காலைப் பொழுது விடிந்து பக்கத்து வீடுகளில் உள்ளோர் எழுந்து அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கியிருந்தனர். ஆனால் காலையில் எழுந்ததுமே வெகுதூரத்தில் அண்ணாமலையை யாரோ திட்டிக் கொண்டிருந்தார்கள். அவள் குரலில் சூடேறி இருந்தது. குரலுக்குச் சொந்தக்காரி அவனது மனைவிதான் என்பது தூக்கம் கலைந்த பிறகுதான் அவனுக்குப் புரிந்தது.
“கொஞ்சங் கூட பொறுப்பில்லாம தூங்கிக்கிட்டிருக்கிறதப் பாரு... இந்தாளெல்லாம் மனுசனா...? குடும்பம் இருக்கே, பொண்டாட்டி புள்ள இருக்கேன்னு கொஞ்சநாச்சும் கவலை இருக்கா... ஒண்ணுமில்லை... சொகமாப் போர்வையப் போத்திக்கிட்டுத் தூங்குற மூஞ்சியப் பாரு...” என்று அவள் திட்டியது அவனைத்தான். கவலையின்றித் தூங்குகிறானாம்.
வாடைக்காலம் என்பதால் இன்னும் கொஞ்சநேரம் போர்த்திக் கொண்டு கிடக்கலாம் என்று அண்ணாமலை ஆசைப்பட்டதற்கு தன் மனைவியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான். அவள் கோபத்துக்குப் பயந்து அவன் எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குத் தன் மனைவியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவேப் பயமாக இருந்தது. அன்பாக இருந்த மனைவி எப்படி மாறிவிட்டாள்? பொருள் மனிதனின் பண்பை மாற்றிவிடுமோ? இந்தப் பணம் தன்னுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருச்சே? முன்பெல்லாம் அவள் அன்பாக எப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பாள்? இந்த வறுமை அவளையும் அவனையும் படாதபாடுபடுத்தி பகை கொண்டவர்களாக அல்லவா மாற்றிவிட்டது.
அவளின் அருகாமை அண்ணாமலையின் மனதினுள் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. மனைவியிடம் அவன் வீட்டுச்செலவிற்குப் பணம் கொடுத்து ஆறுமாசமாகிறது. அந்தக் கடுப்பில்தான் அவனை அவள் கரித்துக் கொட்டுகிறாள்.
பாவம் அவளும்தான் என்ன செய்வாள். என்னென்னமோ செய்து பார்க்கிறாள். அவளால் முடியாத பட்சத்தில் தன்னுடைய ஆத்திரத்தை வார்த்தை நெருப்புகளால் கணவன் மேல் கொட்டித் தீர்த்துவிடுகிறாள். கணவனுக்கு வருமானமில்லையென்றால் குடும்ப வண்டி எப்படிச் சீராக ஓடும்? வீட்டில் ஒரு கறவை மாடு இருப்பதால் அவளால் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் கஞ்சியாவது ஊற்ற முடிகிறது. அந்த மாடும் இல்லையென்றால் அதுவும் இல்லாமல் போயிருக்கும்... அவளால் அதற்குமேல் அந்தக் கொடூரத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. தன் அடங்காத கோபத்தை குழந்தைகளிடம் திருப்பினாள். சுருண்டு படுத்திருந்த பெரியவன் முதுகில் பளீரென வைத்தாள். கர்ண கடூரமான குரலெடுத்து அழுதான் பையன். அண்ணாமலை எரிச்சலடைந்தான். அவனுக்குக் கோபம் சுரீரென்று உச்சி மண்டைக்கு ஏறியது. அவளை இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்த வேண்டும் போல் தோன்றியது.
அவளைப் பார்த்து, "ஏன்டி... ஒனக்கு அறிவிருக்கா...? கொஞ்சங்கூட ஈவிரக்கமில்லாம நடந்துக்கிற... காலங்காத்தால பிள்ளையப் போட்டு அடிக்கிறியே... நீயெல்லாம் ஒரு தாயா...?" என்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.
அதற்கு அவனைப் பார்த்து, "ஆமாய்யா... நானெல்லாம் தாயேயில்லை... இந்தத் தடிப்பய... படுக்கையில் மூத்திரம் பெய்யுறான்... சூடு சொரணை இல்லாதவனை அடிச்சுத்தான்யா திருத்தணும்..." என்றாள்.
அவன் மீதிருந்த கோபத்தைத்தான் அவள் வேறுவிதத்தில் காட்டுகிறாள். இடத்தை விட்டு எழுந்திருக்காமல் உட்கார்ந்திருந்தால் அடுத்தடுத்து என்னென்ன பேசுவாளோ? தெரியாது என்று பயந்துபோய் அண்ணாமலை எழுந்து வெளியேறினான்.
வீட்டின் முன்புறம் இருந்த வேப்பமரத்தில் ஏறி வேப்பங்குச்சியை ஒடித்துப் பல் விளக்கினான். தலைக்குப் பச்சைத் தண்ணீர் ஊற்றிக்கொள்ளத் தயக்கமாக இருந்தது. அவன் மனைவி அவனுக்காக வெந்நீர் போட்டு வைத்திருந்ததும், தொணதொணவென பேசிக் கொண்டு முதுகு தேய்த்துவிட்ட காலமும் ஒன்று உண்டு. அப்போது அவனுக்கு வருமானம் இருந்தது. எல்லாம் அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நின்றது. ஒரு வருஷமா சரியாப் பிசினஸ் இல்லை. எல்லாம் தலைகீழாக மாறிடுச்சு. பணத்தை வச்சுத்தான் எல்லாமே...இந்த ரியல் எஸ்டேட் தொழில் ஏறுனா ஏறும்... படுத்துக்கிட்டா பெரிசாப் படுத்துக்கும்... பெரியதாக ஒரு பிசினஸ் முடிந்தால் எல்லாவற்றையும் சரியாக்கிவிடலாம். இவனும் நாலுபேரைப் பார்ப்பதும் அலைவதுமாகத்தான் இருக்கின்றான். ஆனா ஒண்ணுஞ் சொல்றாப்புல இல்லை. மேலும் இடங்களும் குறைந்து கொண்டே வந்தன.
பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிய அளவில் ஐநூறு, ஆயிரம் ஏக்கரில் வளைத்துப் போடுவதால் சாதாரண சிறிய ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இடம் கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாகப் போய்விட்டது. வேறு வழியில்லை. இதுபோன்ற நெருக்கடியில் போராடித்தான் கரை சேர வேண்டியிருக்கின்றது.
இந்திரா அவனது வேட்டி சட்டையை வெளுத்து வைத்திருந்தாள். தொழிலுக்கான சீருடை அது. கையில் டைரி, பாலித்தின் பையில் லே அவுட்களின் படங்கள் சகிதமாக அண்ணாமலை புறப்பட்டான். அவன் போவதைக் கவலையோடு பார்த்துக் கொண்டே நின்றாள் இந்திரா. அவளுக்குள் மிகுந்த வருத்தம். “பாவம் மனுஷன ரொம்பவும் பேசிப்புட்டமோ” என்று வருந்தினாள்.
அவளும்தான் என்ன செய்வாள்? அவன் விடிந்ததும் புறப்பட்டானென்றால் வீட்டுக்குத் திரும்பும் நேரம் எதுவும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்திப்பது அவள்தான். வாங்கின கடனுக்குப் பதில் சொல்வதும், அரிசி பருப்புக்கு அல்லல்படுவதும் அவள்தானே? ஒரு கறவை மாட்டில் என்ன பெரிதாக கிடைத்துவிடப்போகிறது?
பொட்டிக் கடை, விறகுக்கடை, பேக்கரிகளுக்கு ஜாம், எஸன்ஸ் தயாரித்து விற்றது, ஓம வாட்டர் தயாரித்து விற்றது என்று அவனும் நிறையத் தொழில்கள் செய்து பார்த்துவிட்டான். அவற்றையெல்லாம் செய்து அலுத்தபின்தான் கடைசியாக ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறினான். எல்லாம் கொஞ்சநாள் ஓடும். பிறகு படுத்துவிடும். காரணம் புரியாது. எல்லாம் தோல்வியில் முடியக் கடைசியில் கடன்கள்தான் மிஞ்சின.
மூச்சுத் திணறி ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் ஏறக்கட்டினான். அவனிடம் கைத்தொழிலும் இல்லை. முதலீடும் இல்லை. அதனால் ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறிவிட்டான். தொடக்கம் நன்றாகவே இருந்தது. மாதத்தில் ஒன்று இரண்டு என்று பதிவாகும். அதற்கு இடையிடையே வாடகைக்கு வீடும் பார்த்துக் கொடுப்பான். வருமானம் கிடைக்கக் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் இப்போது? எல்லாம் தலைகீழ். தெருவுக்கு இரண்டு புரோக்கர்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்து வந்த தொழிலில் இன்று அரசாங்க அலுவலர்கள், ஆசிரியர், வக்கீல் என்று பெரிய பெரிய ஆட்கள் நுழைந்துவிட்டதால் போட்டி கடுமையாகிவிட்டது. வாடகைக்கு வீடு கேட்டுக் கூட யாரும் வருவதில்லை. வெட்டியாக ஊரைச் சுற்றி வருவதும், பின்னர் புலம்புவதுமாக நாட்கள் கழிந்துகொண்டே இருக்கின்றன.
இவனைப் போன்ற புரோக்கர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று கூட அண்ணாமலை பயந்தான். டீ குடிக்கக் கூட யாரையாவது எதிர்பார்க்கத் தொடங்கினான் அண்ணாமலை. ஏதாவது வேலைக்குப் போகலாமென்றால் எந்த வேலைக்குப் போவது? நாற்பதைத் தாண்டிய, அதிகம் படிப்போ, தொழிலோ தெரியாதவனுக்கு எங்கு வேலை கிடைக்கும்? சும்மா ஊரைச் சுத்திக்கிட்டு இல்லாம செக்யூரிட்டி வேலைக்காவது போய்யா என்றாள் அவன் மனைவி. கொசுக்கடியிலும், குளிரிலும் தூங்காமல் கொட்ட கொட்ட விழித்திருக்க அவனால் இயலாது. மேலும் அதில் பெரிசா என்ன கிடைக்கப் போகுது?
அண்ணாமலை பலவாறு யோசித்துக் கொண்டே சிவன் கோயிலை வந்தடைந்தான். கோவிலின் வெளியில் நின்றவாறு வணங்கினான். சிவன் கோயில் முப்பது வருஷத்துக்கு முன்னர் காட்டுக்குள் இருந்தது. அதனால் இதனைச் காட்டுச் சிவனார் கோயில் என்று அழைத்தனர். அண்ணாமலை சிறுவனாக இருந்தபோது இந்தப் பக்கமெல்லாம் மனித நடமாட்டமே இருக்காது. சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடக்கும். ஒத்தைசத்தையில் யாரும் இந்தப் பக்கம் வரவே பயப்படுவார்கள். ஜடாமுனிகள் உலவிய இடம் என்று சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டார்கள். இன்று காடுமுழுதும் அழிக்கப்பட்டுக் கான்கிரிட் கட்டிடங்கள் நிறையப் பெருகிவிட்டன. தற்போது மிஞ்சியிருப்பது ஒரேயொரு ஆலமரமும், சிவன் கோயிலும் மட்டும்தான். அடுக்குமாடி குடியிருப்புகள் கோயிலின் பின்புறம் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கின்றன.
இதற்கு முன் அந்த இடம் பெரிய பள்ளமாகக் கிடந்தது. அந்தப் பள்ளத்தை மூன்று கோடிக்கு ஒரு பணக்காரர் கேட்டார். இவன்தான் மீடியேட்டர். இரண்டு பக்கமும் கமிஷன் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று கனவில் மிதந்தான். நிலத்துக்காரன் கொடுத்த தாய்ப்பத்திரத்தில் லிங்க் டாக்குமென்ட் சரியாக இல்லை. கேட்டதற்குத் தேடித் தருவதாக இழுத்தடித்தான். அவன் இரண்டு பேரிடம் பேசிக்கொண்டிருந்தது அதன் பிறகுதான் புரிந்தது. ஐந்து லட்சம் மேல் வைத்து வேறொரு நபருக்கு அந்த இடம் முடித்துவிட்டது. அவனுக்குப் பெருத்த ஏமாற்றம். ஏறக்குறைய ஒரு வருஷ அலைச்சல். பெட்ரோல் செலவு, காத்திருப்பு எல்லாம் வீணாய்ப் போனது. ஆப்பக்கடை வைத்திருக்கும் மனோகர் இடையில் புகுந்து லாபம் அடித்துக் கொண்டு போனான். மனோகர் இவனுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்தவன். அரச மரத்தடி அருகில் இருக்கும் ஸ்டாண்டில் சிறிதாக காலையிலும் மாலையிலும் ஆப்பத்தைச் சுட்டு விற்றுக் கொண்டிருப்பான்.
ரியல் எஸ்டேட் தொழில் அவனைப் பல கோடிகளுக்குச் சொந்தக்காரனாக்கியது. அவன் இப்பொழுது ஆப்பம் சுட்டு விற்பதை நிறுத்திவிட்டு வேறு தொழிலைத் தொடங்கி பெரிய முதலாளி ஆகிவிட்டான். அவ்வளவுக்கு ஏன் போகணும்? நம்ம சரவணன் எலக்ட்ரீசியன் சரவணன் என்றால்தான் தெரியும். இன்று படகு போன்ற பென்ஸ் காரில் போகிறான். ரியல் எஸ்டேட் ஒண்ணுமில்லாதவனையெல்லாம் உயரத்திற்குக் கொண்டு போயிருக்கு. யாரையும் குறை சொல்வதற்கில்லை. அண்ணாமலைக்கு அதிர்ஷ்டமில்லை அவ்வளவுதான்.தன்னுடைய தலைவிதியை நொந்தபடியே அண்ணாமலை அரசமரத்தடிக்கு வந்தான். அங்குதான் எல்லா புரோக்கர்களும் வந்து கலந்து பேசுவார்கள். அருகில் இருந்த டீக்கடைப் பெஞ்சில் முருகனாந்தம் உட்கார்ந்திருந்தார். அந்தச் சிறிய டீக்கடை அவருடையதுதான். திருப்பத்தூர் பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். ஊரில் ஒன்றும் சரி வராததால் மதுரைக்கு வந்து அங்கிங்கு பல வேலைகளைப் பார்த்து இங்கேயே செட்டிலாகிவிட்டார். முருகானந்தம் ஓட்டலில் சர்வராகி, கொஞ்சகாலம் கிளி ஜோசியராகி, பின்னர் டீக்கடைக்காரராகி இறுதியில் ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறி இன்று நல்ல நிலைமைக்கு வந்து உட்கார்ந்து சாப்பிடுகிறார்.பலவீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டுவிட்டார். அவருக்கு வீட்டு வாடகையே இருபதாயிரம் வருகிறது.
முருகானந்தம் இவனைப் பார்த்து,"வாய்யா... அண்ணாமலை, எப்படி இருக்கே...? ஏதாவது இடங்கிடம் பார்த்து முடிச்சியா?" என்று கேட்டார். அவரைப் பார்த்த அண்ணாமலை, “இல்லண்ணே... ஒண்ணும் சிக்கமாட்டேங்குது... என்ன செய்யறது...?” என்று கூறி தனது உதட்டைப் பிதுக்கினான்.
பகலெல்லாம் நாலு பேரோடு பேசிக் கொண்டிருப்பதில் கழிந்து விடுகிறது. ஓசியில் சாப்பாடும் கிடைத்துவிடுகிறது. பொழுது சாய்ந்து வீடுக்குத் திரும்பும்போதுதான் இவன் மனம் பதற்றமடையத் தொடங்கிவிடுகிறது. வீட்டில் தாண்டவமாடிய வறுமை அன்பின் வடிமாகிய இந்திராவைக் கொடிய மிருகமாக மாற்றிவிட்டது. அவளுடைய முறைப்பும், அழுத்தமான மௌனமும் ஆளையே கொன்றுவிடக் கூடியது. அவன் சொல்லும் காரணம், சமாதானம் எதுவும் அவள் காதுகளில் ஏறுவதில்லை. அவளுக்குத் தேவை குடும்பம் நடத்தப் பணம். அது கிடைக்காதபட்சத்தில் எரிமலையாகக் குமுறிவிடுவாள். சம்பாதிக்கத் துப்பில்லாத இவன் அவளிடம் கோபப்பட்டுக் கொள்வதில் அர்த்தமேயில்லை. அவள் காதில், மூக்கில் கிடந்ததை ஒன்றையும் அவன் விட்டுவைக்கவில்லை. அவ்வளவும் அடகுக்கடையில் பாடம் படித்துக் கொண்டிருந்தன.
இவன் தன்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கும்போது நடுத்தர வயதுடைய ஒருவர் இவனை நெருங்கி, "சார்... வாடகைக்கு வீடு ஒண்ணு வேணும். இங்க ஏதாவது கிடைக்குமா" என்று தயங்கித் தயங்கிக் கேட்கவே அண்ணாமலை பரபரப்பாகிப் பெஞ்சிலிருந்து எழுந்து நின்று, அவரைப் பார்த்து, "கிடைக்கும் சார்... ஆமா... எவ்வளவு ரூபாய் வாடகையில் எதிர்பார்க்கிறீங்க...?"
"ஐயாயிரம்"
"ஒங்களுக்கு மாடி போர்ஷன் சரியா வருமா?"
"பரவாயில்லை"
அண்ணாமலை முருகானந்தத்திடம், "அண்ணே ஆவணி மூலவீதியில வீடு இருக்கான்னு போன் பண்ணிக் கேளுங்க." என்றான்.
முருகானந்தம் வீட்டு உரிமையாளருக்குப் போன் போட்டு விசாரித்தார்.
"இருக்காம்பா அண்ணாமலை... இவரைக் கூட்டிக்கிட்டுப் போயிக்காட்டு"
அண்ணாமலை வீடு கேட்டு வந்தவரின் பைக்கில் ஏறிக் கொண்டான். போகும்போது ஒரு மாத வாடகை கமிஷனாகத் தர வேண்டும் என்பதை அவர் காதில் போட்டான். அவரும் சரியென்று தலையசைத்தார்.
அண்ணாமலைக்கு வாழ்க்கை ரொம்பவும் மகிழ்ச்சியாகப்பட்டது. ஒரு மாச வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம். குறிப்பிட்ட இடம் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னான். கீழ் போர்ஷனில் வீட்டு உரிமையாளர் குடியிருந்தார். காலிங் பெல்லை அடித்ததும் கதவைத் திறந்து விசாரித்தவர் வீட்டுச் சாவியைக் அண்ணாமலையிடம் கொடுத்தார். அவன் வீடுகேட்டு வந்தவரை அழைத்துக் கொண்டு மாடியேறினான்.
அவரிடம் "ஐயா அருமையான இடம். அருமையான தண்ணீர். இங்கல்லாம் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்க வேண்டாம். சுற்றுவட்டாரத்தில் ரெண்டு பெரிய ஸ்கூல் இருக்கு. பக்கத்துல உழவர் சந்தை, ஆஸ்பத்திரி எல்லாம் இருக்கு"
வந்தவர் வீட்டை சுற்றும் முற்றும் போய்ப் பார்த்து ஆராய்ந்தார்.
அதனைக் கண்ட அண்ணாமலை எங்கே அவர் மறுத்துவிடுவாரோ என்று அஞ்சி, "எல்லாம் வாஸ்துப்படிதான் இருக்குங்கய்யா. இங்கு இருந்தவங்க எல்லாரும் சொந்தவீடு கட்டிக் குடிபோயிட்டாங்க. இது ராசியான வீடு"
வந்தவர் முகத்தில் எவ்வித சலனத்தையும் காட்டாமல் "சரிங்க எதுக்கும் என்னோட மனைவியைக் கூட்டியாந்து காட்டிட்டுச் சொல்றேன்" என்றார்.
அதனைக் கேட்ட அண்ணாமலைக்குத் தலையில் யாரோ நச்சென்று குட்டியதைப் போன்றிருந்தது.
"ஐயா, கோவிச்சிக்கிடாதீங்க ஏதாவது முன்பணமா அட்வான்ஸ் தந்திடுங்க. இல்லேன்னா வீட்டை வேறு யாருக்காவது விட்டுடுவாங்க. இந்த ஏரியாவுல வீடு கெடைக்கிறது ரொம்ப ரொம்பச் சிரமம்" என்றான்.
அதற்கு வீடுபார்க்க வந்தவர், "வாஸ்தவந்தான். வீடு எனக்குப் பிடிச்சிருக்கு. இருந்தாலும் என்னோட மனைவியைக் கேட்கணும். அவங்களுக்குப் பிடிச்சிருந்தாத்தான் மத்ததெல்லாம். இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள அவங்கள கூட்டியாந்து காட்டிட்டு உங்களுக்குப் போன் பண்றேன். உங்க செல் நம்பரைக் கொடுங்க" என்று கேட்கவே அவன் தன்னுடைய செல்போன் நம்பரைக் கொடுத்தான்.
அவர் வண்டியிலேயே அவனை அரசமரத்தடிக்கு அழைத்துவந்து விட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றார். அண்ணாமலை போன்வரும் வரும் என்று இரவு ஒன்பது மணி வரை அங்கேயே காத்துக் கிடந்தான். போன்வந்தபாடில்லை. சரி இனிமேலும் இங்கு காத்துக்கிடப்பது சரியல்ல என்று நினைத்து வீட்டிற்குச் செல்லலாம் என்று எழுந்தான். அவனுக்கு வீட்டு ஞாபகம் வந்தவுடன் அது அவன் வயிற்றில் கலவரத்தை உண்டாக்கியது. அண்ணாமலை மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட நினைத்தான். ச்சே... சே... இந்திராவும் பிள்ளைகளும் அனாதையாப் போயிருவாங்க. இது கோழைத்தனமான முடிவு. போராடித்தான் பார்ப்பமே... என்று மனதிற்குள் எண்ணமிட்டவாறு சோர்ந்து போய் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
வீடு இருள் சூழ்ந்து காணப்பட்டது. பசு எழுந்து நின்று வாலை நிமிர்த்திச் சாணமிட்டது. நன்றியோடு அதைத் தடவிக் கொடுத்தான். வாயில்லா அந்த ஜீவன்தான் குடும்பத்திற்கு ஒருவேளைக் கஞ்சியாவது ஊற்றுகிறது.
ஒருக்கலித்திருந்த கதவைத் திருடன் போன்று சத்தமின்றித் திறந்தான். பிள்ளைகள் தாறுமாறாகப் படுத்திருந்தனர். இந்திரா விழித்திருந்தும் கண்களை மூடியிருந்தாள். அவன் வெறுங்கையோடு திரும்புவதை அவள் எப்படியோ உணர்ந்துகொண்டாள். அண்ணாமலையை மிக நுட்பமாக அறிந்து வைத்திருந்தாள். அவள் எழுந்துகொள்ளாமல் இருந்தால் போதும். மெதுவாக மூச்சுவிட்டபடியே அண்ணாமலை அடுப்படிக்குப் போனான்.
பசி, சோறும் ரசமும் இருந்தது. அவனின் மனைவி கருவாட்டுத் துண்டை நெருப்பில் வாட்டி வைத்திருந்தாள். அள்ளிப் போட்டுக் கொண்டு கபக்கபக்கென்று விழுங்கினான். சொந்த வீட்டில் திருடனைப் போல் நடந்துகொள்வது அவனுக்கு பெருத்த அவமானமாகத் தோன்றியது. இருந்தாலும் சாப்பிட்டுவிட்டுப் படுத்தான்.
அன்று அண்ணாமலையைக் கூட்டிக் கொண்டுபோய் வீடு பார்த்துவிட்டுப் போன மனிதன் அதன் பிறகு ஆளையே காணோம். ஒருவாரம் ஓடியது.
அண்ணாமலை தற்செயலாக அந்த வீட்டுப் பக்கம் போனான். கண்கள் தாமாகவே மாடி வீட்டுப் போர்ஷனைப் பார்த்தன. மாடிப் போர்ஷனிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் அண்ணாமலை திடுக்கிட்டான். மனைவியிடம் வீடு பிடித்திருக்கிறதா? என்று கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போன அதே மனிதர். இவனுக்குக் கமிஷன் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுக் குடி வந்திருக்கிறார்.
அடப்பாவி... போன்பண்றேன் அப்படீன்னு சொல்லி ஏமாத்திட்டு இப்ப அப்பாவி மாதிரி மாடிக்குக் குடிவந்திட்டானே... அண்ணாமலைக்குக் கோபம் கோபமாக வந்தது. அந்த மனிதர் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவனது உள்ளம் அடிபட்ட நாகம்போல் சீறியது. மாடியிலிருந்து இறங்கியவரைப் பார்த்து, "ஏய்யா ஏங்கிட்டச் சொல்லாமக் கொள்ளாமாக் குடி வந்திருக்கீங்களே இது ஒங்களுக்கே நல்லாருக்கா. நான்தானே ஒங்களக் கூட்டியாந்து வீடு காட்டினேன். மொதல்ல ஏங்கிட்ட சொல்லியிருக்கணுமில்ல. சரி எனக்குக் கொடுக்க வேண்டிய கமிஷனாவது கொடுத்திருக்கணுமில்ல. என்னங்க இப்படிப் பண்ணிப்புட்டீங்க என்னோட கமிஷனக் கொடுங்கய்யா?” என்று கேட்டான்.
அதனைக் கேட்ட அந்த மனிதரோ, "என்னப்பா ரொம்ப ஓவராப் பேசிக்கிட்டே போற... மரியாதையாப் பேசு..." என்று கூறியவுடன் அண்ணாமலைக்கு சிவ்வென்று கோபம் தலைக்கேறியது.
"என்னங்க ஒங்களுக்கு மரியாதை வேண்டி கெடக்கு. ஒரு வார்த்தை சொல்லாம நைசா வீட்டுக்குக் குடிவந்துட்டு... மரியாதை வேறகேக்குதா... ஒங்களுக்கு? பேசாதீங்க... எனக்குக் கொடுக்க வேண்டிய கமிஷனக் குடுங்க... ஒரு மாசத்து வாடகைய எனக்குத் தரணும்... ஆமா... பாத்துக்கோங்க" என்று கத்தினான்.
அதனைக் கேட்ட அவரோ "இதப் பாருய்யா ஒரு மாச வாடகையெல்லாம் தர முடியாது. வேணுமின்னா ஐந்நூறு ரூபாய் தர்றேன். வாங்கிக்கிட்டுப்போ காட்டுத்தனமாக் கத்தாதே." என்றார்.
அண்ணாமலைக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது. அவன், “ஏங்க இது அநியாமா இல்லையா...? ஏதோ பிச்சை போடுறமாதிரி ஐந்நூறு ரூபாய் தர்றேன் அப்படீங்கறீங்க... இது என்னோட வயித்துல அடிக்கிற மாதிரிங்க... ரொம்ப ரொம்பத் தப்புங்க... நியாயமா நடந்துக்கோங்க... நான்கேட்டது மாதிரி ஒரு மாச வாடகையத் தாங்க...” என்று சற்றுக் கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.
ஆனால் அந்த மனிதரோ, “என்னய்யா பெரிய நியாயம்... பேசாம நான் கொடுக்கறத வாங்கிக்கிட்டுப் போறதுன்னாப் போ... இல்லன்னா ஒன்னால என்ன செய்யமுடியுமோ செஞ்சிக்கோ...? என்று தெனாவட்டாகப் பேசியவுடன் அண்ணாமலையால் நிலைகொள்ள முடியாமல் போய்விட்டது.
"பிச்சையா குடுக்கிற. எல்லா இடத்திலும் கொடுக்கிறதுதான். மரியாதையா ஒரு மாசத்து வாடகையைக் கொடு. இல்லேன்னா கதையே வேற."
"ஏய் என்னடா பண்ணுவ... ஏந்தலையை எடுத்துப்புடுவியா...? நீ என்ன பெரிய சண்டியரா...? ஏதாவது ஏடாகூடாமா நடந்துகிட்ட போலிசுக்கிட்டச் சொல்லி உள்ளே தள்ளிடுவேன்."
இதனைக் கேட்டவுடன் அண்ணாமலையால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. கையை மடக்கி ஒங்கி அவனது முகத்தில் ஒரு குத்துவிட்டான். அவ்வளவுதான் அந்த ஆள் தடாலென கீழே சாய்ந்தான். மாடியிலிருந்து அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் கத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். சுற்றிலுமுள்ள வீடுகளிலிருந்து எல்லோரும் எட்டிப் பார்த்தார்கள்.
அண்ணாமலை அந்த இடத்தைவிட்டு வேகவேகமாகச் சென்றான். சென்றான் என்பதைவிட ஓடினான் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் அரசமரத்தடிக்கு வந்த பிறகுதான் சற்று ஆசுவாசமானான்.
அவனுள் பல்வேறு எண்ண ஓட்டங்கள் ஓடின. நாம் உணர்ச்சி வசப்பட்டிருக்கக் கூடாதோ...? தெரியாத்தனமா நாம ஏன் உணர்ச்சி வசப்பட்டோம். ஒருத்தனை அடிக்கிற வேகம் நமக்கு எங்கிருந்து வந்துச்சு. குத்துப்பட்டவனின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது அவனது நினைவிற்கு வந்தது. ஏன் எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது. அந்த ஆள் ஏன் என்னை ஏமாற்ற வேண்டும். நான் இருக்கப்பட்டவனில்லையே. அன்னாடங்காச்சியில்லையா நான். எனக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கின்றன. நியாயமாக அவன் எனக்குக் கமிஷன் கொடுத்திருக்கணுமில்லையா? பணத்தைத் தராம அவன் ஏமாற்றலாமா? பாவிப் பய ஏமாத்துனதும் பத்தாம என்னையப் பிச்சக்காரனவிடக் கேவலமா நடத்திப்பிட்டானே...? ச்சே என்ன பொழப்பு... நம்மோட பொழப்பு அருந்தப் பொழப்பால்ல ஆயிருச்சு... அந்தாளு இப்ப போலிசுக்குப் போயிருப்பானோ...?என்று அண்ணாமலை தனக்குள்ளேயே பிரச்சினைகளைப் போட்டு அலசிக் கொண்டிருந்த போதே அவனது அருகில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் அண்ணாமலையின் கையைப் பிடித்து வண்டிக்குள் ஏற்றினார்.
தலையைத் தொங்கப்போட்ட நிலையில் அவ்வண்டியினுள் அவனிடம் அடிவாங்கிய மனிதன் அமர்ந்திருந்தான். அண்ணாமலை தனது வாழ்க்கையை நினைத்து நொந்தவாறு அமர்ந்தான். ஒரு ஏமாற்றுக்காரனால் தான் வாழ்க்கையில் சிறுமைப்பட்டதை எண்ணி எண்ணிக் குமைந்தான். வண்டி காவல்நிலையத்தை நோக்கி நகர்ந்தது.