அன்று மாலை ஆவலோடு மக்கள் எதிrபாrக்கும் நிகழ்ச்சி புகழ் பெற்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இறுதி வெற்றியாளரை பரைசாற்றும் சூப்பர் சிங்கர் போட்டி. இல்லங்கள் தோறும் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் தொலைக்காட்சி முன் குழுமியிருந்தனர்.
குரல் வளம் நிரம்பிய காயத்திரி மக்கள் ஆதரவு பெற்றவள். அவள் பாடலை ரசிக்க ஏராளமான மக்கள் நேரிலும், தொலைக்காட்சியிலும் திரண்டிருந்தனர். எதிர்பார்த்தது போல இறுதிக் கட்டத்தில் கடினமானப் பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்றாள் காயத்திரி.
நிலை கொள்ளாத மகிழ்ச்சி, அவள் முகத்தில் தாண்டவமாடியது. ஆரவாரமும், கைத்தட்டலும் அரங்கத்தை அலற வைத்தது. பணத்தைச் செக்காக வாங்கியவள் ஆயிரக்கணக்கான மக்களைப் பார்த்துக் கையசைத்தாள்.
ரசிகர்களின் அன்புத் தொல்லையிலிருந்து விடுபட்டு வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானாள். எதிரில் வந்த ஆட்டோவைக் கைக்காட்டி அமர்ந்து கொண்டாள்.
“அம்மா நீங்க என்னோட ஆட்டோல வர்றது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்மா. ஒரு வருஷமா உங்கப் பாடலை கேட்டுகிட்டு இருக்கேம்மா. நீங்க தான் கண்டிப்பா ஜெயிப்பீங்கன்னு தெரியும்மா”
“மிக்க நன்றி தம்பி, உங்களைப் போன்ற ரசிகர்கள் ஆதரவு தான் நான் ஜெயிக்கக் காரணம்”
எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிக் கொண்டாள். ஒரு வருட சென்னை வாழ்க்கை முடிந்தது. சொந்த ஊரான மதுரைக்குப் பயணித்தாள். ரயிலில் முதல் வகுப்பு மற்றும் ஜன்னலோர இருக்கை அவளுக்குச் சொந்தமானது. வெற்றியைத் தன்னுடன் பகிரக் கணவன் உயிருடன் இல்லையே என்று நினைக்கும் போதே துக்கம் நெஞ்சை அடைத்தது. பொருளாதார நெருக்கடி, மனப்போராட்டம், தொடர் துயரம் துரத்தி அடித்தக் கொடுமை அவள் கண்முன் நிழலாடியது.
வெங்கட்ராமனுக்கு கோயிலில் அர்ச்சகர் வேலை. நடுத்தரக் குடும்பம். மனைவியை இழந்தவர். இரண்டு பெண்கள். மூத்தவள் காயத்திரி, இளையவள் சந்தியா இருவரையும் தன் சக்திக்கு மீறிப் படிக்க வைத்தார். காயத்திரிக்குச் சிறு வயது முதல் இசையில் ஆர்வம். கோயில்களில் கேள்வி ஞானத்தால் பாட ஆரம்பித்தவள், ப்ளஸ் டூ முடித்ததும் டிப்ளமோ மியூசிக் கோர்ஸ் படித்தாள். அங்கு தான் அவள் விதி விளையாடியது. உடன் படிக்கும் சக்தியைக் காதலித்தாள். தந்தையிடம் தன் காதலை சொன்னாள்.
“அப்பா, நான் ஒரு விஷயம் சொன்னா வருத்தப்படமாட்டிங்களே”
“வருத்தப்படாத மாதிரி சொல்லேன்”
“அப்பா, அது வந்து… … … என் கூடப் படிக்கற பையனை… … வார்த்தையை மென்று முழுங்கினாள்.
“காதலிக்கிறே அவ்வளவு தானே”
“ஆமாம்”
ஊஞ்சலில் அமர்ந்திருந்த வெங்கட்ராமன் சடாரென்று எழுந்து நின்றார்.
“தாயில்லாதப் பெண்ணைச் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சு. நான் ஒரு நாளும் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்” ஆவேசமாகக் கத்தினார்.
“அப்பா, என்னால அவர மறக்க முடியாது”
“அப்படின்னா, என்னையும், உன் தங்கையையும் மறந்துடு” கோபமாகச் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார் வெங்கடேசன்.
இரண்டு நாள் யோசித்த காயத்திரி இருவீட்டார் எதிர்ப்புடன் சக்தியின் கரம் பற்றினாள்.
இருவரும் மதுரையில் குடிபுகுந்தனர். தங்கள் பிழைப்பிற்கு வழி தேடிக் கொண்டனர். சக்தி கீ போர்டு வாசிக்க, காயத்திரி பாட ஆரம்பித்தாள். வாய்ப்புகள் குவிந்தன.
அச்சாரமாக முன் பணம் வாங்கினர். ஒரு வருடம் கச்சேரிகள் புக் ஆனது. புகழ், பிரிந்த இரு வீட்டினரையும் இணைத்தது.
அன்று காயத்திரி வேறொரு கச்சேரியில் இருந்தாள். அதிர்ச்சி கைப்பேசி வழியாக அழைத்தது.
“அப்பா பேசறேம்மா, மாப்பிள்ளைக்கு விபத்து, தலையில் பலமா அடிபட்டிருக்கு. பாலாஜி நர்சிங் ஹோமில சேர்த்திருக்கோம், உடனே வாம்மா”
படபடப்பு, முகத்தில் கலவரம் பதறி ஓடினாள் காயத்திரி. சக்தியின் தலையில் பலமாக அடிப்பட்டிருந்தது. ஒரு மாத காலம் மருத்துவமனையில் இருந்தான். தலையில் அடிபட்டதால், அடிக்கடி வலிப்பு ஏற்பட்டது. சக்தி கீபோர்டு வாசிக்க முடியாத நிலை. மனக்கவலை, பொருளதாரப் பிரச்சனை, காயத்திரியை நிலைகுலையச் செய்தது. இரு குடும்பத்தாரையும் காப்பாற்றும் பொறுப்பு அவள் தலையில் விழுந்தது.
ஒரு மாத இடைவெளி அவள் பாடும் வாய்ப்பினைக் குறைத்தது. ஒவ்வொரு சபாவையையும் நாடிச் சென்றாள். அவளை உருவாக்கிய ரமணா ரசிக சபா முதலாளி கஜபதியை பார்த்தாள்.
“ஐயா...” தயக்கத்துடன் நின்றாள்.
“என்னம்மா”
“கச்சேரியில் பாட வாய்ப்பு ஏதாவது… ...” முடிக்கவில்லை.
“ஏம்மா நீயும் உன் புருஷனும் ஒத்துகிட்ட கச்சேரியை முடிச்சு தரல, முன் பணமா வாங்கின தொகைய திருப்பி தரல, உன்னால எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். இப்ப எந்த முகத்தை வச்சுட்டு வாய்ப்பு கேட்டு வந்து நிக்கற”
“ஐயா என் சூழல் பாட முடியாம போயிடுச்சு. இனிமே நான் தொடர்ந்து பாடுவேன். நான் வாங்கின பணத்தைத் திருப்பி தந்தறேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்க” கெஞ்சினாள் காயத்திரி.
“முடியாதும்மா எனக்கு நிறைய வேல இருக்கு, நீ போகலாம்” விருட்டென்று உள்ளே சென்றார்.
அவளுக்கு நெஞ்சு கனத்தது. தொடர்ந்து முயற்சித்தாள். சபாக்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிறிஸ்துவ ஆலயம், கோயில்களில் பாடினாள். அதில் கிடைத்த சொற்ப வருமானம் குடும்பத்திற்குப் போதவில்லை. இரண்டு வருட தாம்பத்ய வாழ்க்கையிலும் குழந்தை இல்லை. கடவுளுக்கு மனதில் நன்றி சொன்னாள். தவிப்பும், துயரமும் அவள் வாழ்க்கையை நகர்த்தியது.
வலிப்பு நோயில் அவதிப்பட்ட சக்தியை மஞ்சள் காமாலை அரவணைத்தது. படுத்த படுக்கையானான். அன்றிலிருந்து மருத்துவச் செலவு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் எட்டியது. கதறினாள், கண்ணீர் விட்டாள். காதல் கணவன் உயிர் பிழைக்க ஓடிப் பாடி சம்பாதித்தாள்.
இறுதியில் விதி வென்றது. மரணம் சக்தியை தழுவியது. அவசரமாகத் தொடங்கிய வாழ்க்கை அவசரமாக முடிந்தது.
கணவன் காரியம் முடிந்தது. மீண்டும், பாட எத்தனித்தாள். எதிர்பாராமல் அவள் தொண்டையில் புண் ஏற்பட்டது. ஒரே மூலதனம் அவள் குரல் செயல் இழந்து விட்டதை நினைத்து வருந்தினாள். அவள் கண்களில் நீர் கூட வற்றிவிட்டது.
தொடர் மருத்துவ சிகிச்சை தொண்டைப் புண் ஆறியது. கீழே விழ விழ மீண்டும் எழுந்தாள்.
‘புகழ் பெற்ற தொலைக்காட்சியில் குரல் தேர்வு’ நாளிதழில் படித்தாள். ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்து நின்றனர். அதில் காயத்திரியும் உள்ளடக்கம்.
குரல் தேர்வில் தேர்வானவள் தொடர்ந்து போராடினாள். ஒரு வருடம் குளிர்ச்சியான உணவு பதார்த்தங்கள் சாப்பிடுவதைத் தவிர்த்தாள். மெலோடியஸ் பாட்டைத் தேர்ந்தெடுத்தாள். இன்று வெற்றி தேவதை அவளிடம் தஞ்சம் புகுந்தது.
நினைவுகளிலிருந்து விடுபட்டாள். வழிந்த கண்ணீரைக் கர்சீப்பில் துடைத்துக் கொண்டாள். ரயில் மதுரையை நெருங்கிக் கொண்டிருந்தது. மதுரை ரயில் நிலையத்தில் காயத்திரி தந்தை, தங்கை, மாமியார், மாமனார் அனைவரும் மாலையோடு நின்று வரவேற்றனர்.
உறவுகள் படை சூழ மகிழ்வோடு வீட்டிற்குச் சென்றாள்.
“காயத்திரி உனக்கு நல்ல நேரம் தொடங்கிடுச்சு, இனி தொடர்ந்து உனக்கு வாய்ப்புகள் தொலைக்காட்சியிலும், திரைப்படத்துறையிலும் குவியத் தொடங்கும் நிரந்தரமா நாம சென்னைக்குக் குடி போயிரலாம்” காயத்திரி அப்பா சொன்னார்.
“எனக்கு நிறைய பணம், புகழ் சம்பாதிக்கனும்னு ஆசை இல்லப்பா”
“என்னம்மா சொல்ற”
“இதுவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவித்த நான் இன்று விதியை வென்றுவிட்டேன். எனக்கு அது போதும் சூப்பர் சிங்கர் போட்டியில வெற்றி பெற்ற பணத்தை மூலதனமா வெச்சு ஒரு இசைப்பள்ளியை இந்த மதுரையிலே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதன் மூலம் நிறைய பேருக்குக் குறைந்த தொகையில் பாட்டு, கீ- போர்டு கத்துத் தரப் போகிறேன். இது தான் என் எதிர்கால ஆசை”
“சரிம்மா. உன் விருப்பம் போல செய்”
காயத்திரி தன் கணவன் பெயரில் இசைப்பள்ளி தொடங்கினாள். மாற்றுத் திறனாளி மற்றும் உடல் ஊனமுற்றோர்க்குக் குறைந்த தொகையில் பாட்டு மற்றும் கீபோர்டு சொல்லித் தரப்படும் என்ற போர்டை மாட்டினாள். இரண்டு மாதத்தில் ஐம்பதுக்கும் அதிகமானோர் இசைப்பள்ளியில் சேர்ந்தனர்.
அதில் விக்னேஷ் என்ற பத்து வயது சிறுவன் இருந்தான். அவன் சிவந்த உருவம், படர்ந்த நெற்றி. பெரிய கண்கள், உருண்டை முகம் எனப் பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தான். ஆனால், அவனுக்கு ஒரு கால் மட்டும் ஊனமாக இருந்தது. உடனுக்குடன் காயத்திரி சொல்வதைப் புரிந்து கொண்டு அழகாகப் பாடினான். துருதுருப் பார்வையால்; காயத்திரி மனதைக் கவர்ந்தான். இசை வகுப்பு முடிந்ததும் அவனிடம் பேசத் தொடங்கினாள்.
“நீ எந்த கிளாஸ் படிக்கிற”
“ஐந்தாம் கிளாஸ் படிக்கிறேன்”
“நீ பாடறப்ப உன் குரல் ரொம்ப இனிமையாக இருக்கு”
“நன்றி மேடம். நான் தினம் ஆறு மணிக்கு எழுந்து வீட்டுல பாடுவேன். குரல் மாறக் கூடாதுங்கறதுக்காக ஒரு ஐஸ்கிரீம் கூட வாங்கிச் சாப்பிட மாட்டேன்”
சின்ன வயதில் பிடித்ததைச் சாப்பிடும் சிறுவர்களுக்கிடையே விக்னேஷ் வேறுபட்டு காணப்பட்டான். தன் குரல்வளத்திற்காக ஐஸ்கிரீமைத் துறந்த சிறுவனை ஆச்சர்யம் மேலிடப் பார்த்தாள் காயத்திரி.
“உன் கூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?”
“நான் ஒருத்தன்தான் எனக்கு அம்மா, அப்பா கிடையாது”
“ஏன்?”
“அவங்க என்னோட மூணு வயசுல ஒரு விபத்துல இறந்துட்டாங்க”
“அப்ப உன்னை யார் பார்த்துகிறாங்க?”
“அம்மா வழி பாட்டி என்னை பார்த்துக்கிறாங்க” சொல்லிவிட்டு கிளம்பினான் விக்னேஷ்.
சிறுவனின் துயரம் காயத்திரியின் துயரத்தை லேசாக்கியது. நாள்தோறும் பாட்டு கிளாஸ் முடிந்ததும் சிறிது நேரம் அவனிடம் பேசுவது அவள் மனதிற்கு இதமாக இருந்தது.
தொடர்ந்து ஒரு வாரம் விக்னேஷ் பாட்டுக் கிளாஸிற்கு வரவில்லை. காயத்திரி சிறுவனைப் பார்க்காமல், பேசாமல் பரிதவித்தாள்.
காயத்திரியின் முகம் வாடியிருப்பதை பார்த்து அவர் தந்தை விசாரித்தார்.
“என்னம்மா ஆச்சு? ஏன் சோகமாயிருக்க”
“ஒண்ணு இல்லப்பா”
உண்மையை சொல்லாமல் உறங்கச் சென்றாள்.
காயத்திரிக்குத் திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று மனதில் நினைத்துக் கொண்டார் வெங்கட்ராமன்.
மறுவாரம் முதல் நாள் விக்னேஷ் வரவில்லை. அவன் வீட்டிற்குச் சென்றாள்.
“வாங்க மேடம், உட்காருங்க”
ஒரு பக்கம் மட்டும் கைப்பிடியுள்ள நாற்காலியைக் கொண்டு வந்து போட்டான் விக்னேஷ்.
நாற்காலியில் அமர்ந்தவாறே கேட்டாள் காயத்திரி.
“கிளாஸ்க்கு ஏன்ப்பா வரதுல்ல”
“பாட்டிக்கு உடம்பு சரியில்ல மேடம்”
“பாட்டி எங்க இருக்காங்க”
பாட்டி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான். எழுபது வயது தேகம். தலை நரைத்து பூத்திருந்தது. சுருக்கங்கள் நிறைந்த முகம். தளர்ந்த கை, நெடுங்காலம் உழைத்து ஓய்ந்திருந்த கால்கள், பார்க்கவே பரிதாபமாக இருந்தாள். தொடர்ந்து இருமல் வேறு பாட்டியை வாட்டியது.
“பாட்டிய ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனியா? உனக்கு மாமா ஒருத்தர் இருக்கார்னு சொன்னியே, அவர் வந்து பார்க்கலயா?”
“மாமா ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போனார். பாட்டியை இனிமே குணப்படுத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால மாமா பாட்டியை தினமும் வந்து பார்த்துட்டுப் போறாரு”
“பாட்டிக்கு என்ன பிரச்சினை”
“பாட்டி சிறுநீரகம் செயலிழந்து போச்சு, அதனால வீட்டுக்கு கொண்டுட்டு போங்க என்று டாக்டர் சொல்லிட்டாங்க”
“சரிப்பா உனக்கு என்ன உதவினாலும் தயங்காமல் எனக்கு போன் பண்ணு. நான் வரேன்”
வீட்டிற்குள் நுழைந்தாள். ஹாலில் ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் அமர்ந்திருந்தனர். புதியவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
“காயத்திரி சீக்கிரம் உள்ள போய் புடவையைக் கட்டிக்கிட்டு வா, உன்னைப் பெண் பார்க்க வந்திருக்காங்க”
அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
“யாரைக் கேட்டு இந்த ஏற்பாடு செய்தீர்கள்”
“உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தரணுமின்னு நினைச்சுதான் இந்த ஏற்பாடு செய்தேன்” என்றார் அப்பா.
“எனக்கு திருமணத்துல விருப்பம் இருக்கா அப்படின்னு ஒரு வார்த்த கேட்டீங்களா?”
வெங்கட்ராமன் அமைதியாக இருந்தார். இவர்கள் வாக்குவாதத்தைக் கேட்ட மாப்பிள்ளை வீட்டார் வெளியே கிளம்பினார்கள்.
காயத்திரி தொடர்ந்தாள்.
“எனக்குத் திருமணம் வேண்டாம் அப்பா”
“நீ அப்படி சொல்லக்கூடாதும்மா, முப்பது வயசுல எல்லாக் கஷ்டத்தையும் அனுபவிச்சிட்ட. இப்போ தனி மரமா நிக்கிற. உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும். அதனால நான் சொல்றத. . .”
“ப்ளீஸ்ப்பா என்னை கட்டாயப்படுத்தாதீங்க, மறுபடியும் திருமண பந்தத்துல இணைய எனக்கு விருப்பம் இல்ல. மனதால நான் என் சக்தியோட வாழ்ந்துகிட்டுதான் இருக்கேன், நீங்க தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுங்க அது போதும்”
“நீ திருமணம் செஞ்சிகிட்டா உனக்குக் குழந்தை பிறக்கும்; அந்தக் குழந்தை நாளை உன்னை பார்த்தக் கொள்ளும், அதற்காகதான் சொல்றேன்”
“எனக்கு பிறந்தாதான் குழந்தையா? தத்து எடுத்தாலும் அது என் குழந்தைதானே”
“என்னம்மா சொல்ற”
“இசைப் பள்ளிக்கு வருகின்ற ஊனமுற்ற பையன் விக்னேஷ் ஆதரவற்றவன். அவனைத் தத்து எடுக்கலாமுன்னு முடிவு செய்துவிட்டேன். உங்கள் ஆசீர்வாதமும், ஒத்துழைப்பும் எனக்கு அவசியம் தேவை. சம்மதிப்பீர்களா அப்பா?”
“உன் உயர்ந்த எண்ணங்களுக்கு என்றும் நான் துணை நிற்பேன்” என்று சொல்லியவாறே மகளின் நெற்றியில் அன்பு முத்தமிட்டார் வெங்கட்ராமன்.