இதுநாள் வரை இப்படி ஒரு மனநிலையில் நான் இருந்ததில்லை. யோசித்துப் பார்த்தால், இது தொடர்கதையாக என்னைப் பல ஆண்டுகளாகத் துரத்தி வந்துள்ளது. "ச்சே... ச்சே... நிச்சயம் இருக்காது" என்று என்னை நானே ஏமாற்றி வந்துள்ளேன். முதன் முதலில் எப்போது இது தொடங்கியது என்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஒரு வேளை பிறப்பிலிருந்தேக் கூடத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் என் நினைவில் இருக்கும் முதல் நிகழ்வு அதுதான். அந்த நிகழ்வு ஒரு முறை, இருமுறையல்ல பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்தேறியது. அப்பா வாங்கி வரும் எந்தத் தீனியும் நான்காகப் பிரிக்கப்படும். அப்பாவின் பங்கை அவர் எப்போது சாப்பிடுகிறார் என்று யாருக்குமேத் தெரிவதில்லை. ஆனால் நான், என்னை விட இரண்டு வயது மூத்த என் அண்ணன் மற்றும் அம்மா மூவரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம். எனக்கும் என் அண்ணனுக்கும் அவைகள் சரியாகப் பிரித்துக் கொடுக்கப்படும். அவற்றை நாங்கள் சாப்பிட்டு முடித்ததும், அம்மா தனது பங்கில் பாதியை அண்ணனுக்குக் கொடுப்பாள்.
நான் கேட்டால், "ஆளுக்குப் பாதிக் குடுத்தாச்சு. உம் பங்கை நான் பிடிங்கியாக் கொடுத்தேன். இது என் பங்கு. அத நான் யாருக்கு வேணாக் குடுப்பேன் உனக்கு என்னடி வந்துச்சு. நீ சாப்பிட்டீல எழுத்திரி. தட்ட எடுத்துட்டு போயிக் கழுவு" என்பாள் அம்மா.
தட்டைக் கழுவும் வேலை கூட எனக்கு மட்டுமே உரித்தானது. அண்ணன் கை கழுவக் கூட எழுந்திருக்க மாட்டான். சாப்பிட்டத் தட்டிலேயேக் கழுவி இரண்டடி நகர்ந்து அமர்ந்து கொள்வான். இது ஒரு தொடர்கதை. அம்மா சொல்லும் "நான் யாருக்கு வேணாக் குடுப்பேன்" என்பதை ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து, எதிர்பார்த்து இறுதியில் ஏமாற்றத்தையேச் சுவைத்திருக்கிறேன். காலப்போக்கில் அது எனக்குப் பழகிப்போனது. ஆனால் காரணம் புரியப் பல காலம் புடித்தது.
ஏனோ அம்மா நான் பூப்படைந்த நாள் முதல் எனது ஆடைகளைத் துவைப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் அண்ணனின் ஆடைகளை அவளேத் துவைத்தாள். கேட்டாள் "அவன் ஆம்பளப் பையன். அவங் கூட என்னடி உனக்குப் போட்டி என்பாள்".
இவை அனைத்தையும் ஒரு சிறிய கேள்வியோடு கடந்து சென்று விடுவேன். நாட்கள் செல்லச் செல்ல அந்தக் கேள்வியும் நின்று போனது. அச்சூழலுக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா என ஏங்கிய நாட்கள் பல உண்டு.
அதேக் காலக்கட்டத்தில் எங்களது பூர்வீகச் சொத்துக்களின் பாகப்பிரிவினை தொடங்கியது. என் தாத்தா இறந்து பல வருடங்கள் ஆகியிருந்தது. அப்பாயி எங்களோடுதான் இருந்தாள். அவளது இரு மகன்களில் மூத்தவர் என் அப்பா. அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். சிற்றப்பாவிற்கோச் சரியான வேலையில்லை. அதனால் அப்பாயி பெரும்பான்மை சொத்துக்களைச் சிற்றப்பாவிற்கு அவரது வாழ்வாதாரத்திற்காகக் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் என் அம்மா ருத்திர தாண்டவம் ஆடினார்.
"ரெண்டு பேரையும் ஒரே மாதிரிதானேப் படிக்க வச்சீங்க. இவரு நல்லா படிச்சாரு, நல்ல வேலையில இருக்காரு. உங்க சின்னப்பையன் நல்லாப் படிச்சிருந்தா அவரும் நல்லா இருந்திருப்பாரு. அவரு படிக்காததுக்கு நாங்க என்ன பண்ண முடியும். சரிசமமாப் பிரிங்க அவ்வளவுதான்" என்றார்.
மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் என் அம்மா வெற்றிபெற்றார். சொத்து சரிசமமாகப் பிரிக்கப்பட்டது. குடும்பமும்தான். அதற்குப் பின் என் சிற்றப்பாவையோ, அவரது குடும்ப உறுப்பினர்களையோ நான் பார்க்கவேயில்லை.
பன்னிரெண்டாம் வகுப்பில் போதுமான மதிப்பெண் இல்லாத போதும் பல ஆயிரங்கள் செலவு செய்து பொறியியல் படிப்பில் அண்ணன் சேர்க்கப்பட்டான். அரசாங்கத்தின் சலுகைகள் பெறும் வாய்ப்பிருந்தும் பி.காம் என் முன் நிறுத்தப்பட்டது. அதற்கும் அவன் ஆண் என்பதேப் பதிலானது. "அடுத்த வீட்டுக்கு வாழப் போற புள்ள எதப் படிச்சா என்ன" என்பதேப் பதிலானது. நான் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே வளர்க்கப்பட்டதாக எனக்குத் தோன்றியது.
பி.காம் முடிந்து மாப்பிள்ளை பார்க்கும் படலம் பல மாதங்களாகத் தொடர்ந்தும் எந்தப் பலனும் இல்லை. குண்டான பெண் என்ற சொல்லோடு ஓரங்கட்டப்பட்டேன். கூடவே எனது ஜாதகமும் குறைகளால் நிரம்பியிருந்தது. யாரோ ஒரு ஜோதிடர், இன்னும் சில ஆண்டுகள் தள்ளிப்போடுங்கள் என்று அறிவுறுத்த என் பெற்றோர் திருமணக்கல்லைக் கிணற்றில் போட்டனர். என்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள அந்த இடைவெளி தேவையாக இருந்தது. இதற்கிடையில் அண்ணன் ஆளே மாறிப்போனான். புதிய விலை உயர்ந்த இரு சக்கர வாகனம், ஒரு காதில் மாத்திரம் கடுக்கன், வித விதமான ஜீன்ஸ் என்று வேறு உலகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான். பல நேரங்களில் உனக்கு இதெல்லாம் புரியாது அல்லது தெரியாது என என்னை மட்டம் தட்டுவதை வாடிக்கையாக்கினான். வீட்டிற்கு வாங்கப்பட்டக் கணினி அவனது தனிப்பட்டப் பொருளாக மாறிப்போனது. ஒவ்வொரு முறையும் கணினியின் கடவுச்சொல்லுக்காக அவனிடம் கெஞ்சிக் கெஞ்சி வெறுத்து கணினி பயன்படுத்துவதையேத் தவிர்க்க ஆரம்பித்தேன்.
நேரத்தைப் போக்க வேறு வழியின்றிச் சில கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து சி. ஏ பயிற்சி வகுப்புக்களை நாடினேன். அது அவ்வளவு சுலபமாக இல்லை. பல தாள்களில் தேர்ச்சி பெற முடியவில்லை. என் உடல் எடையும் சொல்லிக் கொள்ளும் அளவிற்குக் குறையவில்லை. உடலை மறந்தேன். வீட்டிலிருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதற்காகவே மீண்டும் மீண்டும் தேர்வு எழுதினேன். வேறு என்ன செய்வது. ஆண்டுகள் ஓடின திருமணப் படலம் மீண்டும் தொடங்கியது. ஆனால் சாதகக் குறைகள் தொடர்ந்தன. ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு பரிகாரத் தலங்களாகத் தரிசிக்கப் பணித்தனர். திருத்தலங்களோடு தேர்வுத்தாள்களும் ஒவ்வொன்றாக விடைபெற்றன. ஒருவழியாகச் சி.ஏ முழுவதுமாகத் தேர்ச்சி பெற்றேன். அதற்குப் பின் வாழ்க்கை வேகமெடுத்தது. என்ன செய்வது என்று தெரியாத எனக்குச் சில அரசாங்க மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து வேலைக்கான அழைப்புகள் வீடு தேடி வந்தன. அதுவரை சரியில்லாத எனது ஜாதகம் நிமிடங்களில் சரியானது. எனது உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் காணாமல் போயின. அதுநாள் வரை யாராவது என்னை மணப்பெண்ணாகத் தெரிவு செய்யமாட்டார்களா? என ஏங்கிய நிலை தலைகீழாய் மாறியது. என்னைத் திருமணம் செய்ய விரும்பிய மாப்பிள்ளைக் கூட்டங்களில் நான் சிலரை நிராகரித்துப் பிடித்தவரைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவானது.
அண்ணன் சரியான வேலை கிடைக்காமல் தடுமாறினான். சில வேலைகளுக்குப் பின் அரசாங்க வேலைகளுக்காகத் தயாராவது என முடிவெடுத்தான். இதற்கிடையில் நான் எனக்குப் பிடித்த ஒருவரைத் தேர்ந்தெடுத்தேன்.
நல்ல முறையில் திருமணம் நடந்தேறியது. திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குக் கிளம்பும் நேரத்தில் என் அம்மா சொன்ன வார்த்தை இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது... "இவளுக்கு இந்த வேலை கிடைச்சதுக்குப் பதிலா எம்புள்ளைக்கு (என் அண்ணனுக்கு) கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்"
அது நாள் வரை அம்மா சொல்லும் வார்த்தைகள் சிறிது ஏமாற்றத்தைத் தரும் பின்னர் அதை மறந்திடுவேன். ஆனால் "எம் பிள்ளைக்குக் கிடைச்சிருந்தா" என்ற வார்த்தை என்னை நிலை குலையச் செய்தது. நானும் அவள் பிள்ளைதானே. என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. இவ்வளவு நாள் அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கையை முடித்துவிட்டு வெளியேறும் போது கூடச் சிறிதும் வருத்தமின்றி இப்படிப் பேசியது பல நாட்கள் என்னுள் ஆராத ரணமாக இருந்து வாழ்க்கை ஓட்டத்தில் வடுவாகப் படிந்துவிட்டது.
என் கணவர் வீட்டிற்குள் நான் நுழைந்த இரண்டு மாதங்களில் வைத்த தென்னம்பிள்ளை இப்போது காய்க்கத் தொடங்கியிருந்தது. நானும் இரண்டு குழந்தைகளின் தாயாகியிருந்தேன். என் அண்ணனுக்கு இதுவரை நல்ல வேலையும் அமையவில்லை திருமணமும் தாமதமாகியது. அன்று சில இலட்சங்களாக இருந்த எங்களது பூர்வீகச் சொத்தின் மதிப்பு இப்போது கோடிகளைத் தொட்டிருந்தது. சொத்து அனைத்தும் என் அண்ணனுக்கே என்றும், எனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் எழுதித் தருமாறு அம்மா என்னை வற்புறுத்தினார். ஏன் என்ற கேள்விக்குப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதுதான் நமது வழக்கம். சொத்து கொடுக்கும் பழக்கம் இல்லை. மேலும், அண்ணனுக்குச் சரியான வேலையில்லை எனவே அவனுக்குக் கொடுப்பதுதான் நியாயம் என்றார். என் அப்பாயி சிற்றப்பாவிற்காகப் பேசிய வார்த்தைகளும் அதற்கு எதிராக என் அம்மா அன்று ஆடிய ருத்திர தாண்டவமும் என் கண்முன்னே தோன்றி மறைந்தன.
தன் தங்கைக்கும் சரிபாதியாகச் சொத்தை பகிர்ந்து கொடுத்திருந்த என் கணவர் நான் எதிர்பார்த்தபடியே இதற்குப் பெரிய முட்டுக்கட்டை இட்டார். நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். இருதலைக் கொள்ளி எறும்பு என்றோ இருபக்கம் அறையப்படும் மத்தளம் என்றோ எளிதாக அந்த நிலையை விளக்கிட முடியாது. ஒரு பெண்ணின் அந்த மனநிலையை வார்த்தைகளாலோ, காட்சிகளாலோ ஏன் காவியங்களாலோ கூடப் பிரதிபலித்திட முடியாது. ஓசைகளினால் வெளிப்படுத்த முடியாத மௌன வேதனை அது.
ஓரிரண்டு நாட்கள் உண்ணா விரதமும் சில கண்ணீர்த் துளிகளும் என் கணவரின் பிடிவாதத்தைக் குறைத்தன. அனைத்தையும் எழுதி வாங்கி அதில் சிலவற்றை விற்று என் அண்ணனின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதன் உதவியோடு தனது வாழ்க்கையைத் தொடங்கினான். அம்மாவின் மிகையான முயற்சியால் திருமணமும் நடந்தேறியது. அவனுக்கும் குழந்தைகள் பிறந்தன. காலம் உருண்டோட பிறந்தகத்துடனான எனது உறவு நாளடைவில் வெகுவாகக் குறைந்தது. அப்பாவின் மறைவிற்குப் பின் ஏறக்குறைய சுத்தமாக நின்றுவிட்டது எனலாம்.
ஒரு நாள் பிறந்தகத்திலிருந்து அழைப்பு வர விரைந்தோடினேன். அங்கே அம்மாவைக் காணவில்லை. மாறாக அண்ணனின் மாமியார் மற்றும் மச்சினிகள் சூழ சிரிப்பொலி என்னை வரவேற்றது. அண்ணனும் அண்ணியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். என் வருகைக்குப் பின் அங்கே ஓர் இறுக்கம் படர்ந்தது.
"அம்மா எங்கே? "என்றேன்.
"என்னையக் கேட்டா ... எங்கிட்டச் சொல்லிட்டா போறாங்க" என்றவாறு சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சமையலறைத் தொட்டியிலிட்டு கையைக் கழுவினான். பரவாயில்லை மனைவியின் வருகைக்குப் பின் சாப்பிட்ட தட்டை எடுக்கிறானே என்று நினைத்துக்கொண்டேன்.
" என்ன பிரச்சினை?" என்றேன்.
" ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா அவுங்கள இனிமே இங்க வச்சுக்க முடியாது. நீ உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறதுனா போ. இல்லாட்டி நல்ல முதியோர் இல்லமாப் பார்த்துச் சேர்க்கப் போறேன் " என்றான்.
" சரி... இப்ப அம்மா எங்க?"
"தெரியல... ரெண்டு நாளைக்கு முன்னாடி பாத்தது. அதுக்கப்பறம் ஆளேக் காணல. எங்க போனாங்கன்னு தெரியல"
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "ரெண்டு நாளா காணலைனு இப்படிப் பொறுப்பு இல்லாமச் சொல்லுறியேடா " என்றேன்.
"வீட்டுல சண்ட போட்டுட்டு எங்கையாது போயி நம்மள அலைய விட்டுட்டு ரெண்டு மூனு நாளைக்குப் பிறகுப் பொறுமையா வருவாங்க. இது அவங்களுக்கு ஒன்னும் புதுசு இல்ல" என்றாள் அண்ணி.
அதற்கு மேல் அவர்களோடு பேச மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற முற்பட்ட போது தடுத்து நிறுத்தியது அவனது குரல்.
"நம்ம பரம்பர வைரக்கல்லு ஓங்கிட்டயா இருக்கு" என்றான்.
கோபம் கொப்பளித்தது. உள்ளம் கொதித்தது. அதையும் மீறி என் கவனத்தைக் கலைத்தது சுற்றி லாபித்திருந்த மௌனம். அதுவரை இருந்த இரைச்சல் இப்போது இல்லை. என் பதிலை எதிர் நோக்கிச் சுற்றம் (என்னைச் சுற்றி இருந்ததால் சுற்றம்) அமைதியாக என்னை வெறித்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட மௌனம் என்பதைப் புரிந்து கொண்டேன். "ஏங் கிட்ட இல்ல... எங்க இருக்குன்னு எனக்குத் தெரியாது" என்று கூறிவிட்டு அடுத்தக் கேள்விக்குக் காத்திருக்காமல் வெளியேறினேன்.
காவல்துறைக்குத் தகவல் தந்தேன். அடுத்த இரண்டாவது நாள் அம்மாவே திரும்பி விட்டதாகத் தகவல் வர சென்று அவளை அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்தேன். இராமேஸ்வரம் கோவிலில் ஒரு வாரமாக இருந்திருக்கிறாள். கசங்கி குருட்டழுக்கு ஏறிய புடவையோடு வந்திருந்தாள். அதற்குப் பின் அம்மா அங்கு செல்லவே இல்லை. அவ்வப்போது அண்ணன் எங்கள் வீட்டிற்கு வந்து அந்த வைரத்தைக் கேட்டுச் சண்டையிட்டுச் செல்வான். அம்மாவோ என்னை யார் கடைசிக் காலத்தில் பார்த்துக்கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த வைரம் என்று அவனைத் திட்டி அனுப்பிடுவாள். அந்த நிகழ்விற்குப் பின் அம்மா கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் எங்கள் வீட்டில் தான் இருந்தாள். அண்ணன் வீட்டிற்குச் செல்லவே இல்லை. ஆரம்பத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்ற எனது கணவர் காலப்போக்கில் இயல்பாய் மாறிப்போனார். அம்மாவின் தேவைகளை என்னைப் போல் அவரும் எனது குழந்தைகளும் கவனிக்கத் தொடங்கினர். அம்மா எங்களோடு ஒன்றிப் போனாள். என் குழந்தைகள் தான் அம்மாவின் உலகம் என்றானது. காலம் இனிமையாகவே நகர்ந்தது.
அன்றைய விடியல் எல்லா இடங்களிலும் ஒளியைப் பரவச்செய்தது அம்மாவின் விழியைத் தவிர. அம்மா இறந்த இரண்டு மணிநேரத்தில் அண்ணன் எங்கள் வீட்டை அடைந்தான். அனைத்து காரியங்களிலும் உடன் இருந்து இறுதி மரியாதையைச் சிறப்பாகச் செய்து முடிக்க உதவினான். எல்லாவற்றையும் முடித்துவிட்டுக் கிளம்பும்போது "அந்த வைரம் எங்க?" என்றான்.
"எனக்குத் தெரியாது. இது வரை அம்மா அத பத்தி எங்கிட்ட பேசியதே இல்ல" என்றேன்.
ஆனால் அவன் என்னை நம்ப மறுத்தான். "கடைசிக் காலத்தில் யார் பாத்துக்கிறாங்களோ அவுங்களுக்குத்தான் அத குடுப்பேன்னு அம்மா சொன்னாங்க. அதனால அத உங்கிட்ட தான் குடுத்திருக்கனும்" என்று என்னைத் தூற்றிச் சென்றான்.
அந்த வைரம் இருக்குமிடம் எனக்கும் தெரியாது. அது ஆங்கிலேயர் காலத்தில் என் கொள்ளு தாத்தாவிற்கு ஆங்கிலேயர்களிடமிருந்து வந்து சேர்ந்த ஒற்றை வைரம். மிகவும் அரிய வகையைச் சேர்ந்தது. ஒரே மகளான எங்கள் அம்மாவிற்கு அவளது அப்பா வழி வந்த விலையுயர்ந்த வைரம் அது. வைரம் கிடைக்காவிடினும் ஏதோ ஒரு நிம்மதி என்னுள் வியாபித்திருந்தது. அந்தத் தருணத்தில் பரிபூரணத் திருப்தி நிலையை அனுபவித்தேன்.
அடுத்த இரண்டாம் நாள் அம்மாவின் அறையைச் சுத்தம் செய்யும் போது அந்த நகைப் பெட்டியைக் கண்டுபிடித்தோம். வைரம் அதில் தான் இருந்தது. மிகவும் வித்தியாசமாக நீல நிறத்திலிருந்தது கூடவே ஒரு கடிதமும் இருந்தது. அம்மா எட்டாம் வகுப்பு வரை படித்தவள். தமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரியும். அவள் கைப்படவே எனக்கு எழுதப்பட்ட கடிதம் அது. சரியாக அவள் இறப்பதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்புதான் அதை எழுதி இருந்தார். கடிதத்தில் தேதி இடப்பட்டிருந்தது.
கடிதத்தில் இருந்த இரண்டே வரிகள்...
"இது எனது பங்கு... அண்ணனிடம் சேர்த்து விடவும். என்ன இருந்தாலும் அவன் என் பிள்ளை"
அப்படியெனில் நான் யார்...?
அந்த வார்த்தைகளைப் படிக்கப் படிக்க நெஞ்சு வலித்தது... நா வறண்டு தொண்டை அடைத்தது... ஆயிரம் யானைகள் ஒருசேர நெஞ்சினில் எறி மிதிப்பதைப் போன்ற பாரத்தை உணர்ந்தேன்.