வெளியில் சேரில் இருந்து கொண்டு காலைப்பத்திரிக்கையைப் படித்துக் கொண்டிருந்த என்னை என் மகனின் குரல் மேலும் பத்திரிக்கையைப் படிக்க விடாமல் தடுத்தது. என்னவென்று வீட்டின் உள்ளே சற்று எட்டிப் பார்த்தேன். அங்கு என் மனைவி சசிகலா என் மகன் ராமுவிற்கு எழுதப் பழகிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். சசிகலா இப்படி எழுத வேண்டும் என்று சொல்ல ஆனால் என் மகன் ராமுவோ மறுக்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.
"டேய் ராமு இது மாதிரி எழுதுறது தப்புடா... இங்க பாரு, அம்மா எப்படி எழுதறேண்ணு... இப்படி எழுதணும்டா..." என்ற என் மனைவியைப் பார்த்து என்மகன், "அம்மா ஒனக்கு ஒண்ணும் தெரியலே…நீ தான் தப்புத் தப்பா எழுதறே... எங்க ரங்கசாமி சார் இப்படி தான் சொல்லி குடுத்தாங்க"
"உங்க சார் தப்பாச் சொல்லி குடுத்தாலும் அதான் சரியாடா" என சசிகலா கோபமாய்க் கேட்க
"ஆமா, எங்க சார் சொல்றது தான் கரெக்ட், நீ எழுதறது தப்பும்மா" என நாலு வயது ராமு தர்க்கம் செய்ய
"அடி வாங்கப் போறடா ராமு இப்ப, சொன்னா கேக்கணும்" என அவனை அடிப்பதற்குக் கை ஓங்கினாள் சசிகலா.
"ஏய் சசி, என்னது?" என என் மனைவியை நான் தடுத்தேன்.
"பின்ன என்னங்க? சார் தப்பாச் சொல்லிக் குடுத்து இருக்காங்கனு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறான்"
"கொழந்தைங்க அப்படித்தான் இருப்பாங்க. தன்னோட சார்தான் எதையும் சரியாச் செய்வார்னு நினைக்கற பருவம் இது. அதைப்போயி நீ கெடுத்துடாத... பேசாம விட்டுரு..." என்றேன்.
அதற்கு அவளோ, "ஏன் நீங்களும் இப்படித்தான் உங்க சார் மேல பைத்தியமா இருந்தீங்களா?" என சசிகலா கேட்க, எனக்கு ஒடனே ரெங்கசாமி சாரின் முகம் கண் முன்னே வந்து நின்றது.
"எனக்கு மட்டுமில்ல, எல்லாருக்கும் அப்படி ஒரு சாரு இருப்பாங்க சசி. எனக்கு என்னோட ரெங்கசாமி சார் அப்படித்தான், அவங்ககிட்ட படிக்கற எல்லாரையும் அவரு தன்னோட சொந்தப் பிள்ளைங்க மாதிரிதான் பாப்பாங்க. ஆசிரியர் வேலையை ஒரு தவம் மாதிரி செஞ்சவங்க அவங்க. என்னோட படிச்ச நெறைய பேர் இன்னைக்கி நல்ல நிலைல இருக்கறதுக்கு அவங்களோட நல்ல வழிக்காட்டுதல்தான் முக்கியக் காரணம். அந்த சார்மேல நான் ரொம்பப் பைத்தியமா இருந்தேன். அவரு எதைச் சொன்னாலும் செஞ்சுருவேன். இதுனால அப்பாகிட்ட நல்லா ஒதையெல்லாம் வாங்கிருக்கேன்...” என என் பழைய நினைவுப்பரணில் துலாவி எடுத்து அதன் பக்கங்களைப் புரட்டினேன்.
இதனைக் கேட்ட என் மனைவி சசிகலா, "ஆரம்பிச்சுட்டீங்களா ஒங்க ரெங்கசாமி சார் புராணத்த... கல்யாணமாகி வந்த இந்தப் பத்துவருசத்துல பத்தாயிரம் தடவை கேட்டாச்சு, ஒங்க சாரையும் ஊருக்குப் போறப்பவெல்லாம் பாத்துட்டுத்தானே இருக்கோம். அது சரி, இப்ப ராமுவுக்குச் சப்போர்ட் பண்றதுக்கு வேற எதாச்சும் உள்காரணம் இருக்கோனு சந்தேகம் வருது எனக்கு" என சசிகலா பொய் கோபத்துடன் கேட்டுவிட்டு முறைத்துவிட்டு அடுக்களைக்குள் சென்றாள்.
சென்ற முறை ஊருக்குச் சென்றபோது ரெங்கசாமி சாரைச் சந்தித்த நினைவு எனது கண் முன் மெல்ல மெல்ல விரிந்தது
வேப்ப மரத்தின் நிழலில் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து, ஒரு பக்கம் கழண்டுவிட்ட மூக்குக் கண்ணாடியை வலது கையில் தாங்கியபடி, மறுகையில் நாளிதழைப் பிடித்து ஊன்றிப் படித்துக் கொண்டிருந்தார் ரெங்கசாமி சார். அந்தக்கோலத்தைக் கலைக்க மனமின்றி தன் மகனையும் அமைதியாய் இருக்கச் சொல்லிச் சைகை காட்டி விட்டு அவரை ரசித்தபடி நின்றேன்.
சற்று நேரத்தில் அருகில் சலனம் உணர்ந்து தலை உயர்த்திய ஆசிரியர், ஒரு கணம் என்னைப் பார்த்துவிட்டு நான் யாரெனப் புரியாமல் கண் இடுங்க பார்த்தவர், புரிந்ததும் புன்னகை விரிய பத்து வயது குறைந்தது போல் உற்சாகத்துடன் "டேய் சாமிநாதா, சென்னையில இருந்து எப்ப வந்த? வாம்மா சசிகலா. ஏய் குட்டிப் பையா, வா வா வா. உனக்குக் குடுக்க ஒண்ணுமில்லையே. சத்த இருங்க. கடைக்குப் போயிட்டு வந்துடறேன்" எனக் கிளம்பியவரை நான் தடுத்தேன்.
"ஒண்ணும் வேண்டாம் சார், நீங்க உக்காருங்க. உங்கள பாக்கணும்னுதான் வந்தோம். என்னாச்சு சார்? கண்ணு சரியா தெரியரதில்லையா?" என நான் கவலையாய் கேட்க
அவரோ, "வயசாச்சில்ல... இதோ, ஒனக்கே ஒண்ணு ரெண்டு நரை எட்டி பாக்குதே" என என்னைக் கேலி செய்து சிரித்தார். அவரைப் பார்த்து ராமுவும் சிரிக்க, "சுட்டிப் பயலே, ஸ்கூலுக்குப் போறியா? ஒங்க அப்பா ஒன்ன மாதிரி இருக்கறப்ப இருந்தே எனக்கு தெரியும்" என வாஞ்சையாய் என்னைப் பார்த்தவர்
"போன வருஷம் பாத்ததுக்கு இப்ப மெலிஞ்சுட்டடா சாமிநாதா... வேலை ரொம்ப அதிகமோ? ஏம்மா சசிகலா, ஒன்னோட வீட்டுக்காரன் நேரத்துக்கு ஒழுங்காச் சாப்பிடறது இல்லையா?" என அக்கறையாய் விசாரித்தார்
"இல்ல சார்... வேலை வேலைன்னு நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதில்ல, நீங்க சொன்னாக்க கேக்கராறானு பாப்போம்" என கிடைத்த சாக்கில் அவரிடம் குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் என் மனைவி சசிகலா.
"சரி சரி, நின்னுட்டே இருக்கீங்களே, ஒக்காருங்க, இதோ வரேன்" என நான் தடுத்தும் கேளாமல் சென்றவர், பிஸ்கட் பழம் என வாங்கி வந்து தட்டில் வைத்து எங்கள் முன் வைத்தார்.
"எதுக்கு சார் இதெல்லாம்? இப்பத்தான் சாப்டுட்டு வரோம்" என நான் சொல்ல...
"ஏன் சாப்டுட்டு வரே? நம்ம வீட்டுல ஒங்க அம்மா சமைச்சுப் போடமாட்டாளா? ஏண்டா சின்ன வசயசிலேர்ந்தே என்னோட மனைவி வெக்கற வத்தக்கொழம்புன்னா ஒனக்கு உசுரு. இது ஒனக்குத் தெரியுமா சசிகலா? உங்க வீட்டுல வத்தக்கொழம்பு சாப்ட்டுச் சாப்ட்டுத் தான் கணக்குல நூறு மார்க் வாங்கினேன்னு என்னை ஐஸ் வெப்பானாக்கும்" என ஏதோ தன் சொந்த மகனைப்பற்றி பேசுவது போல் விலாவரியாகக் கூறினார் ரெங்கசாமி சார்.
நான் எதுவும் பேசாமல் ரசித்தபடி இருந்தேன்.
அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த நான் அவரைப் பார்த்து, "ஏன்சார் டாக்டர்கிட்ட போனீங்களா? ஒங்க ஒடம்புக்கு இப்ப பரவாயில்லையா சார்?" என்று விசாரித்தேன்.
"வயசானா எல்லாமும்தான் வரும், அதையெல்லாம் நினைக்காம இருக்க வேண்டியதுதான். எவ்ளோ நாளாச்சுடா உன்னைப் பார்த்து, ஒரு வருஷம் இருக்குமல்ல சாமிநாதா" என்று பாசத்துடன் என் தோளில் கையைப் போட்டவரை அன்புடன் பார்த்தேன்.
"ஆமாசார், வேலை அதிகம். அதோட இப்ப என்னோட அம்மாவும் அப்பாவும் எங்களோடவே சென்னையில இருக்கறதால அடிக்கடி இங்க வர முடியல" என்றேன்.
"சரிப்பா, எங்க இருந்தாலும் நீங்கெல்லாம் நல்லா இருந்தா அதுவே போதும் எனக்கு" என என்னை வாழ்த்தினார்.
செல்போன் சிணுங்கியது. செல்போனின் சிணுங்கலில் என்னுடைய பழைய நினைவுகளிலிருந்து மீண்டேன்.
செல்லில் எனது நண்பன் கண்ணனின் குரலைக் கேட்டவுடன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உள்ளப்பூரிப்புடன் "டேய் கண்ணா ... எப்படீடா இருக்க?" என்றேன். அதற்கு அவனோ, “ஏதோ இருக்கேண்டா" என்றான். எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. பதறிப்போய், "என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரியாப் பேசற?" என்றேன். அதற்கு அவன் "டேய் சாமிநாதா நம்ம ரெங்கசாமி சார் நம்ம விட்டுட்டுப் போயிட்டார்டா...? என்றான் தழுதழுத்த குரலில்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
" டேய் என்னடா சொல்ற?" என நான் பதறிப்போய் அதிர்ச்சியில் உறைந்தேன். என்னைப் பார்த்த என் மனைவி சசிகலா பயந்து போய்,
"ஏங்க என்னங்க... என்னாச்சு?" என பதறியபடி வந்தாள்.
ஒன்றுமில்லை என்பதுபோல் ஜாடை காட்டிய நான், ஏனோ பேச இயலாமல் தொண்டையை அடைப்பது போல் இருக்க "தண்ணீர் வேண்டும்?" என சசிகலாவிடம் கை அசைவில் கேட்டேன்.
என் மனைவி அவ்விடத்தினை விட்டு அகன்றதும் "என்ன ஆச்சு கண்ணா? எப்போ? நீ இப்ப நம்ம ஊர்ல தான இருக்க?" என்று கேட்டேன்.
"ஆமாடா நான் நம்ம ஊர்லதான் இருக்கேன். என்னோட அம்மாவுக்குக் கண் ஆபரேஷன் பண்ணி இருக்குன்னு பாக்க ஊருக்கு வந்தேன். வந்ததும் தம்பிதான் சொன்னான், ரெங்கசாமி சாருக்கு ஹார்ட் அட்டாக்னு சொல்றாங்க. நம்ம க்ளாஸ்மேட்ஸ் எல்லாரும் இங்கதான் இருக்காங்க. நீ சென்னையில இருந்து வரமுடியாதுன்னு தெரியும், ஆனா ஒனக்கு ரெங்கசாமி சார்னா ரொம்பப் பிடிக்குமேன்னுதான் சொல்லணும்னு கூப்ட்டேன். இன்னக்கிச் சாயங்காலம் ஆறு மணிக்கி காரியம் பண்றதாச் சொன்னாங்க"
அதன் பின் ஒரு நிமிடம் கூட நான் வீணாக்காமல் அடுத்த நான்கு மணி நேரத்தில் சென்னையிலிருந்து பிளைட்டில் வந்து பின்னர் காரில் எனது ஊருக்கு வந்துவிட்டேன். சாவு வீட்டின் சாயல் இன்றி ஏதோ போக்களம் போல் ஆண் பெண் பாகுபாடின்றி சிலர் வாக்குவாதத்தில் இருந்ததை பார்த்துக் குழம்பிப் போய் நின்றேன் நான்.
தன் ஆசிரியரின் முகத்தைக் கடைசியாய் ஒரு முறை பார்க்க விழைந்த எனக்கு என்னையும் அறியாமல் கண்ணில் நீர் கோர்த்து கரகரவென கன்னங்களில் வழிந்தோடியது.
ஆதரவாய் ஒரு கரம் தோளில் விழ நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு கண்ணன் நின்றிருந்தான் அவனைப் பார்த்து, "டேய் கண்ணா... உயிரோட இருந்தா இத்தனைக்கு எவ்ளோ ஆசையா அதை சாப்டு இதை சாப்டுனு... சொல்லுவாரு... இப்ப..." என அதற்கு மேல் பேச இயலாமல் நிறுத்தினேன் நான்.
அதற்குள் கூட்டத்தில் வாய்ச்சண்டையாய் இருந்தது கை கலப்புக்குச் செல்ல "என்ன ஆச்சு கண்ணா? ஏன் இப்படி இவங்க சண்டை போட்டுக்கறாங்க?" என்று புரியாமல் கேட்டேன்.
அவனோ, "வேற என்னடா, எல்லாம் சொத்துப்பிரச்சனை தான். சாரோட பசங்க ரெண்டு பேரும் வீடு அவங்க பேருக்கு தான் வரணும்னு தகராறு பண்றாங்க, இல்லைனா கொள்ளி வெக்க மாட்டோம்னு பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க... என்ன ஜென்மங்களோ..." என்று வேதனையோடு கூறினான் கண்ணன்.
எனக்கு அதைக் கேட்டவுடன் கடுமையான கோபம் வந்துவிட்டது. "என்னமாதிரி எத்தனையோ பேரை உருவாக்கிவிட்ட இந்த மனுசனுக்குக் கொள்ளி போட பங்குபோட்டுக்கிட்டு நாறப்போடுறீங்களே இது நியாயமா...? இப்ப எல்லாரும் சண்டைய நிறுத்துங்க...?” என்று நான் கத்தவும்
"இங்க நடக்கற சண்டையில இடையில யார் இவன்?" என்பது போல் எல்லோரும் என்னையே பார்க்கத் தொடங்கினர். அதற்குள் ரெங்கசாமி சாரின் மூத்த மகன் வேகமாக ஓடிவந்து என் முன்பாக நின்று கொண்டு, "ஏன்டா எங்க வீட்ல வந்து நின்னுகிட்டு எங்கள நிறுத்த சொல்றதுக்கு நீ யார்ரா?" என என் மீது பாய்ந்தான்.
"நான் ரெங்கசாமி சாருகிட்ட படிச்சவன். தயவு செஞ்சு ஒங்க சண்டைய ஒதுக்கி வெச்சுட்டு சாருக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செய்யுங்க, அவங்க ஆத்மாவ நிம்மதியா போக விடுங்க... ஒங்க அம்மாவைப் பாருங்க... எவ்வளவு கண்ணீரும் கம்பலையுமா நின்னு கதறுராங்க... அதப் பாத்துக்கூட ஒங்களுக்கு மனசு இரங்கலியா...?" என கெஞ்சுவது போல் கூறினேன் நான்.
"உன்னோட புத்திமதி இங்க யாருக்கும் தேவை இல்ல. வீடு என் பேருக்குத்தான் வரணும், எனக்குத்தான் கொள்ளி வெக்கற உரிமை இருக்கு. இல்லைன்னா இந்தக் கெழவன் அனாதைப் பொணமாத்தான் கெடந்து நாறப்போறான்... ஆமா..." என்றான் இரண்டாவது மகன்.
அதற்கு மேல் பொறுமையை இழுத்து பிடிக்க இயலாமல் அவனை ஓங்கி அறைந்தேன் நான். எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க "மனுசனாடா நீ... ச்சே. பெத்த அப்பன அனாதப்பொணம்னு சொல்ற நீ உயிரோட இருந்தும் பொணம்டா. நீ கொள்ளி வெச்சா எங்க சாரோட ஆத்மா நிம்மதியாப் போகாது. நீங்க கொள்ளி வெக்கலைனா அவங்களுக்கு யாரும் இல்லையா? ஆயிரக்கணக்குல இருக்கோம், அவங்ககிட்ட படிச்ச புள்ளைங்க. பெத்தபுள்ளை வெக்காட்டி என்ன, பெறாதபுள்ள நான் வெக்கறேன் என்னோட அப்பாவுக்கு கொள்ளி. போடா வெளிய" எனக் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளினேன் நான்.
"டேய்..." என மறுபடி என்னைப் பார்த்துப் பாய்ந்து வந்தவனைப் பார்த்து, “என்னைய உருவாக்கினவருடா இந்த ரெங்கசாமி சாரு. இன்னக்கி ஐபிஎஸ் அதிகாரியா நான் இருக்கறதுக்கு அவருதாண்டா காரணம்... என்னோட பவர அவங்க சொந்த பந்தங்ககிட்டயே காட்ட வச்சிறாதீங்க... அந்தத் தெய்வத்தோட மகன்ங்கிற ஒரே காரணத்துக்காக உன்னை உயிரோட விடறேன். இல்லைனா நீதான்டா இப்ப அனாதப் பொணமாப் போவ..." என்று கூறவும், போலீஸ் என்ற வார்த்தையில் பயந்து பின்வாங்கினான் சாரின் இரண்டாவது மகன்.
அதன் பின் மளமளவென்று அமைதியாய்க் காரியங்கள் நடந்தன. சொன்னது போல் நானே ரெங்கசாமியின் மகனாக இருந்து என் ஆசிரியருக்கு இறுதி மரியாதையைச் செய்தேன். ஊரே வியக்கும் வண்ணம் சாரின் இறுதி ஊர்வலம் நடத்தினேன். அதோடு என் செல்வாக்கைப் பயன்படுத்தி சார் இருந்த வீட்டை யாரும் ஆக்கிரமிக்க முடியாதபடி செய்தேன். ரெங்கசாமிசாரின் மனைவிக்கு வேண்டியதையும் நானும் என் நண்பர்களும் செய்தோம். ஆயிற்று மறுவருடம் வருவதற்குள் அந்த அம்மாவும் சார் போன இடத்திற்கே போய்விட்டார்.
காலம் வேகமாய்ச் சென்றது. ரெங்கசாமி சார் இறந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு நாள் திடீரென அந்த வீடு சுத்தம் செய்யப்பட்டு வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு விழாக்கோலம் பூண்டது.
ஆர்வமாய் வீட்டின் முன் ஊர்மக்கள் கூடி இருக்க, நான் ஒலிபெருக்கியில் பேசத் தொடங்கினான் "எல்லாருக்கும் வணக்கம். என் பேரு சாமிநாதன். ரெங்கசாமி சாரின் பிள்ளைகளில் ஒருத்தன். எங்க அப்பாவும் அம்மாவும் இந்த உலகத்தவிட்டு போயி அடுத்தடுத்து ஒரு வருஷம் ஆச்சு. இந்த நாளுல அவங்க வாழ்ந்த இந்தவீடு இனிமே இலவச நூலகமா செயல்படும்னு எல்லார் சார்பாவும் தெரிவிக்கறேன். அதோட அவங்ககிட்ட படிச்சவங்க எல்லாரும் சேந்து ஒரு கல்வி அறக்கட்டளை ஆரம்பிச்சு இருக்கோம். பிள்ளைககிட்ட இருக்கற திறமைய வெளிய கொண்டு வந்து அவங்கள வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமா இல்லாம நல்ல மனுசங்களாவும் உருவாக்கினவங்க எங்க ரெங்கசாமி சார். என்னை போல... எத்தனையோ ஐபிஎஸ்., ஐஏஎஸ்'களை உருவாக்கின ஆத்மாவோட நினைவா இந்த அறக்கட்டளைய உருவாக்குவதின் நோக்கம் திறமை இருந்தும் வசதி இல்லாத பிள்ளைங்களை படிக்க வெக்கறது தான். ரெங்கசாமி கல்வி அறக்கட்டளைய திறந்து வெக்கறதுக்கு நம்ம பள்ளியின் தலைமையாசிரியர் கமலக்கண்ணன் சாரை அன்போடு அழைக்கிறேன்" என உரையை முடித்தேன் நான்.
"ரெங்கசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் இலவச நூலகம் - இப்படிக்கு, ரெங்கசாமித் தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளைகள்" என எழுதி திரையிடபட்டிருந்த பலகையைத் திறந்து வைத்தார் தலைமையாசிரியர்.
என்னையும் எனது நண்பர்களையும் அரூபமாக நின்று என் ஆசிரியரும் அவரது மனைவியும் நிச்சயம் வாழ்த்தியிருப்பர். எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்று நம்ம மூதாதையர்கள் சொல்லியிருக்காங்கள்ள. அவர்களது வாழ்த்தினைக் கொண்டுவந்து கொடுப்பதைப் போன்று மழைத்துளிகள் விழத் தொடங்கின. கண்கலங்க நானும் என் நண்பர்களும் ரெங்கசாமிசாரின் படத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
“தெளிவு குருவின் திருமேனி காண்டல்; தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்; தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்” என்ற திருமந்திர வரிகள் என்னுள் ஓடியது.