எனக்கு எதுவும் தோன்றவில்லை... அந்த இளங்காலைப் பொழுதில் வெகு நேரமாய் எதுவும் தோன்றாதவனாய்ச் சூரியனைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தேன்... அந்தக் காலைப் பொழுதில் காக்கைகள் கரையும் சப்தமும் வீசி அடித்துக் கொண்டிருந்த காற்றின் மென்மையான வருடலும், ஒருவிதப் பரவசமான தனிமை உணர்வினை என்னுள் ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
முன் வெயிலாய் இருந்ததாலும் கார்கால மாதமாய் இருந்ததால் சூரியன் ஒருவிதக் கட்டுப்பாட்டுடன் தனது வெம்மையைப் பரப்பிக் கொண்டிருந்தான். திண்ணையில் ஒரு ஈசி சேரில் சாய்ந்தபடி நான்... எனது வலது கையில் பெரிய மாவு கட்டு... அதன் விளைவு... நான் கல்லூரிக்குப் போகாமல் விடுமுறையில்..! அது என்ன மாவுகட்டுன்னு கேட்கிறீங்களா...? எல்லாம் என்னோட அஜாக்கிரதையால வந்தது... அதை அப்புறம் பாக்கலாம்... மொதல்ல எங்க வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு பாருங்க...
அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருக்க, அம்மா தங்கைக்கு தலை பின்னுவதும், பாதித் தலைப்பின்னலோடு சீப்பை அவள் தலையில் வைத்துவிட்டு அடுப்புக்கு ஓடுவதும்... இட்லியை எடுத்து மாற்றி வைப்பதும் மறு ஈடு ஊற்றுவதும்... தாளித்துச் சூடான சட்னியைப் பாத்திரத்தில் மாற்றி வைத்து விட்டு... டீ போடுவதற்காக வேறு சட்டியை ஏற்றி வைத்துத் தண்ணீர் கொதிக்க வைத்துவிட்டு மீண்டும் தங்கையின் தலை...
இடையே... "ஏம்மா... என் கால் சட்டை எங்கம்மா... எங்கயாச்சும் தூக்கி போட்டுடுவ... ஸ்கூலுக்கு நேரமாச்சும்மா..." என்று என் கடைசி தம்பி உயிர் போறது போன்று கத்தினான்...! அதனைக் கேட்ட அம்மா, “டேய் அந்த பச்ச பீரோல பாருடா மூணாவது தட்டுல...” என்று அம்மா சொல்லி முடிப்பதற்கு முன்னால் பாத்ரூமில் இருந்து அப்பாவின் குரல்..."ஏய்... தேவி சுடுதண்ணி கொண்டு வாயேன்... எவ்ளோ நேரமாச் சொல்லிக்கிட்டே இருக்கேன்... வரவே மாட்டேங்குறியே... எப்பப் பாரு இதே பொளப்புத்தான்... நான் சொல்லி எவ்ளோ நேரமாச்சு…” அப்பா குளிப்பதற்கு வெந்நீர் கேட்டதைச் சுத்தமாய் மறந்து போயிருந்த அம்மா... அப்பாவின் குரலைக் கேட்டு, "கொஞ்ச நேரம் இருங்க இதோ வந்துட்டேன்....” என்று நாக்கை கடித்தவளாய் மீண்டும் அடுக்களைக்குள் ஓடினாள்...! ஒரு அடுப்பில் இட்லி இன்னொரு அடுப்பில் டீப்போட... டீப்பாத்திரத்தை எடுத்து மாற்றி விட்டு... அம்மா பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது...
"ஏம்மா... ஸ்கூலுக்கு நேரமாச்சும்மா... எம்புட்டு நேரம் தலையில் சீப்போட நிக்கிறது..." தங்கையின் இழுவை கலந்த கோபக்குரல்..." அதனைக் கேட்ட அம்மா, “இரும்மா இதோ வந்துடுறேன்...” என்று கூறிவிட்டு, நீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து விட்டு... டீ கலந்து ரெடியாக மூடி வைத்து விட்டு... மீண்டும் தங்கைக்கு தலை பின்னத் தொடங்கினாள்.
"ஆல் இன்டியா ரேடியோ மதுரை வானொலி நிலையம்... நீங்கள் கேட்டவை... நிகழ்ச்சியில்... இடைக்காலத் தமிழ் திரைப்படப்பாடல்கள்" என்று வானொலியில் நிகழ்ச்சி அறிவிப்பாளர் கூறி முடிக்கவும்... “அம்மாவ்வ்… மணி 7:30 ஆயிருச்சு... எனக்கு ஸ்கூல் பஸ் வந்துடும் சாப்பாடு கொடும்மா...” என்று கால்சட்டை போட்ட தம்பி கதிர்வேலு கதறத் தொடங்கினான்...! அதே நேரத்தில் தங்கைக்குச் சடை பின்னி முடித்து விட்டிருந்த அம்மா... அவளைப் பார்த்து ஒரு அதட்டல் போட்டாள் போ...போ...போய்ச் சட்டையை மாட்டிக்கிட்டுச் சீக்கிரம் வா...” என்று சொல்லி விட்டு அடுக்களையில்... புகும் முன்...
"ஏண்டி தேவி நான் ஆபிஸ் போக வேணாமா... சுடுதண்ணி கேட்டு... எவ்ளோ... நேரமாச்சு… அங்கே என்னதான் பண்ணிக்கிட்டிருக்கியோ தெரியல…" என்று கர்ஜித்தார் அப்பா… அவரின் அதட்டலான குரலில் கோபமும் சேர்ந்து இருந்தது... அதனைக் கேட்ட அம்மா, "இதோ வந்துட்டேங்க... அடுப்படியில் இருந்து தண்ணீரைத் தூக்கி கொண்டு போய் அப்பாவிடம் சேர்த்தவள்... “ஏங்க கொஞ்ச நேரம் பொறுத்துக்குறதுக்கு என்னங்க...?” என்று அப்பாவைப் பார்த்துச் செல்லமாய் ஒரு கோபத்தை வீசிவிட்டு... தம்பி தங்கைகளைக் காலை உணவு சாப்பிடச் செய்து... மதிய உணவினை டப்பாவில் கொடுத்து, குடிக்க டீ கொடுத்து... வாசல் வரை வந்து வழியனுப்பி “இங்க பாருங்கப்பா ரெண்டுபேரும் மதியம் மிச்சம் வைக்காம, கீழ கொட்டாம சாப்பிடணும்... ஆமா” என்று ஒரு அன்புக்கட்டளையொன்றைப் பிறப்பித்து விட்டுவரவும்...
அப்பாவின் சட்டை, பெல்ட் தேடும் படலத்துக்கு உதவி... அவருக்கு டிபன் கொடுத்து, டீக்குப் பதிலாக காபி கொடுத்து மாத்திரைகள் எடுத்துக் கொடுத்து... கையில் டிபன் பாக்ஸ் கொடுத்து... விட்டு, “ஏங்க வரும்போது தக்காளி, வெங்காயம் கொஞ்சம் வாங்கிட்டு வாங்க... எல்லாம் தீர்ந்துபோச்சு...” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டு சொன்னவள்... மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள்...
"ஏங்க பைக்ல இருந்து கீழே விழுந்தது அவன் குத்தமா...? ஒரு வார்த்தை நீங்களும் அவன்கிட்ட பேசுறது இல்ல... அவனும் ஒங்ககிட்ட பேசுறது இல்ல... இது நல்லாவா இருக்கு...? வயசுப்புள்ள வீட்டுக்குள்ளயே முடங்கி கிடக்கான்... பாவம்ங்க... சரி சரி... பணம் கொடுத்துட்டுப் போங்க... அவன மதியத்துக்கு மேல டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்..." அதனைக் கேட்ட அப்பா கடுப்பாகப் பணத்தை அம்மாவின் கையில் திணித்துவிட்டுத் தின்ணையில் ஒடுங்கிக் கிடந்த என்னை ஏற இறங்க முறைத்துப் பார்த்துவிட்டு அலுவலகத்துக்குப் போய்விட்டார்.
அவர் போன சிறிது நேரத்தில் அம்மா கையில் டிபனோடு என்னருகில் வந்தாள். ”டேய் தம்பி சாப்பிடுறா...”என்று கூறியபடி... என் அனுமதியின்றி எனக்கு ஊட்டத் தொடங்கினாள். எனது வலது கை மாவுக் கட்டுக்குள் பவ்யமாய் படுத்து இருந்தது...
எனக்கு அழுகை அழுகையாக வந்தது... அம்மா... அம்மா... அம்மா... என்று என் உள் மனம் தேம்பி அழத் தொடங்கியது. அம்மா உனக்குத்தான் எவ்வளவு வேலைகள்...? உனக்கு எவ்வளவு பொறுப்புகள்...? கருவிலே ஒரு பிள்ளையைச் சுமக்கும் பொழுதில் தொடங்கும் உனது கடமைகள் பெரும்பாலும் அடுத்த வயிற்றின் பசியைத்தானே சிந்தித்திருக்கும்.
எப்போதும் தன்னுடைய உள் முனைப்பிலிருந்து பார்க்கும் மனித மனம் பெரும்பாலும் அடுத்தவரின் துன்பங்களைப் பற்றி ஆராய்வதைச் சுகமாய் மறந்து விடுகிறது. அப்படி மறக்கப்படும் ஒரு உயிர்தான் அம்மா...! ஒரு இல்லத்தை நடத்தும் உயர் அலுவலர்... விட்டுக்கொடுக்கும் கருணாமூர்த்தி, வீட்டில் பிள்ளைகளுக்கோ, கணவருக்கோ ஏதேனும் பிரச்சினை அல்லது உடல் நலம் குன்றல் என்றால் வெறித்தனமாய்ப் போராடும் போராளி. எல்லாம் செய்துவிட்டுத் தான் செய்ததில் ஒன்றுமில்லை என்று ஒதுக்கிவிட்டுத் தன் பாசத்தினை எல்லா செயலிலும் காட்டும் தியாகத்தின் மறுஉரு.
எத்தனை நாள்... சாப்பாடு வேண்டாம் என்று தள்ளி விட்டு இருப்பேன்...! என்னா குழம்பு இது...? உப்பு இல்லை உறைப்பு இல்லை என்று வேகமாய் வெளியே போயிருப்பேன்...! உனக்கு என்னாமா தெரியும்? என்று ஏளனமாய்ப் பேசியிருப்பேன்? நான் எனது ஒன்றுக்குமே பிரயோசனமில்லாத பிரச்சினைகளையும் வெட்டி அனுபவத்தையும் அவள் முன் தெனாவட்டாகக் காட்டியிருப்பேன்...! சட்டையில் பட்டன் அறுந்து போய் எவ்ளோ நாளாச்சு... ஏம்மா நீ... பாக்கவே மாட்டியா...? உனக்கு ஒண்ணுமே தெரியலம்மா...? போம்மா... அங்குட்டு என்ற என் அதட்டலுக்கு “ஏம்பா நீ எடுத்து கொடுத்தா தச்சுத் தறப் போறேன்” என்று பொறுமையாகச் சொல்லும் அவளின் பொறுமை... மெல்ல என் உள் மனம் விட்டு வெளியே வந்தேன்... அவள் எனக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்..."ஐய்யையோ... அது என்னாம்மா சிகப்பாய் பெரிய கொப்பளம் மாதிரி மணிக்கட்டில ஏம்மா... தீக்காயமா...?" திடீரென பார்த்தவன்... அதிர்ந்து போய்க் கத்தினேன்... அதனைக் கண்ட அம்மா... “அட அது ஒண்ணுமில்லடா… காலைல அப்பாவுக்கு வெந்நீர் எடுக்கும்போது கொஞ்சூண்டு ஊத்திப்போச்சு... அதனாலதான் இந்தக் கொப்புளம்... வேற ஒண்ணும் இல்லடா... நான் இதக் கவனிக்கல... சரி சரி... நீ சாப்புடு... இதுக்கு மஞ்சள ஒரசிப் போட்டாச் சரியாயிடும்...” என்று சாதாரணமாகக் கூறினாள்.
எனக்குத் தொண்டைக்குழிக்குள் பந்து போன்று ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது போன்று இருந்தது. என்னை அன்போடு பார்த்த அம்மா, “தம்பி மதியம் ஒன்னோட கைக்கட்டைக் கொண்டுபோயி டாக்டர் கிட்ட காட்டணும்... இங்க பாருடா பெரியவனே... ஒனக்குக் கையி நல்லபடியா சேந்துக்கணும்னு அந்த... சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி இருக்கேன்... ஒனக்கு நல்லபடியா எல்லாம் சரியாயிருச்சுன்னா ஒன்னோட கைமாதிரி வெள்ளியில அம்மனுக்குக் கைவாங்கிப் போடணும்... ஆமா ஏண்டா தம்பி அம்மா கூட நீ கோயிலுக்கு வருவேல்ல... இல்ல சாமி, பூதம்னு ஒண்ணுமில்லனு சொல்லி என்கிட்ட வாக்குவாதம் பண்ணுவியா?” அம்மா என்னைப் பார்த்து அப்பாவியாய்க் கேட்டாள்...
அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு அழுகை அழுகையாய் வரவிருந்தது... அதனைப் பொறுத்துக் கொண்டு, “இல்லம்மா... நான் உனக்காக வர்றேன்மா... சத்தியமா வர்ரேம்மா...” என்று கூறினேன்.
எனக்குள் நெஞ்சுடைந்து கண்ணீர் வெளிவர துடித்துக் கொண்டிருந்தது. அம்மாவின் பாசத்துக்கு முன்னால் எனது பகுத்தறிவு சாம்பலாகப் போயிருந்தது. “ஏம்மா நீ கையிக்கு மருந்து போட்டுக்கம்மா... எப்படி செவந்து போச்சு... பாரு... அப்புறம் தண்ணி கோத்துகிட்டு கொப்பளமாயிடும்மா...” எனக்குத் தொண்டை அடைத்தது... முழுமையாக வார்த்தைகள் வெளிவரவில்லை.
அம்மாவின் வேலைகளை அருகிருந்து பார்க்கப் பார்க்க என்னுள் அவளின் உயர்ந்த தியாக உருவை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. “ஏம்மா... எங்களுக்கு எவ்வளவு நாளு பொங்கிப் போட்டுருப்ப... நீ... உன் கிட்ட ஒரு நாளாவது நாங்க... நீ சாப்புட்டியாம்மான்னு கேட்டிருப்போமா...?இல்ல நீ சாப்பிடும்மான்னு ஒரு நாளாச்சும் உன்னைப் பார்த்துச் சொல்லியிருப்பமா...? நீ சமைச்சதைச் சாப்பிட்டு ரொம்ப நல்லா இருக்கும்மான்னு எப்பவாச்சும் சொல்லியிருப்பமா...? ஒரு நாளாச்சும் அம்மா நீ சும்மா இரும்மா நாங்க பாத்திரம் எல்லாம் கழுவித் தர்ரோம்னு சொல்லியிருப்பமா...? மற்றவங்க சொல்றாங்க சொல்லல... நான் உன்னைப் பார்த்துச் சொல்லியிருப்பேனா...?...ம்ம்ம் கூம்... என்னைப் பார்த்து எனக்கேக் கோபமாக வந்தது... அம்மாவ மதிக்கத் தெரியாத என்னெல்லாம் என்னென்னு சொல்லறது... நானே எனக்குக் கேவலமாக் தெரிந்தேன்!
எனக்குள் சுயபச்சாதாபம் பீறிட அம்மாவைப் பார்த்து மெல்ல, “ஏம்மா… நீ சாப்பிடலையாம்மா?” என்று கேட்டேன். நான் கேட்டு முடிக்கவும் அடக்கி வைத்திருந்த என் அழுகை பீறிட்டு வெடித்து வெளியே கிளம்பி வந்தது... அம்மாவை இடது கையால் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து கேவி கேவி அழத் தொடங்கினேன்...
என்னைப் பார்த்த அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் அந்த அரவணைப்பும், ஆதங்கமும் அவளுக்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஆழ்மனம் அதை தேடித்தேடிக் கிடைக்காத பட்சத்தில் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்... அவளின் கண்களும் கலங்க... முந்தானையால் என் கண்ணீரைத் துடைத்து விட்டு...
"ஏம்பா அழறே... சாப்பிடுய்யா... என்னப் பெத்த ராசா நீ அழுகலாமாடா...? நீ எதுக்கும் கலங்கக் கூடாதுப்பா ஒனக்கு அம்மா நான் இருக்கேம்பா... என்னெப் பெத்தாரு...”என்று அவள் என் தலையைக் கோதிவிட்டாள். அவள் பேச்சில் மீண்டும் அவள் எங்கேயோ போய்க் கொண்டிருந்தாள்.
ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது... "அன்னை என்பவள் எப்போதும் யாராலும் வெல்ல முடியாதவள்... எதற்கும் ஈடு இணை இல்லாதவள்... அவள் எப்போதுமே வெல்ல முடியாத அன்பின் அரசி என்று..." என் மனதில், “என்னைச் சுமந்த கடன் பெற்ற கடன் போதாதென்று நான் ஆச்சரியக்குறியாய் நிற்க நீ கேள்விக் குறியாய் நின்று பலரிடம் கடன் பட்டாய்... அம்மா... அடுத்த பிறப்பில் நீ நானாகவும் நான் நீயாகவும் பிறக்க வேண்டும். பட்ட கடனைத் தீர்க்க வேண்டும். அதுவரையில் ஆலயத்தில் எந்தத் தெய்வத்தை ஆராதனை செய்யப் போகிறேன்...?” என்று எப்போதோ நான் படித்த கவிதை வரிகள் மின்னலெனப் பளிச்சிட்டது.
நான் அமைதியாகக் கண்களை மூடி அம்மாவின் அன்பில் மூழ்கிப்போனேன்...