ஒவ்வொரு வாரத்தின் வியாழக்கிழமையும் வந்துவிட்டால் வீட்டில் பரபரப்புத் தொற்றிக் கொண்டுவிடும். கணவன் மனைவி ரெண்டுபேரும் இளவயது வந்தவர்களைப் போன்று துள்ளிக் குதித்துக் கொண்டு ரெடியாவர்கள். கருப்பையா எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தயாரானார். தன் மனைவியைப் பார்த்து, “என்ன தங்கம் ரெடியாயிட்டியா... நான் ரெடி ... சீக்கிரம் கிளம்பு ...” என்று மனைவி தங்கம்மாவை விரைவுபடுத்தினார்.
தங்கம்மா சிவப்பு நிறப் புடவையை உடுத்தினாள். இந்த நிறம் அவனுக்குப் பிடிக்கும். அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. ஆனால் சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் அவனது கண்கள் விரியும். முகம் தாமரைப் பூவாய் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக்காட்சி பார்க்கும் பொழுது கூட சிவப்பு வண்டிகள், சிவப்பு ரயில்கள், சிவப்புப் பேருந்துகள் வந்தால் சிரிப்பான். கைகளைத் தட்டிக்கொண்டே சிரிப்பான்.
“என்ன தங்கம் கிளம்பலாமா?” என்ற கருப்பையாவின் குரல் அவளை நினைவுலகத்திற்குக் கொண்டு வரவே, தங்கம்மா நனவுலகிற்கு வந்து, “இந்தாக் கிளம்பிட்டேங்க...” என்று கூறிக்கொண்டே வந்தாள்.
வாழ்வதே வாரத்தில் வரும் இந்த ஒரு வியாழக்கிழமைக்காகத்தான் என்பது போல கருப்பையா நடந்துகொள்வார். புதன் இரவு நேரத்திற்கு உறங்கி விடுவார். வியாழன் காலை அலாரம் இல்லாமல் ஐந்து மணிக்கே எழுந்து விடுவார். சவரம் செய்வார். தலைக்குக் குளிப்பார். எண்ணெய் தடவி, இருக்கும் கொஞ்ச முடியை அழகாக வாரி விடுவார். சட்டை, பான்ட் இரண்டையும் இஸ்த்ரி தேய்ப்பார். முருகனை வழிபாடு செய்து விபூதி குங்குமம் இட்டுக்கொள்வார். தங்கத்தை அவசரப்படுத்துவார்.
“ஏங்க நாம ஒன்பது மணிக்குதானே அங்கே இருக்கணும். இங்க இருந்து 8.30 மணிக்குக் கிளம்பினாலே போயிடலாம். இப்படி ஏழு மணிக்கே கிளம்பி ஒவ்வொரு வாரமும் கேட்டுக்கு வெளியே நிக்க வேண்டியதா இருக்கு”
“சில சமயம் பஸ் லேட்டா வரான். மெதுவா நத்தை ஊரன ஊற்றான். ரோடு வேற ரொம்ப மோசமா இருக்கு. சரி நாம வீட்டிலருந்து என்ன பண்ணப் போறோம்? வா போகலாம்”
மதுரை கே.கே.நகர் குடியிருப்பிலிருந்து கே.கே.நகர் பஸ் ஸ்டாப் வரை நடந்தார்கள். எப்போதும் அந்தப் பகுதி போக்குவரத்து நெரிசலாகவே இருக்கும். அவர்களிருவருக்கும் கே.கே. நகர் மெயின் ரோடு கிராஸ் பண்ணுவது சிரமமாகி விட்டது. தங்கத்திற்கு மூட்டு வலி இருப்பதால் அவளை இழுத்துக் கொண்டுதான் கருப்பையா வேகமாக கிராஸ் பண்ணுவார்.
பஸ்ஸில் வழக்கம்போல் கூட்டம் நிரம்பி வழிந்தது. “ப்ளீஸ், ப்ளீஸ்” என்று சொல்லிக்கொண்டே எப்படியோ நிற்பதற்கு இடம் பிடித்தாயிற்று. முன்பெல்லாம் வயதானவர்கள் என்றால் சிலராவது எழுந்து நின்று தங்கள் இடத்தைத் தருவார்கள். இப்பொழுதெல்லாம் யாரும் கவனிப்பதுகூட இல்லை. தங்கள் கைப்பேசியில் பேசிக் கொண்டோ, எதையாவது பார்த்துக் கொண்டோ, இரு காதுகளிலும் எதையாவது மாட்டிக் கொண்டோ தனி உலகத்தில் இருக்கிறார்கள்.
பஸ் ஆரப்பாளையம் அன்பாலயா இல்லத்தின் வாசல் முன்பு நின்றது. “அன்பாலயா – மனநலக் காப்பகம்” என்ற பலகையைப் பார்த்தபடியே கருப்பையா சிறிது நேரம் நின்றார்.
“ஏங்க பாத்தீங்களா இப்ப 8.30 மணிதான் ஆகுது. இதே மாதிரி எப்பவும் போல அரைமணிநேரம் வெளியேதான் நிக்கணும்”
“பரவாயில்லை தங்கம். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பாரு. இந்த ஒலகத்தப் பாரு... முன்னாடி வந்தா என்ன? நம்ப புள்ளைய அவங்க பாக்க விடறதே இந்த ஒரு நாள் தான். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை முழுக்கா அவங்கூட இருக்கலாம்ல”
அவன் அவர்களைப் பார்த்தவுடன் சிரித்தான். கள்ளம் கபடமில்லா ஒரு தூய்மையான சிரிப்பு. உண்மையான சிரிப்பு. பார்த்தவுடன் ஐந்து நிமிடத்திற்குத் தொடர்ந்து சிரிப்பான். கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியை சிரிப்பின் மூலம் மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்ததால் தொடர்ந்து சிரிப்பான். அவன் சிரிப்பு அடங்கும் வரை அவனை கருப்பையா கட்டிப்பிடித்தே இருப்பார்.
“வணக்கம் சுந்தர். எங்க நீ அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் வணக்கம் சொல்லு... ” ஆசிரியர் மணிவண்ணன் கூறவும் அவன் மலங்க மலங்க விழித்தபடி மழலை மொழியில் மிழற்றினான்.
அந்த மழலை மொழி கருப்பையாவிற்கு மட்டும் நன்றாகப் புரியும்.
“அவனோட கப்போர்ட்ல போய் பாருங்க . நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே அந்த ரயில கட்டி முடிச்சிட்டான்” சுந்தரின் ஆசிரியர் மணிவண்ணன் கூறினார்.
சுந்தர் மறுபடியும் சிரித்தான். தனக்குக் கொடுத்த பாராட்டு புரிந்துவிட்டது. அவனுக்காக அவனாகவே கைகளைத் தட்டிக்கொண்டு ஒலி எழுப்பினான்.
“வெரி குட்... ஹைய்யா... ம்... அப்படித்தான்” என்று அவனை ஊக்கப்படுத்தியவாறே கருப்பையாவும் தங்கம்மாவும் சேர்ந்து அவனோடு கை தட்டினார்கள்.
மணிவண்ணனின் உதவியோடு பத்துப் பதினைந்து பெட்டி உள்ள ஒரு சிவப்பு ரயிலைச் சுந்தர் சேர்த்து வைத்திருந்தான். அதனை இழுத்துச் செல்வதற்கு ஒரு தண்டவாளத்தையும் கட்டி இருந்தான்.
“சுந்தர், இதுதாண்டா உலகத்திலேயே பெஸ்ட் ரயில். என்ன பேர் வைக்கலாம்? சூப்பர் பாஸ்ட் புல்லெட் ட்ரைன் அப்படின்னு வைக்கலாமா?” கருப்பையா உற்சாகத்துடன் கேட்டார். கை தட்டிச் சிரித்தான்.
“உன் ரயில் ரொம்ப வேகமா போகுது. அதுக்கு இரண்டு ஸ்டேஷன் கட்டலாமா?” அதற்கும் கை தட்டி சிரித்தான்.
கருப்பையாவும் தங்கமும் இரண்டு ஸ்டேஷன்களைக் கட்டினார்கள். ரயிலை அங்கே நிறுத்த கற்றுக் கொடுத்தார்கள்.
அவனுக்கு ஆரஞ்சு சூஸ் பிடிக்கும். தங்கம் வாங்கிக் கொண்டு வந்த பாட்டிலைத் திறந்து அங்கு இருக்கும் பிற குழந்தைகளுக்கும் கொடுத்தாள் . மெதுவாக சப்பிச் சப்பித் தான் சுந்தர் குடிப்பான்.
“சார், இந்த வாரத்திலிருந்து துணிகளை மட்டும் எடுத்திட்டு போய் துவைத்து அடுத்த வாரம் கொண்டுவர முடியுமா? மணிவண்ணன் கேட்டார்.
“கண்டிப்பா சார்”
“கரண்ட் கட் ரொம்ப இருக்கு. மோட்டார் போட முடியலை. ஜெனரேட்டர் கட்டுபடி ஆகல. தண்ணி கஷ்டம் வேற”
“பரவால்லை சார். நாங்க நல்லாத் தொவைச்சுக் கொண்டு வரோம்”
மதிய உணவை அவனுக்கு ஊட்டினார்கள்.
“அவனுக்கு இப்ப தானாகவே சாப்பிட தெரியும் சார். இப்பத்தான் பழகிக்கிட்டான். இவ்வளவு நாள் ஆச்சு . நீங்க கெடுத்துவிட்டுப் போய்டாதீங்க சார்.” மணிவண்ணன் நல்லவிதமாகத்தான் சொன்னார்.
“அவருக்கு ஊட்டி விட ரொம்ப பிடிக்கும். ஊட்டிவிட்டா நல்லா சாப்பிடுறான். எல்லா காயையும் வைச்சு கொடுக்க முடியுது.” தங்கம் ஆதரவுக்கு வந்தாள்.
சில சமயம் விரல்களைக் கடித்து விடுவான். சில சமயம் வாயிலிருந்து கசிந்து விழும். எதற்குமே பொறுமை இல்லாத கருப்பையாவிற்கு அவனிடம் மட்டும் மிகுந்த பொறுமை.
மதியம் சிறிது நேரம் தங்கத்தின் மடியில் தூங்கினான். அவன் தூங்குவதையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மாலையில் அவனைக் குளிப்பாட்டி , பவுடர் போட்டு, தலை சீவி, ஒரு டம்ளர் பால் கொடுத்தார்கள். மணி ஐந்தாகிவிட்டது. கிளம்பும் நேரம். தாமோதரன் அவசரப் படுத்தவில்லை.
“குட் பை சுந்தர். டாட்டா. அப்பா திரும்பி வருவேன். ஒகே? ரயிலை பத்திரமாப் பாத்துக்கோ”
அதற்கும் சிரித்தான். கை தட்டவில்லை.
மெதுவாக வெளியே நடந்துவந்தார்கள். மணிவண்ணனைப் பார்த்து, “சார், பாத்துக்கோங்க சார். ஏதாவது பண்ணா, கோபப்படாதீங்க சார். அவனுக்குப் புரியும் சார். எடுத்துச் சொல்லுங்க சார். பாத்துக்கோங்க சார்”
“அதுக்குத் தானே சார் இருக்கோம்”
பஸ்ஸில் அமைதியாக இருந்தார். எதுவுமே பேசாது வந்த கருப்பையாவைப் பார்த்த தங்கத்தின் மனம் வண்டு புகுந்த பழம்போன்று குடைச்சலைத் தந்து கொண்டிருந்தது. கருப்பையாவின் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.
அவரது அருகில் இருந்த தங்கம் அவரது கைகளை ஆதராவாகப் பற்றி, “ஏங்க... எதுக்கு இப்படி... அமைதியா வாங்க... என்னமோ நமக்கு இந்த மாதிரி ஆண்டவன் சோதனை வைக்கிறான். இதுக்குப் போயி கலங்கலாமா...? பஸ்சில இருக்கறவங்கள்ளாம் பாக்குறாங்க... கண்ணத் தொடச்சிக்கோங்க...” என்று ஆதரவாகப் பேசினாள்.
அவளது கையைப் பற்றிக் கொண்ட கருப்பையா, “ அதுக்கில்ல தங்கம்... நாஞ்செஞ்ச பாவந்தான் இப்ப நம்ப பிள்ளயப் போட்டுப் பாடாப் படுத்துது போல... போன ஜென்மத்துல நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேனோ...? நம்ப பிள்ளை இப்படி மனசு பாதிக்கப்பட்டுப் பொறந்துருக்கான்...”
“ஏங்க இன்னிக்கு ரொம்ப ஒரு மாதிரியா இருக்கீங்க. நீங்க எந்தப் பாவமும் பண்ணல... யாருக்கிட்ட எத ஒப்படைக்கணும்னு ஆண்டவனுக்குத் தெரியுமுங்க... இந்த உயிரை நம்மலாளதான் நல்லாப் பாத்துக்க முடியும்னு ஆண்டவன் நெனச்சிருப்பான்... அதனாலதான் நம்ம புள்ளையா வந்து பொறந்துருக்கான்... நீங்க என்ன பாவம் பண்ணுனீங்க... சும்மா மனசப் போட்டு கொளப்பிக்காதீங்க...” என்று அவரை ஆறுதல்படுத்தினாள் தங்கம்.
பஸ்ஸில் இருந்து இறங்கியதும், “ஏங்க, கொஞ்சம் சிக்கன் வாங்கினா என்ன...? நாம சிக்கன் சாப்புட்டு ரொம்ப நாளு ஆகுதில்லையா... வாங்க வாங்கிட்டுப் போவோம்...” என்று கூறிக் கொண்டே கருப்பையாவின் மனதைத் திசை திருப்புவதற்காக அவரை இழுத்துப் போகாத குறையாக அழைத்துச் சென்று நாட்டுக் கோழிக்கறி வாங்கிக் கொண்டு வந்தாள்.
இரவு கருப்பையாவும் தங்கம்மாவும் கறிக்குழம்பு ஊற்றிச் சாப்பிட்டார்கள். சாப்பிடும்போதே அவர்களுக்கு தங்கள் மகனின் ஞாபகம் வந்தது.“ஏந்தங்கம் சுந்தருக்குக் கறிக் குழம்புன்னா ரொம்பப் பிடிக்கும்... அங்கே கறி ஏதும் கொடுக்கச் சொல்லிக் கேப்போமா...?”
“இல்லைங்க. இன்னக்கி விக்கிற வெலவாசியில அவங்களுக்குக் கட்டுப்படி ஆகாதுங்க. அந்தக் காப்பகத்தை அவங்களே கஷ்டப்பட்டு நடத்துறாங்க. நாம அப்படி எல்லாம் கேட்கக்கூடாது”
கருப்பையா படுக்கச் சென்றார். ஆனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை. பற்பல நினைவுகள் அவரை அலைக்கழித்தன. தூக்கம் வராமல் அவர் புரண்டு கொண்டே இருந்தார். அதைப் பார்த்த தங்கம்மா, “என்னங்க தூங்கலையா... சும்மா சும்மா எதையாவது நெனச்சிக்கிட்டே இருக்காதீங்க... பேசாமத் தூங்குங்க... ஆண்டவன் நமக்கும் நம்ம புள்ளைக்கும் எந்தக் குறையும் வைக்க மாட்டான்... தைரியமாத் தூங்குங்க...” என்று கூறினாள்.
கருப்பையாவிற்குத் தூக்கம் வரவில்லை. “எப்படிம்மா தூக்கம் வரும்...? ரிட்டையர்டு ஆகியும் வாழ்க்கை எனக்கு நரகமாப் போச்சே... என்ன பாவம் செஞ்சனோ இப்ப எம்புள்ள மனநோயாலச் செரமப்படுறான்... பேசாம மருந்தக் கிருந்தத் திண்ணுப்புட்டு ஒரேயடியாப் போயிரலாமான்னு கூட யோசிக்கிறேன்... தங்கம்”
“இந்தப் பாருங்க பேசாமல மொதல்ல வாயக் கழுவுங்க... செத்துப் போயிட்டா பிரச்சனை அதோடு முடிஞ்சிருமா... அந்தப் பயலப் பத்தி யோசிச்சிங்களா... இப்படி பேசுறத மொதல்ல நிப்பாட்டுங்க... இறைவன் என்ன நடக்கணும்னு நெனக்கிறானோ அது நடந்துதான் தீரும்... யாரும் யாரையும் கேட்டுக்கிட்டு வர்றதில்ல... இறைவன் நினைக்கறபடித்தான் நடக்கும்... மனக்கோளாறான பிள்ளைய நமக்குக் கொடுத்து நம்மளோட பொறுமையச் சோதிக்கிறாரு ஆண்டவன்... அவனப் பாத்துக்கிறதுதான் ஆண்டவன் நமக்கு இட்ட கட்டளை... ஆண்டவனோட கட்டளையை உதாசீனப்படுத்தப்போறீங்களா... பேசாமாப் படுங்க...” என்று தங்கம் பொறிந்து தள்ளிவிட்டாள்.
சற்று நேரம் அமைதியாக இருந்த கருப்பையா, தொண்டையச் செருமிக் கொண்டு, “ஏந்தங்கம், நாஞ்சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது... அதுவந்து... நாளைக்கு அவனை நாம வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்திடலாமா...?”
“ஏங்க நல்லா யோசிச்சித்தான் சொல்றீங்களா... நாம ரெண்டுபேரும் இந்தத் தள்ளாத வயசுல அவனப் பராமரிக்க முடியுமா...? முடியாதுனு தானே கொண்டு போயிச் சேத்தோம்... இப்பத் திரும்ப இப்படிப் பேசுறீங்க...”
“இல்ல தங்கம்... சுந்தரு கண்ணால என்னை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்கனு சொன்ன மாதிரி இருந்திச்சு. அவன் நம்மள ரெம்பவும் எழக்கறான்... தங்கம்... அந்த ஏக்கம் அவனோட கண்ணுல தெரியுது... கிளம்பும் போது என்னைக்கும் இல்லாம இன்னிக்கு என்னோட கையை ரொம்ப நேரம் இறுக்கமாப் பிடிச்சிக்கிட்டு இருந்தான்... விடவே இல்லை... எனக்கு மனசப் போட்டு என்னமோ பண்ணுதும்மா... நம்ம கடமையிலிருந்து நாம தவறிட்டமோன்னு எனக்குத் தோணுது... மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையா அவன் பிறந்தது அவனோட தப்பில்லையே... ஏதோ நாம முன்செஞ்ச கர்மவினைதான் இப்படிப் போய் நமக்குப் பிறந்து கஷ்டப்படறான்...”
“நீங்க ஒங்க கடமையிலிருந்தோ, நான் என்னோட கடமையிலிருந்தோ தவறலைங்க... எல்லா வைத்தியமும்தான் பார்த்தோம்... ஆனா எதுவும் நடக்கலியே... ஒரு வருஷமா ரெண்டு வருஷமா... அவன் பொறந்ததிலேர்ந்து 32 வருஷம் அவனை சுத்தியே நம்மளோட வாழ்க்கை இருந்திச்சுதானே. பெரிய பையனா ஆயிட்டான். அவன நம்மளால தூக்க முடியல... ஒண்ணுக்கு ரெண்டுக்குப் பாத்ரூமுக்கு கூட்டிக்கிட்டு போக முடியல... அவனுக்கு வேண்டியதை நான் செய்யறதுக்கே எனக்கு மனசுக்குள்ளாற சொல்ல முடியாத ஒருவித வெட்கம் இருக்குங்க. இத்தன வருஷம் பட்ட கஷ்டம் போதும்... இனிமேலாவது இருக்கற கொஞ்ச கால வாழ்க்கையை கஷ்டமில்லாம அனுபவிக்கலாமுனு தானே அந்த மனநோய்க் காப்பகத்துல அவனக் கொண்டு போய் சேத்தோம்... அப்பறமும் நாம சும்மா இருக்கலயே... அவனப் போயித்தானப் பாத்துக்கிட்டு வர்றோம்... அப்பறம் ஏன் இப்படி நீங்க பேசறீங்க...”
“இல்ல தங்கம்... மகிழ்ச்சிங்கறது மனசிலேர்ந்து வரணும்மா... அதுதான் இயற்கையான மகிழ்ச்சி. இப்ப நாம வரவழைச்சிக்கிறது சும்மா போலியானது... மகிழ்ச்சிண்ணு நம்ம ஒதடுதான் சொல்லுதே தவிர நம்ம உள்ளம் சொல்ல மாட்டேங்குதே தங்கம்... அதுமட்டுமில்லேம்மா... வாழ்க்கைங்கறது மகிழ்ச்சியின் தேடலா இருக்கக்கூடாது... அர்த்தத்தின் தேடலா இருக்கணும். நாம அர்த்தத் தேடாம எதையோ தொலைச்சிட்டமோன்னு தோணுது... நம்ம பையனை பாத்துக்கறதுதான் நாம வாழ்ற வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா தெரியுதும்மா...” என்று தழுதழுத்த குரலில் கருப்பையா கூறவும் தங்கம்மா, “ஏங்க அந்த அர்த்தமுள்ள வாழ்க்கையையே நாம இனி வாழலாங்க... எப்படியோ நாம ரெண்டுபேரோட வாழ்க்கையின் தேடலும் அர்த்தமுள்ளதாத்தாங்க இருக்கும்... ம்...ம்... சரிங்க, நாளைக்குப் போயி அவன வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வருவோம்... இப்பத் தூங்குங்க...” என்று கூறியவுடன்தான் கருப்பையா நிம்மதியாகத் தூங்கினார்.
இருவரும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் சரியாக மூன்று மணிக்குத் தொலைபேசி மணி ஒலித்தது. இருவரும் பதட்டத்துடன் எழுந்தனர். தங்கம்மாள், “யாரு இப்பப் போயி பேசறா... ஏதும் அவசரமான செய்தியா இருக்குமோ... என்னன்னு தெரியலையே...” என்று மனதிற்குள் யோசித்தவாறே தொலைபேசியை எடுத்து, “ஹலோ...” என்றாள்.
தொலைபேசியின் மறுமுனையில், “அம்மா நாங்க அன்பாலயா மனநலக் காப்பகத்திலிருந்து பேசறோம்...” என்று விசயத்தைக் கூறத் தொடங்கினார். அதனைக் கேட்ட தங்கம்மாளின் கைகளிலிருந்து தொலைபேசியின் ரிசீவர் மெல்ல நழுவத் தொடங்கியது. கருப்பையா வைத்த கண் வாங்காமல் தன் மனைவியையே கண்களில் நீர் வழியப் பார்த்துக் கொண்டிருந்தார். அது அவர்களது வாழ்க்கையின் அர்த்தத்தின் தேடலாக இருந்தது.