இரவு மணி பதினொன்று முப்பது, உறக்கமின்றி புரண்டு படுத்தபோது தொலைபேசி சினுங்கியது, இந்த நேரத்தில்... அதுவும் வீட்டு பேசியில்... சட்டென மனசு பதைக்க, ரிசிவரை எடுத்துக் காதில் வைத்தபோது “சித்தப்பா...”முருகனின் கம்மிய குரல்.
எனக்கு புரிந்துவிட்டது,“சொல்லு முருகா ” என்றதும் எழுந்து கொண்டேன்.
“பெரியா...பெரியானு கெடப்பீகளே...” விசும்பல்... பின், அழுதுகொண்டே “தாத்தா போயிட்டார் சித்தப்பா ” சமீப நாட்களாய் நான் எதிர்பார்த்திருந்த கனமான துக்கச் செய்தி... சட்டென விசும்பல் முட்டியது.
“சரிப்பா இப்பவே கிளம்பறேன் இங்க யாருக்காவது தகவல் சொல்லனுமா?”
“ஒவ்வொருத்தருக்கா சொல்லிக்கிட்டு இருக்கேன். சீக்கிரமா நீங்க வரனும்னுதான் மொதல்ல சொல்றேன். சின்ன வயசுலருந்து தாத்தா மேல நீங்க பாசமா இருப்பீகல ” தொடர்பு துண்டிக்கவும், என்னில் அழுகை உடைந்துவிட்டது.
கவிதாவை கூட்டிப்போக முடியாது. நான்கு வருடக் காத்திருப்பு, நிறைய வேண்டுதல்களுக்குப்பின் கர்ப்பவதியாகியுள்ளாள். அவளைப் பத்து மணி நேரப் பயணத்துக்கு இழுத்தடிப்பது நல்லதல்ல. பல்லாவரத்தில்தான் மாமனார் வீடு அவர்களுக்கு விசயம் சொன்னால் உடனே ஆட்டோ பிடித்து இங்கே வந்து விடுவர்கள் என்ற யோசனையில் துரிதத்துடன் செயல் பட்டு, அவர்கள் வரவும், கோயம்மேடு சென்று நேரடி பேருந்து தேடி கிடைக்காமல் மதுரை செல்லும் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.
பெரியாவின் ஞாபகம் மொத்தமும் மனசுக்குள் வரத்தொடங்கி விட்டது.
மூன்று மாதத்திற்கு முன் ஊருக்கு போயிருந்தபோது பெரியாவைப் பார்த்தேன்... அவருக்கு பிடிக்குமேனு அருப்புக்கோட்டை பேருந்து நிலையக்கடையில் வாங்கியிருந்த கருப்பு திராட்சையைத் தரவும் ‘மறக்காம வாங்கியார என்ன...' சொன்னார். அந்தக் கடைசிப் பேச்சு இப்போது எனக்குள் எதிரொலித்தது.
‘பெரியா...'
அப்பாவின் மூத்த அண்ணன். பெரிய அப்பா, ‘பெரியப்பா ' தான் பேச்சு வழக்கில் எனக்குப் பெரியா, பெரியா என ஒட்டுதலாகிவிட்டது.
ரத்தினவேல் சேர்வை என்றால் கீகாடு மொத்தத்துக்கும் தெரியும். இந்த சேர்வைப்பட்டம் இப்போதெல்லாம் கிராமத்துக்குள் மட்டுமே...
பிழைக்கப் போன இடங்களில் பிள்ளைமார் வழியில் சம்பந்தம் தொடங்கி ஊன்றிவிட்டது. அதற்குக் காரணம்... முன்னோர்கள் களவானி தொழிலில் முனைப்புடன் இருந்தனராம்,ஒருகால கட்டத் தலைமுறையினர் ‘இனி தழைக்கும் வம்சம் இப்படி இருத்தல் கூடாது என யோசித்து எடுத்த முடிவில் பிள்ளைகளைப் பட்டணம் அனுப்பினர்,ஒன்று மாறியது... அடுத்தும் தொடர்ந்து கொண்டது. இன்றைய கணக்குப்படி பெரிய தலைகள் விழுந்து விட்டால்... தலைமுறை மாற்றம் தெரியாமலே போய்விடும் எனலாம்.
வானம் பாத்த வெள்ளாமை நெறஞ்ச பெரிய கிராமத்துக்குள் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பெரியாம்பளை இருப்பார். எங்களை சார்ந்தவர்களுக்கு எல்லாமே பெரியாதான் என்றாலும் அவர் ஊருக்கேப் பெரியவர் என்பதே நிமித்தமான சொல். பாகுபாடற்ற மரியாதைக்கு உரியவர், தெருவுக்குள் அவர் நடந்து சென்றால் அப்படியொரு கம்பீரமாயிருக்கும், பொதுநலப்போக்கில் வாக்கு மாறாத நியாயஸ்த்தர், ஊர் முகப்பில் ஒரு காபிக்கடை இருக்கும், அந்தக் கடைக்குப் பெரியா போனதே கிடையாது...
காரணம்? சாதியால் ஒதுக்கப்பட்டவர்கென தனி அலுமினிய டம்ளர் முறை இருந்தது. அதில் அவருக்குத் துளியும் உடன்பாடில்லாததால் தன்வரை ஒதுங்கல்.
காட்டு வேலைக்கு ஆட்களைத் தோது பண்ணி அனுப்பிவிட்டு கத்தையான புராண ஏடு வாசிப்பதே அவருக்கு அலாதியான விருப்பம். இப்போதுள்ள வார்த்தையில் சொன்னால் லேசர் ஒளி வேகத்தில் வாசிப்பார்.
இமைகள் மூடவில்லை...பேருந்துகூட வேகம் பிடிக்கவில்லை. எப்படியும் நாளை மதியத்துக்கு மேல்தான் ஊர்போய் சேருவோமோ...?
‘அவ்வளவு பெரியதை அதற்குள் வாசித்து முடித்துவிட்டாரா...? ' அடிக்கடி எழும் இந்தக் கேள்விதான் இப்போது என்னைக் கணிணியில் இலக்கியம் படிக்கத் தூண்டுகோலாக இருந்து அதிக நேரம் அமர வைத்துள்ளது.
லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில், ராமாயணம், மகாபாரதக் கதையெல்லாம் சொல்வார், பெரியா. கேட்க ரசனையாக இருக்கும். ஊருக்குள் நல்லது என்றாலும், கெட்டது என்றாலும் ‘ரத்தினவேல் சேர்வைக்குத் தாக்கல் சொல்லுங்க ' என்பார்கள்.
அதாவது இரவு விடிய,விடிய சரித்திரக் கதை, அழகுடன்,கோர்வை நேர்த்தியாகச் சொல்வார். அவ்வப்போது கருப்பட்டி கடுங்காபி தருவார்கள். கொஞ்சமாக, கொஞ்சமாக உருஞ்சியபடியே தொடர்வார். அதிலே பெரியாவுக்கு அப்படியொரு ஆத்ம திருப்தி. என்பதை முகமலர்ச்சியோடு கூறுவார். மனப்பூர்வமான அந்தச் சேவை அவருக்கு ஓர் அடையாளம் தந்தது.
‘பத்து நிமிசம் வண்டி நிக்கும் டீ, காபி சாபிடலாம் ' குரல் கேட்டு.கண்ணாடி விலக்கிப் பார்த்தேன் திருச்சி தாண்டிய சாலையோரக் கடை தெரிந்தது.
பேருந்து மெதுவாகத்தான் பயணிக்கிறதோ... கொஞ்சமாய் விடியல் தெரிந்தது. அலைபேசியில் பார்த்தேன் ‘ஜந்து நாப்பது' நேரம் காட்டியது. எப்படிப் பார்த்தாலும் மதுரையில் இறங்கி ,அருப்புக்கோட்டை செல்லும் பேருந்தில் பயணித்தால், பதினொன்று - பணிரெண்டாகி விடும். ஊருக்கு போகும் வண்டி நாலுமணிக்குதான்... ‘ம் ' அடக்கம் செய்வதற்கு முன் சென்றுவிட வேண்டும். உள்ளுக்குள் அடித்துக் கொண்டது.
ஒருமுறை தேனையநாடாரின் குறும்புக்கார மகன் ‘ரத்தினவேல்சேர்வை இறந்துட்டார் ' என சொல்லிவிட மணி அய்யரும், ராமசாமி நாயக்கரும் விழுந்தடித்து வீட்டுக்குப் போக, உயரமான வீட்டுமுன் தின்னையில் பெரியா காலாட்டிக் கொண்டு கல்கி இதழ் படித்துக் கொண்டிருக்க, வந்த பெரியவர்களுக்கு விக்கிப்போனது. பின்னாலயே வந்த பஞ்சநாதன் சிரிக்க, விசயம் அறிந்து அனைவரும் சேர்ந்தே சிரிக்கவும், கொஞ்சமாய் கோபம் கொண்ட பெரியம்மாவோ கடுங்காபி கலந்துதர, அந்தச் சம்பவம் ஊருக்குள் மாதக்கணக்கில் ஓடியது.
எதற்கும் முகம் சுழிக்காத மனிதர்.
மாட்டு வண்டியில் பருத்தி பாரம் ஏற்றினால் போதும், புதூர் ஓட்டலின் இட்லியும்,மொச்சையும்,போண்டாவடையும் ஞாபகத்துக்குள் வர நான் மெல்லப்போய் அவரிடம் நிற்பேன்.
‘என்னடா வாரீயா... பள்ளிக்கூடத்துக்குப் போகலெனா ஒ ஆத்தா வைவா...' அவர் முடிக்கும் முன் ‘நாளைக்கு லீவு பெரியா ' என சொல்லிவிடுவேன்.
இரண்டுதாட்டு பருத்தி அடுக்குக்கு மேல் கட்டுக்கயிரை பிடித்தபடியே ஒருவிதத் துள்ளலோடு மாட்டு வண்டியில் பயணிப்பேன்.
இரவு, டூரிங்டேக்ஸில் சினிமா, முருக்கு, கல்கோனா மிட்டாய் என போதும் போமெனபெரியா வாங்கிக் கொடுப்பார்.காலையில் ஓட்டலுக்குள் நுழைந்தால் வழக்கமான அயிட்டங்கள் இலை நிரம்பிவிடும், ஆவலோடு எல்லாம் ருசித்துச் சாப்பிடுவதைப் பெரியா ரசித்துக் கொண்டிருப்பார்.
பருத்தி போட்ட பணத்தை மில்லில் வாங்கியதும் ஏர் வெயிலில் திரும்பினால் ‘என்னடா இன்னிக்கு திருப்தியா..?' கேட்பார்.
‘ம் பெரியா...' நான் தலையாட்டுகையில், மடித்த தாட்டுக்குள்ளிருந்து ஒரு பொட்டலம் எடுத்து நீட்டுவார்... தெரியும் அது மாவடலை சேவு.
ஏதோ எனக்குள்ளே கும்மாளமிடும் அன்னிக்கு முழுவதும் சிரிப்பாயிருப்பேன்.
‘பெரியப்பன் கூட புதூர் மில்லுக்குப் போய் வந்துட்டா ஆளே ரெண்டாதான் மாறிடுவான் ' ராக்குப்பாட்டமா சொல்லும்.
மாட்டுத்தாவணியில் இறங்கியதும் அருப்புக்கோட்டை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் நோக்கி வேகமுடன் நடந்தேன், சாப்பிடக்கூடத் தோன்றவில்லை, பெரியாவை அடக்கம் பண்ணும் முன்பாகவே கடைசி உருவாக காணவேண்டும் என்ற எண்ணமே மேவியிருந்தது. கிளம்ப தயாராயிருந்த சந்திரா பேருந்தில் ஏறி அமர்ந்தேன்... பேசும் சொந்தங்கள் எண் நலத்தையும்,பெரியா சாவையும் விசாரித்தனர்.பங்காளி பகையான சிலரோ பார்வையிலேயே ‘ இவன் கொஞ்சம் வசதியா ஆயிட்டாம் போல...' என கருவினர்.
ம்... வழக்கம்போல் வண்டியை ஓட்டுனர் முணுக்கி நகர்த்த, நடத்துனரோ ‘காரியாபட்டி, கல்குறிச்சி, பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை...' கூவினார்.
பொருளாதாரம் மட்டும் தனக்கு செழிம்பாக இருந்தால் சென்னையிலிருந்தே காரில் வந்து முதலாளாக நின்றிருப்பேன். சின்ன பெருமூச்சி வெளிப்படவும், வண்டி வேகமெடுத்தது.
பயணக்காட்சியில் நிலமும்,வானமும்,மரங்களும் பின்நோக்கிப் போவது மாதிரி மேலும்... எனக்குக் கடுமையான அம்மைக்கட்டு, ஒரு பக்கம்
கன்னம் முழுவதும் பெரிய வீக்கம். ஊர் முத்துமாரி அம்மனைக் கும்பிட்டு அசயாமணி வேப்பமரத்தில் காப்பு பறித்து, அறைத்துப் போட்டாள் அம்மா.
இரவு உறக்கமின்றி தகிக்கையில் கத்தை புத்தகத்தோடு வந்தமர்ந்த பெரியா. ராமாயணத்தில் சீதையைச் சிறையெடுக்க, ராவணன் முயன்ற விதம், புள்ளிமான் உருமாற்றம் என கதையின் பாகத்தை அழகாக சொல்லிக்கொண்டு போக, மெல்லமாய்த் தூங்கிவிட்டிருந்தேன். காலையில் அம்மாவோ ‘தம்பி அம்மக்கட்டு இறங்கிருக்கு...' உண்மைதான் சோர்வும், அழுத்தமும் குறைந்திருந்ததாகவே
நானும் உணர்ந்தேன்.
பரளச்சி வந்தாயிற்று, பொழுது மொத்தமும் மேற்கில் விழுந்திருந்தது இன்னும் சற்று நேரத்தில் ஊர் வந்துவிடும்.
பெரியாவின் உடலை மந்தக்காட்டில் அடக்கம் செய்திருப்பாங்களோ...? மனசுக்குள் இனம்புரியாத படபடப்பு...
பொழுதும் சாய்ந்து விட்டது, வேகமுடன் பெரியவீட்டுக்குச் சென்றேன் நினைத்துக் கொண்டிருந்த மாதிரியே பெரியா உடலை தூக்கி விட்டிருந்தனர்.
தன்னை மறந்த நிலையில் கால்கள், பூக்கள் சிதறிப்போன வழியே ஓடின. மந்தை பூவரசமரத்தடியிலிருந்து முருகன் ‘வேகமா வாங்க...வாங்க...' என கைகாட்ட, வேகமெடுத்தேன்.
மூச்சிறைக்கக் கூட்டத்தை விலக்கிப் பார்த்தேன்...
குழிக்குள் பெரியாவை உட்கார்ந்த நிலையில் வைத்திருந்தனர், பெரியதலை சத்தியக்கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டானவர், புராணங்கள் அறிந்தவர், ஒழுங்குமுறை சித்தநெறி கொண்டவர், பேச்சுக்குக் கூட யாரும் தன்னை, தன் செயலைத் தவறாகக் கருதக்கூடாது என்று நேர்மையைக் கடைப்பிடித்தவர்.
பெட்மாஸ் வெளிச்சத்தில் எனக்கு நல்ல காட்சியாகவே தெரிந்தார்... அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் ‘பெரியா...' என உடையவும், அழுகை பொங்கியது.
ஊரில் இருந்த நாட்களில் நான் பெரியாவுடன் கொண்டிருந்த ஒட்டுதலை ஞாபகப்படுத்திய அங்கிருந்தவர்கள் அனைவரும் என்னையே பார்த்தனர்.