பாக்கியத்தோட மனசு மொத்தமும் இறுக்கமாகவே இருந்தன, சிமிண்ட் ஆலையில், இரவு வேலைக்கு தொழிலாளர்களை அழைக்கும் பதினோர் மணி சங்கு சத்தமிட்டு, ஓய்ந்து ரொம்ப நேரமாச்சி... இன்னும் பொட்டுத் தூக்கமின்றி ஒருக்களித்து படுத்திருந்தவளின் கண்களில் ஈரம்.
மகள் ஜோதியின் ஞாபகம் அவளைக் கொஞ்சம் அதிகமாகவே பாதித்தது.
‘நேரத்துக்கு பசி தாங்க மாட்டாளே...வயிராற கொடுத்துருப்பாங்களா... இப்ப உறங்கிருப்பாளா ஏஞ்செல்லம்..? ' தனக்குள்ளேயே கேட்டாள், விசும்பினாள், அந்த அரவத்தில் கணவன் வந்துவிடுவானோன்னு பயந்து, தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள். ஆனாலும் அமைதியில்லை... சூரைக்காற்றில் தூசியாய் ஜோதியின் நினைவு சுழன்று கொண்டேயிருக்க, கரை உடைந்தாற்போல் அழுதே விட்டாள்.
‘பாக்கியம்...' வெளிக்கதவு திறந்து வந்த, முத்தையா, குண்டுப்பல்பை எரியவிடவும், பதறியடித்தபடி எழுந்து, முந்தியால் கண்களை துடைத்து “ஒன்னுமில்லங்க” என்றாள். அவன் பாதி மது மயக்கத்தில் இருந்தாலும் “நான் எதுவுமே கேட்கலெயே... அந்த சனியன் நெனப்பு வந்துருச்சோடீ...” தெளிவாகப் பேசினான்.
“அதா ஒன்னுமில்லனு சொல்றேன்ல சனியன்'ன்னே அவ்வளவுதான்”
“இதோ பாருடீ இப்பத்தான் இந்த குடும்பம் நிம்மதியா இருக்கு நீ ஒப்பாரி வெச்சி மறுபடியும் துக்கத்த ஏற்படுதாத”
“வாய மூடுயா எதுயா நிம்மதி...குதியோனு குதிச்சி சாதிச்சிபுட்டையே நீயெல்லாம் ஒரு தகப்பனாயா? ” அவளின் கத்தலில் மூத்தவனும். ரெண்டாவது பொண்ணும் கண்களை கசக்கியவாரே எழுவும், “உருப்புடியா ரெண்டுக இருக்குல இதுகல பாத்து, வளத்து ஆளாக்க நெனப்பு வை. போனத யோசிக்காத பாக்கியம் ” அவள் வேகத்துக்கு குழைவு காட்டி பேசி, இரு பிள்ளைகளையும் படுத்துக் கொள்ளும்படி செய்கை காட்டினான். பிள்ளைகளோ அம்மாவை கட்டி, ஒன்றியதுகள்
“இப்படிச் சொல்லியே என் வாய அடச்சிடுற, அய்யோ... பாவமூட்டைய தூக்கி தலையில வெச்சுட்ட, சொம தாங்காம நான்ல மனசுக்குள்ள கதறென் ” என சொல்லிக் கொண்டே பிள்ளைகளை மடியிலே கிடத்தினாள். முத்தையாவுக்கோ தான் எண்ணி வந்த எனப்புக்கு இனக்கம் இல்லாத சூழல், கோபம் தலைக்கேறியது...
“என்னடி பாதி சாமத்துல பொலம்பலு,நீ யாருடீ... என்ன நம்பிருக்க பொட்டச்சி, புருஷன் சொல்றத கேட்டு செஞ்சிட்டு பொத்திக்கிட்டு இருக்க வேண்டியவ. திமுறா அதையே சொல்லிக் காம்பிச்சிக்கிட்டு... பொறும இழந்தேனா கன்னம் வீங்கிரும் ஆமா ” ஆம்பளத்தனம் மீசை முறுக்கியது. கை ஓங்கியது...
சுயம் ‘சுர்ர்...'ன்னு சுட, வேகமாய் எழுந்த பாக்கியமும் விடுவதாக இல்லை. வாக்குவாதம் முற்ற, பிள்ளைகள் ஓ..என கதற, பெண்மைதான் அடங்கியது. முத்தையாவின் காலுக்கு தண்ணீர் செம்பு எத்துப்பட்டு, தண்ணி சிதறி உருண்டோட,வேகத்துடன் வெளியேறினான் ‘ டமார்' ன்னு கதவை சாத்தியடைத்து.
- 2 -
கடந்த ஒரு வாரச் சண்டையின் தொடர்ச்சிதான் இன்றும்...
முத்தையாவுக்கு பயர் ஆபீஸ் வேன் ஓட்டும் வேலை, சுப்புலாபுரத்திலிருந்து வேலைக்கு வந்த பாக்கியத்தைக் காதலித்து, சாதி எதிர்ப்பு மீறி கல்யாணம் முடிக்க, அவர்களைச் சார்ந்த சொந்தங்கள் ஒதுங்கிக்கொள்ள, பயர் ஆபீஸ் முதலாளி ஆதரவுடன் அங்கே இருப்பு வேலையாட்களின் லயன் வீட்டொன்றில் புது மனைவியுடன் தங்கினான்.
ஆரம்ப வாழ்க்கை நன்றாகத்தான் புள்ளிவைத்தது. அவனின் வாரச் சம்பளம் அப்படியேப் பாக்கியத்தின் கைக்கு வர, அவளின் சம்பளமும் சேர்ந்து குடும்ப செலவுகள் போக கணிசமான தொகை சேமிப்பானது. மகிழ்வின் சிலிர்காற்று வீசிக்கொண்டிருக்கையில், கூடுதல் சிலிர்ப்பாய் மகன் பிறந்தான்... முதல் வரவு, ஆண் வரவு... சொந்தங்கள் வரவில்லை என்றாலும், சகவேலையாட்கள் அருகில் இருந்தார்கள்.
ஆனந்தத்தை அனுபவிக்கும் விதமென்று சிலர் மது கேட்டனர்... ஆர்வக்கோளாரில் வாங்கிதந்த முத்தையா தானும் அந்த தீயதை தீண்ட, மலமலனு தீயது பற்றிக்கொண்டது.
அழுதழுது சொல்லிப்பார்த்தாள். அவனின் காதுகள் செவிடானதுபோல் ஆகிவிட்டது. அடுத்து பெண் குழந்தைக்கு தாயானாள், பாக்கியம்.
வேலை நேரம் தவிர்த்து, மற்ற பொழுதுகள் நெருப்பில் பெட்ரோல் கொட்டின மாதிரி கணவனின் போதை நிலை. ‘வழிய ஏற்றுக்கொண்ட விதி... அனைத்துத் துன்ப, துயரங்களையும் தலையில் வாங்கி சுமக்கத்தான் வேண்டும்' ‘ ம் 'ன்னு நொந்துபோனவளின் வயிறு மூன்றாவது பெண்ணைப் பெற்றெடுக்க, விதியோ அவளில் அலங்கோலக் கோடாய் மாறிவிட்டதை நினைத்து, நினைத்து உள்ளுக்குள்ளும், வெளிப்படையாகவும் கதறினாள்.
போதுமான வளர்ச்சி இல்லாது அந்த குழந்தை...
ஒவ்வொரு நாளிலும் பாக்கியத்துக்கு ரணப்பொழுதுகள் நகர்ந்தது. வயதுக்கேற்ப உடல் வளர்ச்சி என்றாலும், செயலில் எந்தவித முன்னேற்றம் தெரியவில்லை. ‘ஜோதி 'னு மகளுக்கு பெயர் வைத்து, எண்ணெயற்ற ,திரியற்ற விளக்காய் அவளைப் பார்க்க, அழுகையே மிச்சமானது.
வேலைக்கு செல்லாது, பிள்ளையே கெதியென வீட்டில் கிடந்தாள். வருமானம் குறைந்தது. முத்தையாவின் தீயத் தேவைக்கு அவனின் சம்பளம் கரைந்து, ஏதோ மீதம் வந்தது.
சொகுசாக அங்கே வந்து படுத்துக்கொண்ட வறுமையோ கணவன் மனைவி சண்டையை, பிள்ளைகளின் கதறலை தினமும் ரசித்ததுக் கொண்டிருந்தது.
‘கடசி கடசினு சனியனா புள்ள பெத்துருக்கா பாரு'
‘வாய கழுவுயா'
‘இதாலதானே நீ வேலைக்கு போகமாட்ற'
‘அதுக்கு என்ன என்னையா பண்ணச்சொல்ற... நீ ஆம்பள போறல'
‘வருமானம் பத்தலையில'
- 3 -
‘வார பணத்த அப்படியே கொண்டாந்...' முடிக்கவில்லை பாக்கியம் திடீர் தாக்குதலாய் அடித்து புரட்டி எடுத்துவிட்டான், முத்தையா அதோடு விடவுமில்லை
‘இந்தச் சனியனை எங்கையாவது கொண்டுபோய் போடுடீ...' என்றவன் தொடர்ந்து தொல்லை பண்ணி, ஜோதியை அதற்கென இருக்கும் தொண்டு நிறுவனத்தில் சேர்க்கவும் செய்து விட்டான்.
முத்தையா ‘உஸ்'ன்னு நிம்மதியாக இருந்துவிட்டான்.
பெத்தவளாச்சே பாக்கியம்... கணவனை மாதிரி இருக்க முடியுமா? கடைக்குட்டி ஜோதியை பிரிந்த வேதனை நெருப்பில் தகித்தாள்.
தொப்புள் கொடி அறுபட்ட இடத்தில் உயிர் வதை...
அன்று காலையில் கண்விழித்து, கதவுதிறந்து வந்தபோது, வாசலில் காக்கா குஞ்சொன்று குன்றிப்போய் கிடந்தது.
‘அச்சச்சோ... மத்த காக்கைகளுக்கு தெரிஞ்சா கூட்டமா வந்திருமே...' முணுமுணுத்தபடியே முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு, அங்கே கிடந்த மூங்கில் குச்சியால் அந்த காக்கையை தள்ள, அது மெல்ல, றெக்கை அடித்து ‘க்கா...க்க்கா...' பறக்க முயற்சித்தது, முடியவில்லை.
ஒரு வழியாக கொஞ்சம் தூரம் விரட்டவும் எப்படித்தான் உணர்ந்ததோ காக்கைக்கூட்டம் கரைந்து கொண்டு சூழ்ந்து விட்டது.
இன்னும் எத்தனை காலங்கள் கடந்துபோனாலும் இந்த காக்கையினம் பரிதவிப்புக் காட்சி மாறாதுபோல்... தனக்குள் எண்ணிக்கொண்டு, அன்றைய வேலையில் ஈடுபாடாயிருந்த பாக்கியம் அந்தக் காக்கையைக் கவனித்துக் கொண்டும்தான் இருந்தாள். காக்கைக் கூட்டம் குறைந்தது, மறுபடியும் குஞ்சு வாசலருகே வந்தது. தள்ளி விட்டாள்.
காக்கைகளின் ஆர்ப்பரிப்பு...
இரண்டு நாட்களாக இதே நிகழ்வு.
குஞ்சுக்கு இரை இல்லையோ...? அதனால்தான் தவிக்கிறதோ...?
இப்போதெல்லாம் காக்கைகளின் தொல்லை கிடையாது. அந்தக் குஞ்சு நடக்கிறது. ஏனோ பறக்கத் தெரியவில்லை, பறக்க முடியவில்லையோ என்னவோ.
பழைய சோற்றை ஒரு கைப்பிடி பிழிந்து போட்டாள் பாக்கியம்.
குஞ்சு கரைந்தது... சில காக்கைகள் வந்தது, குஞ்சோ தனது கூறிய வாயை திறந்தபடி ‘எடுத்துப் போடுங்க' என்னும் பாவனையில் தலை தூக்கி நின்றது. மனிதவாடை அடித்துவிட்ட காக்கைகள்போல்...
அதுகள் மட்டுமே கொத்திக்கொத்தி தின்றன. குஞ்சு பரிதாபமாய் சுத்தி, சுத்தி வந்தது. எந்தக் காக்கையும் இரக்கப்படவில்லை.
அதையேப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு என்னவோ மாதிரி ஆனது.
- 4 -
சற்று நேரத்தில் ஜோதியின் உருவம் மனசை கவ்விக்கொண்டது. அடுத்தடுத்த நாட்களிலும் இதேதான் நிலமை. குஞ்சைப் பிடித்துத் தானே கொஞ்சம் சோற்றை ஊட்டலாம் என்றால் காக்கைகள் வந்து தலையில் கொத்துமென்ற பயம்.
மகளே ஜோதி நீயும் இப்படித்தான் அங்கே கிடக்கறயா... குமுறினாள்.
“அந்த காக்க குஞ்சி செத்து கிடந்துச்சிடீ தெரிஞ்சா காக்க கூட்டம் மொச்சுரும்னு நைசா தூக்கிப்போய் ரோட்டுக்கு அங்குட்டு போட்டுட்டென்”
ஞாயித்துக்கிழமை என்பதால் தூங்கிவிட்டாள். முன்கூட்டி எழுந்த முத்தையா ஏதோ ஒரு பெரிய சாதனையென இதை கூறவும், பாக்கியத்துக்கு சட்டென அழுகை முட்டிவிட்டது.
பிறகு அழுதும் விட்டாள்.
“ஓ புள்ள போனாப்புள நீயேன்டீ அழுவுற...”
இப்படி அவன் கேட்கவும் கொதித்து விட்டாள்... கண்களில் கனல் பார்வையில் கூர்மை மூச்சை இழுத்து வெளிவிட்டவள்,
“உன்னோட ரத்த உசுருதானையா ஜோதி அவளுக்கு எல்லாமுமா இருக்க வேண்டிய நாம உசுரோட இருந்தும் இந்த காக்க குஞ்சாட்டம் விட்டுட்டு வந்துட்டோமயா. அப்படி என்னையா அந்தப் பொண்ணால நமக்கு சிரமம்..? ” ஆக்ரோசமாய் கேட்டாள்.
“முடுஞ்சி போனத எதுக்குப் பேசுற” என்றான் அடக்கும் தொணியில்.
“ஆம்பள உனக்கு முடிஞ்சிரும்யா கருவுல சுமந்த பொட்டச்சியால அவ்வளவு லேசுல முடிச்சுக்க முடியாதே”
“அதுக்கு என்ன செய்யப்போற..? ”
“நாளைக்கெ ஜோதிய வீட்டுக்கு கூட்டியாரப் போறோன் ”
“அப்ப உனக்கு இந்த வீட்ல எடம் கிடையாது”
“இனிமே என்னையா எனக்கு ஓந்தயவு தேவ கிடக்கு”
மனைவியின் அந்த வார்த்தையில் நிமித்தம் தெரியவும், “அப்படினா...” என்றான்
“உறுதியா புள்ளையக் கூட்டியாரத்தான் போறேன், எனக்குப் புருசனா ஜோதிக்கு தகப்பனா நீ நடந்துக்கிட்டா எப்பவும் போல வாழலாம். ஏதாவது வீம்பு காட்டின... மூணு புள்ளகளையும் எப்படிக் காப்பாத்துனும்னு எனக்குத் தெரியும்” என்றவள் இனி பேச ஒன்றுமில்லையென்னும் பாவனையிலும் அடுத்து எதுவானாலும் சமாளித்து விடும் தெம்புடன், மனதில் எழுந்த திடமான உறுதி கலந்த தெளிந்த நிலைபாட்டோடு தூங்கிக் கொண்டிருக்கும் இரு பிள்ளைகளையும் எழுப்பி, தயார் செய்து, ஜோதியை அழைக்கக் காப்பகம் செல்லும் ஆர்வ வேகத்துடன் வீட்டுக்குள் சென்ற, பாக்கியத்தை ஆச்சரிய கேள்வியாக, வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் முத்தையா.