பத்து நாட்களில் கம்பெனியை மூட இருக்கின்றார்கள் என்ற பயங்கரம் இருந்தது. முத்துராமனின் தலை சுழன்றது. அவன் கீழே விழாதிருக்க மேசையைக் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டான். முப்பது வருடங்கள் ஆட்டம் காணாத தொழிற்சாலையை நம்பி அவன் படிப்பைக் கை விட்டான். இடையில் வேறு எந்தவொரு தொழிலுக்கும் முயற்சி செய்யவுமில்லை. இப்போது எதை வைத்துக் கொண்டு வேலை தேடுவது? படித்த படிப்பெல்லாம் வருஷம் ஒவ்வொன்றாக பின்பக்கமாகக் கழன்று, பட்டமும் அறுந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. கடைசியில் இந்தத் தொழில்தான் மிச்சமாக இருந்தது.
அதன் பின்பு முத்துராமனுக்கு வேலை ஓடவில்லை. அவன் தனது மனைவிக்குக் கைப்பேசி மூலம் தகவலைக் கூறினான். அந்த அதிர்ச்சியில் அவள் பயந்து போனாள்.
கேரளாவில் நல்ல சம்பளம். ரப்பர் எஸ்டேட், காபி, தேயிலை எஸ்டேட்டுகள் அதிகம். அது சார்ந்த தொழிற்சாலைகளும் அங்கு இருக்கின்றன. அதனால் கேரளாவிற்கே சென்று விடலாம். இந்த ஸ்கிரீன் பிரிண்டிங் கம்பெனி அங்கும் இருக்கலாம். அந்தக் கம்பெனிகளுள் ஏதேனும் ஒன்றில்தான் வேலை தேட வேண்டும். நிச்சயம் ஏதாவதொரு வேலை அங்கு கிடைக்கும். இங்கு போன்று அங்கு சம்பளம் குறைவாக இருக்காது. என்று நினைத்துக் கொண்டே வீடு சென்றான் முத்துராமன். தனது நண்பன் பழனி எடுத்த முடிவையே இவனும் எடுக்க விரும்பினான்.
இந்தக் கம்பெனி இருந்ததால் முத்துராமன் இடம் பெயராமல் இருந்தான். ஆனால் இந்தக் கம்பெனியும் தற்போது மூடப்படுவதால் அவனுக்கு ஊரில் இருப்பதற்கே இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது எங்காவது சென்று தன் குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
“எல்லாரும் கேரளாவுக்குப் போறாங்களாம். ஏங்க நாமளும் போவமுங்க. எவ்வளவு காலமா சொந்த ஊருன்னு இந்த ஊருலேயே இருக்குறது. என்ன மிச்சத்தைக் கண்டோம். ஒண்ணும் மிச்சத்தைக் காணல. இங்க இருந்து போனவங்க ஏதாவது கையில காதுல போட்டுருக்காங்க. நமக்கிட்ட என்ன இருக்குது? இந்த குடிசையைத் தவிர வேற ஒண்ணுமில்லை. அதுவும் கிரஷருகாரனுககிட்ட அடமானத்துல இருக்கு...” என்று முத்துராமன் நினைத்ததையே அவனது மனைவியும் வேதனையுடன் கூறிப் புலம்பினாள்.
“இங்க இருக்கற கொஞ்ச நஞ்சச் சொந்தங்கள விட்டுட்டு எப்படிப் போறது? இங்கே இருந்தா ஒண்ணும் பண்ண முடியாது... குவாரிக்குக் கொத்தடிமையா வேலைக்குப் போறதத் தவிர வேறெதச் செய்ய முடியும்... எனக்கு இந்தக் கொத்தடிமைத் தனம் கொஞ்சங்கூடப் பிடிக்கல... கால்வயிறு அரைவயிறு கஞ்சி குடிச்சாலும் சுதந்திரமா இருக்கணும். என்ன... நாம இந்தியாவுல இருக்கற ஒரு மாநிலத்தில தான வாழப்போறம். அதுவும் நம்மளோட நாடுதானே...” என்று மனைவியிடம் சமாதானமாகப் பேசினான் முத்துராமன்.
“அட ஏன் பொலம்புறீங்க... அங்கயும் நம்மளப் போல உள்ளவங்க இருக்காங்கள்ள... அவுகளும் மனுஷங்கதான... இந்தியாங்கறது எல்லாத்துக்கும் பொதுவானதுதான... அப்பறம் எதுக்கு நாம யோசிக்கணும்... நாமளும் நாளுபேரப் போல நல்லா வாரது எப்படி...? வேலை எங்க நல்ல சம்பளத்துல கெடைக்குதோ அங்க போயிற வேண்டியதுதான்... அப்பறம் நாம எதுக்கு யோசிக்கணும்... இருக்கற எல்லாத்தையும் இந்த குவாரிக்காரங்க வந்து வாரிச் சுருட்டீட்டாங்க... இனி இந்த ஊருல பிழைக்கிறதுக்கு என்ன இருக்கு...?” என்று முத்துராமனின் மனைவி தனது மனதில் கிடந்தவற்றைக் கொட்டினாள்.
மாறி மாறி இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொள்வதைப் போன்று பேசிக் கொண்டார்கள். அபிப்பிராயங்களைக் கொட்டினார்கள்.
“இல்ல நாந் தெரியாமத்தான் கேக்குறேன்... நாம பொறந்த இந்த ஊர விட்டிட்டுப் போறதப் பத்தி கொஞ்சங்கூட ஒனக்குக் கவலை இல்லையா?” என்று முத்துராமன் தனது மனைவியைப் பார்த்துக் கேட்டான்.
“பிழைக்கிறதுக்கு வழி இல்லாமப் போச்சு... இருக்கிறது எல்லாம் நம்ம கைவிட்டுப் போயிருச்சு...மிஞ்சுனது நம்மளோட கண்ணீருதான்...இனிமே எளக்கிறதுக்கு நம்மகிட்ட என்ன இருக்குங்குறீக...சொல்லுங்க... வாழ்க்கையத் தேடிக்கிட்டு இனி எங்க போனால்தான் என்ன! போகக்கூடிய இடத்துக்குப் போக வேண்டியதுதான். வேகமும் விவேகமும்தான் இப்ப நமக்குத் தேவை. இப்ப நாம வாழ்வதற்குப் பணம் தான் முக்கியம்... ஒங்க பிரண்டு ஒருத்தரு கேரளாவுல நல்லா இருக்கறதாச் சொன்னீங்கள்ள...அவரோட போன் நம்பரு இருந்தா அவருகிட்டப் பேசி எதாவது ஒதவி கேளுங்க... வழி பெறக்காமலா போயிரும்...” என்று அவள் தெளிவாகக் கூறினாள்.
விதியின் திருப்புமுனையில் அண்டை மாநிலமாகிய கேரளா என்ற எதிர்காலம் முத்துராமனின் கண் முன்னே விரிந்தது. ஏற்கனவே கேரளாவிற்குச் சென்று தங்கி இருக்கும் தனது நண்பனுடன் பேசுவதென முடிவு செய்தான். தன்னிடம் இருக்கும் டைரியை எடுத்து அதில் இருக்கும் தனது நண்பர்களின் தொலைபேசி எண்களைப் பார்க்கத் தொடங்கினான்.
அப்போது பள்ளிக்கூடத்திற்குச் சென்ற அவனது மகள் பவானி அவனது டைரியை எட்டிப் பார்த்துவிட்டுப் போய் ஒளிந்து கொண்டாள். ‘ஓ! என்ன செல்லக்குட்டி நேதிக்கு ஏதோ ஒரு மனிதர்களைப் பற்றிக் பறவையைப் பற்றிக் கேட்டியில்லடா செல்லம்...அப்பா... மறந்தே போய் விட்டேன்.’
“செல்லம் இங்க வந்து அப்பா மடியில ஒக்காருங்க. நான் ஒரு புத்தகம் வச்சிருக்கேன். அதுல அம்முக்குட்டி கேட்ட அகதிகள் பற்றிய தகவல்கள் நெறைய இருக்கு... அதுல அகதிகளப் பத்தி உள்ள செய்திகளை அப்பா சொல்றேன்...” என்றான்.
ஆனால் பாவானியோ, “அப்பா எங்க டீச்சரே அகதிகள் யாருங்கறதப் பத்திச் சொல்லிட்டாங்க... சொந்த நாடு இல்லாம ஊரு இல்லாம தங்கறதுக்கு இடமில்லாம வாழறதுக்கு எந்தவிதமான பிடிமானமும் இல்லாம தான் பிறந்த நாட்டையும் ஊரையும் விட்டுட்டு கண்காணாத நாட்டுலேயோ ஊருலேயோ எதிர்காலத்தப் பத்தி எதுவுந் தெரியாத சூழல்ல யாரு வசிக்கிறாங்களோ அவங்களத்தான் அகதிங்கறாங்களாம்... வெளிநாட்டுல இருந்து நம்ம நாட்டுக்குள்ளாற வந்து முகாம்கள்ள தங்கி இருக்கறாங்கள்ள அவங்க எல்லாம் அகதிங்களாம்...”என்று அவளது டீச்சர் சொல்லிக் கொடுத்தவற்றை அப்படியே அவனிடம் ஒப்பித்தாள். மகளின் நினைவாற்றலைக் கண்டு முத்துராமன் பிரமித்துப் போய்பிட்டான்.
அவனது கண்களில் ஈரம் கசிந்தது. அவன் தன் மகளைப் பார்த்து, “உலகத்தில எல்லாருமே ஒருவிதத்தில அகதிங்கதான்... சில மனிதர்களோட பேராசையாலயும் சுயநல வெறியாலயும் பலபேரு அகதிகளா சொந்த நாட்டுக்குள்ளறேயே வாழ வேண்டியிருக்குது... ஏதிலிகளா பிற நாட்டுக்குள்ளாற போக வேண்டியிருக்கு... எப்பப் பேராசையும் இன, மத, நிற, சாதி, அரசியல் வெறிகளும் சுயநலமும் மனிதனைவிட்டுப் போகுதோ அப்ப அகதின்னு யாரும் உலகத்துல இருக்கமாட்டாங்க... ஒருத்தரோட உரிமையை, சுதந்திரத்த மத்தவங்க பறிக்க மாட்டாங்க... எல்லாரும் அமைதியா அவங்க அவங்க நாட்டுலேயே வாழ்வாங்க... அப்படி இல்லாத போது எல்லா உரிமைகளையும் இழந்து ஏதிலிகளா மனிதர்கள் இருக்கக் கூடியவங்க எந்த நாட்டுலேயும் அகதிங்களாத்தான் வாழ முடியும்... அகதிங்களா யாரும் பிறக்கறது இல்லம்மா... சிலபேருடைய தன்னல வெறியினால, ஆதிக்க வெறியினால உருவாக்கப்படுறாங்கம்மா... ஒரு வகையில பார்த்தா இந்த ஊரச் சார்ந்தவங்களும் நாமும் அகதிங்கதாம்மா...” என்று கூறிக் கொண்டே வழிந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்தபடியே மகளை அணைத்து முத்தமிட்டான்.
பாவனிக்கு அவன் கூறியது ஒன்றும் புரியவில்லை. அவள் அப்பாவின் பிடியிலிருந்து நழுவி துள்ளிக் குதித்தோடினாள். முத்துராமனின் மனதில் எப்போதோ படித்த, “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!” என்ற ஒளவையாரின் பாடல் வரிகள் மின்னலிட்டு மறைந்தன...