"அய்யா......என்னாலே சனி, ஞாயிறு வேலைக்கு வர முடியாது. நீங்க எவ்வளவு வேல கொடுத்தாலும், வெள்ளிக்கிழம எவ்வளவு நேரமானாலும் முடிச்சுக் கொடுத்திர்றேன். மறுபடியும் சனி, ஞாயிறு எதுக்கு வேலைக்கு வரச் சொல்றீங்க... அந்த அளவு என்கிட்ட வேல எதுவும் நிலுவையில்லையே..."
"நிலுவை இல்லே தான் கதிர்... ஆனா இந்த நிறுவனத்திலே கை நீட்டிச் சம்பளம் வாங்குற ஊழியன் நீ.. .நில்லுன்னா நிக்கணும், உக்காருன்னா உக்காரணும், வா ன்னா வரணும், போ ன்னா போகணும்...."
"அதுக்காக தன்மானத்த விட்டெல்லாம் வேல பாக்க முடியாதுங்க... நீங்க இந்த நிறுவன மேலாளர் தான்... என் வேலையிலே ஏதாவது குத்தமிருந்தா சொல்லுங்க... அத விட்டுட்டுத் தேவையில்லாம என்னை வரச் சொல்லாதீங்க..."
கதிர் என்னும் கதிரவன் உறுதியாகச் சொல்வதை மேலாளர் ராமன் கேட்டுக்கொண்டிருந்தார்.
"அப்படியென்னப்பா உனக்கு முக்கியமான வேல... நானே சனி, ஞாயிறுன்னு நேரம் பாக்காம அலுவலகம் வந்து வேல பாக்கிறேனே... உனக்கென்னப்பா வரவேண்டியது தானே..."
"அய்யா... நீங்க வர்றீங்க... ஆனா வேல பாக்கிறீங்கன்னு சொல்றீங்களே... அத நெனச்சாத்தான் சிரிப்பு வருது. இங்கே வந்து ஹாயா ஓய்வெடுக்கிறீங்க... வீட்டம்மாவோட தொல்லையிலேர்ந்து தப்பிக்க..."
சற்று நக்கலாகவே கதிர் சொல்லவும், அது தன்மானத்திற்கான இழுக்கு என எண்ணிய ராமன் கதிரைக் கொஞ்சம் கோபமாகவே பார்த்தார்.
"ஏம்ப்பா கதிர்... அடுத்த மாசம் தலைமையிடத்திலேர்ந்து தணிக்கைக்கு வர்றாங்கன்னு தானே சொல்றேன். நீ என்னமோ என்னையே நக்கலாச் சொல்றியே... இது மட்டும் பொது மேலாளர் காதுக்குப் போச்சின்னா...” என்றபடி ராமன் இழுக்க...
"ஏன் நீங்களே அவர்ட்ட போட்டுக்கொடுக்கப் போறீங்களா... நல்லாச் சொல்லுங்க... என்னாலே வர முடியாதுன்னா வர முடியாது தான்..." என்று கதிரும் குரல் உயர்த்தினான்.
இதற்குள் அலுவலகத்தில் மற்ற ஊழியர்கள் ஒன்று சேர்ந்து கதிர் பக்கம் நிற்கவும், அந்த நேரம் பொது மேலாளரே வரவும் சரியாக இருந்தது.
"என்ன இது... அலுவலகத்திலே ஒரே கூட்டமாக் கூடி இருக்கீங்க..."
பொது மேலாளர் கேட்கவும், ராமன் முந்திக் கொண்டு சனி, ஞாயிறு வேலைக்கு வர மறுக்கும் கதிரைப் பற்றிச் சொல்ல
"ஏன்... கதிருக்கு என்னாச்சு... நல்லாத்தானே வேல பாப்பாரு, ஏதும் வேலை நிலுவையேதுமுண்டா... என்ன கதிர்... மேலாளர் வரச் சொன்னா வர வேண்டியது தானே... மூத்த அதிகாரிகளோட பேச்சைக் கேட்க வேண்டாமா..."
பொது மேலாளர் கதிரை வினவினார்.
"அய்யா... அவர் வேண்டுமின்னே என்னை வரச் சொல்றாரு, எனக்கான எந்த வேலையும் நிலுவையில்லே... அப்பப்ப என்னோட வேலைய எவ்வளவு நேரமானாலும் முடிச்சிட்டுத்தான் போறேன், போதாக்குறைக்கு அவரோட வேலையையும் சேத்துப் பாக்குறேன். அப்பப்ப... என்னை வேணுமின்னே வரச்சொன்னா..."
"அலுவலக வேலதானே கதிர்... வந்து செஞ்சா என்ன... இத விட முக்கியமான வேல என்ன இருக்கு... நீங்க வரறீங்க... இது என்னோட கட்டளை..."
"அய்யா..." கதிர் பேச வந்ததைப் பொருட்படுத்தாமல், பொது மேலாளர் தம் அறைக்குள் சென்று விட்டார்.
ராமன் வெற்றிக்களிப்புடன் சுற்றியுள்ளோரைப் பார்க்க, பொது மேலாளரே சொன்னபின், நமக்கென்ன என்றவாறு தத்தம் இருக்கைக்குச் சென்றனர்.
கதிருககுக் கையறு நிலையாயிற்று.
தன்மேசையறையிலிருந்து ஒரு வெள்ளைத்தாளை எடுத்தான். இருக்கையில் அமர்ந்து விறுவிறென எழுதினான்.
ராமனைப் பார்த்தபடி நேராகப் பொது மேலாளர் அறைக்குச் சென்றான்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவன், தன் இருக்கையில் உள்ள தன் உடைமைகள் எல்லாம் எடுத்துக்கொண்டு நேராக ராமன் அருகில் சென்று, "அய்யா... நான் வர்றேன்... அடடா... தவறு... நான் வரமாட்டேன், அலுவலகம் விட்டுப் போறேன்" என்று சொல்லிவிட்டு அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்களைப் பார்த்து, "நான் வருகிறேன்... நண்பர்களே... மீண்டும் எங்காவது சந்திப்போம்... அல்லது என் வீட்டிற்கு வாருங்கள், உங்களை வரவேற்கிறேன்" சொல்லியபடி அலுவலகத்தை விட்டு அகன்றான் கதிர்.
ராமன் எதிர்பாராத் தாக்குதலுக்கு ஆளானவர் போலத் திகைத்தபடி பார்க்க, பொது மேலாளர் அறையிலிருந்து...
"... ராமன்... " என்ற பலத்தகுரல் கேட்க நிலைகுலைந்தபடி "அய்யா... இதோ வந்துட்டேன்..." என்றபடி எழுந்தார்.
**** **** ***** ***** *****
ஞாயிற்றுக்கிழமை... வில்லாபுரம் இந்தியன் வங்கிக்கு அருகில் உள்ள தெருவில் அந்த மகிழுந்து நுழைந்தது.
மகாத்மா காந்தி ஆதரவற்றோர் முதியோர் இல்லம் வாசல் முன்பாக நின்றது.
மகிழுந்திலிருந்து ஒரு பெரிய அலுவலரும், அவரது செயலர் போன்ற தோரணையில் உள்ள மற்றொருவரும் இல்லத்திற்குள் நுழைந்தனர்.
இல்லத்தில் இருந்த வரவேற்பாளரும் செயலாளருமான செல்வம் இருவரையும் வரவேற்று அறையில் அமரச்செய்தார்.
அலுவலர் செல்வத்திடம் ஏதோ சொல்ல முதியோர் காப்பக அறையினை பாதிக் கதவு மூடி, பாதிக்கதவு திறந்து வைத்தார். அறையிலிருந்து இவர்கள் மட்டும் பார்க்க முடிவது போலவும், காப்பகத்திலிருந்து பார்த்தால் இவர்களைப் பார்க்கமுடியாத வண்ணம் இருந்தது.
அலுவலரும், அவரது உதவியாளரும் வசதியாக அமர்ந்து கொண்டனர்.
உள்ளே வரிசையாகப் படுக்கைகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு படுக்கைக்கு அருகில் ஒரு சிறிய மர அட்டம் இருந்தது. படுக்கையில் அறுபதுக்கு மேல் வயது கொண்ட ஒவ்வொரு விதமான முதியோர்கள் அமர்ந்திருந்தனர். பெரிய விசாலமான அறை அது, நடுவில் பெரிய திரை போட்டு மறைத்து அந்த அறையினை இரண்டாய்ப் பிரித்திருந்தது.
திரைக்குக் கீழ்த்திசையில் மூத்த குடிமக்களாகிய ஆண்களுக்கான பகுதி, மேல்த்திசை மூதாட்டிகளுக்கான பகுதி.
அறையின் நடுவே சுவரின் மேல் எல்லோரும் பார்க்கும் வண்ணம் அகண்ட திரைகொண்ட தொலைக்காட்சிப் பெட்டி. அதில் டாம் அன் ஜெர்ரி கார்ட்டூன் படம் ஓடிக் கொண்டிருக்க பூனை எலியைத் துரத்தியபடி, ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு வகையில் அடிபட்டு நிற்க, எலி சிரிக்க, பூனை துரத்த, அந்த சாகசங்களைக் கண்டு எல்லா முதியோர்களின் முகத்திலும் சிரிப்பு பொங்கிவரும் காட்சி அழகாய் இருந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய்ச் சிரிக்க, அந்த முதியோர், மூதாட்டிகளிடத்தில் ஒரு மாறா மகிழ்ச்சி தெரிந்தது.
"படம் முடிந்ததும் எல்லோருக்கும் இன்னைக்கு அலங்காரச் சாப்பாடு....அப்பளம், வடை, பாயாசத்தோடு, அதிகக் காரமில்லாமே சாம்பார், ரசம், மோரு ன்னு தடபுடல் பண்ணிடலாம்..."
நடுவே நின்று கை தட்டியபடி கதிர் சொல்லிக் கொண்டிருந்தான்.
"அப்றம் ரத்னம் தாத்தா ஒரு கதை சொல்வாரு, சாம்பசிவம் தாத்தா ஒரு,கவிதை சொல்வாரு, பிறகு கோமதிப் பாட்டி ஒரு சிரிப்புக் கதை, சுந்தரிப் பாட்டி அனுமன் கதைய உபன்யாசமாச் சொல்வாரு..."
"ஏப்பா கதிரு... நான் இல்லையா... ஒரு டி எம் எஸ் பாட்டு பாட்றேன்பா..." என ஏகாம்பரம் தாத்தா கடைக்கோடியிலிருந்து சத்தம் கொடுக்க,
"தாத்தா... நீங்க இல்லாமலா... என்ன பாட்டுப் பாடப் போறீங்க..." கதிர் கேட்க, " ஏரிக் கரை மேலே..போறவளே பெண் மயிலே...."
"தாத்தா... சொந்த அனுபவமா... மலரும் நினைவா... விட்டா இப்பவே பாடுவீங்க போலருக்கே... எல்லாம் சாப்பாட்டுக்குப் பின்னாடி தான்..." எனக் கதிர் கிண்டலடித்தான்.
ஏகாம்பரம் குழந்தையாய்ச் சிரித்தபடி பொய்யாய் வெட்கப்பட்டார்.
"எலே... பேராண்டி... நானும் பாடுவேன்டா... உன்னைக் கண்டு நான் ஆட, என்னைக் கண்டு நீயாட..." என மூக்காயிப் பாட்டி பொக்கை வாய் திறந்து காட்டியபடி சொல்ல, " பாட்டி... பல் செட்டு கீழே விழுந்திடப் போகுது " எனக் கதிர் சிரிக்க, "போடா...போக்கிரி..." எனச் செல்லமாய்க் கோபிக்க, எல்லோரும்... ஹோவென்று சிரித்தனர்.
அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளம் சூழ்ந்திருந்தது.
**** **** ***** ***** *****
செல்வத்திடம் பெரிய அலுவலர் கேட்டார், "யாருங்க அந்தத் தம்பி... யாருக்காவது உறவா... இல்லே தெரிஞ்சவங்க இங்கே யாரும் இருக்காங்களா..."
"இல்லீங்க... ஏதோ ஒரு நாள் பொழுது போகாம இந்தப் பக்கமா வந்து எட்டிப் பாத்தாரு... இங்கே உள்ளவங்க விவரமெல்லாம் கேட்டாரு... தன்னோட திருமண நாள் அன்னிக்கு மனைவியோடு வந்து எல்லாருக்கும் விருந்து வச்சாரு... அப்ப இந்தத் தாத்தா பாட்டிகளோட கொஞ்ச நேரம் பேசினாரு... இன்னொரு தடவ பொன்னியின் செல்வன் புத்தகம் கொண்டு வந்து இவரும், இவர் மனைவியும் எல்லோரையும் உக்காத்தி வச்சி, மாறி மாறி வாசிச்சிக் காமிச்சாங்க... அதிலேர்ந்து இவரு மேலே எல்லா முதியோருக்கும்
ஒரு வாஞ்சை பாசம் வந்திருச்சி... அதிலே அந்த சாம்பசிவம் தாத்தா இருக்காரே அவரு சொன்ன வார்த்த இவர உலுக்கியிருச்சி...”
"தம்பி... எங்க சொந்த பந்தங் கூட எங்களப் பாக்க வர்றதில்லே... ஏன்... எங்கள இங்கே கொண்டு வந்து சேத்த வாரிசுகளே வர்றதில்லே... ஏதோ கடனுக்கு வந்து அலுவலகத்திலே காசக் கொடுப்பாங்க... அப்றம் எப்ப வருவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாது... எங்களுக்கும் தெரியாது... வந்து சேர்ந்த புதிசிலே இதெல்லாம் வேதனையா இருந்திச்சி... அதுவே பழகிப் போச்சி... இங்கே இருக்கிறவங்களத்தான் எங்க சொந்தமா நெனச்சி ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாவோம்... ஆனா தம்பி நீங்க வர ஆரம்பிச்சதிலேர்ந்து எங்களுக்குத் தனிமைங்கற சோகம் இல்லாமப் போச்சி... அதனாலே நீங்க அடிக்கடி இங்கே வந்தா நல்லாருக்கும்... இதுவும் சுயநலம் தான்..."
சாம்பசிவம் சொல்ல, ஏகாம்பரம் இருக்காரே... ஒரு படி மேலே போயி, இவரோட கையைப் பிடிச்சி அழ ஆரம்பிச்சிட்டாரு... அதப் பார்த்து நெகிழ்ந்து போயி, அன்னியிலேர்ந்து வாராவாரம் தவறாம ஒவ்வொரு சனி, ஞாயிறு காலையிலேர்ந்து ராத்திரி வரைக்கும் இருந்துட்டு இவங்களோடயே இருப்பாரு... ஆடுவாரு... பாடுவாரு... கதைகதையாப் பேசுவாரு... இவங்களயும் உற்சாகப்படுத்தி எல்லாத்திலேயும் கலந்துக்க வைப்பாரு... நல்ல நல்ல படங்களை தொலைக்காட்சிப் பெட்டியிலே போட்டுக் காமிப்பாரு... நல்ல பாடல்களைக் கேக்க வப்பாரு... இவங்களயும் பாடச்சொல்வாரு... இப்படி ஆரம்பிச்சது தான் இந்த உறவே... இதுக்காகவே இங்கே பக்கத்திலேயே வீடு பாத்து
வந்துட்டாருன்னா பாருங்களேன்...” செல்வம் சொல்லச் சொலல இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
அலுவலர் உதவியாளரைப் பார்க்க உதவியாளர் பரிதவிப்பில் இருந்தார்.
"செல்வம்... அவர இங்கே வரச் சொல்றீங்களா..."
அலுவலர் சொன்னதும் செல்வம் கதிரை அழைத்து வந்தார்.
அலுவலரைப் பார்த்ததும், கதிர் திகைத்துப் போய், "அய்யா... நீங்களா... நீங்க எங்கே இப்படி.." எனக் கேட்டான்.
"ஆமாம் கதிர்... அலுவலகத்திலே திடீர்னு நீங்க ராஜினாமாக் கடிதம் கொடுத்ததும் நான் ராமனைக் கூப்பிட்டு விசாரிச்சேன்... அவராலே உங்க வேலையிலோ, நடவடிக்கையிலோ, குணத்திலோ குத்தம் எதுவும் சொல்ல முடியலே... திரும்பத்திரும்ப விடுமுறை நாள்லே நீங்க அலுவலகத்துக்கு வரச்சொன்னா வர்றதில்லேங்கறதத் திரும்பத்
திரும்பச் சொன்னாரு... நானும்சொன்ன உடனே நீங்க ராஜினாமா குடுத்தீங்களா... அப்படியே ஆடிப் போயிட்டேன்... இதுக்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கும்னு விசாரிச்சேன், அப்றந்தான் வாரந்தவறாம இந்த முதியோர் இல்லத்துக்கு வர்றது தெரிஞ்சது... பிறகு ராமனையும் கூட்டிட்டு இங்கே வந்து பாக்குறப்பத் தான் உங்களுக்கு இவ்வளவு பெரிய உறவுக்கூட்டம் இருக்குதுங்கறதத் தெரிஞ்சிக்கிட்டேன்..." என்று சொல்லியவாறே கதிரின் ராஜினாமாக் கடிதத்தைக் கிழித்துக் கதிரின் கையில் திணித்தார்.
"கதிர்... நாளையிலேர்ந்து நீங்க தான் அலுவலக மேலாளர்... காலையிலே உங்க மேசையிலே பதவி உயர்வு ஆணை இருக்கும்..."
கதிர் பதறிப் போய், "வேணாங்க அய்யா... அவரே மேலாளரா இருக்கட்டும்... நான் எப்போதும் போல..." என்று ராமனைப் பார்த்தவாறே சொன்னான்.
அலுவலரான பொது மேலாளர் சிரித்தபடி, "... ம்ம்... அவரும் இருக்கார்... உங்களுக்கு மூத்த மேலாளரா... இனிமே நேரங் கிடைக்கும் போதெல்லாம் நானும் இங்கே வரலாம்னு இருக்கேன்... உங்களுக்கு ஆட்சேபணையில்லையே... என்ன... ராமன் நீங்களும் வரலாமில்லே..." எனக் கேட்க ராமன் பலமாகத் தலையாட்டி ஆமோதித்தார்.
இதற்குள் கதிரின் பின்னால் திரண்ட முதியோர்கள் பேராண்டிக்குப் பதவி உயர்வு கிடைச்சிருச்சு... இன்னிக்கு தடபுடலாக் கொண்டாடிடுவோம் என்று கைதட்ட, கதிரை சாம்பசிவம் அணைத்துக் கொண்டார்.