நான் தனியாக நடந்து கொண்டு இருந்தேன். இந்த இரவு நேரத்தில் என்னை ஒரு நிழல் தொடர்வது போல் இருந்தது. என் கைத்துப்பாக்கியை எதற்கும் தயார் நிலையில் வைத்திருந்தேன். எதிரி என்னைத் தாக்க வரும் போது நான் தாக்குவதை விட அவர்களைத் தேடிச் சென்று தாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த நிழல் இன்னும் என்னை தொடர்ந்து கொண்டு இருந்தது. நான் நடக்கும் போது என் கண் எதிரில் ஒரு முட்டு சந்து தென்ப்பட்டது. அந்த நிழலிடம் தப்பிப்பது போல் அந்த முட்டுச் சந்துப் பாதையில் ஒளிந்து கொண்டேன். அந்த நிழல் என்னை விடுவதாகத் தெரியவில்லை. அது என்னைப் பின் தொடர்ந்து முட்டுச் சந்தில் நுழைந்தது. நான் அந்த உருவத்தை பின்புறம் இருந்து பிடித்து என் கைத்துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டினேன்.
"யார் நீ... எதுக்காக என் பின்னாடி வர...?"
"நீங்க சி.ஐ.டி சங்கர் தானே...!"
"ஆமாம்... நீ யாரு...?"
"என் பேரு கதிரேசன். ஹோட்டல்ல சர்வரா இருக்கேன். நான் வேலை செய்ற ஹோட்டல்ல இரண்டு பேரு சென்னைய அழிக்க டைம் பாம் வைக்கப் போறதா பேசிக்கிட்டாங்க...!"
"மை காட்... ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைன்ட் பண்ணல..."
"எனக்கு போலீஸ்னா பயம்... கோர்ட் கேஸ்னு அலைய முடியாது. விஷயம் தெரிஞ்சு அவங்க என்னைக் கொன்னுட்டா... அதான் சொல்லல..."
"சரி... என்னை எப்படி உனக்கு தெரியும்?"
"தினமும் உங்களப் பத்தி பேப்பர்ல படிக்கிறேனே... உங்க திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..."
"சரி... உனக்கு அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா...?"
"தெரியும் சார்... வாங்க காட்டுறேன்"
அந்த இருட்டில் நானும், கதிரேசனும் சென்னையை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளைத் தேடிச் சென்றோம். ஒரு நகரத்தையே அழிக்க நினைக்கிறார்கள் என்றால் அவர்களிடம் எப்படிப்பட்ட வெடிகுண்டுகள் இருக்கும் ? அதை எங்கிருந்து கொண்டு வந்தார்கள். இவர்களை இயக்குவது யார் ? இப்படி பல கேள்விகள் என் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.
இத்தனைக் கேள்விகளுக்கும் நடுவில் எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. கதிரேசனை நம்பலாமா...? திடீர் என்று வந்தான். வெடிகுண்டு வைக்கிறார்கள் என்றான். நானும் அதை நம்பி அவனுடன் வந்துவிட்டேன். ஒரு வேளை என்னைக் கொல்ல எதிரியின் சூழ்ச்சியாக இருந்தால்... ? எதற்கும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
"சங்கர் சார்! அவங்க அந்த கம்பி ரூமுக்குள்ளதான் இருக்காங்க.."
எனக்கு சந்தேகம் அதிகமானது. எதற்கும் முன் எச்சரிக்கையாக போலீஸ் ஹெட் குவார்ட்டர்ஸ்க்கு போன் போட்டு விஷயத்தைத் தெரியப்படுத்த வேண்டும். என் செல்போனை எடுத்துத் தகவலை சொல்லி நான் இருக்கும் இடத்தைப் பற்றியும், பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளைப் பற்றியும் தெரிவித்தேன்.
"சங்கர் சார் ! சிக்கீரம் வாங்க ... நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் சென்னைக்கு ஆபத்து...!"
ஒரு வேளை அவன் சொல்வது உண்மையாக இருந்தால் என்ன செய்வது ..? சென்னையைக் காப்பாற்ற வேண்டும். நான் என் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் கம்பி அறையில் நுழைந்தேன். அங்கு இரண்டு பேர் வெள்ளைச் சட்டையில் இருந்தார்கள். எனக்கு அதிகம் பழக்கமான முகம் போல் தெரிந்தது.
"இந்திரன், ராமு இவர்கள் எப்படி இங்கே..?" - நான் யோசித்து முடிப்பதற்குள் கதிரேசன் அந்தக் கம்பி அறையைப் பூட்டினான்.
"ஏய்... என்ன பண்ணுற உன்னைச் சுட்டுடுவேன் " - என் கைத்துப்பாக்கியால் அவனைச் சுட்டேன். என் துரதிர்ஷ்டம் என் கைத்துப்பாக்கி சுடவில்லை.
"இன்னொரு முறை இப்படி நடந்தா... உங்களை வேலையை விட்டுத் தூக்கிடுவேன்.." என்று தன் இரண்டு கம்பௌன்டர்களையும் கடிந்து கொண்டான் கதிரேசன்.
"எல்லோரையும் கவனிக்கத்தான் உங்களுக்கு சம்பளம் தர்றாங்க...இனிமேலாவது கவனமா வேலைய பாருங்க..."
"சாரி டாக்டர்...இனிமே இப்படி நடக்காது..." - கம்பௌன்டர்கள் இருவரும் சேர்ந்தே சொன்னார்கள்.
"ம்ம்... எந்த பைத்தியமும் தப்பிச்சுப் போகாம பார்த்துக்கோங்க...அப்படி போயிட்டா உங்க வேலை போயிடும்...ஜாக்கிரதை" என்று கூறியபடி டாக்டர் கதிரேசன் நகர்ந்தார்.
"இந்திரன், ராமு கவலப் படாதீங்க. நான் போலீஸ்க்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டுத்தான் இங்கே வந்தேன்..." என்று தன் கையிலிருந்த பொம்மைத் துப்பாக்கியைக் காட்டிச் சிரித்தான் போலீஸ் வேலையில் சேர்ந்து பெரிய அதிகாரியாக ஆசைப்பட்டு அது முடியாமல் தோல்வியடைந்ததால் பைத்தியமான சங்கர்.