‘ஹர...ஹர... சிவமாய் ஈஸ்வரலிங்கம் அன்பே வடிவாய் அமர்ந்திட்ட லிங்கம், 'லிங்காஷ்ட வீணையிசை அழைப்பு... இன்னும் கொஞ்சமாய் இசைக்கட்டுமே...ன்னு சுந்தரேசன் காத்திருக்கையில் இசை நின்று விட்டது.
‘மிஸ்டு கால்... அப்ப மூர்த்தி சாமி தான்' என நினைத்தவாறு மின் இணைப்பிலிருந்த பேசியையில் பட்டனழுத்திப் பார்க்கச் சரியேதான்.
பூஜையை முடித்து வீடு வந்து, டிபனெல்லாம் ஆகிவிட்டது போல்.
“என்ன பாரூமா, பாத்திரம் கழுவுறீங்களா...மாத்திரப் போட்டாச்சா?”
கிச்சன் சிங்கில் வேலையாயிருந்த மனைவியின் அருகே சென்றதும், நாகேஷ் மாதிரி உடல்மொழி தொணியில் கேட்டார் சுந்தரேசன்.
இதுவொரு சீண்டல்தான், நகைச்சுவையுணர்வைத் தானே உற்பத்தி செய்து கொள்ள வேண்டிய கொரோனாக் காலத்திலிருக்கிறோம்ல... முப்பது வருடந்தாண்டிய கணவரின் சிறு பிள்ளைத்தனச் செய்தலை உள்ளூர ரசித்துவாறுத் திரும்பிய பார்வதியின் பார்த்தலில்,
‘குறைந்தது ரெண்டு மூணு மணி நேரமோ இல்ல, அதுக்கு மேலயோ சோடி ரிட்டையர்களோடப் பேசப்போறிங்க கான்பரன்சில்... அதைச் சொல்லத்தான வந்தீங்க? அத விட்டுட்டு ரொம்பதான் அக்கறையா இருக்கறாப்பல பாவலாவப் பாரூ...'
இத்துணூன்டு சிடுப்புச் சாயலும், தேனில் கலந்தாற்ப்போல புன்முறுவலிருந்ததையும் கண்டு, மனசுள் சிரித்து ருசித்தும் வடிவேலு பேச்சுக்கு மாறிவிட்டார்.
‘மதிய சாப்பாட்டுக்குப் பெருசாலாம் மெனக்கிட வேணாம்மா, மெலகு, சிறு பூண்டு, சீரகமெல்லாம் சரிபங்கு வச்சி நச்சுப்போட்டு, கொதிக்க விடாம மணக்க மணக்க ரசம் வச்சுரு சரியா... அப்படியே... பாரூ...'
அந்த இழுத்தலில் பதிணோரு மணிக்கு சுக்குக்காபி வேண்டுமென்ற கெஞ்சல் குழைந்திருந்தது.
“வழக்கமா போட்டுத் தருவேண்ல கிளம்புங்க” சிரித்தே விட்டாள், பார்வதி.
‘உத்தரவு' ன்னு சலாம் வைத்து நகர்ந்து விட்டார்.
வாழ்க்கை கற்றுக் கொடுத்தப் பாடம், அனுபவப்பாதையில் தங்களைப் பக்குவப்படுத்தி, புடம்போட்டு சமநிலைப் புரிதலில், உணர்தலில் சுந்தரேசன் பார்வதி தம்பதியர் வாழ்க்கையின் நேர் கோட்டில் சந்தோசித்திருக்கின்றனர்.
ஒரே மகன். அயல் தேசத்தில் வேலை... அங்கேயேக் குடியுரிமை.
முதல் குழந்தை பிறப்பு, குலசாமி வழிபாடு, தவிர்க்க முடியாதொரு விஷேசம். பேரனுக்கு தல மொட்டையென சில வருடங்களே... தாயகம் வந்திருந்து சென்றான்.
கடந்தாண்டு லாக்டெளனுக்கு முன் வந்த மகன், மடிக்கணிணி தந்து ‘அப்பா, இனிமே இதுல எங்களப் பாத்துக்கிட்டேப் பேசலாம்'என்று பயன்படுத்தும் முறையும் சொல்லித் தந்திருந்தான்.
ஞாயிற்றுக்கிழமையானால்...
மகன், மருமகள்,பேரன், பேத்தி, முகங்கள்... திரையில் தெரிய நலம் விசாரித்து, பேசி, சிரித்து, மகிழ்ந்து விலகும்.
சுந்தரேசன் நட்புக்குள், பரமசிவம்... நாதன்... சமீபமாய் மூர்த்தி சாமி.
நடைப்பயிற்சி... அதிகாலையில் முதல் சந்திப்பு.
‘காலை வணக்கம்'
தேனீர் அருந்துதல், அவரவருக்கான பத்து ரூபாய்... கொடுத்ததும், மூன்று கிலோ மீட்டர் நடை... வீடு திரும்புதல்.
அடுத்தடுத்து, தங்களின் அரசுப் பணியில் ஓய்வு ஆனார்கள்...
இப்போதும் அதே சந்திப்பு;
‘தினமும் நானே பணம் தருகிறேன் இது... நம் நட்புக்கானது'
மூன்று ‘கப்' தேயிலை திரவத்திற்கும் சுந்தரேசனேத் தருகிறார்.
‘மாமா, பால் வாங்கிட்டு வந்துருங்க, இன்னைக்கு ரேசன் வாங்கணும். தெருவுல காய்வண்டி வந்தாச் சொல்லுங்க... கீர்த்திய ஸ்கூல்ல விட்டு வாங்களேன்' மருமகள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர் பரமசிவம்.
நாதன், தனது மூத்த பெண்ணைத் தூரத்தில் கொடுத்து, செய்முறையில் நொந்தது போதாமல், மனைவி, அவள் கூடவே இருக்கும் சக்கரை வியாதிச் செலவும், இன்னொரு மகள் கல்யாணச் செலவு கடமையும் பாக்கி வைத்திருப்பவர்.
பத்து நிமிடங்கள்... டீக்கடைப் பெஞ்சில் கிடக்கும் நாளிதழ் பக்கங்களில் முக்கியமான சில செய்திகளை வாசிக்கின்றனர்...
‘சரி கிளம்பலாம்' ன்னு நாதன் முதலில் கூறினால்... சுந்தரேசன் நமட்டு சிரிப்பு வெளிப்படுத்துவார். சுந்தரேசனென்றால்... நாதன்.
‘சிரிங்கப்பா... நல்லா சிரிங்க... ரெண்டு நொடில இதோ வந்துறேன்' கவுண்டமணியாட்டம் ஒரு வெட்டுக்காட்டி, எதிர் ஆவினில் பால்க் கவர் வாங்கிப்போய் வீட்டில் கொடுத்துவிட்டு ஓட்டம், நடையாய் பரமசிவம் வரவும் தயாராகி விடுவார்கள்.
மருமகள் இட்ட வேலையைச் சில நேரம் சரிவர செய்யாது போக... அவ்வப்போது மாட்டிக்கொண்டு தான் முழிப்பதைக் கண்டுவிடும் பேத்தி நக்கழிப்புக் காட்டி, ‘வவ்வு...' செய்வதை வெள்ளந்தியாய் பரமசிவம் கூறக்கூற, சிரிப்போடு நடையும் தொடரும்.
பெரும்பாலும் நாதன், மகள் கல்யாண விசயம்... கட்டிக்க இருக்கும் அக்கா மகன், அரசு வேலையில் சேர, அரசியல்வாதி ஒருவருக்கு வட்டிக்குப் பணம் வாங்கி தந்திருக்கிறான். அந்தத் தொகை இப்போது அடைக்கணுமென்ற நிபந்தனையை வைக்கிறானாம். எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், கையிருப்பு, ஓய்வுப் பணம் ‘தேமேண்ணு'தான் பல்லைக்காட்டுகிறது... பேச்சுவார்தை போய்கிட்டே... இருக்குன்னு, நகைப்புடனே சொல்வார்.
சுந்தரேசனோ, மனைவியுடனான கேலிக் கின்டகளை விவரிப்பார். பொய்யான கோபமெல்லாம் சொல்லிச் சிரிப்பார். பேச்சு, அரசியல், சமூகம், தேச நடப்பு வரையும் நீளும்.
பத்து முப்பதுக்கெல்லாம் மேலத்தெரு சிவன் கோவில்,இரண்டாவது சந்திப்பு...சாமி தரிசனம் முடித்து, தெற்குப் பிரகாரத்தில் உக்கார்ந்து கொண்டால்...பேச்சு, ஆண்மீகமாயிருக்கும்...தெய்வீகம் மணக்கும்.
அர்ச்சனை, தீபாராதனை காட்டியும். அவ்வப்போது வந்து, மூர்த்தி சாமியும் கலந்து கொள்வார்.உச்சிகால பூஜைக்கு சாமிக்கு வைக்கும் பிரசாதம், வந்துவிடும்; நடை சாத்தவும்தான் கிளம்புவார்கள்.
ஊரடங்கு... சந்திக்கமுடியவில்லை. ஆனாலும்,கான்பரன்ஸ் காலில் இணைகிறார்கள்... பேசுகிறார்கள்.
முகங்கள் பார்த்து, புன்னகை,மெளனம், உண்மை, பொய்,வருத்தம் கோபம், பூரித்த பேசுதல் எல்லாமும்,ரசவாத கலவையாயிலிருக்கும். இந்த செவி புகும் பேசுதலில் அதையெல்லாம் தெரிய, உணரவும் முடியாது என்றாலும். நண்பர்களுடனான தொடர்பு, நட்பு, கருத்து, கலந்துரை... வேண்டும் போலிருந்தது.
‘மருமக நல்லவப்பா...வெளிய போகவேணாம்ன்னு சொல்லிட்டது எதுனாலும் சரி புருஷனைத்தான் அனுபும். காபி, சாப்பாடு, டிபன் நேரத்துக்கு கிடைத்து விடும், நமக்கது போதும்ல...' பரமசிவத்தின் குரலில், மருமகளின் மெச்சலிருக்கும்.
‘வீட்டுக்காரியோட உடல் நிலமை நாளுக்கு நாள் கீழ நோக்கியே போகுது. வைத்தியமும் பாத்துக்கிட்டேதான் இருக்கு. நிரந்தர தீர்வு தெரியல. இந்த மூச்சு இருக்கையிலேயே கடைசிப்பொன்னனோட கல்யாணத்த பாக்க முடியுமான்னு புலம்புரா.என்ன செய்யலாம்ன்னு முடிவான யோசனையில்...குடியிருக்கும் வீட்டை அடமானம் வச்சு இந்த பிரச்சனைய நேர் பண்ணிடலாம்னு தோனுது'
நாதனின் கனத்த பேச்சை கொஞ்சம் லேசுப் படுத்தும் முயற்ச்சியாக ஆண்மீகம், சங்க இலக்கியம், சங்ககால நாணயம், ஓட்டு எழுத்து, பழங்காலத்து மிச்சம்போலான கட்டுமானங்கள்; அகழாய்வு விபரம், இபோது... அதன் சான்றுகளெல்லாமும், இன்றைய எதார்த்த சமூக வாழ்வியலும் கூட பேசுவார், மூர்த்தி சாமி.
பேச்சுக்கு நடு நடுவே சுக்குக்காபி தொண்டைக்குள் இறங்கியதே உணராது, ஊரடங்கு நீட்டிப்பு... மனிதர்களின் முடக்கம்; ‘மாஸ்க்' அணிந்த முகங்கள்;தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் உண்மைத் தன்மை, விவாதக் கருத்துககள்...
மதிய சாப்பாட்டு வேளை ஞாபகத்துக்கு வரவும்தான் நிற்கும்.
“அந்தா இந்தான்னு நாட்கள் ஓடிருச்சுலங்க... ம்... ரொம்ப சனங்க பாவங்க” மெத்தை போர்வையைப் பரத்தியவாறே பார்வதி.
“வேலை, முழுசா வருமானம் வந்துட்டுருக்கும் போதே பலரோட தினப்பாடு இழுத்துக்கோ பரிச்சுக்கோண்னு அல்லாடிட்டுருக்கும், இதுல பாதியாக, வருமானம் சுத்தமாகவும் இல்லாத கஸ்ட சனங்கள நெனச்சுப் பாக்கவேச் சங்கடமா இருக்கு பார்வதி” இது சுந்தரேசன்.
“பல பேரோட வாழ்க்கையில், எதிர்காலமே எப்படி ஆகுமோங்கற புரியாத பயத்தில் நெறைய விசயங்கள், விசேசங்கள் கூட நடக்காம அப்படியப்படியே போயிருக்கும் என்னங்க..?” இப்படிக் கேட்கவும்.
பார்வதியிடம் நாதனின் மகள் கல்யாண விசயத்தைச் சொன்னார்.
“இப்பக்கூடச் செய்யலாமே... செலவு மிச்சம்லங்க” அனிச்சையாக மனைவி வெளிப்படுத்திய ‘செலவு மிச்சம்' மனசில் நின்றன.
“பார்வதி, நானொன்னு சொல்லட்டா...?”
“நாதன் சார் பொண்ணுக்கு நாம ஏதாவது செய்யலாமான்னுதான சொல்ல வாறீங்க...”
“நல்ல இதயத்திற்கு இன்னொருவர் எண்ணமறியும் தன்மையுண்டு சொல்வாங்கல... அது பார்வதி விசயத்தில் உண்மையே...”
“வாய்ப்பு இருந்தும் அந்த நல்லது நடக்காமப் போறதுல தடையா இருக்கறத நம்ம மூலமா விலக்கனும்ன்னு ஆண்டவன் முன்ன்மே எழுதிருப்பாங்க, அதுக்கு இதுதான் நேரம், காலம்ன்னும் வெளிப்படுத்துறான். இதுல நம்மதுனுலாம் ஒண்ணுமில்லங்க”
பேச முடியவில்லை...
விசு போல், மனைவிக்கொரு சல்யூட் வைத்தார் சுந்தரேசன்.
மறுநாள்...
கான்பரன்ஸில் நாதன் அழைப்பு இணைக்கப்படவில்லை. அவரின் மகள் கல்யாண விசயம் மட்டுமே பார்வதியின் அனிச்சையில் வந்த ‘செலவு மிச்சம்' வேறு வேறு கோணங்களில், சாத்தியாமானெல்லாம் பேசப்பட்டது, நடைமுறை அலசப்பட்டது.
‘இருக்கற நகைகளே போதும்ணு மாப்பிள்ளை சொல்லிட்டான்... சீரெல்லாம் பெருசாவொண்ணும் அக்கா எதிர்பாக்காது, இப்போது அவங்களைப் பொறுத்த வரை... கடனை அடைக்கணும்' ஒரு நாள் நாதன் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. அப்படினா... கடனுக்கான பணம் தான், இந்த கல்யாணத்தின் முன்னானவொரு தடுப்பு...
‘சுந்தரேசன் சார், நாதன் சார் கையிருப்ப வச்சுக் கடனை கட்டிட்டு, எளிமையாக் கல்யாணத்தை வச்சுறாலாமே' மூர்த்தி சாமி.
‘இப்ப இருக்க சூழலில் வீட்லயேக் கூட நடத்திடலாம்' பரமசிவம்.
‘அத, அதே...தான் சாமி, நானும் யோசித்து வந்தேன்' சுந்தரேசன்.
நாதன், பொறுத்துப் பார்த்திருப்பார் போல்... இணைப்பில் வந்தார்.
மூவரும் கலந்தொரு முடிவுக்கு வந்த பிறகே, கான்பரன்ஸ்க்குள் அழைத்தார்கள். நாதனுக்கும் விசயம் பகிரப்பட்டது.
‘நாதன், உங்க அக்கா வீட்டில் முதலில் கல்யாண விசயத்தைப் பேசுங்க, மாப்பிள்ளைக்கு மத்த விபரங்களைச் சொல்லுவோம். படிச்ச பையன்தானே புரிஞ்சுப்பான். கடனுக்கான பணத்தை நானேத் தருகிறேன்'
திங்கக்கிழமைக்கு முதல் நாள்... முகூர்தநாள்தான். யோசனை வேண்டாம், நெருங்கிய பத்து பேரே போதுமானது. வீட்டில் வைத்துச் சாமி படத்துக்கு முன்னால் மணமுடிப்பு... சிறப்பா இருக்கும்', நம்பிக்கையூட்டினார்,சுந்தரேசன்.
‘ஆமாம் நாதான் இதுவொரு நல்ல வாய்ப்புதான்... பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்ன்ணு தோணுது' பரமசிவம்.
‘உங்க பொண்ணுக்கு மாலை பூத்துருச்சு, நாதன் சார், நல்ல மனசு மனுஷாளுக்கு எந்த ரூபத்துலயாவது ஒரு வழிய... இறைவன் காட்டிருவான். காலையில் முதல் வேலையா இந்தத் தகவலைப் பாஸ் பண்ணுங்க... திவ்யமான பதில்தான் காத்திருக்கும்'
அசரீரியென, மூர்த்தி சாமிதான்.
கான்பரன்ஸில் நெகிழ்வு தருணம்போல்... இணைப்பில் அமைதி;
ஊரடங்கு செய்திகளின் ஊடாக...
‘வீட்டின் சாமி படத்துக்கு முன்னால் பெற்றோர்கள் மட்டுமே இருக்க மணமுடித்துக் கொண்ட மணமக்கள்...'
செய்தியாளர் விவரிப்பு... தொலைக் காட்சியில்...
‘மாஸ்க்' அணிந்த, மணப்பெண் முகத்தில், பூரித்த இழையோடல்.
‘மாஸ்க்' அணிந்த, நாதன் அக்கா, மாப்பிள்ளை... முகங்களில், கடன் அடைந்துவிட்ட பெருமூச்சுக்கு பின்னான அமைதி...
‘மாஸ்க்'அணிந்த நாதன், முகத்துள் நண்பர்களுக்கான நன்றிப் பெருக்கு... கண்களில் ஈரமும்.
அவரவர் இல்லங்களிலிருந்து மனசார வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்... நண்பர்கள், நட்பு முகங்கள்!