வழக்கம்போல் இரவு, சரியாக உறங்காமல் இருந்ததில் உடம்புக்குள் கனம் ஏறியதுபோலும், கண்களுக்குள் குறு மணல் விழுந்தது போலவும் உணர்வு கொண்டு, உடல் உலுக்கி, இரு கை ஆள்காட்டி விரல்களால் மெல்ல இமைகள் கசக்கி எழுந்து உட்கார்ந்தார் ராமசாமி.
விழித்துப் பார்கையில், ஜன்னலுக்கு வெளியே இன்னமும் இருளேக் கம்மியிருந்தது. கட்டிலையொட்டி இருந்த மேசை லைட்டுக்கு சுவிட்ச் தட்ட மஞ்சள் வெளிச்சம் பரவவும், அங்கே இருந்த சிறிய கடிகாரமோ தன் அனுபவ கணிப்புப்படியே ஜந்து மணியைக் காட்டியது.
படுக்கையை சுருட்டி கட்டிலுக்கடியில் வைத்ததும், வாஷில் தண்ணீர் திறந்து வாய் கொப்பழித்து, முகம் கழுவி, துண்டு ஒற்றி ஈரம் நீக்கியதும்,மல்துணி முண்டா சட்டை அணிந்து வேஷ்டி மடித்து முடிச்சுப் போட்டு கட்டியதும் அறையை விட்டு வெளியேறி, கதவு பூட்டி, மாடிப்படியிறங்கி தெருவில் நடக்க ஆரம்பித்துவிட்ட, ராமசாமிக்கு வயது அறுபதுக்கு மேல் என்றாலும் அது தெரியாத விவசாய உழைப்பாளி.
இப்பவும் பேரையூரில் விவசாய நிலங்கள், வற்றாத ஊற்று உள்ள கிணறுகளுடன் இருக்கிறது.
விவசாயம்தான்..?
ஒரே மகன், அவனை ஓரளவுக்குப் படிக்க வைத்து தன்வம்சாவழி விவசாயத்துலேயே ஈடுபடுத்த வேண்டுமென்ற அவரின் நெனப்புக்கு ஒத்து வராத மாதிரி அவனின் ஆர்வம் மேல் படிப்புகளுக்குத் தாவியது. கல்வித்தரம் அனைத்திலும் தந்தைக்குச் செலவு இல்லாத மதிப்பெண்களுடன்.
அம்மாவின் துணை கொண்டே தன் லட்சியங்களின் மையில் கல்களை கடந்த மகன் அரசுத்துறை பணியிலும் சேர்ந்து விட்டான். தன்வரை மட்டும் நிலங்களின் தோழனாய்... விவசாயமே திருப்தியாய்... கிராமத்து வெள்ளந்தியான மனுஷனாக இருந்தாலும் காலமாற்றம் எல்லாவற்றுக்கும் பொது என்னும் நியதியில் அமைந்து விட, பருவம் மாறியது மழையின் வருகையும் முன் பின்ன ஆனது. மண்ணுக்கான ஈரப்பதம் காய்ந்துபோக, தன்னையே நம்பியிருந்தவர்களை வஞ்சித்தது, விவசாயம். ஏகமான விளைச்சல் நிலையற்று ஏதோ விவசாயப்பார்ப்பு என பசுமை சுருங்கியது.
அழகான பூமிப்பந்தில் வஞ்சனையற்ற வாழ்க்கையை விட்டுவிட்டு, தனது... தனது... என்ற மாயை அண்டத்தில் போலித்தனமான உணர்வுகளில் அலைந்தலைந்து நிமிட திருப்தி மட்டுமே அடைகிறானென்றாலும், அதையே எதிர் கொள்கிறான்... விரும்புகிறான் மனிதன்.
சில் மாதங்களுக்கு முன் வரை ராமசாமி இப்படியில்லை...
இருக்கும் காலம்வரை கிராமம் சார்ந்த வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென எண்ணிக்கொண்டிருந்த நிலையில், நோயின் ரூபம் மனைவியின் இருதயம் வழியாக முதல் தாக்குதல் தொடுக்க, வைத்தியத்திற்கான நகரம் நோக்கிய புறப்பாடு, மகனின் வற்புறுத்தலில் தங்கலானது.
நெருக்கடியான நகரச் சூழல் ராமசாமிக்கு கொஞ்சமும் ஒப்பவில்லை. துணையாளின் உயிர் காத்தலில் நவீன வைத்தியம் அவரை, சகிப்புக்குள்ளாக்கிவிட, தனது கிராம ஞாபகங்களுக்கு திரையிட்டுக் கொண்டபோதும், வீடே கதியென முடங்கப் பிடிக்காது, நகரின் ஓய்வுச்சாலை நேரமான அதிகாலையில் நடைப்பயிற்சிக்குக் கிளம்பி விடுவார். அதுகூட ராமசாமிக்கு புதிதொன்றுமில்லை. கிராமத்தில் இதனிலும் வெள்ளன எழுந்து கொள்வார். ஆடு,மாடுகள் கழிவு... திண்ண மீத குப்பை அனைத்தையும் ஒன்றாக ஆவாரக்குச்சு கூடையில் அள்ளிக் கொண்டுபோய் மந்தைக் குப்பையில் போட்டுவந்து, கால்நடைகளை அவிழ்த்து வெளிக்கொட்டாரத்தில் கட்டுகையில் பொழுது சள்ளுனு விடிந்திருக்கும். இப்போது..?
ஆழ்ந்த உறக்கமின்மையும், உழைப்பற்ற உடல் முடக்கம் எல்லாம் காலை வேலையில் அவரை விழிக்க வைத்தது.
வயதொத்த சிலர் பழக்க வளையத்துக்குள் வந்தனர்.
கிராமத்தனமான சராசரி நடைமுறை,பழக்க வழக்கங்கள், பேச்சு வாக்கு எல்லாமே ராமசாமியை தனியாகக் காட்டியது, அவரின் ஒட்டுதலான புன்முறுவல் ஓர்வித ஈர்ப்பைக் கொடுக்க, சாலையோர நாயர் தள்ளுவண்டிக் கடையில் சந்திப்பு... மற்றவர்களுக்கு சர்க்கரை இல்லாத தேனீர், இனிப்பு தூக்கலாக கேட்கும் ராமசாமியை ஏதோ அதிசய மனிதராக ஒவ்வொரு நாளும் ஏறிடும்போது,
‘இது கிராமத்து கட்டையா...'னு தவறாது சொல்லி நகைக்க, ‘நாங்க மட்டும் புறப்புலேயே நகரவாசியா என்ன... எல்லாருக்குமே பூர்வீகம் கிராமம்தான் ராமசாமி சார்...'
‘இப்பகூட நான் சொந்த ஊர் சாத்தூருக்கு நல்லது கெட்டதுக்கு போயிட்டுத்தான் வாரேன்'
‘என்னோட மூத்த பையனுக்கு கிராமத்துலதான் பொண்ணு எடுத்துருக்கேன்' அப்படி கூறியவர்கள் யாரிடமும் கிராம அடையாளம் இல்லையென யூகித்து,
‘ஆனாலும் நாப்பது, அம்பது வருசம் இடைவெளியில் துரித ருசி உணவு முறைகளில்தானே நாக்க வச்சுருந்திங்க அது எல்லாமே வெசம்... வியாதிய வெல கொடுத்து வாங்கற மனுஷ பழக்கம்' எதார்த்தம் பேசுவார்.
இன்னும் நிறைய...
“நாமலும் தினமும் மூச்சிறைக்க நடகுக்றோம், காலு கைகல ஆட்டுறோம், ஆனாலும் நிரந்தரமான ஆரோக்கியம் இல்லையே” சலித்துக் கொண்டே வந்தார் கோபாலன்.
“ஆமாப்பா ஏதாவது ஒரு வலி உடம்புல வந்துருது ஆஸ்பத்திரிக்குப் போனா மருந்து மாத்திரைன்னு பெரிய லிஸ்ட நீட்றான். பணத்துக்கு... மகன் முகத்த சுறுக்குறான்”
“என்ன செய்ய வயசான மனுசங்களுக்கு இதுவும் ஒரு அனுபவம் போல...”
“நேத்து என்னோட மருமக ‘சும்மாவே உட்காந்து கிடக்க எப்படித்தான் முடியுதோ'னு காதுபடவே சுறுக்குனு பேசுறா ராத்திரி சாப்பிடக்கூட மனசில்லாம படுக்கப்போறேன், ஏன்னு எனக்கு வாச்சவளும் கேட்கல, மகனும் கேட்கல”
வருத்தம் மேவிய சலிப்பு, பரிதாபமாய்க் காட்டியது பரமனை.
இந்த நகர வாழ்க்கையில் முதுமை மனிதர்கள் அந்தந்த வீட்டுக்கு தவிர்க்க முடியாத உயிர் பொதிகளாகத்தான் இருக்கிறார்களோ? சொந்த, பந்த அன்யோன்யமான உறவு முறைகளில் விழுந்த விரிசல், கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகி தாய், தந்தைக்கான கடைசிகாலக் கடமைவரை இப்போது வந்துவிட்டதோ... ராமசாமியை ஏதோ ஒன்று நறுக்குப்பட வைத்தபோது,
“வயசு என்ன அப்படியொரு பொருட்டா..?”என்ற அந்த திடீர் கேள்வி... நண்பர்களை நேர்கோட்டில் நிறுத்தியது. “உங்களோட முதுமைய நீங்களே வேண்டா வெறுப்ப நெனக்கிறீங்களா..?” மறுபடியும் கேள்வியே வைத்தார்.
“ஒவ்வொரு நாள் நகர்வும் வெறுப்பை அதிகமாக்கிக்கிட்டே போகுதே... அப்படித்தான தோனுது” பரமன் கூறியதை மற்றவர்களும் ‘ஆமாம்' என்றனர்.
“இதுதாங்க உங்களுக்கான முதல் தாக்குதலே...” என்றதும் புரியாதமாதிரி ஏறிட்டவர்களின் இணக்கமான தோழனாய்
“நல்ல வேலை, நிலம், வீடு, பொன், பொருள், மனைவி, பிள்ளைகள்னு அழகா, அருமையா வாழ்க்கை நகர்வு, வயது ஆக ஆக ஓய்வு ஆகறதுக்குள்ள எல்லா கடமைகளையும் முடிக்கும் நோக்கத்தோட உங்களுக்கான தேவையையே நெனப்புக் கொள்ளாது இருந்துட்டு இப்ப தவியாதவிக்கிறீங்க, இதுக்கு என்ன காரணம் தெரியுமா..?
கடைசி காலத்துல பெத்ததுக கவனிச்சுக்குவாங்க என்ற நம்பிக்கைதான், அதெல்லாம் பொய்த்துப் போய் ரொம்ப நாளாச்சுனு உணராம வேலை முடியவும் வீடே கெதினு முடங்கிட்டு எதிர்பார்த்து இருந்ததுல பாதிகூட கிடைக்காம ஏக்க வாசியா மேலும் சுறுங்குறீங்க. வயது முதிர்ந்த நாட்களை ஏதோவொரு சாபக்கேடுனு கூனி, குறுகி தள்றீங்க. வாழ்க்கையோட கடைசி நிமிஷம் கண்ணுக்கு தெரியாதானுகூட விரக்தியாகிப்போறீங்க. தன் கைகளை வெறுமையா வச்சுக்கிட்டு அடுத்த கை நிறைவை தனக்கானதா எண்ணியது பெரிய தப்பு. அதுவுமில்லாம ‘இனிமே ஓய்வுதான் நமக்கு... நிம்மதியா இருக்கலாம்' னு உங்களுக்கு நீங்களே ஒரு தடுப்புச் சுவர எழுப்பிக்கிறீங்க. யதார்த்த வழிக்கு சிந்திக்க தவறிட்டீங்க, நம்ம உடல்கூறும் எந்திரம் மாதிரிதான் அதற்கான ஓட்டம், கவனிப்பு, சரியான பராமரிப்பு இருந்தால் கோளாறு வாராதிருப்பதுப் போல் நாமும் நம்மை எல்லா நிலையிலும் சோர்வில்லாது வைத்திருந்தாலே, வியாதியாவது வெங்காயமாவது” சடசடவென பேசி நிறுத்த, அசந்து போனார்கள், நடைப் பயிற்சி நண்பர்கள்.
என்ன சொல்வதென யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. மெளனம் அவர்களை அமுக்கி விட்டிருந்தது.
ராமசாமியே தொடர்ந்தார்...
“வயசு கூடலாங்க மனசு, எண்ணமெல்லாம் சானைக் கூர்மையா இருந்தாளே எவ்வித தொய்வும் அண்டாதுல... உங்களோட நிலைப்பாட்டை குத்திக்காட்டுறேன்னு தயவு செஞ்சி நெனைக்கவேணாம், இங்க நடக்குற கட்டிடங்க வேலைக்கு, ரோட்டு வேலைக்கு, நம்மவிட மூத்தவங்க எவ்வளவுபேர் வந்து போறாங்க பாக்குறோம்ல, அவங்களும் பிள்ளைகுட்டிக்காரங்கதான். இல்லாமை அவர்களை உழைப்பில் இயங்க வைக்குது. உங்களுக்கு வசதி வாய்ப்புக்கள் கிடைத்தும், சரியான திட்டமிடல் இல்லாததால் வெற்றிட முதுமை மனிதர்களென அழுத்தம் கொள்றீங்க. இதற்காகப் பிறரைக் குறை சொல்வது முறையற்றதுனுதான் எனக்கென்னவோ தோணுது. நாம புள்ளைகளுக்கு எல்லாமும் செஞ்சோம் நமக்கு அவங்க முழுமையான கவனிப்பா இல்லையேனு வேதனப்படுறத நிறுத்திட்டு, நடைமுறை இனக்கமானதும் ஒண்ணு உள்ளதுனு யோசிக்க, எந்தவொரு பிரச்சனையானாலும் அணுகுமுறை சகிப்பால லேசு படுத்தலாம். ஒரு உண்மை சொல்லவா...?” என்றவரை ‘ம்...' என்பதாய் ஏறிட்டனர்.
“என்னோட மருமகளிடம் நானும் சரி, வியாதிக்கு ஆளான என் வீட்டுக்காரியும் சரி. இந்த ஒன்னேகால் வருஷத்துல ஒருநாகூட முகச்சுழிப்பே வாங்குனது இல்ல...”என்றபோது ‘என்ன ராமசாமி சார் சொல்றீங்க...'
உச்சமான ஆச்சரியத்தில் அவர்கள்.
“வியக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல, அவ குணத்துக்கு ஏத்த மாதிரியும், நம்மை குறை கூற முடியாதளவு ஏதாவது ஒருவகையில உதவுதலிலும் மாமா, அத்தை, மருமகங்கற இடைவெளி இல்லாமப் போகுது. அதாவது கோபாலன் சார்... நாம நிறைய கடந்து வந்துட்டோம், மகன், மருமக, பேரன், பேத்திக சுதந்திரத்தை விரும்புவாங்க அவங்களோட எண்ணங்களுக்கு, சதா வீட்டோட நாம இருக்கறது தேவையற்றததாத்தான் தோணும், அதை போக்கும்படியா வழியப்போய், புள்ளைகளை பள்ளி வேனுக்கு கூட்டிப்போறது... சாயந்தரமானா திரும்ப அழைச்சுட்டு வாரது பால் வாங்க, கரண்டு பில் கட்ட, ரேசன் கடை போறதுணும், ‘வேற ஏதாவது செய்யனுமா சொல்லுமா' னு உரிமை எடுத்து கேட்டாலேப் போதும், ஒட்டுதல் யதார்த்தமாகிவிடும். இதெல்லாம் உங்களுக்கான ஒப்பு வார்த்தை இல்ல என்னோட தினம் அனுபவம். அதுவுமில்லாம யாருக்காக, யார் வீட்டுக்கான தேவைகள செய்யப் போறோம்... நம்ம மகன், மருமக, வாரிசுகளுக்கு தானே .” சற்று நிறுத்தி, நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டதும்
“இதையெல்லாம் வீட்டில் கடைப்பிடித்துப் பாருங்களேன்... குடும்பத்தில் வேற்றுமைகள் நிச்சயம் காணாமல்போகும், மாறுதல் தெரியும். முன்பிருந்த வாழ்க்கை முறைகள் இனிமே மனுஷனுக்கு கிடையாதுதான். இருக்கற வாழ்க்கைய அனுசரிச்சிக்கிட்டா தேவையற்ற கசப்புகளை, வீம்புகளை, மன அழுத்தங்களை, சராசரியாக பேசிக் கொள்ளாத உம்மாம்மூஞ்சித்தனத்தை தவிர்க்கலாமே, நல்லா நெனச்சுப் பாருங்க, தீர்வுகள் நம்ம பக்கத்துலேயே இருக்கு”
வானத்திலிருந்து அசரீரி கேட்கும் பாவனையில் நண்பர்கள்... ராமசாமி சொல்லிய விசயங்கள் அனைத்தும் அவர்களை மொத்தமாய் யோசிக்க வைத்தது.
இப்போது முழுமையாக விடியல் வெயில் தந்தது... அது மாதிரியே முதுமை மனசுகளுக்குள்ளும் சகிப்பு, இணக்கம் காட்டும் தெளிவு பரவும் என்ற நம்பிக்கையோடு ‘வாங்க கிளம்பலாம்' என சைகை காட்டவும், அடுத்தடுத்த பொழுதுகளைச் சந்தோஷமுடன் நகர்த்த, நம்மை முதலில் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டுமென்ற எண்ணங்கள் மேவ, வீடுகள் நோக்கி நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள் ராமசாமியைத் தொடர்ந்து அவர்களும்...