அவரின் பெயர் வீரணன்சார்... அதென்ன 'சார்' பட்டம்னு யோசிக்கிறங்கிளா... மரியாதைக்குரியவர். ரயில்வே துறையில் ஸ்டேசன் மாஸ்டராகப் பணியை நிறைவுசெய்து, தற்போது ஓய்வுபெற்று ஒரு வாரம்தான் ஆகிறது. வயது அறுபதுக்கு மேலென்றாலும், மிடுக்கான தோற்றம், நல்ல எண்ணங்களுடன் சீரிய சிந்தனை, தொலைநோக்குப் பார்வை கொண்டவர். எப்படிப்பட்ட உதவியானாலும், அதை யார் கேட்டாலும் 'நம்ம வீரணன்சாரை பாருங்களேன் ' என்னும் அளவுக்கு அவர் சார்ந்த துறையிலும் சரி, அந்தப் பகுதியின் மக்களாலும் சரி அடையாளமாய், உடனே கிளம்பி முன் வரக்கூடியவர்.
தனி மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டுமென பிறரால் குறிப்பிடும்படியாக, அவரின் செயல்களும் இருக்குமென நம்பும்படியாகத்தான் மடிப்பு கலையாத பளீர் வெள்ளை பேண்ட்டும், முழுக்கை சட்டையும் அணிந்த, சிரித்த முகமானவர்.
ரயில்வேயில் வேலை... முதலில் சின்ன பணிதான், வீரணனின் வேலைத்திறமை, பணிவு, தனக்கு மேல் இருப்பவகளுக்கு கொடுக்கும் மரியாதை, அதே சமயம், சுய காரியம் சாதிக்கும் குறுக்குத்தனமின்றி நேர்மையுடன் நடந்து கொண்டதில், பதவி உயர்வுயென்பது தானாக அவரைத் தேடி வந்து சேர்ந்தது.
'சுத்த சைவம்' னு சொல்லுவாங்கள அந்த மாதிரியானதொரு அக்மார்க் பிரம்மச்சாரி!’
'என்னப்பா கல்யாணம் செஞ்சுக்கறதா உத்தேசமில்லையா?'
'நம்ம வீரணனுக்கு சம்சார வாழ்க்கை பிடிக்காதோ...'
'மனைவி, மக்க பெரிய தொல்லைனு நினைக்கிறாரோ...'
'ஒன்டிக்கட்டதான்பா நிம்மதி...'
'உண்மையிலேயே வீரணன் சாருக்குப் பெண் துணை, அவளோட அன்பு, ஆசா பாசம், அரவணைப்பு எல்லாம் தேவையில்லன்னு தோனுதோ?'
இப்படித்தான் சக வேலையாட்கள்,மேலதிகாரிகள் கேட்பார்கள். சிரித்த முகத்தில் புன்முறுவலையும் சேர்த்துச் சமாளித்துவிட்டு, கேள்விகளுக்கான மொத்தப் பதிலையும் உள்ளுக்குள் நிறுத்திக் கொள்வார்.
அறிந்தவர், தெரிந்தவர் வீடுகளில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் முதல் நபராக, சகசமாய் சென்று வந்தாலும், 'உங்க வீட்ல ஏதும் விசேஷசம் வைக்கலையா? நீங்க எந்த ஊரு? வேலை, வீடு பொதுநலச் சேவைன்னு இருக்கீங்களே... உங்க சுயம்தான் என்ன?' என்று ஒருவர் கூடக் கேட்டதில்லை.
அதையெல்லாம் எண்ணிப் பார்த்து, வருந்தமாட்டார்.
தன் சுயத்தை வெளிக்காட்ட, அவர் விரும்பியதுமில்லை. அப்படியொரு அனுதாப சந்தர்ப்பத்தை, எந்தச் சூழ்நிலையிலும் ஏற்படுத்தாது இருந்தார்.
தன்னந்தனியான வாழ்வு... அடுத்தவர் தயவின்றி லேசானதொரு பக்குவத்திலேயே நாப்பது வருஷங்களைக் கடந்து வந்த போதும், கடந்த கால நெருடல், அதனால் உண்டான காயம்,நெஞ்சத்தை ரணப்படுத்திக் கொண்டேயிருந்தது...
இப்போதோ நிரந்தர பணி விடுப்பு... துறை ரீதியான விசயங்களை நேர் செய்துகொள்ளும் வரை காலனிக் குடியிருப்பில் இருக்கலாம். அதன் பிறகு?
நீண்ட யோசனைக்குபின், இதே சென்னை தாம்பரம் பகுதியில் பிளாட் வாங்கி தங்கி விடலாமா என்று, சமீபத்திய நண்பர் பரமனிடம், விருப்பம் கேட்டபோது,
'ஏ மனசுலேயும் இதுதான் தோனுச்சு... ஏன்னா, அடுத்த மாசம் நானும் ரிட்டயர்ட் ஆகப்போறேனில்ல, நல்லாப் பழகின நாம வயசான காலத்துல ஒருத்தருக்கொருத்தரா பேசியிருந்து பொழுதக் கழிச்சுருலாம்ல' என்று அவர் சொல்லவும்
தனக்குள்,ஏனோ சிரித்துக்கொண்டார் வீரணன்சார்.
இப்பகூட தன்னோட தேவைக்காகத்தான் நண்பர் பேசுகிறார்.
'ஊருபக்கம்போயி சொந்த சனத்த பாக்கனும்... அவங்களோட சேரனும்னு உங்களுக்கு நெனப்பு இல்லையா...?'னு உருத்தா கேட்கலையே... அல்லது அந்த மாதிரியான சனங்களிடம் தொடர்புகள் கிடையாதென முடிவே பண்ணிக்கொண்டாரா...?
எண்ணப்படியே தொப்புள்க்கொடி உறவுபோல் காலனி, ரயில்பாதை அருகிலேயே அடுத்த சில நாளில் சொந்த வீடு வாங்கிவிட்டார்.'வீரணன்சார் நம்ம மனசுக்கு எல்லாம் சரியா அமையும்' சந்தோஷப்பட்டார் பரமன்.
அதிகாலை 5.30 மணிக்கு சந்திப்பு.
நாயர் கடையில் டீ, முக்கியச் செய்திகளை நாளிதழில் படித்துவிட்டு எழுந்தால், ஏழு மணிவரை நடைப்பயிற்சி. அப்படியே ரயில்வே ஸ்டேசனுக்குப்போய் ஓரமான சிமெண்ட் இருக்கையில் உட்கார்ந்து கொள்வார்கள்.
சென்னை வந்திறங்கிய பயணிகளும், சென்னை நகருக்குள் செல்லும் பயணிகளும் ரெக்கையின்றி பறந்தோடுவதை காணும்போது, அவர்களின் எண்ணங்கள் பின்னோக்கி செல்லும்... ஆனாலும், இன்றைக்குப் பரபரப்பு நிலவரம் அதிகமாகிவிட்டன. மனிதர்களைச் சவுக்காலடித்து விரட்டுகிறது இந்தச் சமூகம். இதிலே தொய்வில்லாது ஓடுபவர்களே வாழ்க்கையில் முன்னால் நிற்கலாம். 'ம்' என்று சின்னதாய் துவண்டால் கூட, அவ்வளவுதான் துயரங்களிலேதான் விழவேண்டும்.
'கடந்து வந்தவர்கள் நாம்' என்று பெருமூச்சோடு காலைப் பொழுதை தள்ளிக்கொள்வார்கள்.
வேலையில் இருந்த போதே 'நானே முதல் ஆள்' என்று தலை நீட்டுவார்... இப்போது சொல்லவாவேணும். எந்தெவொரு விஷேசமானாலும் வெள்ளைமனிதராய், நண்பர் பரமனுடன் ஆஜராவகிவிட, அவர்களின் நட்பு, விரிவாகையில்தான்... ஒன்றை உணர்ந்தார் பரமன்.
சாயங்காலம் வீட்டில் சந்திப்பு, சில விசயங்கள் பறிமாற்றம். காபி சாப்பிட்ட டம்ளரைக் கீழே வைத்தபடியே, "வீரணன்சார் உங்களுக்குள்ள ஏதோவொரு பெரிய கனத்தத் தூக்கி, தூக்கி வச்சிக்கிறிங்களோன்னு நினைக்கிறேன்... சரியா?" கேட்டு விட்டார்.
பழுத்த பழம் காற்றடிக்கவும் வீழ்ந்து விடுவதுமாதிரி சட்டென குழைந்துபோனார். எதிர்பாராதது... இப்படி கிளற மாட்டாரான்னு சில நாட்களாய் எதிர்பார்த்திருந்தது... மெல்ல கண்களில் கசிவு.
"நீங்க இல்லாத நேரத்துல, அந்த இடத்துல, நம்ம சார் தேக்குமரம் மாதிரினு பெருமைப்படுவோம்... அந்தக் கம்பீரம் கலங்குறதா? பேசுறது, சிரிக்கறது, டி.வில நகைச்சுவைக் காட்சியைப்பாத்து துள்ளல் போடுறது, எல்லாத்துலேயுமே சாயம் பூசுறிங்களோன்னு தோனுது... அதான் கேக்குறேன்... எதுனாலும் வெளிப்படையா மனசுவிட்டு பேசுங்க..."
நீண்ட மெளனத்தை தொடர்ந்து,
"வீரணனா தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் ஆபீஸில் எடுபுடி ஆளா வேலைய தொடங்கி, இன்னிக்கி தாம்பரம் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் வீரணன்சாரா பணிய நிறைவு செஞ்சதுல அதிகபட்ச பெருமை. மத்தவங்க எனக்கு கொடுக்கும் மதிப்பு, மரியாதையும் என்னைய நிறையவே ஒழுங்குபடுத்தி விட்டது. இத்தன வருஷத்துல பலபேர்கூட நெருக்கமா பழகியிருக்கேன்... யாரும் இதுமாதிரி உணர்வுப்பூர்வமா கவனித்துக் கேட்டதில்லை.
'யாதுமறியும் நட்பு!'ங்கறது உண்மையே... எனது சுயம்,பூர்வீகம்னு ஒன்னு இருக்குல?" தொண்டைக்குழி எச்சில் வாங்கியது.
'சொல்லுங்க வீரணன் சார்' தோழமை பதித்துப் பார்த்தார் பரமன்.
"அருப்புக்கோட்டைக்கு பக்கத்துல உள்ள வடக்குநத்தம்தான் என்னோட சொந்த ஊர் பரமன்சார்" அதென்ன... புதுசா 'பரமன்சார்' சட்டென இமைகள் விரித்து, கேள்வி கலந்து நண்பரை ஏறிட்டார்.
"மனுசன மனுசனா கருதாத ஆதிக்க சாதிவெறி பிடிச்ச ஊரில் எங்க குடும்பம் தாழ்ந்த வகுப்பை சேர்ந்தது”
உடனே... "நிறுத்துங்க சார்... இந்த காலத்துல போய் சாதி கீதின்னு... திடீர்னு நீங்க என்ன சார் பட்டம் போட்டபோதே நெனச்சேன். மனித நாகரீகம், நட்புனு எல்லாம் தலைகீழா மாறீப்போச்சு இப்ப..."
கைச்சாடையில்'பொறுமையா இருங்க'னு செய்கை காட்டியதும், "கரும்புள்ளியான பால்யம்... சும்மா கேளுங்க பரமன்சார்..." என சின்ன இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார் வீரணன்சார்.
எங்கள் வடக்குநத்தம் ஊர், கோயில்கள் நிறைந்த பெரிய ஊர். அங்குதான் ஆதிக்கசாதிக்காரர்களின் இருக்கமான பிடிக்குள் நூத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் அவமானச் சின்னங்களாக உயிர் வாழ்ந்து வந்தனர்... பெரிய சம்சாரிகளின் வானம் பார்த்த காடுகளில், பண்ணைத் தொழுவத்தில் தானியக்கூலிக்குக் கொத்தடிமை வேலையே அவர்களின் சாபம். சம்சாரிகளைக் கண்டுவிட்டால் தலையில் கட்டியிருக்கும் துண்டையெடுத்து கக்கத்திலே வைக்கனும் அல்லது இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டிய அவலம். தாகம்னு
தண்ணி கேட்டால், கையிலேதான்ஊற்றுவார்கள். பெரிய வீட்டுத் தெருவில் செருப்பணிந்து, செருமல் போட்டு நடக்கக் கூடாது, தனி கிணறுதான். சாமான் வாங்கக கடைக்கு சென்றாலோ... மேலத்தெரு சம்சாரிங்க வாங்கும் வரை ஒதுங்கித்தான் நிக்கனும். டீக்கடையில் கொட்டாங்குச்சி சிரட்டையிலேதான் டீயை ஊற்றுவர். குடித்ததும் அவரே கழுவி வைத்துக் காசை, தண்ணீர் நிரப்பிய தானிய உலக்கிலே போட வேண்டும்.
சிறு வயதிலேயே தாயை இழந்த இந்த வீரணன், புதூரில் ஒண்ணுவிட்ட மாமா மூலமாகத்தான் படித்தேன். தேச நடப்புகள் அறிந்தவன், சமத்துவ விழிப்புணர்வு செய்திகள் படித்தவன், என்றாலும் அதை அந்த ஊருக்குள் காட்டமுடியவில்லையே என ஆதங்கப்படுவேன். ஆத்திரம் கொள்வேன். மேலத்தெரு மனிதர்களோ... என்னை விபரமான ஆளுனு தெரிந்தே, 'டேய் கூழாண்டி பேரனே வாடா இங்க' என்று சீண்டுவர். ஆமாம் என்னோட பேரு 'வீரணன்'ல ஆதிக்கசாதிக்காரங்க வாய்க்கு அது தீட்டான சொல்லாம். குமைந்து போவேன். நெஞ்சிக்குள் கனல் எறியும். இது படைப்பின் ஈனமென உள்உதடு கடித்துக் கொள்வேன். வேறொன்றும் செய்யமுடியாதே...
'கீழ்சாதி ' முத்திரையால் கோயில்நுழைவு அனுமதி கிடையாது. மனித பிறப்பாலான பெரிய கொடுமை, மானுடத்தின் மடமை, என்று எல்லாம் சகித்துக்கொண்ட சனங்கள்... பழக்கப்பட்ட வாழ்க்கையென சீரழிந்து கிடந்தபோதுதான் 'ஏகமே ஏசு' என்ற போதனைக் கூட்டம் கிராமத்துக்குள் வந்தது.
ஆதிக்கம் விடுமா? அடித்து துரத்தியது, தெற்குத்தெருவுக்குள் ஓடினர் பாடினர்.
காயம்பட்டுக் கிடந்தவர்களுக்கு மருந்தானது போதனைக்குரல்.
'நீங்களெல்லாம் ஏசுவின் குழந்தைகள், எமது சபையில் நீங்கள் சரிசமமாய் வளர்க்கப்படுவீர்கள்... உங்கள் தவிப்புகள், மன வேதனைகள், பிணியான துயரங்கள், கர்மகஷ்ட கண்ணீரைத் துடைக்க இதோ, ஏசுவின் கரம் உங்களைத்தேடி வந்துள்ளது'
வாரியணைத்துக் கொண்ட மாதிரி, ஒவ்வொருவர் தலையிலும் கரம் பொதித்து இதம், பதமாய் கண்கள் வரை நீவி விட்டனர்.
அடுத்து வந்த நாட்களில், சில குடும்பங்கள் கிறிஸ்துவுக்கு மாறியது. கறிமூட்டம் போட்டுக்கொண்டிருந்த வெற்றிடத்தில் குடிசையமைத்து, உள்ளே சிலுவையும் வைத்து ஜெபிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.
'மதம் மாறினால் எல்லாம் சரியாகி விடுமா ?
செருப்பு தக்கிறவங்க அப்படியே இருக்காங்க நீங்கயேன்...' தனது சனங்களிடம் கத்தினான். 'அட நீ போப்பா... கடயே கூடாதுனு சொல்லச்சொல்லு பாப்பம். எல்லாமெ அவுக தோதுக்குத்தான். முடிவெட்ட, சவரம்செய்ய குடிமக்க வேணும், அழுக்குத்துணி தொவைக்க ஏகாளி வேணும் அதான் கூட சேத்துக்கிட்டாங்க. நாம வழி வழியா ஒதுக்கப்பட்ட சனங்கப்பா... ஏணியா ஏசையா அழைக்கிறார் போறோம். பொறந்த இந்த ஊர்ல கீழ்சாதினு நரகலா பாக்குறாங்க ஆனா தூத்துக்குடி பிராத்தணைக் கூட்டத்துல அத்தன சனமும் ஒத்துமையா நாக்காளில ஒக்காந்தோம். எம்புட்டு சந்தோசம்' சொன்னார்கள்.
வீரணனால் அவன் சார்ந்த குடும்பத்தைக்கூட மதம் மாற்றத்திலிருந்து தடுக்க முடியவில்லை. நிறைய விசும்பினான். பொறுக்க முடியாது, பஜனை மடத்துக்குப்போனான்.
'எங்க தெரு சனங்க அடையாள்மில்லாமப் போறாங்க நீங்க தீண்டத்தகாதவங்களா எங்கள ஒதுக்கனது போதும்... மனுசனுக்கு மனுசன் பேதமை வேணாம்... அவங்கள கூப்பிட்டு பேசுங்க...'கண்ணீரும், கம்பளையுமாகச் சொன்னேன்.
இதைக் கேட்டு வேகமுடன் எழுந்த தலையாரி, என்னை ஓங்கி எத்த... அப்போதும் நிறைய பேசினேன். இளவட்டங்கள் ஓடியாந்து பருத்திமாறால் விலாச, ரத்தம் ஒழுக ஒழுகப் பேசினேன்.
பஞ்சாயத்து கூடியது,தெற்குத்தெரு சனங்கள் கேள்விக்குறியாய் கைகட்டி நின்றிருந்தனர். என் பின்னங்கை கட்டப்பட்டு இருந்தது.
''இதோ பாருடா இருளா ஓ மகன் நெறைய யோசிக்கறான்... தேவையில்லாததை பேசுறான்... ஊர்க்கட்டுப்பாடுபடிதான் நீங்க நடக்கனும்... இவன் வெளியில போய் நால தெரிஞ்சிட்டு வந்ததால நாங்க ஒங்கல கூட சேத்துக்கனமாக்கும்... ஒரு காலமும் அது நடக்காதுடா... எம்புட்டு திமிரு... அகராதி... நீங்க எந்த மண்ணாங்கட்டியா மாருனாலும் இங்க இப்படித்தான் இருக்கனும். இதுக்கு மேல ஓ மகன் இந்த ஊர்ல இருக்ககூடாது... இந்த ஊருக்குள்ள எந்தக் காரணத்தைக் கொண்டும் நுழையக் கூடாது... இத மீறினா மொத்த சனத்தையும் தள்ளி வெச்சுருவோம்..." என்று ஆதிக்கம் மிரட்ட, இயலாமையில் அப்படியே பின்வாங்கியது தெற்குத்தெரு.
எல்லாம் முடிந்தது.
"வெறுத்து அன்னிக்கே ஊரவிட்டு கிளம்பி ரயில்வேத்துறையே கதினு நாட்கள் ஓடிப்போச்சு. ஊரில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மறக்க முடியல... அந்த பக்கமே போகக் கூடாதுனு நெஞ்சில வைராக்கியமிருந்தாலும், பந்தம், பாச ஒட்டுதல், இதயத்தையே பிசையும்... பல்ல கடிச்சுக்குவேன்... தகப்பனார் செத்துப் போயிருப்பார் அதுகூட எனக்குத் தெரியாது 'இப்படியான இழிப்பொறப்பு தேவையான்னு?' அடிக்கடி என்னையவே நான் கேட்டுக்குவேன் பரமன்சார்" என்றபடி கேவிக்கேவி அழுதார் வீரணன்.
பரமனோ தடுக்கவில்லை. காலத்தோட பழைய அழுக்கு கறையட்டும்னு காத்திருந்து, "மனித சமுதாயத்துல தொடர் மாற்றங்கள்தான் ஏற்றம்னு சொல்லுவாங்க... அந்த வகையிலப் பாத்தா இப்ப நிலமை ரொம்ப ரொம்ப முன்னேற்றம்தான். ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் மக்கிப்போச்சு... இன்னுமா அந்தக் கருப்பு நிகழ்வை ஞாபகம் வெச்சுருக்கிங்க... கண்கூடா இங்கேயே மனிதச் சமத்துவத்தை நிறைய பாக்குறோமே... மன அழுத்தத்தை தூரத் தூக்கி எறிங்க சார்..."
"இது நகரம், இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம். கிராமங்களில்ல...? ரெண்டு மாசத்துக்கு முன்கூட உசிலம்பட்டி, உரப்பணூர்ல 'இரட்டை டம்ளர்' முறை இருக்கறதா செய்தி படிச்சேனே... அப்படினா தீண்டாமை இன்னும் இருக்குன்னுதானே அர்த்தம்"
"நீங்க நினைக்கிற மாதிரி இல்ல...வீரணன்சார்... வழுவான சட்டத்தால எல்லாத்தரப்பு சமூகத்திலும், 'அவுங்களும் மனுஷங்கதானே' என்ற சமத்துவ எண்ணம் வந்து ஒண்ணு, மண்ணாக் கலந்தாச்சு... பெருவாரியான கட்டமைபில், அங்க ஒண்ணு, இங்க ஒண்ணு நடந்ததா குறிப்பிடுவது தவறு மட்டுமே அதுவும் சரியாகி விடும். உங்க சின்னவயசு ஒதுக்கல், இப்ப சாத்தியமே இல்லாதது. சரி நாம சும்மாதான இருக்கம் ஒரு முறை உங்க ஊர்ப்பக்கம் போயிட்டு வரலாமா...?" என்று பரமன் கேட்க... கொஞ்சம் யோசித்து... பின் சம்மதித்தார்.
வடக்குநத்தம்தான் கடைசி நிறுத்தம்.
ஊரை நெருங்கும்போதே வீரணன்சார் கவனித்தார்... தீண்டாமைக் கிணறு, தூர்ந்து போயிருந்தது.பெரிய புளியமரம் அதே கம்பீரத்துடன் நின்றிருந்தது... ஆச்சரியம்தான். ஊர் முகப்பு வேறு மாதிரியாக இருந்தது, மனிதர்களும்தான். காளியம்மன் கோயிலுக்கும்,தெலா கிணத்துக்கும் நடுவே பஞ்சாயத்துக் கட்டிடம், பஞ்சாயத்து தலைவர் ராமசாமி..... வாரிசாகத்தானே இருக்கனும் என்று எண்ணி, கவனிக்க...
அங்கு 'கருத்தப்பொண்ணு' என எழுதப்பட்டிருந்தது. ஓ... சட்டத்தின் கட்டாயத்தில் தெற்குத்தெரு பெண் ஜெயித்திருக்கிறாள் போலிருக்கிறது...
அதைப் பார்த்துக் கொண்டே நண்பர் பரமனுடன் சேர்ந்து ஊருக்குள் பயணித்தார் வீரணன் சார்.
நான் யார்னு ஊருக்குள் தெரிந்தால்... பழைய ஞாபகங்கள் வரிசைகட்டி வந்து கொண்டிருக்க...புதிய நிலமை அவருக்குள் இனம் புரியாத நெகிழ்வூட்டியது.
"சீனி கம்மியா ரெண்டு டீ போடுப்பா" என்றபடி அங்கே கிடந்த பிளாஸ்டிக் சேரைப்பார்த்து 'உக்காருங்க சார்' என பரமன் கூறியதுதான் தாமதம்.
'முடியாதே... என நினைத்தது இப்போது முடிகிறது...'
வீரணன்சார் சிலிர்த்துப்போனார்.
கண்ணாடி கிளாசில் கொண்டு வந்து, 'இந்தாங்க சார் டீ' என்ற இளைஞனின் முகம் சட்டென்று இன்னொரு மனிதரின் முகத்தை நினைவூட்ட, விசாரித்த போது, 'நம்ம பேச்சி ஏகாளி பேரன் மதனகோபால் டவுனுக்குப் போய் கேட்ரிங் படிச்சிட்டுவந்து கிராமத்துக்காரங்களுக்கு புரட்டா, சால்னா, சில்லிசிக்கன், போன்லஸ்னு ருசி ருசியாவியாபாரம் பன்றான்' ஒருவர் கூறியதுதான் தாமதம் அந்த 'நம்ம' வார்த்தை
சாதியின் ஆதிக்க மூச்சை நிறுத்தி விட்டதாக உணர்ந்தார்.ஏகமாகக் குளிர்ந்த வீரணன்சார், தான் பிறந்து, வளர்ந்து சுற்றித்திரிந்த தெற்குத்தெருவுக்குள் நண்பரை கூட்டிப்போனார்.
ஒற்றைக்கலசம் தாங்கிய கோபுரத்துடன்கூடிய வினாயகர் கோயில் வரவேற்றதில் வீரணன்சாருக்கு உள்ளூர ஆனந்தம்!
குடிசைவேய்ந்த ஓடு கவிழ்த்த வீடுகள் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. நாகரீகம் கலந்த, பகட்டான தனது சனங்கள்... வசதியான வாழ்க்கையோடு அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என எண்ணிப்பார்த்து பூரித்தார். அதேசமயம், தான் வசித்த வீடு மட்டும் சிதைந்துப்போய்... கண்ணீர் முட்டியது அவருக்கு... சிலரை அடையாளம் தெரிந்தது, ஏனோ அவர்களிடம் பேசத் தோனவில்லை. குடிசைப் போட்டு சிலுவை வைத்திருந்த இடத்தில் சிறிய, கட்டிடக்கோயில்.
"என்ன வீரணன்சார் நம்புறீங்களா... இப்ப சந்தோஷமா? இதையெல்லாம் நேர்ல பார்த்தால்தான் உங்களோட கடந்தகால நினைவின் அழுத்தமெல்லாம் நீராவியா மறையும். அதான் உங்க ஊருக்குப் போயிட்டு வரலாம்னு சொன்னேன்..."
பரமனின் இருகைகளையும் நன்றியோடு இருக்க பிடித்துக்கொண்டார்.
பேருந்தில் ஏறிய வீரணன்சார், இருக்கைகளில் கலந்து உக்கார்ந்திருந்த தனது சனங்களின் சமத்துவம், வாழ்வாதாரம்,உயர்ந்திருந்ததை வெளிச்சமாய் உணர்ந்தார்.
'காலம்' மிகச்சிறந்த சிற்பி... நாட்களின் நகர்வில், மாற்றங்களை செதுக்கிக்கொண்டேதான் இருக்கும். இன்னும் செதுக்கும்!
பேருந்து கிளம்பியது... ஊர் கொஞ்சம்,கொஞ்சமாக மறைவது போல் தோன்றியது. வீரணன்சார் மனசிலிருந்தும் எல்லாமும் மறையத்தொடந்கியது.